வெள்ளி, ஜனவரி 28, 2011

மானம் கெட்ட மத்திய அரசு

மத்திய ஊழல் கணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் பதவியேற்ற நிகழ்ச்சியில் நாட்டின் உயரதிகார பீடங்களுடன் அளித்த தரிசனம்.

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழிசெல்வத்
தேட்டில் விருப்புங்கொண்டே - கிளியே
சிறுமை அடைவாரடீ

(நடிப்புச் சுதேசிகள்- மகாகவி பாரதி)

-நூறு ஆண்டுகளுக்கு முன் நிதானக் கட்சியார் எனப்படும் காங்கிரஸ் மிதவாதிகளைக் கண்டித்து மகாகவி பாரதி எழுதிய இப்பாடல் இன்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கும் பொருத்தமாக இருப்பது, காலத்தின் கோலமா? மகாகவியின் தீர்க்கதரிசனமா?

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சி.வி.சி) நியமன விவகாரத்தில், எதிர்க்கட்சித்தலைவரின் எதிர்ப்பை மீறி ஊழல் கறை படிந்த தாமஸை நியமித்துவிட்டு, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறும் தொடர் பொய்கள், மத்திய அரசுக்கு சிறிதும் வெட்கமும் மானமும் இல்லை என்பதையே காட்டுகின்றன.

கேரளாவில் 1992 ல் பி.ஜே.தாமஸ் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக, உணவுத்துறை செயலாளராகப் பணியாற்றியபோது அம்மாநில சிவில் சப்ளை கார்ப்பரேசன் விதிமுறைகளை மீறி, கூடுதல் விலையில் 15 ஆயிரம் டன் பாமாயிலை மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்தார்; அதனால் அரசுக்கு ரூ. 23.2 கோடி இழப்பு ஏற்பட்டது என்பதுதான் குற்றச்சாட்டு. இது தொடர்பான வழக்கு இன்றும் நடந்து வருகிறது.
.
இதே தாமஸ் தான் ஆண்டிமுத்து ராசா அமைச்சராக இருந்தபோது தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர். ராசாவின் தெருவிளையாடலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என்று மத்திய தணிக்கை ஆணையம் (சி.ஏ.ஜி) அறிவித்த பின் நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான போராட்டம் கூர்மை அடைந்துள்ளது.

இந்த இரு ஊழல்களிலும் தொடர்புடைய பி.ஜே.தாமஸை, அவசர அவசரமாக சி.வி.சி பதவியில் அமர்த்தியது மத்திய அரசு. இதற்கான தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் எதிர்ப்பை மீறி, பிரதமர் மன்மோகனும், உள்துறை அமைச்சரும் தாமஸை பிடிவாதமாக தேர்வு செய்தனர். அவரும் செப். 6 ல் பதவி ஏற்றார். இதை எதிர்த்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடுத்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் தற்போது மத்திய அரசின் பொய்களை அம்பலப்படுத்தி, பிரதமரை முச்சந்தியில் நிறுத்தி இருக்கிறது.

துவக்கத்தில், தாமஸ் மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை என்று மத்திய அரசு சாதித்து வந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கேட்ட தர்ம சங்கடமான கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல், ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையில் தாமஸ் தலையிட மாட்டார் என்று டிசம்பரில் உச்சநீதி மன்றத்தில் விளக்கம் அளித்தது மானம் கெட்ட மத்திய அரசு.

ஆயினும், உச்சநீதி மன்றம் மத்திய அரசின் பதிலால் திருப்தி அடையவில்லை. அண்மையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தனது நிலைப்பாட்டை விளக்கி தாமஸ் உச்சநீதி மன்றத்தில் அளித்த மனுவில், ''அரசியல் சண்டையில் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். கருணாகரனுக்கும் அச்சுதானந்தனுக்கும் இடையிலான அரசியலில் நேர்மையாளரான (?) என்னை சிக்க வைத்து விட்டனர்'' என்று கூறி இருக்கிறார். அரசுப் பதவி எப்படி அதிகாரிகளையும் பொய்யர்களாக்கி இருக்கிறது என்பதை தாமஸின் மனு வெளிப்படுத்தி விட்டது.

இதனிடையே, சி.வி.சி நியமனத்தில் '' சரியான நடைமுறை பின்பற்றப்பட்டதா? தாமஸ் மீது ஊழல் வழக்கு இருப்பது தேர்வுக் குழுவுக்கு தெரியாதா? பிரதமர் கவனத்திற்கு இவ்விவகாரம் கொண்டுசெல்லப் படவில்லையா?'' என்றெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.எச்.கபாடியா அரசுத் தரப்பிடம் வினவினார்.

''சி.வி.சி. போன்ற உயர்பதவிக்கு ஒருவரைத் தேர்வு செய்யும்போது என்னென்ன ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன? எந்த அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டது? வழிகாட்டு நெறிமுறைகள் இம்மி பிசகாமல் கடைபிடிக்கப்பட்டனவா? என்று அறிய விரும்புகிறோம்'' என்று நீதிபதிகள் பென்ச் வலியுறுத்தியது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி, ''பாமாயில் வழக்கு விவகாரமே மத்திய அரசுக்குத் தெரியாது'' என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஊழல் வழக்கு குறித்து தேர்வுக்குழு தெரிந்தேதான் தாமஸை தேர்வு செய்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த வாஹன்வதி, அற்புதமான பொய்யைக் கூறி மத்திய அரசை இக்கட்டில் இருந்து தற்காலிகமாகக் காப்பாற்றி இருக்கிறார்.

இந்தப் பொய்யை தேர்வுக்குழுவில் இடம் பெற்றிருந்த சுஷ்மா கண்டித்திருக்கிறார். இது தொடர்பான வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டு விளக்கம் அளிக்கப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

ஒரு பேச்சுக்கு, வாஹன்வதி சொல்வது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், ''இதுகூடத் தெரியாத மத்திய அரசு பதவில் இருக்க தகுதி உள்ளதா?'' என்ற கேள்வி எழுகிறது. உளவுத்துறைகளை கைவசம் வைத்துள்ள பிரதமருக்கு இது தெரியவில்லை என்றால், அவருக்கு அப்பதவியில் இருக்க அருகதை இல்லை என்றாகிறது. தாமஸின் ஊழல் குறித்து தேர்வுக் குழுவில் சுட்டிக்காட்டிய சுஷ்மாவின் எதிர்ப்பு புறக்கணிக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கும் மத்திய அரசிடம் பதில் இல்லை.

உச்சநீதி மன்றத்தில் வரும்நாட்களில் நிகழவுள்ள வாத பிரதிவாதங்கள், மத்திய அரசின் பித்தலாட்டங்களை மேலும் தோலுரிக்க வாய்ப்புள்ளது. ஒரு பொய்யைக் காப்பாற்ற பல நூறு பொய்களை சிருஷ்டிக்க வேண்டிய அவலநிலையில் காங்கிரஸ் கட்சி தள்ளாடுகிறது. இத்தனைக்கும் காரணமான இத்தாலிய அன்னையோ, எதிலுமே சம்பந்தம் இல்லாதவர் போல நடமாடுகிறார்.

நூறு ஆண்டுகளுக்கு முன் நிதானக் கட்சியாரின் பித்தலாட்டங்களை அம்பலப்படுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய திலகர் தலைமையிலான தீவிரக் கட்சியாரைப் போல இன்று பாரதீய ஜனதா கட்சி காங்கிரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது. உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.

-------------------------------
நன்றி: விஜயபாரதம் (11.02.2011)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக