வெள்ளி, டிசம்பர் 28, 2012

ஜாதி அரசியலுக்கு தீர்வு என்ன? – 1


மீண்டும் கிளர்ந்தெழும் ஜாதிக் கலவரங்கள்…

தமிழகத்தில் அவ்வப்போது ஜாதிக் கலவரங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.  பகுத்தறிவை வளர்ப்பதாக முழங்கிக்கொண்டு,  ஜாதி வேற்றுமையை ஒழிப்பதாக முழங்கிக்கொண்டு 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்திவரும் திராவிடக் கட்சிகளின் காலத்தில் தான் ஜாதி மிகவும் வெறுப்பூட்டும் கருவியாக மாறி இருக்கிறது.

இதன் காரணங்களை சமூக வளர்சசிக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து தீர்வு காண்பதற்குப் பதிலாக, வாக்குவங்கி அரசியலில் கட்சிகள் ஈடுபடுவதன் காரணமாகவே, ஏற்கனவே சமூகத்தில் புரையோடி இருக்கும் ஜாதிக் காழ்ப்புணர்வு மேலும் வேகமடைந்து வன்முறைகளை உருவாக்கி வருகிறது.  இதற்கு என்ன தீர்வு?...

-----------------------------
முழு கட்டுரையைக் காண்க:  தமிழ்  ஹிந்து

விஜயபாரதம் (14.12.2012)
 

திங்கள், டிசம்பர் 24, 2012

குஜராத் வெற்றியும் இமாச்சல் தோல்வியும்


நாடு முழுவதும் எதிர்பார்த்த குஜராத் தேர்தல் முடிவு வெளிவந்துவிட்டது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட முடிவே என்றாலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தொடர் வெற்றி, தேசிய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுவதாகவே   அமைந்திருக்கிறது. எனினும் இமாச்சலில் பாஜகவின் தோல்வி, வெற்றிக் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்தி விட்டது.

நமது தேசத்தின்  துரதிர்ஷ்டமோ, பாஜகவின் துரதிர்ஷ்டமோ தெரியவில்லை. பாஜக  இரண்டு அடி ஏறினால் ஓரடி சறுக்குகிறது. இதனால் தான் பாஜகவின் தேசிய அளவிலான  வெற்றி பவனி தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. இமாச்சலில் ஒவ்வொரு  தேர்தலில் ஆட்சி மாற்றம் சகஜமே என்றாலும், குஜராத்தில் சாதிக்க  முடிந்த பாஜகவால் இமாச்சலில் ஏன் சாதிக்க முடியவில்லை என்ற கேள்வி  எழுவது  இயற்கையே.

முதலில் குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றியின் காரணிகளைக் காண்போம். அப்போது இமாச்சல் தோல்வியின் காரணங்கள் நமக்கு தெளிவாகவே  புலப்படும்.

குஜராத்தில் பாஜக தொடர்ந்து ஐந்தாவது முறையாக வென்றிருக்கிறது. இதில் மோடி மட்டுமே  முதல்வராக மூன்றாவது முறையாக வெற்றிவாகை சூடி இருக்கிறார். அங்கும் அரசுக்கு எதிரான அதிருப்தி அலை சிறிது இருக்கவே செய்தது. இமாச்சல் போலவே அங்கும் பாஜவுக்குள் கோஷ்டிப்பூசல் இருந்தது. சொல்லப்போனால் முன்னால் முதல்வர் கேஷுபாய் படேல் துவங்கிய குஜராத் பரிவர்த்தன் கட்சி பாஜகவின் வெற்றிவாய்ப்புகளை  மழுங்கடித்துவிடும் என்றே நம்பப்பட்டது. இந்த அதிருப்தி அலைகளைத் தாண்டித் தான், மோடி தனது தனிப்பட்ட செல்வாக்கை நிரூபித்து பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்.

இதற்குக் காரணம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற மோடியின் தீவிர முனைப்பும் துடிப்புமே என்றால் மிகையில்லை. இது பாஜகவில் பிற தலைவர்களிடம் குறைவாக உள்ளது என்பதையே இமாச்சல் தோல்வி காட்டுகிறது.

கடந்த ஓராண்டாகவே குஜராத் முதல்வர் மோடி, வேறு மாநில நிகழ்சிகளுக்கோ தேசிய அளவிலான நிகழ்சிகளுக்கோ செல்லவில்லை. அவரது கவனம் முழுவதும் குஜராத் மீதே குவிந்திருந்தது ஒரு நாளுக்கு குறைந்த பட்சம் 16 மணி நேரம் மாநில அரசியல், மக்கள் பிரச்னை குறித்தே அவர் சிந்தித்தார். அதற்கான திட்டங்களை செயல்படுத்தினார். அவரை ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் வில்லனாக சித்தரித்து வசை பாடிக் கொண்டிருந்தபோது அவர் கருமமே கண்ணாக மக்கள் நலத் திட்டங்களில் கவனம் கொடுத்துக் கொண்டிருந்தார். தவிர தனக்கே உரித்தான ராஜ தந்திரங்களைப் பயன்படுத்தி தன்னை எதிர்த்த ஊடக வட்டத்திலும் ஊடுருவினார். அவரது சமூக வலைத்தள பங்கேற்பு அதற்கான சாத்தியங்களை உருவாக்கியது.

மாற்று ஊடகமான இணையத்தை, குறிப்பாக டிவிட்டரையும் இணைய தளத்தையும், வலைப்பூவையும் அவர் திறம்படக் கையாண்டார். தன்னை எவரும் மின்னஞ்சலில் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியதால், இளைய தலைமுறையிடம் அவரால் மிகவும் நெருங்க முடிந்தது. இணைய சேவையை ஆட்சி நிர்வாகத்திலும் மக்கள் தொடர்பிலும்  சிறப்பாகப் பயன்படுத்திய ஒரே முதல்வர் மோடியாகத் தான் இருப்பார் . இந்த மாற்று ஊடகத்தில் அவர் செலுத்திய செல்வாக்கே பிற பாரம்பரிய ஊடகங்களை சிந்திக்கச் செய்து, அவர்களது திசை மாற்றத்தைத் தடுத்தது. இதுவரை அவரை வசை பாடிய ஊடகங்கள், அவரது மேதா விலாசத்தைப் புரிந்துகொள்ள முயன்றன. அதற்கேற்ப அவரது ஆட்சியும் பல சாதனைகளை நிகழ்த்தியது.

குஜராத் மாநிலத்தில் மோடி நிகழ்த்தியுள்ள சாதனைகள் பல. சாலை உள்கட்டமைப்பு வசதி பெருகியது,  தடையற்ற மின்சாரம் வழங்கியது,  மாநிலத்துக்குள் பாயும் நதிகளை இணைத்தது, வறண்ட கட்ச் பகுதிக்கு குடிநீர் வழங்கியது, உலக அளவிலான  பல  நிறுவனங்களை குஜராத்தில் முதலீடு செய்ய வைத்தது, தொழில்துறையில்  மாபெரும்  முன்னேற்றம் - எனப் பல சாதனைகளை சொல்லிக்  கொண்டே  போகலாம். மொத்தத்தில்  தொழில் துறையினருக்கு இணக்கமான  அரசாகவும் மக்களுக்கு நலம்  விளைக்கும் அரசாகவும், வெளிப்படையான, ஊழலற்ற   அரசாகவும் மோடியின் தலையிலான பாஜக அரசு திகழ்ந்தது.  அதன் விளைவை மக்கள் தேர்தலில் காட்டி இருக்கின்றனர்.

இத்தனைக்கும் 'மரண  வியாபாரி', 'பொய்யர்', மோசடிப் பேர்வழி’ என்றெலாம்  காங்கிரஸ்  தலைவர்களால் அவர் வசை பாடப்பட்டார். சிறுபான்மையினரின்  வாக்குகளைக்  கவர்ந்து, மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக முயன்றது. இலவச அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.  ஆனால், மோடி நிலைகுலையவில்லை. தன மீதான எதிரிகளின்  ஏச்சுக்களை  நாசூக்கான கேலி, கிண்டல் மூலமாகத்  தாண்டினார். தான் செய்த பணிகளே தன்னைப் பற்றிப் பேசும் என்ற தன்னம்பிக்கையுடன் அவர்  மக்களை அணுகினார். ''குஜராத்தின் ஆறு கோடி மக்களே தனது  எஜமானர்கள்''  என்றார். அதன் விளைவு தேர்தல் களத்தில் தெளிவாகவே தெரிந்தது.

தேர்தல் பிரசாரத்தில் மோடிக்கு எதிராக சரிநிகராக  நிற்கும் எவரும் குஜராத்தில் தென்படவில்லை. டில்லியிலிருந்து வந்த பிரதமர் மன்மோகனும்  காங்கிரஸ் தலைவி  சோனியாவும் அவரது புதல்வர் ராகுலும் மோடி மீது வீசிய அம்புகள் முனை மழுங்கி  மலர்களாயின. குஜராத் மாநிலம் 16 அடி பாய்ச்சலில்  சென்று கொண்டிருப்பதை மக்கள் உளப்பூர்வமாக உணர்ந்திருந்த நிலையில், அங்கு சென்று குஜராத் மக்கள்  ஏமாற்றப்படுவதாக பிலாக்கணம் பாடிய சோனியா கும்பலை மக்கள்  கண்டுகொள்ளவே  இல்லை. அவர்கள் சோனியா கும்பலின் பேச்சை  நகைச்சுவையாகவே எடுத்துக் கொண்டனர். அவர்கள் பார்வையில் மோடியின் மதிப்பு  மேலும் உயர்ந்தது. இவ்வாறு தான் குஜராத்தில் பாஜக வசமானது வெற்றி.

ஆனால், இமாச்சலில் நல்லாட்சி செய்தும் பிரேம் குமார் துமல் தோற்றிருப்பது அரசியலை புரியாத புதிர் ஆக்கி இருக்கிறது. உண்மையில் இமாச்சல் அரசு மீது ஊழல் புகார்களும் இல்லை. அங்கு கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் பாஜக பல சாதனைகளை செய்திருக்கிறது. இருப்பினும் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி அலையில் இருந்து துமலால் மீள முடியவில்லை. இதற்கு மோடி போன்ற செல்வாக்கான ஆளுமையாக மாநில முதல்வர் துமலால் மாற முடியவில்லை என்பதையே காரணமாகச் சொல்லலாம். ஏனெனில் ஊழல் புகார்கள் பல சுமத்தப்பட்ட வீரபத்திர சிங்கால் அம்மாநில மக்களின் நம்பிக்கையைப் பெற முடிகிறது; ஊழல் புகார்கள் அற்ற  பிரேம் குமார் துமல்   ஆட்சியை இழக்கிறார் எனும்போது, பாஜகவின் செயல்முறையில் தான் குறைபாடு இருக்க வேண்டும்.

குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றி நரேந்திர மோடி என்ற தனி மனிதரின் வெற்றி. அவரை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாஜகவும் தான். ஆனால், தனது தனிப்பட்ட வளர்ச்சியால் தான் சார்ந்த இயக்கங்களுக்கு அவர் வலுக் கூட்டி இருக்கிறார். இதைத் தான் பிரேம் குமார் துமல், வசுந்தரா  ராஜே, அர்ஜுன் முண்டா  போன்றவர்களால் செய்ய முடியவில்லை. இது குறித்து கட்சி ஆராய வேண்டும்.

மோடியின் வளர்ச்சிக்கு பின்னணியில் அவரை சுதந்திரமாக இயங்க அனுமதித்த கட்சி இருந்தது. கட்சியை மீறி மோடி வளர்ந்தாலும் தனது வெற்றி பாஜக தொண்டர்களின் வெற்றி என்றே குறிப்பிட்டிருப்பதை இங்கு நினைவு கூர்வது நல்லது. இதே நிலையை  அனைத்து மாநிலங்களிலும் பாஜக அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு  மாநிலத்திலும்  தகுதியான தலைவரைத் தேர்வு செய்து  ஒப்படைத்து விட்டால்,  அங்கு  நிகழும் அனைத்து சாதக பாதகங்களுக்கும் அவரையே பொறுப்பாக்கி ஒரு ஐந்தாண்டு  காலத்துக்கு  அவரை சுயமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அப்போது தான் 1990 காலகட்டத்தில் இருந்த நிலையை பாஜக அடையும்.

‘பாஜகவில் தலைவர்களுக்கு பஞ்சமில்லை; தலைமை  தாங்கும் பண்பு தான் குறைந்து விட்டது’ என்று பலரும் விமர்சிக்கும் நிலையில், இது ஒன்றே வழி. ஏனெனில்,  மூத்த தலைவர்  அத்வானியால் ஏற்கனவே வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட முறை இது.

வெற்றியில் கூத்தாடுவதும் தோல்வியில் இடிந்துபோவதும் நல்ல செயல்வீரர்களுக்கு இலக்கணமல்ல. அந்த வகையில் தற்போதைய தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தலை வணங்கி ஏற்று, முன்னெப்போதையும் விட தீவிரமாக களப்பணி  புரிய பாஜக தயாராக வேண்டும்.

''இப்போதும் கூட காங்கிரஸ் தான் வென்றிருக்கிறது'' என்று ப.சி.யும், ''காங்கிரஸ் வளர்கிறது; பாஜக தேய்கிறது'' என்று மு.க.வும் கூறி இருப்பது எதனால் என்று  பாஜக சிந்திக்க வேண்டும்.  சரித்திரம் வெற்றியாளர்களையே நினைவில் வைத்திருக்கும்- மோடி போல. இப்போது மோடியை பிரதமர் பதவிக்கான தகுதியான நபராக பலர் முன்னிறுத்திவரும் சூழலில், பாஜகவின் தயக்கம் அல்லது முடிவு எடுக்க முடியாத தன்மை, கட்சிக்கு நல்லதல்ல. இதுகுறித்து கட்சியோ, மோடியோ தெளிவான அறிவிப்பை விரைவில் வெளியிடுவது அனைவருக்கும் நல்லது. இதுவும் குஜராத், இமாச்சல் தேர்தல் முடிவுகள் அளிக்கும் பாடம் எனில் மிகையில்லை.

---------------------------
விஜயபாரதம் (04.01.2013)



செவ்வாய், டிசம்பர் 11, 2012

சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்


சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு (எப்.டி.ஐ) எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்புகள், நமது அரசியல் கட்சிகளின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி இருக்கின்றன. இதன்மூலமாக ‘LAW MAKERS’ என்று ஜனநாயகத்தில் பெருமையாகக் குறிப்பிடப்படும் நமது மக்கள் பிரதிநிதிகளில் பலரின் சாயம் வெளுத்திருக்கிறது; தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தரம் (ஏற்கனவே என்ன தரத்தைக் கண்டீர்கள் என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்) அதல பாதாளத்துக்கு சரிந்திருக்கிறது. ஆனால் இம்முடிவு தெரிவதற்குள் நடந்த நாடகங்கள் தான் எத்தனை, எத்தனை?

........................................

...............................................................

மொத்தத்தில் நமது நாட்டின் சுயநிர்ணயமும் வர்த்தக சுதந்திரமும் காலவதியாகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக எப்.டி.ஐ. அனுமதியை அரசு நிறைவேற்றி இருப்பதில், அந்நிய நிறுவனங்களின் ‘கோடிக் கரங்கள்’ நீண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதைக் கண்டுபிடிக்க வேண்டிய மத்திய புலனாய்வுத் துறையோ, எதிர்க்கட்சிகளை வழிக்குக் கொண்டுவரப் பயன்படும் வேட்டைநாயாக மாறி இருக்கிறது. ஆக, இந்திய ஜனநாயகம் மீதான நம்பகத்தன்மை மிகவும் குலைந்துள்ள காலகட்டத்தில் நாம் வாழ்வது உறுதியாகி இருக்கிறது.

------------------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து  
விஜயபாரதம் -  21.12.2012
.

வெள்ளி, நவம்பர் 30, 2012

2 ஜி ஏலம்: திருடர்கள் கும்மாளம்



நன்றி: மதி/ தினமணி-20.11.2012
உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு பயந்து அரசு வேண்டாவிருப்பாக நடத்திய 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ஜி.எஸ்.எம் பிரிவில் மிக்க குறைந்த வருவாயே அரசுக்குக் கிடைத்துள்ளது நியாயமாக இதற்கு வருத்தப்பட வேண்டிய மத்திய அரசோ, இதனால் குதூகலமாகி இருக்கிறது. திருடர்கள் கையில் கஜானாவைக் கொடுத்தால் என்ன ஆகும் என்பதற்கு உதாரணம் ஆகி இருக்கிறது இந்த நிகழ்வு.....


இந்த ஏலமே மத்திய அரசால் நீதிமன்றக் கண்டிப்புக்கு அஞ்சி நடத்தப்பட்டது தான். அதே சமயம் இதை தனது நிலையை நியாயப்படுத்த கிடைத்த வாய்ப்பாக காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டுள்ளது. ஆட்சியில் இருப்பதால் கிடைத்துள்ள அதிகார பலத்தாலும், ஏற்கனவே நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானான நிறுவனங்களின் உதவியாலும், இந்த ஏல விற்பனையை பெயருக்கு நடத்தி இருக்கிறது மத்திய அரசு. ஏலம் நடத்துபவரும் ஏலத்தில் பங்கேற்பவரும் முன்கூட்டியே பேசிவைத்துக் கொண்டால் என்ன ஆகும்? அது தான் தற்போது நடந்திருக்கிறது....
-------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 
விஜயபாரதம் (30.11.2012)

திங்கள், நவம்பர் 26, 2012

கசாப் தூக்குத் தண்டனையும் காங்கிரசின் தந்திரங்களும்


மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலில் கைது செய்யப்பட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப் கடந்த நவ. 20 ம் தேதி, பூனா, எரவாடா சிறையில் ரகசியமாகவும், அவசரமாகவும் தூக்கிலிடப்பட்டிருக்கிறான். பயங்கரவாதிகளுக்கு கடைசியில் கிடைக்கப்போவது இது தான் என்பதை காலம் கடந்தேனும், நமது அரசுகள் வெளிப்படுத்தி இருப்பது ஆறுதல் அளிக்கிறது. ஆயினும், இந்த தண்டனை நிறைவேற்றத்தின் பின்னணியில் உள்ள மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தந்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்......

காங்கிரஸ் கட்சி எந்தத் தந்திரத்தைக் கையாண்டாலும், கசாப் தூக்கு நிறைவேற்றத்தில் லாபம் காண விரும்பினாலும், நாட்டுநலன் அடிப்படையில் அக்கட்சியை இப்போதைக்குப் பாராட்டுவோம். அதே சமயம் அக்கட்சியின் சுயரூபத்தை பிரசாரமும் செய்வது அவசியம். அதேபோல, கசாப் தூக்கில் இடப்பட்டதைக் கொண்டாடும் மனநிலையும் தேவையில்லை. இந்த அம்பை ஏவியவர்கள் எப்போது வெல்லப்படுகிறார்களோ, அப்போது தான் உண்மையான கொண்டாட்டத்துக்கான தருணம் வாய்க்கும். இதை தேசபக்தர்கள் மறந்துவிடக் கூடாது.

-------------------------------

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 
விஜயபாரதம் ( 07.12.2012)


வியாழன், நவம்பர் 08, 2012

திருப்பூர் ஆர்.எஸ்.எஸ். செயலர் மீது கொலைவெறித் தாக்குதல்


கடந்த செவ்வாய்க்கிழமை (06.11.2012) இரவு, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆனந்த் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது. தெய்வாதீனமாக மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ள ஆனந்த் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஆர்.எஸ்.எஸ். மாவட்டச் செயலாளர் மீதான தாக்குதல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது....

-------------------------------
முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

.

புதன், அக்டோபர் 31, 2012

இறைவன் அளித்த அரிய வாய்ப்பு


நமது நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்த மாபெரும் ஊழல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல். வெறும் ரூ.  64 கோடி ஊழலுக்காக ஆட்சியையே இழந்த ராஜீவ் காந்தி இருந்த அதே காங்கிரஸ் கட்சி தலைமை வகிக்கும் மத்திய கூட்டணி ஆட்சியில் தான், ரூ. 1.76 லட்சம்  கோடி மதிப்புக்கு நாட்டின் கருவூலத்துக்கு இழப்பு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது. இதை முன்னின்று நடத்தியவர்  திமுகவைச் சேர்ந்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா. அவருடன் இணைத்து கொள்ளை அடித்தவர் திமுக தலைவரின் மகள் கனிமொழி. இவர்களுக்கு உறுதுணையாக இருந்து ஊழல் புரிந்தவர்கள் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் கபில் சிபல், பிரதமர்  மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா ஆகியோர்.

இந்த ஊழல் குறித்து சில பத்திரிகைகளில் லேசாக விஷயம் கசிந்தவுடன் அரசியல் அரங்கில் சூடு பிடிக்கத் துவங்கியது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும், இடதுசாரிக் கட்சிகளும் ஸ்பெக்ட்ரம் ஊழலைக் கண்டித்து நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியிலும் தீவிரமாகப் போராடினர். ஆனால், அதிகார மமதையில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்புகள் ஒரு பொருட்டாக இருக்கவில்லை தவிர,  ஊழலில் ஈடுபட்டவர்கள் யாரும் அதை ஒப்புக்கொள்வது வழக்கத்திலும் கிடையாதே?

இந்த நேரத்தில் தான், ஆபத்பாந்தவனாக களத்தில் வந்து குதித்தார் 'அரசியல் தரகர்' என்று வசை பாடப்படும் சுப்பிரமணியன்சுவாமி. அவரது கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்வதற்காகவே ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து தனி மனிதராகப் போராடினாரோ  என்று எண்ணத் தோன்றுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஒரு நுனியைப் பிடித்துக் கொண்ட அவர் அது தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதமே ஊழலை அம்பலப்படுத்துவதற்கான முதல்  நடவடிக்கை. வழக்கம் போல நமது மௌன சாமி மன்மோகன் சுவாமியின் கடிதத்தைக் கண்டுகொள்ளவில்லை. இதுதொடர்பாக  நீதிமன்றத்தின் படிகளை சுவாமி தொட்டபோது, ஊழலுக்கு எதிரான குரலின் ஆவேசம் ஒலித்தது.

சுவாமியின் இடையறாத சட்டப் போராட்டம், வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை சேகரித்தல், அவற்றை நேர்த்தியாக வெளிப்படுத்துதல் என்று ஸ்பெக்ட்ரம் வழக்கு சூடு பிடித்தது. பிறகு நடந்ததை நாடு அறியும்.

ஊழலுக்கு எதிராக தனியொரு மனிதராக, எள்ளல்களையும் ஆசைகாட்டல்களையும் பொருட்படுத்தாமல்  போராடிய சுப்பிரமணியன் சுவாமியால் தான், ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. அதில் தொடர்புடைய அமைச்சர் ஆ.ராசா பதவி இழந்தார்; திமுக குலக்கொழுந்து சிறை செல்லவும் நேர்ந்தது; முறைகேடாக ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள்  அனைத்தையும் நீதிமன்றம் ரத்து செய்தது. 2 ஜி ஊழல் அம்பலப்பட்டதால், 3 ஜி அலைக்கற்றைகளை முறைப்படி ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் மத்திய  காங்கிரஸ்  அரசுக்கு ஏற்பட்டது.

இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலை விட பெரிய ஊழல்கள் - நிலக்கரி ஊழல் போல- அம்பலப்பட்டு நிற்கின்றன. இதற்கு அடிகோலியது சுவாமியின் ஊழலுக்கு எதிரான போராட்டம் தான் எனில் மிகையில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை அற்புதமான ஓர் ஆவணமாக '2G   Spectrum Scam' என்ற தலைப்பில்ஆங்கிலத்தில்,  2011 ல் சுவாமி வெளியிட்டார். ஊழலுக்கு எதிராகப் போராடுவோருக்கு இந்நூல் பல திறப்புகளை அளிக்கக் கூடியது. இந்நூலை தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு நண்பர் திரு ஹரன் பிரசன்னா மூலமாகக் கிடைத்து. இது ஓர் அரிய வாய்ப்பு தான். கடவுளுக்கும் நண்பர் ஹரனுக்கும் நன்றி.

தமிழ் ஹிந்து இணையதளத்தில் நான் எழுதிய ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த கட்டுரைகளே இந்த வாய்ப்பை எனக்கு கிடைக்கச் செய்தன. ஆரம்பத்தில் எனக்கு தயக்கமாகவே இருந்தது. சுவாமி போன்ற மேதை எழுதிய புத்தகத்தை, அதுவும் பெரிய அளவிலான,தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புத்தகத்தை என்னால் மொழி பெயர்க்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. எனினும் சவாலாக இதை மேற்கொள்ள முடிவு செய்தேன்.

கிட்டத்தட்ட 4 மாதங்கள் தினசரி குறைந்தபட்சம் 3 மணிநேரம் இப்பணியில் ஈடுபட்டேன். உண்மையிலேயே சவாலான பணி தான். ஏனெனில், இந்நூலில் வரும் பல சொற்கள் வர்த்தகம், பொருளாதாரம் சார்ந்தவை. பல சொற்களுக்கு தமிழில் வார்த்தையே இல்லை. தவிர சுவாமியின் ஆங்கிலம் கலப்பு வாக்கிய அமைப்பாக இருந்தது; பல இடங்களில் அவரது மேதா விலாசமும் வெளிப்பட்டது. ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் அல்லவா?

இந்த கடும் உழைப்புக்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. ஆங்கிலத்தில் மட்டுமே வெளியான சுப்பிரமணியன் சுவாமியின் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த நூல இப்போது தமிழிலும் வெளியாகி இருக்கிறது. கிழக்கு பதிப்பகம் இந்நூலை சிறப்பான முறையில் வெளியிட்டிருக்கிறது. இதில் என் பங்கும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது- தேசத்துக்கு என்னால் ஒரு சிறு பணி ஆற்றப்பட்டுவிட்டது.

இந்நூல் குறித்த அறிமுகம் மட்டுமே இது... இந்நூலின் பல அம்சங்கள் குறித்து விரிவாக எழுத உத்தேசம் இருக்கிறது. ஏனெனில், இந்நூல் ஓர் அற்புதமான கருவூலம். இதில் உள்ள மூல ஆவணங்களைக் கொண்டு மேலும் பல நூல்களை எழுத முடியும். நூலின் பக்கங்கள் யாவுமே ஊழலுக்கு எதிரான  தீப்பிழம்புகள் போலவே இருப்பதை, படித்தால் தான் உணர முடியும்.

இந்நூலை தமிழ் மக்கள் வாங்கிப் படிக்க வேண்டும். இந்நூலை  வெளியிட்ட கிழக்குப் பதிப்பகத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். நாம் அனைவரும் நாட்டின் புதல்வர்கள் என்ற முறையில், ஊழலை எதிர்ப்பதில் நம் அனைவருக்கும் பங்குண்டு. சுப்பிரமணியன் சுவாமியின் அற்புதமான இந்நூலை தமிழில் எழுத வாய்ப்பளித்த கிழக்கு பதிப்பகம் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு எனது நன்றிகள் என்றும்  உண்டு.


நூல் குறித்த விவரங்களுக்கும், நூலை வாங்கவும்...

                 தொடர்பு கொள்க: கிழக்கு இணையதளம் 

------------------------------------------------

நூல் முகவரி:

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் 

ISBN 978-81-8493-703-9
Genre Politics
Book Title 2G Spectrum Uzhal
Pages 240
Format PB
Year Published 2012
Price :              Rs 195.00



.

புதன், அக்டோபர் 17, 2012

அரசுக்கு ஓர் ஆலோசனை




நூல் அறிமுகம் 

நூல்விவசாயிகளைப் பாதுகாப்போம் 
ஆசிரியர்சு.சண்முகவேல்,  
பக்கங்கள்: 80விலைரூ. 40.00
வெளியீடுதிருப்பூர் அறம் அறக்கட்டளை,    
          எண்: 97/98 , மிஷன் வீதி, திருப்பூர்- 641604.


விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சு.சண்முகவேல் ஈரோட்டில் பதிப்புத் துறையில் பணி புரிபவர். தொழில் மாறினாலும், தனது பாரம்பரிய வேரை மறக்காமல்தற்போது நலிவடைந்து வரும் விவசாயத்தைக் காக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆராய்ந்து, தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை எழுதி இருக்கிறார்.

விவசாயம் என்பது நமது நாட்டில் இப்போது துக்கமான ஒரு சுமையாக மாறி வருகிறது. பல நூறு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி கூட, தனது நிலத்தை கூறு போட்டு   விற்றுவிட்டு வேறு தொழிலில் புகுவது சாதாரணமாகி விட்டதுபெரு விவசாயிகளின் நிலைமையே இப்படி என்றால், சிறு விவசாயிகளின் நிலையைச் சொல்ல வேண்டியதில்லைஇயற்கைச் சீற்றங்களில் பாதிப்புதண்ணீர்ப் பற்றாக்குறைஇடுபொருள் விலை உயர்வு,  விளைபொருளுக்கு தகுந்த விலை கிடைக்காமை, வேலையாட்கள் தட்டுப்பாடு, அரசின் பாராமுகம் போன்ற காரணிகளால் விவசாயம் செய்வதே கொடுங்கனவாக மாறி இருக்கிறது. ஏற்கனவே விவசாயம் செய்ய முடியாமல் தத்தளிக்கும் அவர்கள், காலத்தின் கோலத்தால் அதிலிருந்து தப்பினால் போதும் என்று ஓடுகிறார்கள். விளைவாக, விளைநிலங்கள் மனைப் பிரிவுகளாகின்றன.

இந்த நிலை நீடித்தால் என்ன ஆகும்?  1870-களில் இந்தியாவில் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தால் லட்சக் கணக்கானோர் பலியான கதை போன்ற துயரம் மீண்டும் நிகழும். 130 கோடி மக்களுக்கு உணவளிக்க முடியாவிட்டால், பெரும் வன்முறையும் சமூகச் சீர்குலைவும் ஏற்படும். அந்த நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்கிறார் நூலாசிரியர்.

   இந்த நிலைக்குத் தீர்வென்ன? பிரச்னை தெரிந்துவிட்டாலே பாதித் தீர்வு கிடைத்து விடும். அதுபோல, விவசாயத்தைச் சீர்குலைக்கும் காரணிகளைக் கண்டறிந்து பட்டியலிடும் ஆசிரியர், அதற்கான தீர்வுகளை தனக்குத் தெரிந்த அனுபவ ஞானத்துடன் கூறி இருக்கிறார். அரசு செய்ய வேண்டிய சில செயல்திட்டங்களை முன்வைத்து, அதற்கான வழிமுறைகளையும் கூறுகிறார். இந்த நூலில் உள்ளவை இறுதியான திட்டங்கள் அல்ல.  எனினும், விவசாயம் மேம்பட அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகள் பல இதில் இருக்கின்றன. குறிப்பாக விவசாயிகளுக்கான நஷ்டஈடு திட்டம், அவர்களை தடம் மாற்றாமல் பயணிக்க வைப்பதாக உள்ளதைக் குறிப்பிடலாம்.

   உண்மையில் இதுபோன்ற ஆய்வுகள் அரசால் நடத்தப்படும் வேளாண் பல்கலைக்கழகங்கள்  செய்ய வேண்டியவை;  விவசாய சங்கங்களும் வேளாண் விஞ்ஞானிகளும்  கவலை கொள்ள வேண்டியவைஇதை விவசாயக் குடிமகன் என்ற முறையில் செய்திருக்கும் நூலாசிரியர் சு. சண்முகவேல் பாராட்டுக்குரியவர். இந்நூலை வெளியிட்டுள்ள திருப்பூர் அறம் அறக்கட்டளையின் பணி பாராட்டுக்குரியது. இந்நூலை விவசாய வளர்ச்சிக்குப் பாடுபடும் அனைவரும் படிப்பது நாட்டுக்கு நல்லது.  

----------------------
விஜயபாரதம் (19.10.2012)