செவ்வாய், ஆகஸ்ட் 30, 2011

தூக்குத் தண்டனை- ஒரு விவாதம்




அன்புள்ள நண்பர்களுக்கு,

மூவருக்கு மரண தண்டனை தொடர்பான குளவியின் கட்டுரை தமிழ் ஹிந்து இணையதளத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருப்பது ஒருவகையில் நமது ஹிந்து சமூகத்தின் ஜனநாயகத் தன்மையையே வெளிப்படுத்துகிறது. பலரும் எதிர்ப்பதுபோல குளவியாரின் ஒப்பீட்டை புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், சரித்திரம் ஒப்பீட்டுக்காகவே இத்தகைய வாய்ப்புகளை நம் முன் வழங்குகிறது. நாடாளுமன்ற தாக்குதலின் குற்றவாளியான அப்சலுக்கு சாமரம் வீசுபவர்கள் (மதச் சார்பின்மையின் காப்பாளர்கள்) ஏன் பேரறிவாளன் குழுவை கண்டுகொள்வதில்லை? என்ற கேள்வி இயல்பானது. இந்தக் கேள்விக்கான பதிலில்தான் இலங்கை தமிழினப் படுகொலைக்கான காரணமும் ஒளிந்திருக்கிறது.

எனினும், ஹிந்து நம்பிக்கைகளின் படி, குற்றம் செய்தவர் தண்டனை பெறுவதே நியதி. அதிலும் பாரதத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை விஷயத்தில் மன்னிப்புக்கே இடமில்லை. இப்போது தண்டனையை எதிர்நோக்கி உள்ளவர்களை ஆதரிப்பவர்கள் ஒவ்வொருவரும் முழங்கும் வசனங்கள் உண்மையில், மேற்படி நபர்களைக் காப்பவையாக இல்லை என்பதையும் நாம் பரிசீலிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். குறிப்பாக, 'இந்த மூவரைக் காக்க முடியாவிட்டால் தனித் தமிழ்நாடு உருவாகும்' என்பது போன்ற வசனங்களை மொழிபவர்களிடம் யாரும் நற்சிந்தனைகளை எதிர்பார்க்க முடியாது. இவர்களை நாம் எக்காலத்திலும் ஆதரிக்க இயலாது.

தவிர, இம்மூவருக்காக மட்டும் இவர்கள் பரிந்து பேசுவதில்லை என்பதையும் நினைவில் கொள்வது நலம். தூக்குத் தண்டனையையே ரத்து செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புபவர்கள் அதன் பின்விளைவை உணராமல் இல்லை. மனிதாபிமான முகமூடி அணிந்து இன்று இவ்வாறு குரல் எழுப்புவோர் பலரும், குஜராத் கலவரத்தின் போது, நரேந்திர மோடிக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்தவர்கள். அதாவது தங்களது வசதிக்கேற்ப, தூக்குத் தண்டனையை எதிர்ப்பதே இவர்களது அரசியல். அந்த அடிப்படையில் இம்மூவருக்கும் மன்னிப்பு வழங்க முடியாது; கூடாது.

ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்துபவர்கள் இம்மூவருக்கும் நியாயம் கோரும்போது, இவர்கள் மீதான மனிதாபிமானக் கண்ணோட்டமும் அடிபட்டுவிடுகிறது. இவர்களுக்கு ஆதரவாக காஷ்மீர் பிரிவினைவாதிகளும் கைகோர்ப்பதைப் பார்க்கும்போது, தூக்குத் தண்டனையை நிறுத்தக் கூடாது என்றே கூறத் தோன்றுகிறது.

அப்சலும் கசாபும் பேரறிவாளனும் சாந்தனும் முருகனும் சட்டத்தின் முன் சமம். அவர்களை நாம் எந்த மதக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பது முக்கியமல்ல. எனில், இந்த ஐவரையும் நாம் ஆதரிக்கக் கூடாது. அறியாமை, இளம் வயது, அரசியல் கொலை போன்ற காரணங்களுக்காக யாரையும் தூக்கிலிருந்து விடுவிக்க முடியாது.

எனினும் இவர்களது கருணை மனு இத்தனைக்காலம் கழித்து நிராகரிக்கப்பட்டதில் உள்ள பின்புல அரசியல் கண்டிக்கப்பட வேண்டியதே. அதற்கு குளவியின் ஒப்பீடுகள் அவசியமே. அதற்காக ‘சிறு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்காக தூக்குத் தண்டனையா?’ என்பது போன்ற கேள்விகளை எழுப்புவது, நமது அறியாமையே வெளிப்படுத்துகிறது. அறிவுப்பூர்வமாக அணுக வேண்டிய ஒரு விஷயத்து உணர்வுப்பூர்வமாக மாற்றவே அது வழிகோலும்.

பேரறிவாளன் எழுதிய (தொகுத்த) 'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' என்ற நூலை நான் படித்திருக்கிறேன். அதில் அவர் முன்வைக்கும் வாதங்கள் இவ்வழக்கிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்துகின்றன. அந்த அடிப்படையில் பேரறிவாளன் குழுவுக்காக பரிந்து பேசுவதைக்கூட ஏற்க முடியும். ஆனால், அத்தகைய தர்க்கரீதியான பிரசாரம் தவிர்த்து, உணர்ச்சியைத் தூண்டும் அரசியல் வியாபாரிகளே தமிழகத்தில் தூக்கு எதிர்ப்பு போராட்டங்களை நடத்துகிறார்கள். அதன் விளைவே செங்கொடி போன்றவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து சாட்சியம் பெற காவல்துறை நடத்தும் அத்துமீறல்களை பேரறிவாளன் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். அத்தகைய அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்பது காலத்தின் கட்டாயம். அந்த அணுகுமுறையையும் தமிழகத்தில் நம்மால் காண முடியவில்லை. ஏனெனில், இங்குள்ள ஒவ்வொருவரும் தனது எதிராளிக்கு அத்தகையே அநீதி நிகழ்த்தப்பட வேண்டும் என்று உளமார விரும்புகிறார். அப்படிப்பட்டவர்கள் போடும் கோஷங்கள் வெறும் வெளி வேஷங்களே.

இந்நிலையில், தமிழ் ஹிந்து இணையதளத்தில் இக்கட்டுரை வெளியாகி இருப்பதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கக் கூடாது. குளவியின் கருத்துக்கள் ஒரு கோணத்தில் நமது மனசாட்சியை உலுக்குகின்றன. ஆயினும் குற்றத்துக்கான தண்டனையை பெற வேண்டியவர்கள் பெறுவதே சரியானது. அதற்கென உள்ள மன்னிப்பு வாய்ப்புகள் காலாவதி ஆகிவிட்டது எனில், அத்தகைய ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்த குற்றத்துக்கான தண்டனையையும் நமது மக்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும்.

யாரை நம்பக் கூடாதோ அவர்களை நம்புவதும், யாரை நம்ப வேண்டுமோ அவர்களை ஏளனம் பேசுவதும், பேரறிவாளன் தரப்பில் ஆஜராகும் குழுக்கள் செய்துவரும் தவறுகள். அதற்கு கடந்த அறுபது ஆண்டுகளாக தமிழகத்தில் பிரசாரம் செய்யப்படும் முட்டாள்தனமான கருத்துக்களும் காரணம். அவ்வகையில் பேரறிவாளன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமும் ஏமாற்றப்பட்டுள்ளன எனில் மிகையில்லை. அதற்காக, நாட்டின் இறையாண்மையை எதிர்த்து கோஷமிடும் அறிவிலித் தனத்தை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

இவ்விஷயத்தில் ஆரம்பத்தில் குழப்பினாலும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஜெயலலிதா தனது அரசியல் சாதுரியத்தைக் காட்டி இருக்கிறார். தமிழக மக்களின் ஏகோபித்த உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, தூக்குத் தண்டனையைக் குறைக்குமாறு தீர்மானம் கொண்டுவருவதாக அவையில் அவர் தெரிவித்திருக்கிறார். இதே போன்ற கோரிக்கையை காஷ்மீர் முதல்வர் கொண்டுவந்தால் ஏற்க முடியுமா என்பதையும் இத்தருணத்தில் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.

இப்போது வழக்கறிஞர்களின் தலையீட்டால் மூவரது தூக்குத் தண்டனைக்கு எட்டு வார கால இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் சி. நாகப்பன், எம். சத்யநாராயணன் ஆகியோர், தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுக்களை பரிசீலிப்பதில் 11 ஆண்டுகள் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்திலேனும், சூழலின் நிதர்சனத்தை உணர்ந்து சட்டரீதியாக, இவ்வழக்கிலுள்ள ஓட்டைகளைக் கண்டறிந்து இவர்களை விடுவிக்க முயற்சிப்பதே விவேகம்.

- சேக்கிழான்


சனி, ஆகஸ்ட் 27, 2011

காங்கிரசுக்கு நஷ்டம்... தேசத்திற்கு லாபம்!

சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ள ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு, சிலருக்கு பெரும் மன உளைச்சலையும், தேச பக்தர்களுக்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஹசாரே உண்ணாவிரதம் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஜன லோக்பால் விஷயத்தில் முழு பலனையும் அளிக்காமல் போனாலும் கூட, நாட்டு மக்களை ஊழலுக்கு எதிராகத் திரட்டியதில் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.

ஹசாரே உண்ணாவிரதம் துவங்குவதற்கு முன்னர் நாடு முழுவதும் இந்த அளவுக்கு எதிரொலியை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு கனவிலும் நினைத்திருக்காது. ஹசாரே குழுவினர் குறித்த அவதூறுகளையும் கிண்டலான விமர்சனங்களையும் வெளிப்படுத்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தில் ஹசாரே குழு அநாவசியமாகத் தலையிடுவதாக குற்றம் சாட்டினார்கள்.

குடிமக்கள் குழுவின் கருத்துக்களைப் புறந்தள்ளும் விதமாக, அரசு சார்பில் சக்கையான ஒரு லோக்பால் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, அது அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. எப்படியாவது காலத்தைக் கடத்தி, நடப்பு கூட்டத்தொடரை முடித்து விடும் திட்டத்துடன் காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டது.

ஆனால், நாட்டு மக்களின் பேராதரவு ஹசாரேவுக்கு இருப்பது உறுதியானதும் காங்கிரஸ் கட்சி வழிக்கு வந்தது. ஆரம்பத்தில் ஹசாரேவை வசை பாடிய செய்தித் தொடர்பாளர்களை நிசப்தமாக்கிய காங்கிரஸ், பிறகு முஸ்லிம் மத குரு இமாம் புகாரி, தலித் தலைவர் உதித்ராஜ், போலி அறிவுஜீவி அருந்ததிராய் உள்ளிட்டவர்களை லோக்பாலுக்கு எதிரான பிரசாரத்துக்கு பயன்படுத்திப் பார்த்தது. அதுவும் பயன் தரவில்லை.

சாதிரீதியாகவும் மதரீதியாகவும் மக்களைப் பிளவுபடுத்த நடந்த முயற்சிக்கு மக்களிடம் சிறிய அளவில்கூட ஆதரவு கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டி, அதன்மீது பழிபோட காங்கிரஸ் முயன்றது; அதிலும் சம்மட்டி அடியே கிடைத்தது. ஊழலுக்கு எதிராக மக்களின் கோபம் பொங்கிப் பிரவகிப்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் அரசை நிர்பந்தித்தன.

பிற கட்சிகள் லோக்பாலை எதிர்க்கும்; அதைக் காட்டி அரசியல் நடத்தலாம் என்ற கனவும் கலைந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் உணர்ச்சிகரமாக முழங்கினார். ஊழலுக்கு தமது அரசு என்றும் துணைபோகாது என்று வழக்கம் போல முழங்கிய அவர், ஹசாரே உண்ணாவிரதம் பத்து நாட்களைத் தொட்ட நிலையில், வேறு வழியின்றி, ஜன லோக்பால் மசோதா குறித்தும் நாடாளுமன்றம் விவாதிக்கும் என்று அறிவித்தார்.

அதாவது அரசு தரப்பு லோக்பால் மசோதா மட்டுமின்றி ஹசாரே குழு முன்வைக்கும் மசோதா குறித்தும் நாடாளுமன்றம் விவாதித்தது. கூடவே, அருணா ராய் (இவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்) சமர்ப்பித்த மற்றொரு வடிவமும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதாவது, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறும் வகையில், மூன்று லோக்பால் மசோதா வடிவங்கள் குறித்தும் மக்களவை உறுப்பினர்கள் விவாதித்தனர்.

காந்தியடிகள் அறிமுகப்படுத்திய உண்ணாவிரதம் போராட்டம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளதை ஹசாரே தனது வைராக்கியத்தால் நிரூபித்தார். ஊழல்மயமான காங்கிரஸ் கட்சி அவர் முன மண்டியிட்டது. அவருக்கு நாடு முழுவதும் பரவலாக கிடைத்த வரவேற்புக்கு அடிப்படை தற்போதைய மத்திய அரசு மீதான அதிருப்தியின் விளைவே என்பதை மன்மோகன் சிங் அரசு உணர்ந்தது. விளைவாக, ஹசாரே வலியுறுத்தியபடி, ஜன லோக்பால் மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

‘ஹசாரேவின் உயிர் மேலானது என்று கூறி அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும்’ என்று பிரதமர் வலியுறுத்தினார். அதற்கு பதில் அளித்த ஹசாரே, ‘இதை உணர பத்து நாட்கள் பிரதமருக்கு தேவைப்பட்டுள்ளன’ என்று சுட்டிக் காட்டினார். எனினும் அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்தார் (ஆக. 26 நிலவரம்). "அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் சாசனம் இருக்க வேண்டும்; அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும்; அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்'' ஆகிய மூன்று நிபந்தனைகளை அரசு ஏற்காதவரை, உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

எதிர்பார்த்தபடியே, ஹசாரே குழுவில் உள்ள காங்கிரஸ் அனுதாபியான அக்னிவேஷ் தனது வேஷத்தைக் கலைத்தார். ஹசாரே தவறாக வழிநடத்தப்படுவதாக அவர் புலம்பினார். பிரதமர் அழைக்கும் உறுதியை ஏற்று ஹசாரே உண்ணாவிரத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆயினும் ஹசாரே மசியவில்லை.

ஹசாரே குழுவில் உள்ள அரவிந்த் கேஜ்ரிவால், அரசின் பிடிவாதத்துக்கு ப.சி, கபில் சிபல் ஆகியோரே காரணம் என்று குற்றம் சாட்டினார். கிரண் பேடியும், சாந்தி பூஷணும், தந்திரங்களால் தங்கள் போராட்டத்தை உடைக்க முடியாது என்று அறிவித்தனர். இதனிடையே சச்சின் பைலட் போன்ற வாரிசு எம்.பி.களை இளம் காங்கிரஸ் துருக்கியராக முன்னிறுத்தி அவர்கள் ஹசாரேவை ஆதரிப்பதாக ஒரு தோற்றத்தை நிறுவ காங்கிரஸ் ஆதவு ஊடகங்கள் முயன்றன. ஆயினும் மக்களவையில் பேசிய ராகுல் காந்தியின் கருத்துக்கள் காங்கிரஸ் கட்சியின் முகத்தை மீண்டும் தோலுரித்தன.

ஹசாரே உண்ணாவிரதம் நாடு முழுவதும் மக்களை ஒருங்கிணைத்ததைப் பார்த்த பின்னரும், ''இந்தப் போராட்டம் ஜனநாயகத்தை மிரட்டுவதாக உள்ளது'' என்று ராகுல் கூறினார் என்றால், அக்கட்சியின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்ள முடியும். ‘’வலிமையான லோக்பால் என்பது ஊழலை எதிர்த்து போராடும் ஒரு அமைப்பாக மட்டுமே இருக்க முடியும். ஒரே ஒரு லோக்பால் மசோதாவால் மட்டும் ஊழலை முற்றிலும் ஒழித்துவிடமுடியாது. அதற்கு பல்வேறு முயற்சிகளும், தொடர் நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது’’ என ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

ஆயினும் இப்போதைக்கு மக்கள் கருத்துக்கு அடிபணிவதைத் தவிர காங்கிரஸ் கட்சிக்கு வேறு வழியில்லை. ஆயினும் ஹசாரே கூறுவதுபோன்ற கடுமையான லோக்பால் சட்டம் கொண்டுவருவதற்கும் அரசுக்கு விருப்பமில்லை.

கர்நாடகாவில் லோக் ஆயுக்தாவை உருவாக்கி தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக்கொண்ட எடியூரப்பா போல செயல்பட காங்கிரஸ் கட்சிக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது? எனவே தான் பல சால்ஜாப்புகளைக் கூறுகிறார் பிரதமர். இதை உணர்ந்துகொண்டு, எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை மத்திய அரசிடம் கோரினார்கள் குடிமக்கள் குழுவினர்.

ஹசாரே முன்வைக்கும் ஜன லோக்பால் மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன என்பதும் உண்மையே. ஆனால், அரசு நிறைவேற்ற விழையும் 'சர்க்கார்' லோக்பால் மசோதாவை விட அது மேலானது. எனவேதான் எதிர்க்கட்சியான பாஜக, '' ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரிக்கிறோம்; எனினும் ஜன லோக்பால் மசோதாவில் பல முக்கிய திருத்தங்கள் தேவை'' என்று கூறியது.

ஹசாரே உண்ணாவிரதம் அவரது உடலில் சுமார் 7 கிலோ எடை குறையக் காரணமானது. அதே சமயம், நாட்டு மக்களிடம் உறங்கிக் கிடந்த போர்க்குணத்தை வெளிப்படுத்தவும், அவர்களது ஆவேசத்தை வீதிகளில் அரங்கேற்றவும் அமைதியான ஒரு வழிமுறையை உருவாக்கியது.

பெரும்பாலான மக்களுக்கு அண்ணா ஹசாரே யாரென்று தெரியாத போதும், ஊழலுக்கு எதிரான மக்களின் கூட்டு மனநிலை, ஹசாரேவுக்கு ஆதரவாகத் திரண்டது. அதைக் கண்ட எதிர்க்கட்சிகளும் தங்கள் நிலையை அதற்கேற்ப தீர்மானித்துக் கொண்டன. ஆனால், கடைசிவரை காங்கிரஸ் மட்டும் வறட்டுப் பிடிவாதத்தால், தன்மீதான மரியாதையையும் நம்பகத் தன்மையையும் குலைத்துக் கொண்டது.


ஜன லோக்பால் மசோதா நிறைவேறுமா, ஹசாரே கோரும் அம்சங்கள் அனைத்தும் சட்டத்தில் இடம் பெறுமா, ஓட்டைகள் அற்றதாக லோக்பால் சட்டம் வருமா, ஜன லோக்பால் சட்டத்தின் குறைபாடுகள் நீக்கப்படுமா- இவை போன்ற கேள்விகளுக்கு வரும் நாட்கள் பதில் அளிக்கக் கூடும். ஆனால், இந்தப் போராட்டங்கள் ஏற்கனவே மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், ஊழலுக்கு எதிராகவும் ஊழல்மயமான காங்கிரஸ் அரசுக்கு எதிரானதாகவும் உறுதியான பதிவுகளை ஏற்படுத்திவிட்டது.


மொத்தத்தில், ஹசாரே உண்ணாவிரதம் நாட்டுக்கு ஒரு புத்தெழுச்சியை உருவாக்கியது. ஊழலுக்கு எதிரான போரை அது துவக்கிவைத்து விட்டது. இனி அது லோக்பால் மசோதாவுடன் நிற்கும் என்று தோன்றவில்லை. இந்தப் போராட்டம் மக்களுக்கு தன்னம்பிக்கையை அளித்து, நாட்டுக்கு லாபம் அளித்துள்ளது. ஒட்டுமொத்த நஷ்டமும் மத்திய அரசை நடத்தும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குத் தான். இந்த ஆளும்கட்சியின் நஷ்டத்தை பயன்படுத்தி ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகுப்பது எதிர்க்கட்சிகளின் பொறுப்பு.


---------------------------------------------------------
காண்க: ஜன லோக்பால் ஏன் தேவை? (நன்றி: தேசமே தெய்வம்)


செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

தர்ம யுத்தம் வென்றது!

''அதர்மம் எப்போதெல்லாம் ஓங்குகிறதோ, அப்போதெல்லாம் நான் தர்மத்தைக் காக்க அவதரிப்பேன்'' என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியதன் உட்பொருளை ராம்லீலா மைதானத்தில் சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதம் வெளிப்படுத்தி இருக்கிறது. கலியுகத்தில் சங்கமே சக்தி என்று நாம் கேட்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவரிலும் இறைசக்தி குடிகொண்டிருக்கிறது என்கிறோம். ஆனால், ஊழலுக்கு எதிரான போரில் அண்ணா ஹசாரே புதிய அவதாரம் எடுக்கும்வரை, இவற்றை யாரும் நம்பி இருக்கவில்லை.

காலம், தனக்குத் தேவையான மாற்றங்களை நிகழ்த்த வல்ல தலைவர்களை அவ்வப்போது உருவாக்கிக்கொண்டு தான் இருக்கிறது. திலகருக்குப் பின் விடுதலைப் போராட்டம் என்ன ஆகுமோ என்ற நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருந்த காலகட்டத்தில் தான் மகாத்மா காந்தி இந்திய அரசியலில் பிரவேசித்தார். அவரை பக்குவப்படுத்திய தென்னாப்பிரிக்க போராட்டங்களை அப்போது இந்தியர்கள் அறிந்திருக்கவில்லை. அதுபோலவே, இப்போதும் புதிய மக்கள் தலைவராக அண்ணா ஹசாரே உருவாகி இருக்கிறார். இதற்காக அவர் ராலேகான் சிந்தியில் நிகழ்த்திய தவத்தை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை....

காண்க: தமிழ் ஹிந்து
---------------------------
விஜயபாரதம் (02.09.2011)

தொடர்புடைய இடுகைகள்:
* காரணத்திலும் தெளிவில்லை; காரியத்திலும் ஜெயமில்லை.
* யோகியின் புரட்சிக்குரல்
* அண்ணா ஹசாரேவுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்

..

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

சும்மா விடுமா அப்பாவிகள் சாபம்?



''ஆடி அடங்கும் வாழ்க்கையடா - ஆறடி நிலமே சொந்தமடா!''

- இது திமுக தலைவர் கருணாநிதியின் உற்ற நண்பரும் கவிஞருமான சுரதா எழுதிய திரைப்பாடல். 'நீர்க்குமிழி' படத்தில் இடம்பெற்ற இப்பாடலை அவர் கேட்காமல் இருந்திருக்க முடியாது. உலகம் முழுவதும் ஆண்டவனும் ஒருநாள் மண்ணுக்குள்தான் போயாக வேண்டும். அவன் புதைக்கப்படும் இடத்தின் அருகிலேயே முந்தைய காலத்தில் பிச்சைக்காரன் புதைக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும், அந்த மண் மீது மனிதனுக்கு ஆசை குறைவதே இல்லை.

அந்த மண்ணாசை தான் இப்போது கருணாநிதியையும் அவரது கட்சியினரையும் பந்தாடிக் கொண்டிருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன் ஆட்சியை இழந்த திமுக இப்போது அடுக்கடுக்கான நிலப்பறிப்பு வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் ஆளும் கட்சியினரின் அரசியல் பழிவாங்குதல் என்ற கருணாநிதியின் பிலாக்கணத்தை அக்கட்சித் தொண்டனே கூட நம்பவில்லை. அந்த அளவிற்கு கடைசி ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் திமுக பிரமுகர்கள் 'ஆடி' இருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரம் கையில் இருந்த மமதையாலும், எதிர்க்கட்சியான அதிமுக செயலற்று இருந்ததாலும், திமுகவினர் ஆடிய ஆட்டம் சாதாரணமானதல்ல. இதனை ஒவ்வொரு சிற்றூரிலும் கூட மக்கள் அனுபவித்தார்கள். குறிப்பாக, வார்டு உறுப்பினர்கள் முதற்கொண்டு சட்டசபை உறுப்பினர்கள் வரை, தங்களுக்கு மக்கள் வழங்கிய அதிகாரம் சொத்து சேர்க்க என்பதாகவே புரிந்துகொண்டார்கள். முதல்வர் கருணாநிதியின் குடும்பங்களும், மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர் பெருமக்களின் வாரிசுகளும் நடத்திய அதிரடி சொத்து சேர்ப்பு திமுகவினர் பெரும்பாலோரையும் நிலம் மீது பற்றுக் கொள்ளச் செய்தது.

மத்திய அரசில் பங்கு வகிப்பதால் கிடைத்த லாபங்களை பத்திரப்படுத்த கழகத்தின் முதன்மைக் குடும்பம் சொத்துகளைக் குவிக்கத் துவங்கியதே, இதற்கெல்லாம் அடிப்படையானது. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பல்லாயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் சொத்தாக வாங்கிக் குவித்தனர் முதன்மைக் குடும்பத்தினர். அதற்கு உதவியவர்கள் முந்தைய அமைச்சரவையில் இருந்த நம்பகமான துணைவர்கள். ஒவ்வொரு நகரிலும் உள்ள முக்கிய வணிக மையங்களையும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும் விவசாயப் பண்ணைகளையும் வாங்கிக் குவித்தவர்கள், முடங்கிய பஞ்சாலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களையும் விலைபேசினார்கள். ஆட்சி அதிகாரம் அளித்த கம்பீரமான பாதுகாப்புடன், அவற்றை குறைந்த விலைக்கு பேசி முடித்தார்கள். இப்படித்தான் திமுகவினரின் சொத்துக்குவிப்பு துவங்கியது.

கழகத்தின் ஆணிவேர்க் குடும்பமே இவ்வாறு சொத்து சேர்க்க முனைந்தவுடன் சல்லிவேர்க் குடும்பங்களும் அதே பாணியில் சொத்துக்களை சேர்க்கத் துவங்கின. சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், ஈரோட்டில் என்.கே.கே.பி.ராஜா, கோவையில் பொங்கலூர் பழனிசாமி, திருப்பூரில் செல்வராஜ், சென்னையில் பரிதி இளம்வழுதி, அன்பழகன், மதுரையில் அழகிரி கோஷ்டியினர்.. என்று மாநிலம் முழுவதும் அதிகார அத்துமீறல்கள் தொடர்ந்தன.

ஆரம்பத்தில் கோடிகளைக் கொட்டி நிலங்களை வாங்கியவர்கள், பிற்பாடு, கடனில் மூழ்கிய சொத்துக்கள், தாவா உள்ள சொத்துக்களை திட்டமிட்டு அபகரிக்கத் துவங்கினர். இதில் 'பவர் ஆப் அட்டர்னி' முறையில் கபளீகரம் செய்யப்பட நிலமோசடிகள் பல. பத்திரப் பதிவாளரின் உதவியுடன் கூடிய போலிப்பத்திர மோசடிகளும் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கு எதிரான அப்பாவிகளின் புகார்கள் அம்பலம் ஏறவில்லை. ஆட்சியில் திமுக இருந்ததால், மிரட்டி நிலங்களைப் பறித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்த்தது. அதே காவல்துறை தான் இப்போது திமுக பிரமுகர்களை விரட்டி விரட்டி கைது செய்கிறது. இந்த வழக்குகள் இல்லாம் சட்டரீதியாக நீதிமன்றங்களில் வெற்றிபெறுவது சந்தேகமே என்றாலும், இப்போதைக்கு, திமுகவினர் இதனால் நிலைகுலைந்து விட்டது தெளிவாகவே தெரிகிறது.

தேர்தலில் வென்ற அதிமுக, திமுகவினர் நிகழ்த்திய பல அத்துமீறல்களை சரிசெய்யத் துவங்கியபோது, இந்த நிலப்பறிப்பு மோசடிகள் குறித்த புகார்கள் புற்றீசல் போல வெளியாகின. இதையடுத்து, இது தொடர்பான புகார்களை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இப்பிரிவில் குவிந்த புகார்கள் காவல்துறையினரையே மலைக்கச் செய்தன. இவ்வாறு புகார் அளிக்க வந்தவர்கள் பெரும்பாலோர் அரசியல் பலமில்லாத அப்பாவிகளாகவே இருப்பதை பார்க்கும்போது, நமது ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து அச்சம் மிகுகிறது.

குறிப்பாக, சேலத்தில் ஒரு குடியிருப்பே (அங்கம்மாள் காலனி) அமைச்சர்தரப்பால் காலி செய்யப்பட்ட அநியாயம் நடந்திருக்கிறது. அதற்கு கோட்டாட்சியரும் பதிவாளரும் துணை போயிருக்கின்றனர், பெருந்துறையில் 80 க்கு மேற்பட்ட தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தி ஒரே இரவில் ஆறு ஏக்கர் நிலம் அமைச்சர் கோஷ்டியால் ஆக்கிரமிக்கப்பட்டது. காவல்துறை வேடிக்கை பார்த்திருந்தது. இதுபோன்ற அத்துமீறல்கள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளன. ஜூலை இறுதி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் நிலமோசடி சிறப்பு விசாரணைப் பிரிவில் 2,500 க்கு மேற்பட்ட புகார்கள் பதிவாகி இருந்தன. அவற்றில் ஆதாரம் வலுவாக உள்ள 200 மோசடிகள் மீதே வழக்கு இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், என்.கே.கே.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கைகள் தொடரும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். இதற்கு திமுக தலைவர் கண்டனம் தெரிவிப்பது இயல்பே.

ஆரம்பத்தில், 'பொய்வழக்குகளை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதாக அறிவித்த திமுக தலைவர் கருணாநிதி, அதற்கு வாய்ப்பில்லாமல் நிலமோசடி வழக்குகளிலேயே திமுகவினர் பலரும் சிறை சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில், இப்போது புலம்பத் துவங்கி இருக்கிறார்.

இந்நிலையில், நிலமோசடிகள் குறித்து விசாரிக்க சிறப்பு நீதி மன்றம் நிறுவ உத்தரவிட்ட அரசாணையை எதிர்த்து திமுக வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார்கள். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகாரும் செய்திருக்கிறார்கள்.

‘நிலமோசடி புகார்களில் சிக்கும் அதிமுகவினரை விசாரித்து அனுப்பிவிடும் காவல்துறையினர், திமுவினரை மட்டுமே கைது செய்கிறார்கள்’ என்று அங்கலாய்த்திருக்கிறார் கருணாநிதி. முந்தைய ஆட்சியில் திமுகவுக்கு சாதகமாக இருந்த காவல்துறை இப்போது அதிமுகவினருக்கு சாதகமாகச் செயல்படுவது உண்மையானால், அது யாருடைய குற்றம்? முந்தைய ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக இயங்க அனுமதித்திருந்தால் கருணாநிதிக்கு இன்றைய புலம்பும் நிலை வாய்த்திருக்காது. இன்றைய அதிமுக அரசு தவறு செய்தால் அதற்கு அடுத்த ஆட்சியில் திமுக பழி வாங்கட்டும். அதற்காக, திமுகவினர் செய்த முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் காவல்துறை இருக்க வேண்டுமா?

இப்போது சாத்தான் வேதம் ஓதுவதுபோல, முன்னாள் முதல்வர் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ''புகாரே இல்லாமல் திமுகவினர் கைது செய்யப்படுகின்றனர். வழக்குப் பதிவு செய்யும் முடிவைக் காவல் துறை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. எங்கிருந்தோ வரும் கட்டளைகளைக் கேட்டு இரவோடு இரவாக அள்ளித் தெளித்த அவரசக் கோலத்தில் காரியங்கள் நடைபெறுகின்றன. நிலப்பறிப்பு புகார்களுக்கு அதிமுக அரசு அளித்து வரும் ஊக்கமும், முன்னுரிமையும் விரும்பத்தகாத விளைகளை ஏற்படுத்தும். அவற்றில் தொடர்ந்து ஆர்வம் காட்டும் மனோபாவம் காவல்துறையில் வளர்ந்துவிடும்'' என்று அதில் அவர் எச்சரித்திருக்கிறார்.

தற்போதைய நிலமோசடி வழக்குகள் தொடர்ந்தால், 'ஆட்சியாளர்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாதளவு கட்டப் பஞ்சாயத்துகள் முளைக்கும். எல்லாக் காலங்களிலும் அரசியல் கட்சிகளைப் பழிவாங்கிட உதவும் ஆயுதமாக அது மாறிவிடும்' என்றும் கருணாநிதி பயமுறுத்தி இருக்கிறார். 'கொலை,கொள்ளை குற்றங்களைப் புலனாய்வு செய்வதுபோல நிலப்பறிப்பு புகாரிலும் அரசியல் கலப்பில்லாமல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அனுமதிக்கப்பட வேண்டும்' என்று அறிவுரை வேறு கூறி இருக்கிறார். சிறுதாவூர் விவகாரத்திலும் கொடநாடு விவகாரத்திலும் 'அரசியலே இல்லாமல் (?) காவல்துறையை இயங்கச் செய்த மகாத்மா' இந்த ஆலோசனையைக் கூறுகிறார்!

முன்னதாக கோவையில் ஜூலையில் நடந்த திமுக பொதுக்குழுவில் பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, 'நிலப்பறிப்பு வழக்குகளால், தற்போதைய அரசின் நல்ல திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்' என்று ஜெயலலிதாவுக்கு பெருந்தன்மையுடன் அறிவுறுத்தியதை இங்கே நினைவுகூரலாம்.

கெஞ்சியும் பார்க்கிறார், மிரட்டிப் பார்க்கிறார், சட்டரீதியாகப் போராடவும் ஒருபக்கம் முயற்சி செய்கிறார், புலம்பி அனுதாபத்தை சம்பாதிக்கவும் வழிதேடுகிறார், ... இப்படி எந்தத் திசையில் சென்றாலும் வழி அடைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே ‘ஸ்பெக்ட்ரம் ஊழல்’ தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கும் நிலையில், 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி என்னதான் செய்வார்? சுற்றிவரும் அப்பாவிகள் சாபம் சும்மாவிடுமா கழகத்தை?

''மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை; மனிதன் மீது மண்ணுக்கு ஆசை... மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது.. இதை மனம் தான் உணர மறுக்கிறது...''

- இதுவும் கருணாநிதியின் உற்ற நண்பர் வைரமுத்து, ‘முத்து’ திரைப்படத்தில் எழுதிய மற்றொரு திரைப்பாடல். இதையும் முத்துவேல் கருணாநிதி கண்டிப்பாகக் கேட்டிருக்கலாம். இதுபோல இன்னும் பல பாடல்கள் இருக்கலாம். அவற்றை நிராதரவாக அமர்ந்து கேட்க வேண்டிய காலகட்டத்தில் தான் திமுக தலைவர் இருக்கிறார்.



--------------------------
விஜயபாரதம் (26.08.2011)



சனி, ஆகஸ்ட் 13, 2011

கடவுள் பாதி, மிருகம் பாதி...



தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்து விட்டன. யாரும் எதிர்பாராத மாபெரும் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்றபோது, முந்தைய திமுக ஆட்சி மீது மக்கள் கொண்டிருந்த கோபத்தின் வீரியம் தெரியவந்தது. விலைவாசி உயர்வு, ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அதிகாரபீடங்களின் அத்துமீறல்கள் என, திமுக ஆட்சியை வெளியேற்றுவதற்கான அனைத்துக் காரணங்களும் தெளிவாகவே இருந்தன. அதனை சமயோசிதமாகப் பயன்படுத்திய 'புரட்சித்தலைவி' மூன்றாவது முறையாக தமிழக முதல்வர் ஆனார். ஆனால், தனக்கு மக்கள் அளித்த வாய்ப்பை அவர் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற தோற்றத்தை கடந்த மூன்று மாத நடவடிக்கைகள் வாயிலாக உருவாக்கி இருக்கிறார்.



திமுக ஆட்சி மீண்டும் வந்துவிடும் என்ற கருணாநிதியின் கனவுக்கு ஆதாரமாக இருந்தவை இலவசத் திட்டங்கள். அந்த ஆணிவேரிலேயே ஜெயலலிதா கைவைத்தார். அவரும் இலவசத் திட்டங்களை அறிவிக்கவே திமுகவின் கனவு நொறுங்கிப் போனது. தேர்தல் முறைகேடுகள் மூலமாக பின்வாசல் வழியே அதிகாரத்தைக் கைப்பற்ற திமுக தீட்டிய திட்டங்களும் தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளால் நீர்த்துப் போயின. அதனால்தான் அதீத பலத்துடன் ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். திமுக, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கூட தேமுதிக-விடம் இழந்தது.

புதிய ஆட்சியிடம் தமிழக மக்கள் வெகுவாக எதிர்பார்த்தார்கள். முந்தைய திமுக ஆட்சியின் சீரழிவுகள் அனைத்தும் துடைக்கப்படும் என்று அவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஜெயலலிதாவின் நடவடிக்கைகளிலும் சிறிது மாற்றம் தென்பட்டது. எப்போதும் ''எனது அரசு'' என்று சொல்லும் ஜெயலலிதா இம்முறை ''நமது அரசு, அதிமுக அரசு'' என்று கூறியபோது அவர் திருந்திவிட்டதாகவே பத்திரிகைகள் எழுதின. ஆனால், மிக விரைவிலேயே ''நான், எனது'' என்ற சுயவிளம்பரப்பிரியையாக அவர் மாறினார். ஜெயலலிதாவின் பல நடவடிக்கைகள் சிறப்பானவையாக இருந்தாலும், இந்த சுயபிரகடனம் தான் அவரை ஆணவம் பிடித்தவராகக் காட்டியது. அந்நிலை இம்முறையும் மாறாதது, மாநில நலனில் அக்கறை கொண்டோர்க்கு ஏமாற்றமே.

இந்த விஷயத்தில் திமுக தலைவரிடம் அதிமுக தலைவி கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. அரசியல் என்பது மக்கள் திரளை அடிப்படையாகக் கொண்டது. மக்கள் கருத்தை உருவாக்குவதில் அவர்களது பங்களிப்பும் இருந்தாக வேண்டும். எப்போதுமே ஆணையிடல்கள் மூலமாக மக்களைக் கட்டுப்படுத்த இயலாது. மக்களுடன் மக்களாக தன்னைக் காட்டிக் கொள்பவரால்தான் மக்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட முடியும். திமுக தலைவர் கருணாநிதியிடம் இந்த குணம் மிகுதியாக இருப்பதைக் காண முடியும். அவரது எந்த முடிவும் கட்சி முடிவாகவே முன்வைக்கப்படும். ‘பொதுக்குழுவும் செயற்குழுவும்’ கூடியே எந்த முக்கிய முடிவும் அறிவிக்கப்படும். அது நாடகத் தனமாக இருந்தாலும் கூட, ஜனநாயகத்திற்கு அத்தகைய நாடகீயத் தன்மை தேவை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். தனது சுயநலனுக்கான முடிவையும் கட்சி மீது திணிப்பதில் அவர் கில்லாடி. ஆனால், ஜெயலலிதாவிடம் இத்தகைய நாசூக்கான போக்கைக் காண முடியாது.

மன்னராட்சிக் கால அரசியல் போலவே அவர் அதிமுக-வை நடத்திவருகிறார். அது அவரது கட்சி என்பதால் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று விட்டுவிட முடியாது. ஏனெனில், அதிமுகவில் எந்த ஒரு முக்கிய முடிவும் மேலிருந்து கீழாகவே பாய்கிறது. முன்னாள் முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முதற்கொண்டு, கீழ்நிலையிலுள்ள கிளை செயலாளர் வரை, இந்த உத்தரவுகள் மீறப்பட முடியாதவை. அதாவது அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவருமே சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல இறுக்கமாகவே இயங்க வேண்டியுள்ளது. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் உள்ள எந்த ஒரு அமைச்சரையும் நாற்காலியில் ஆசுவாசமாக அமர்ந்தபடி நீங்கள் படத்தில்கூடக் காணமுடியாது. அமைச்சர் என்ற பெருமித உணர்வை வெளிப்படுத்தும் ஒருவர் அடுத்த நாளே 'மாஜி' ஆகும் வாய்ப்புள்ளது என்பதுதான் - அந்த நிலையற்ற தன்மைதான் - அமைச்சர்களின் பதற்றமான நிலைக்குக் காரணம. இத்தகைய நிலையில் உள்ள ஒருவரால் எவ்வாறு அதிகாரத்தை நல்லமுறையில் பயன்படுத்த முடியும்?

இதற்கு மாறாக, திமுக-வில் வட்ட செயலாளர் முதல் அமைச்சர் பெருமக்கள் வரையிலும் சுதந்திரமான செயல்பாடு உறுதியாக இருந்தது. அதுவே அக்கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமானது. தன்னிச்சையான அதிகார துஷ்பிரயோகங்கள், கட்டப் பஞ்சாயத்துகள், நிலப்பறிப்புகள் என்று அத்துமீறல்களில் திமுக-வினர் ஈடுபட அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட அதீத சுதந்திரம் காரணமானது. அதாவது, திமுக-வினர் போல கட்டுப்பாடற்ற சுதந்திரமும் ஆபத்தானது; அதிமுக-வினர் போல அதீதக் கட்டுப்பாடுகளும் ஆபத்தானது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட, கட்டுப்படுத்தத் தக்க, சுய கட்டுப்பாடான அரசியல் தொண்டர்களும், அதற்கான அரசியல் தலைமையுமே தமிழகத்தின் தற்போதைய தேவை. இந்த இனிய சூழலை இரு கழகங்களும் சீரழித்துவிட்டன.

ஜெயலலிதா முதல்வரான பிறகு இந்த மூன்று மாதங்களில் மூன்று முறை அமைச்சரவையில் சிறு மாற்றங்களை செய்துவிட்டார். என்ன காரணம் என்று தெரியாமலே பதவி இழந்த அமைச்சர்களும் உண்டு. அதிகாரமட்டத்திலும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பரவலாக மாற்றப்பட்டனர். அங்கும் யாரும் நிரந்தரமாக ஒரு வருடமாவது பணிபுரிவோம் என்ற எண்ணத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய நிச்சயமற்ற தன்மை மாநில நலனுக்கு உகந்ததல்ல.

எந்த ஒரு முடிவையும் சுயமாக எடுக்க முடியாத அமைச்சர்களுக்கு அதிகாரிகளிடம் நல்ல மரியாதை ஏற்படாது. எந்த ஒரு உயர் அதிகாரியும், ஆடும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பணிபுரிகையில் ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்காது. இந்த நிலையை, ஜெயலலிதாவின் எதேச்சதிகாரமான அணுகுமுறை ஏற்படுத்துகிறது. அவரது துரதிர்ஷ்டம், இதை அவரிடம் எடுத்துச் சொல்லவும், 'துக்ளக்' சோ.ராமசாமியை விட்டால் ஆளில்லை. 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்- கெடுப்பார் இலானும் கெடும்' என்ற திருக்குறளை (குறள்- 448) தலைமைச் செயலகத்துக்கு எட்டும்படி யாரேனும் முதுகெலும்பு உள்ளவர்கள் செய்தால் அது அதிமுக அரசுக்கு நல்லது.

ஜெயலலிதாவின் மற்றொரு அரசியல் தவறு, இலவசத் திட்ட அறிவிப்புகளால்தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என்று அவர் நம்பிக் கொண்டிருப்பது. தேர்தல் வெற்றியில் இலவசத் திட்டங்களின் பங்களிப்பு இருந்தது உண்மையே என்றாலும், மக்களின் நோக்கம் அது மட்டுமல்ல. ஆட்சி நிர்வாகம் செம்மைப்படுத்தப்பட வேண்டும்; விலைவாசி குறைய வேண்டும் என்ற கனவுடன்தான் ஜெயலலிதாவுக்கு அமோக ஆதரவு அளித்தனர் தமிழக மக்கள். இதை உணராமல், இலவசத் திட்டங்களை நிறைவேற்றுவதால் மட்டுமே மக்களை திருப்திப் படுத்திவிட முடியும் என்று அவர் கருதுவாரானால், கருணாநிதிக்கு நேர்ந்த கதியே அவருக்கும் நேரும்.

இலவச அரிசி, இலவச ஆடு, இலவச மாடு, இலவச கிரைண்டர், இலவச மிக்சி, இலவச மின்விசிறி.. போன்ற இலவசங்களை வழங்குவதன் மூலமாக தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றுவதைத் தவறு என்று யாரும் கூற மாட்டார்கள். ஆனால், இலவச மின்சாதனங்களை இயக்கத் தேவையான மின்சாரம் தடையின்றிக் கிடைக்கவும் இதே அரசுதான் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுவும் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி அல்லவா? ''ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டைக் குறைப்போம்'' என்ற ஜெயலலிதா, மூன்று மாதங்களின் நிறைவில், ''ஓராண்டுக்குள் படிப்படியாக மின்வெட்டு முழுமையாக நீக்கப்படும்'' என்று சட்டசபையில் நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருக்கிறார். அதனையேனும் அவர் உறுதியாக அமலாக்க வேண்டும்.

இலவசங்களை வழங்குவதை விட, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளே இப்போதைய தேவை. மீன்களை இலவசமாக வழங்கும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் இறங்கமாட்டான் மீனவன். இறுதியில் மீன்களை வழங்க மீன்களே இருப்பில் இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். ஒருவருக்கு மீனை இலவசமாக வழங்குவதைவிட, மீன்பிடிக்க கற்றுக் கொடுப்பதும், மீன்வலையை இலவசமாக அளிப்பதும் மட்டுமே புத்திசாலித்தனமாக இருக்க முடியும். இதனை உணர்ந்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஜெயலலிதா மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், மிகுந்த நம்பிக்கையுடன் அவரைத் தேர்வு செய்த மக்கள், சிறு அதிருப்தியாலும் ஏமாற்றத்தாலும், தலைகீழாக மாற வாய்ப்புள்ளது. இருமுறை எதிர்க்கட்சியிடம் ஆட்சியை இழந்த ஜெயலலிதாவுக்கு இது தெரியாமல் இருக்க நியாயமில்லை.

அதிமுக அரசின் பிரதானத் தவறாக முன்வைக்கப்படுவது சமச்சீர் கல்விக்கு எதிரான தேவையற்ற போராட்டம். முந்தைய திமுக அரசு கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக, எந்த முன்யோசனையும் இன்றி, எந்த ஆய்வும் இன்றி அத்திட்டத்தை கடாசியதில், இப்போது உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டிய நிலை அதிமுக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வியில் நிலவும் சீரற்ற பாடத் திட்டங்களை சரிப்படுத்த முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரனால் பரிந்துரைக்கப்பட்ட திட்டமே சமச்சீர் கல்வித் திட்டம். அதையும் திமுக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது ஒருபுறமிருக்க, அதன் குறைபாடுகளை நீக்க வேண்டிய நிலையிலிருந்த அதிமுக அரசு, ஒட்டுமொத்தமாக அத்திட்டத்தையே நிராகரித்து, இப்போது சிக்கலில் தானாக மாட்டிக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக முந்தைய ஆண்டு அறிமுகமான சமச்சீர் கல்வியை 'இந்த ஆண்டு தொடர வேண்டும்' என்று உத்தரவிட்டும், அதனை எதிர்த்து காற்றில் கத்தி வீசி சண்டைஇடுகிறது அதிமுக அரசு. 'முந்தைய திமுக அரசு பாடத்திட்டத்தில் திணித்த தேவையற்ற பகுதிகளை நீக்கிக் கொள்ளலாம்' என்று நீதிமன்றம் அளித்த அனுமதியை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், பிடிவாதமான நிராகரிப்புடன் நீதிமன்றம் சென்று அதிமுக அரசு பலமுறை குட்டுப் பட்டது. இதனால் மாநிலத்தில் பள்ளி மாணவர்களின் கல்வி பாழானதுதான் மிச்சம்.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பள்ளி செல்லும் மாணவர்கள் எந்தப் பாடமும் பயிற்றுவிக்கப்படாமல் திரும்பி வருவது தொடர்கதையாகி வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் இந்த விஷயத்தில் அதிமுக அரசு மீது கடும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அதை இன்னும் ஜெயலலிதா புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. இதை அவருக்கு விளக்குவதற்கான திராணியுள்ள கல்வியாளர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்களை வழங்குவதற்கான காலக்கெடுவை மூன்று முறை நீதிமன்றம் நீடித்த போதேனும் தமிழக அரசு விழித்துக் கொண்டிருக்க வேண்டும். இப்போது, மிகக் கடுமையான நெருக்கடியில் சிக்கிக்கொண்டு, நீதிமன்றக் கண்டனத்தில் இருந்து விடுபட வழி தெரியாமல் திகைக்கிறது ஜெயலலிதா அரசு. அனேகமாக, விரைவில் கல்வித்துறை அமைச்சர், அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்படலாம். பாவம் ஓரிடம்; பழைய ஓரிடம்!

இப்போதும் (ஆக. 5 நிலவரம்) ஒன்று குடி முழுகிவிடவில்லை. தவறுகளிலிருந்து பாடம் கற்பவனே சாதனை புரிகிறான். தவறுகளை மழுப்புபவன் மீண்டும் மீண்டும் தவறு செய்து வீணாகப் போவான். திமுக அரசின் சுயவிளம்பரம் மிகுந்த பாடங்களை பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதாக அறிவித்துவிட்டு, நீதிமன்ற ஆணைப்படி சமச்சீர் கல்வியை உடனே பயிற்றுவிக்க அரசு ஏற்பாடு செய்வது ஜெயலலிதாவின் சரிந்த புகழை மீட்கும்.

அடுத்ததாக, விலைவாசியைக் குறைக்க உறுதியான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. குறிப்பாக கட்டுமானப் பொருள்களின் விலை விண்ணை எட்டுவதாக மாறி இருக்கிறது. இதனால் உள்கட்டமைப்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மணல், சிமென்ட், இரும்புக் கம்பிகள், செங்கல் போன்றவற்றின் விலையைக் குறைக்க அதிமுக அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

திருப்பூர் சாயஆலை பிரச்னையிலும் தமிழக அரசின் முன்முயற்சிகள் ஊக்கமளிப்பதாக இல்லை. யானைப் பசிக்கு சோளப்பொரி என்பதுபோல ரூ. 200 கோடி நிதி ஒதுக்குவதால் சாயஆலைக் கழிவு பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது. இப்போதே தொழில்நகரமான திருப்பூர் பாதி காலியான நிலையில் தவிக்கிறது. இப்போதைய தேவை, அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவான வாக்குறுதி அளித்து தொழில்துறை பழையபடி இயங்கச் செய்வதே. சமச்சீர் கல்வியில் வீம்புக்கு வேட்டையாடும் அதிமுக அரசு, அதில் ஒரு பங்கை திருப்பூர் சாயஆலை விவகாரத்தில் காட்டி இருக்கலாம்.

தொழில்துறை பாதிக்கப்படுவது வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவற்றுக்கே வழிகோலும். சாயக் கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மறுவாழ்வும், உத்தரவாதத்துடன் கூடிய அனுமதியால் தொழில்துறை மீளச் செய்வதுமே தற்போதைய தமிழக அரசிடம் எதிர்பார்க்கப்படுபவை. இதனைச் செய்யாமல், முந்தைய அரசின் குறைபாடுகளை மீண்டும் மீண்டும் ஒப்பித்துக் கொண்டிருப்பது நல்லரசுக்கு அழகல்ல. திமுக அரசின் குறைபாடுகளைப் போக்கவே அதிமுக அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை ஜெயலலிதா மறந்துவிடக் கூடாது. இந்த விஷயத்தில், குஜராத் மாநிலத்தில் நடைபெறும் சுத்திகரிப்புப் பணிகள் முன்னுதாரணமாக அமையலாம் என்ற எண்ணத்தில் அங்கு ஒரு குழுவை ஜெயலலிதா அனுப்பி இருப்பது பாராட்டுக்குரியது. எது எப்படி இருப்பினும், காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கையே இப்போதைய எதிர்பார்ப்பு.

இதுவரையில் அதிமுக அரசின் குறைபாடுகளைக் கூறிவிட்டு, அதன் நிறைகளைக் கூறாமல் விடுவது நியாயமல்ல. முதலாவதாக, ''புதிய அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை எந்த பாராட்டு விழாவிலும் பங்கேற்பதில்லை'' என்ற ஜெயலலிதாவின் முடிவு மெச்சுவதற்கு உரியது. ''அரசு நலத் திட்டங்களைத் துவக்கிவைக்க ஆடம்பரமான விழாக்கள் தேவையில்லை; அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே நடைமுறை வழக்கப்படி திட்டங்களை துவக்கிவைக்கலாம்'' என்ற அறிவிப்பும் பாராட்டிற்குரியது.

கட்சியின் மிகச் சாதாரணமான தொண்டர்களும் கூட அமைச்சர் ஆக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு வலிமை அளிக்கிறது. 'தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு' என்ற கிறுக்குத்தனமான சலுகைக்கு கடிவாளம் இட்டிருக்கிறார் ஜெயலலிதா. தமிழில் பெயர் இருந்தாலும், வன்முறை, ஆபாசம் இல்லாமல், தமிழ்ப் பண்பாட்டை கேவலப்படுத்தாமல் படம் எடுத்திருந்தால் மட்டுமே தமிழ்த் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் புத்திசாலித்தனமான முடிவு இது.

திரைத்துறையினர் அரசியல் செல்வாக்கு மிகுந்த குடும்பங்களின் நெருக்குதல்களுக்கு உட்பட்டு விழி பிதுங்கி இருந்த நிலையும் மாறிவிட்டது. சக்சேனா கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் திரைத் துறையினருக்கு புத்துணர்வு அளித்திருக்கின்றன. அரசியல் அத்துமீறல்களால் திரைத்துறையினரை ஆட்டுவித்தவர்கள் இப்போது ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதிகாரபலத்தால் சாமானிய மக்களை மிரட்டி நிலப்பறிப்பில் ஈடுபட்ட முந்தைய அரசின் பிரதிநிதிகள் பலர் சிறைக்குள் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கென தனியே ஏற்படுத்தப்பட்டுள்ள விசேஷப் பிரிவில் தினந்தோறும் குவியும் மலை போன்ற புகார்கள், திமுக அரசின் அடாவடித்தனத்தை பறைசாற்றுகின்றன. வீரபாண்டி ஆறுமுகம், என்கேகேபி.ராஜா, அன்பழகன் என, நிலப்பறிப்பு வழக்குகளில் கைதாகும் முன்னாள் பிரமுகர்களின் தற்போதைய இழிநிலையைக் கண்டபிறகாவது, இதுபோன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையும். இந்த வழக்குகளை நியாயமான முறையில் விசாரித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். கத்திமீது நடப்பது போன்ற இந்த நடவடிக்கையில் சிறிது பிசகினாலும், ‘பழிவாங்கும் அரசியல்’ என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரும்.

இந்த அதிரடி நடவடிக்கைகளால் திமுக கலங்கிப் போயிருப்பது அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கோவையில் நடந்த பொதுக்குழுவில் பேசியபோது பட்டவர்த்தனமாகப் புலப்பட்டது. ''திமுக-வின் தோல்வி நமக்கு நாமே தேடிக்கொண்ட முடிவு'' என்று அறிவித்த கலைஞர், ''திமுக-வினரை அரசு தொடர்ந்து கைது செய்தால் அந்தச் செய்திகள் முக்கியத்துவம் பெற்று, உங்களது நல்லாட்சியால் பெறும் புகழ் பத்திரிகைகளில் இடம்பெறாமல் போய்விடும்'' என்று ஜெயலலிதாவுக்கு அனுபவரீதியிலான அறிவுரை வழங்கி இருக்கிறார். திமுகவின் நிலைகுலைந்த தன்மை அதிமுக-வுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

இவ்வாறாக, தமிழக அரசின் செயல்பாடுகள் நன்மையையும் தீமையும் கலந்தவையாக உள்ளன. மிகக் குறுகிய காலத்தில் சமச்சீர் கல்வி விவகாரத்தால் கெட்ட பெயர் வாங்கியுள்ள அதிமுக அரசு, நிலப்பறிப்பு வழக்குகள் போன்றவற்றால் நல்ல பெயரையும் பெற்றுள்ளது. 'கடவுள் பாதி, மிருகம் பாதி' கலந்துசெய்த கலவையாக ஜெயலலிதா அரசு காட்சி அளிக்கிறது. இந்த அரசிடம் நூறு சதவிகிதம் ஆக்கப்பூர்வமான ஆட்சியை எதிர்பார்க்க வாக்களித்த குடிமக்களுக்கு உரிமை உள்ளது. அதை நிறைவேற்றுவது தாயுள்ளம் கொண்ட 'அம்மா’ வின் பொறுப்பு.




-------------------------


விஜயபாரதம் (19.08.2011)


.