வெள்ளி, ஜனவரி 21, 2011

பொங்கல் பைகள்: தி.மு.க.அரசின் நல்ல திருப்பம்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் அனைத்து ரேஷன்அட்டை தாரகளுக்கும் இலவச பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான பையில் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் இடம்பெறும் வகையில் பொங்கல்விழா படம் சமத்காரமாக வரையப்பட்டிருந்தது.

இதுகுறித்து சட்டசபையில் (ஜன. 11) பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கமணி, 'மக்களின் வரிப்பணத்தில் செய;படுத்தப்படும் இலவச அரசு திட்டத்தில் தி.மு.க. சின்னம் அச்சிட்டது சரியல்ல' என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு, 'பொங்கல் பையஈருக்கும் சூரியன் வேறு, பொங்கல் திருநாளன்று சூரியனை வழிபடுவதற்காக தமிழர்கள் பொங்கல் வைக்கிறார்கள். அதை நினைவுபடுத்தும் வகையில், குடும்பத்தோடு சூரியனை வழிபடும் காட்சிதான் பொங்கல் பையில் அச்சிடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் வ.வேலு விளக்கம் அளித்துள்ளார் (தினமணி- 12.01.2011).

எது எப்படியோ, தமிழர்கள் சூரியக் கடவுளை வழிபடுபவர்கள். இந்து மதத்தின் ஓர் அம்சமான சூரிய வழிபாட்டை (சௌரம்) ஏற்றிருப்பவர்கள் என்பதை தி.மு.க. ஒப்புக் கொண்டிருகிறது. பொதுவாக அறுவடைத் திருநாள் வாழ்த்துக்களும், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களும் கூறுவதுதான் மு.க.வின் மரபு. ஆனால், பொங்கல் பையில் தனது கட்சிச் சின்னம் அச்சிட்டுவிட்டு பிரச்னையானவுடன், அது கடவுள் படம் என்று தப்ப முயற்சிக்கிறது தி.மு.க. தனக்கு வசதியாக இருப்பின் தி.மு.க. என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

இந்த இலவச பொங்கல் பொருள்களை வழங்க ரூ. 90 கோடி செலவிட்டுள்ளது தமிழக அரசு. தமிழகத்திலுள்ள 1.90 கோடி ரேஷன் அட்டைதாரகளுக்கும் இவை வழங்கப்பட்டுள்ளன. இந்தப்பையில் போனகலிடத் தேவையான அரை கிலோ பச்சரிச்சி, அரை கிலோ வெல்லம், 100 கிராம் பாசிப்பருப்பு, 10 கிராம் முந்திரி, 5 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலம் ஆகியவை இருந்தன.

இந்த பொங்கல் பரிசுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்காக, பொங்கல் பையிலுள்ள உதயசூரியனுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று திமு.க. நம்பினால் நம்பட்டும். இந்துக்களின் வாக்குகளுக்கும் மதிப்புண்டு என்று தி.மு.க. ஏற்றுக் கொள்வது நல்லதுதானே?

-----------------------------
நன்றி: விஜயபாரதம் (28.01.2011)
.

1 கருத்து: