வியாழன், ஜனவரி 20, 2011

அப்பாடா... குழப்பம் அகன்றது!


ஒருவழியாக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்திருக்கிறார் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா (ஜன. 19). காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு வைப்பேன் என்று நான் எப்போது சொன்னேன் என்றும் அவர் பத்திரிகையாளர்களிடம் கேட்டிருக்கிறார். மக்கள் மறதியே தலைவர்களின் மூலதனம். உண்மைதான்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு அவர் முயற்சிக்கவில்லை என்பதை தி.மு.க. காரரே நம்ப மாட்டார். தொண்டர்கள் விரும்பும் கூட்டணி அமைப்பதாக பூடகமாக முழங்கிவந்த ஜெயலலிதாவை, தி.மு.க.வின் ஊழல் கூட்டாளியான காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை. வேறு வழியின்றி, ஞானோதயம் பெற்றவர் போல, காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று இப்போது நவின்றிருக்கிறார் ஜெ. எப்படியோ, தமிழகம் தப்பியது.

நாடு முழுவதும் மக்களிடையே கோபத்தைக் கிளப்பியிருக்கும் வானவில் ஊழலில் தொடர்புடைய முக்கிய கூட்டாளிகள் தி.மு.க.வும் காங்கிரசும் தான். இவர்கள் இணைந்திருப்பதுதான் அக்கூட்டணிக்கு எதிராக மக்களை திரட்ட உதவும். இதற்கு மாறாக ஜெயலலிதா சிந்தித்து வந்ததால், தமிழகத்தில் அரசியல் கூட்டணி அமைப்பதில் குழப்பம் நிலவி வந்தது. இப்போது அந்தத் தடை அகன்றுள்ளது. இனிமேல், ஜெயலலிதாவை நம்பி, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் துணிவுடன் தேர்தல் களமிறங்கலாம்.

அதே பேட்டியில், தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு 'நோ கமென்ட்ஸ்' என்று கூறி இருக்கிறார் ஜெயலலிதா. விஜயகாந்திற்கு கூடும் மக்கள்திரளைக் கண்டும் அ.தி.மு.க. தலைவி பிடிவாதம் பிடிப்பது, தி.மு.க.வுக்குத் தான் உதவும். காங்கிரஸ் விஷயத்தில் தடுமாறியது போல தே.மு.தி.க. விஷயத்தில் அவர் தடுமாறக் கூடாது.

வெண்ணெய் திரண்டுவரும் வேளையில் அவரே தாழியை உடைத்துவிடக் கூடாது.
-------------------------------
நன்றி: விஜயபாரதம் (04.02.2011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக