சனி, டிசம்பர் 28, 2013

லோக்பால்: கனவு நிறைவேறுமா? -2


.....மொத்தத்தில், சட்டப்பூர்வமாக ஒரு கடிவாளச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. அரசு ஊழியர்களின் கருணையற்ற போக்கிற்கு தடைக்கல்லாக லோக்பால் இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. எனினும் இதன் வெற்றி, சாமானியரான மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதில் தான் உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டமும் லோக்பால் சட்டமும் இணைகோடுகளாகப் பயணிக்கக் கூடியவை. எனவே, இவற்றை முழுமையாக அறிந்துகொண்டு, தக்க முறையில் பயன்படுத்தும் விழிப்புணர்வுள்ள மக்களால் தான் ஊழலை ஒழிக்க முடியும்.

லோக்பால் சட்டம் வெறும் அலங்காரக் கண்காட்சி அல்ல; அரசு பிரதிநிதிகளின் அகங்காரத்தைத் தடுக்கும் கேடயமாகவும் வாளாகவும் விளங்கும் கூர்மையான ஆயுதம் இது. பலவானின் கரத்தில் தான் ஆயுதம் அர்த்தம் பெறும். எனவே மக்களை விழிப்புணர்வுள்ள பலவான் ஆக்குவதே சமூக மாற்றம் விரும்புவோரின் எதிர்காலக் கடமையாக இருக்கும்...

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

-------------
விஜயபாரதம் 

செவ்வாய், டிசம்பர் 24, 2013

லோக்பால்- கனவு நிறைவேறுமா? -1



லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2013, டிசம்பர் 18-ல் நிறைவேறிவிட்டது. ஊழலுக்கு எதிரான போரில் நாடு இனி தயங்கி நிற்காது என்பது மக்களின் எதிர்பார்ப்பு. எந்தச் சட்டமும் அதை நிறைவேற்றுவோரின் உறுதிப்பாட்டில் தான் மதிப்பு பெறுகிறது. இந்த சட்டம் கொண்டுவரவே 50 ஆண்டுகளாகி இருப்பது, நமது உறுதிப்பாட்டின் லட்சணத்தை வெளிப்படுத்தக் கூடியது. இப்போது லோக்பால் சட்டம் குறித்த சில காலவரிசைப்படுத்தப்பட்ட தகவல்கள்…

காண்க: தமிழ் ஹிந்து

திங்கள், டிசம்பர் 16, 2013

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியும் விளைவுகளும்

பெரும் தலைகள் மோதுகின்ற ஒரு களத்தில் சாமானிய மனிதன்
ஒருவன் வெல்ல முடியுமா? முடியும் என்று நிரூபித்திருப்பதால் தான், ஆம் ஆத்மி கட்சியின் அதிரடி வெற்றி அனைவராலும் வியந்தோதப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக அனாயச வெற்றி பெற்றிருந்தபோதிலும், அதைச் சாதாரணமாக்கிவிட்டது ஆ.ஆ.கட்சியின் வெற்றி. குறிப்பாக, தலைநகர் தில்லியில் பாஜகவின் ஆட்சி அமையாமல் போனதற்கு ஆ.ஆ.கட்சியின் அரசியல் பிரவேசமே காரணமாகி இருக்கிறது.

எனவே, ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியின் பின்புலம், அதன் எதிர்கால விளைவுகள் குறித்து தீவிரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகி இருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியின் தில்லி வெற்றி நாட்டிற்கு நல்லதா, ஊழல் மயமான காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலும் பாஜகவின் பயணத்தில் ஆ.ஆ.க. என்ன விளைவை ஏற்படுத்தும்? ஊடகங்கள் ஆ.ஆ.க.யைக் கொண்டாட வேறு ஏதேனும் காரண்ங்கள் உள்ளனவா? என்று இப்போது பார்க்கலாம்.

காண்க: தமிழ் ஹிந்து
----------------
விஜயபாரதம் (27.12.2013)

ஞாயிறு, டிசம்பர் 08, 2013

வீழும் காங்கிரஸ்! மலர்கிறது தாமரை!






...மொத்தத்தில் இத்தேர்தல்கள், காங்கிரஸ் கட்சியின் அழிவுக்குக் கட்டியம் கூறுவதாகவே அமைந்துள்ளன எனில் மிகையில்லை. பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் காணவே முடியவில்லை. தில்லியில் பாஜக எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனாலும் கூட, மூன்று பெரிய மாநிலங்களில் தனது வெற்றியை உறுதிப்படுத்தி, நாடாளுமன்றத் தேர்தலில் யார் கதாநாயகனாக இருக்க முடியும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது பாஜக. 

இனி மாநில வாரியாக தேர்தல் முடிவுகளை சிறிது அலசலாம்....

முழு கட்டுரையைக் காண்க: தமிழ்ஹிந்து


-------------
விஜயபாரதம் (20.12.2013)

செவ்வாய், டிசம்பர் 03, 2013

சகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்!



அண்மையில் ஊடகங்களில் பரபரப்பாக இடம் பிடித்த செய்திகளைப் பட்டியலிட்டால், அவற்றில் முதலிடம் வகிப்பவை பாலியல் அத்துமீறல்கள் தொடர்பானவையாகவே இருக்கின்றன. குறிப்பாக தெஹல்கா இணையதளத்தின் ஆசிரியர் தருண் தேஜ்பால் (50) தொடர்பான குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
.
‘ஊருக்கெல்லாம் சகுனம் சொன்ன பல்லி, தவிட்டுப் பானையில் விழுந்ததாம் துள்ளி’ என்ற பழமொழியைக் கேட்டிருக்கலாம். அதற்கு மிகப் பொருத்தமான உதாரணம் தான் தருண் தேஜ்பால். இவர் இந்தியாவில் ஊழலை ஒழிக்கவந்த புலனாய்வுப் பத்திரிகையாளராக அவதாரம் எடுத்ததே காங்கிரஸ் கட்சிக்காகத் தான். அக்கட்சியின் வாயாடி அமைச்சர் ஒருவரின் மிக நெருங்கிய உறவினர் தான் தருண் தேஜ்பால். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அதற்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தளம் தெஹல்கா.
.
இவர்கள் நன்கொடை தருவதாக விரித்த வலையில் விழுந்து பாஜக தலைவர் பங்காரு லட்சுமணன் பதவியும் மரியாதையும் இழந்தார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் அரசுக்கு எதிரான செய்திகளை பொய்களைக் கலந்து உற்பத்தி செய்வதில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த தளம் இது. இதன் புலனாய்வு நடவடிக்கைகளால் அஞ்சிய அரசியல்வாதிகள் பலரும் நமக்கெதற்கு வம்பு என்று கும்பிடு போட்டு நகர்ந்துவிடுவது வழக்கம். இந்த அச்சத்தையே மூலதனமாக்கி, மிரட்டல் மற்றும் தரகு மூலமாக பல்லாயிரம் கோடி சம்பாதித்தவர் தேஜ்பால் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
.
என்ன தான் ஊழலை எதிர்த்து முழங்குவதாகக் கூறினாலும், தெஹல்காவின் பார்வை காங்கிரஸ் பக்கம் திரும்பாது. அதனால் தானோ, பாலியல் புகாருக்கு உள்ளான தேஜ்பாலுக்கு காங்கிரஸ் வக்காலத்து வாங்குகிறது!

1980-லிருந்து பத்திரிகையாளராக உள்ள தேஜ்பால், ஆங்கில நாவல் எழுத்தாளராகவும் பிரபலமானவர். 2007-லிலிருந்து தெஹல்கா வார இதழாகவும் வெளிவருகிறது. பத்திரிகை நடத்துபவர்களின் அதிகார மேலாண்மை அனைவரும் அறிந்தது. அதிலும், தேஜ்பால் ஆளும் கட்சியின் இடைத் தரகர் வேறு. வெளிநாட்டு நாகரிகத் தாக்கமும், மேல்மட்டத் தொடர்புகளும் தேஜ்பாலின் அட்டகாசத்திற்கு வித்திட்டுவிட்டன.
.
இவர் கடந்த நவம்பர் 20-ல் கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு (தெஹல்கா நடத்திய நிகழ்ச்சி அது) சென்றபோது, சக பெண் ஊழியர் ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி நடந்த ஓட்டலின் லிஃப்டில் சென்றபோது பெண் பத்திரிகையாளரை உள்ளே தள்ளி பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்.
.
அதுகுறித்து அந்தப் பெண், தனது பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரியிடம் புகார் செய்திருக்கிறார். ஆனால், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. தலைநகரில் தேஜ்பாலை அறிந்தவர்கள் எவருமே இத்தகைய புகாரால் அதிர்ச்சி அடைய மாட்டார்கள். இவ்வாறு சக பெண் பத்திரிகையாளர்களிடம் அத்து மீறுவது அவரது இயல்பான வழக்கம். இதுவரை யாரும் இதை எதிர்க்கவில்லை. இப்போது ஒரு பெண் பத்திரிகையாளர் துணிந்துவிட்டார். பணியாற்றும் இடத்தில் புகார் செய்தும் பலனில்லாததால், இணையதளத்தில் தனது பிரச்னையை அம்பலப்படுத்தினர் அந்தப் பெண்.
.
அதையடுத்து இப்பிரச்னை பூதாகரமானது. தேசிய மகளிர் ஆணையம், பெண்ணுரிமை அமைப்புகள் போன்றவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவே, தருண் தேஜ்பால் அவசர அவசரமாக விளக்கம் அளித்தார். மதுபோதையில் தான் சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்துகொண்டுவிட்டதாகவும், அதற்கு தார்மிகப் பொறுப்பேற்று 6 மாதங்களுக்கு பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.
.
அதாவது அவர் வருத்தம் தெரிவித்தால், உடலாலும் உள்ளத்தாலும் சிறுமைப்படுத்தப்பட்ட அந்தப் பெண்ணின் பாதிப்பு காணாமல் போய்விடும் என்று எண்னி இருப்பார் போல. அவர் 6 மாதங்களுக்கு ஆசிரியராக இல்லாவிட்டால் அந்த்ப் பெண்னின் ‘பாதிப்பு’ இல்லாமல் போய்விடும். என்ன ஓர் அற்புத விளக்கம்!
.
இதுதான் ஊடக தர்மமா?

இதனிடையே, பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த நிர்பந்தங்களால், சம்பவம் நடைபெற்ற மாநிலமான கோவாவில், தருண் தேஜ்பால் மீது பாலியல் வன்முறை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், கோவா போலீஸாருக்கு ஒத்துழைக்க தேஜ்பால் மறுத்தார். மேலும் கோவா போலீஸாரை மிரட்டவும் செய்தார். சம்பவம் நடைபெற்ற ஓட்டலில் கண்காணிப்புக் காமிராக்களில் இருந்த காட்சிகளில் தேஜ்பாலின் அத்துமீறல்கள் பதிவாகி இருந்தன. அதை அறிந்த பிறகே தேஜ்பாலின் கொட்டம் அடங்கியது. இதனிடையே கைதாவதிலிருந்து முன்ஜாமின் பெற அவர் முயன்றார்.
.
கோவாவில் இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் (நவம்பர் 30) நடைபெற்றபோது, புகார் அளித்த பெண்ணின் பெயரை தேஜ்பாலின் வழக்குரைஞர் வெளிப்படுத்தினார்.  பாலியல் புகார் கூறுபவரின் பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்பதை மீறி இவ்வாறு நடந்துகொண்டதை நீதிபதியே கண்டித்திருக்கிறார். சக ஊழியரை போதையில் அணுகியபோதே தேஜ்பாலின் தொழில்தர்மம் சந்தி சிரித்துவிட்டது. அவரது பெயரைக் கூறி மேலும் சிறுமைப்படுத்த முயன்றபோது, தேஜ்பாலின் ஊடக தர்மமும் நீதிமன்றத்தில் அம்பலமானது.
.
இப்போது தேஜ்பால் மீது புகார் கூறிய பெண் வேலையை இழந்திருக்கிறார். அவரை வேறெந்த ஊடகமும் வேலைக்கு எடுத்துக் கொள்ளத் தயங்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதனால் தான் பல பெண்கள் பணியிடங்களில் நிகழும் அத்துமீறல்களை சகித்துக் கொண்டு விரக்தியாக காலம் தள்ளுகிறார்கள்.
.
நீதிமன்றத்தில் வாதிட்ட தேஜ்பாலின் வழக்குரைஞர், தேஜ்பால் அத்துமீறினாலும் பலவந்தப்படுத்தவில்லை என்று கூறி இருக்கிறார். இவரது கண்ணோட்ட்த்தில் பலவந்தம் என்றால் என்ன என்று புலப்படவில்லை. ஆனால், புகார் கூறிய பெண் மிகவும் தைரியமாக தேஜ்பாலின் நடவடிக்கைகளை துணிச்சலான அறிக்கை மூலமாக (நவம்பர் 29) அம்பலப்படுத்தி இருக்கிறார்.

இதோ அவரது அறிக்கை:

தேஜ்பாலின் அத்துமீறல் விவகாரத்தில் எனக்கு பரந்துபட்ட அளவில் ஆதரவு கிடைப்பது ஆறுதளிக்கிறது. அதே நேரத்தில் என்னுடைய புகார் தேர்தலுக்கு முந்தைய அரசியல் சதியாக்கப்படுவது ஆழ்ந்த கவலைக்குரியதாகும்.

பெண்கள் தங்களது வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய சூழல் இருக்கிறது. ஆனால் பெண்ணிய அரசியல் என்பது அரசியல் கட்சிகளால் பாதிக்கப்படுகிறது. இது பெண்கள் மீதான வன்முறை, பெண்களின் அதிகாரம் தொடர்பான பிரச்னை. இதில் அரசியல் கட்சிகள் விலகி இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.
தருண் தேஜ்பால் என்னை பலாத்காரம் செய்வதற்கு முன்பும் பின்புமான என்னுடைய செயல்பாடுகள் குறித்து தொலைக்காட்சிகளின் விமர்சகர்கள் பலரும் பலவாறு கேள்வி எழுப்புகின்றனர். பலாத்காரம் என்பதற்கு சட்டம் எத்தகைய வரையறைகளைக் கொடுத்திருக்கிற தோ, அதையெல்லாம் என்னிடம் தேஜ்பால் செய்தார்.

நான் என்னுடைய தாயார் ஒருவரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இக்குரலை எழுப்பி இருக்கிறேன். என்னுடைய தந்தையார் பல ஆண்டுகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

தேஜ்பாலை போல சொத்தை, செல்வாக்கை, மரியாதையை பாதுகாக்க நான் போராடவில்லை. இது என்னுடைய உடல். எனக்கு மட்டுமே சொந்தமானது. நான் பணிபுரியும் நிறுவன உரிமையாளர் என்ற பெயரால் எவரும் என் உடலில் விளையாட அனுமதிக்க முடியாது. நான் புகார் தெரிவித்திருப்பதால் இழந்திருப்பது பணியை மட்டுமல்ல. என்னுடைய நிதிப் பாதுகாப்பையும் கூடத் தான்.
இந்தப் போராட்டம் வெகு சுலபமானது அல்ல என்பதை நான் அறிவேன். என்னுடைய வாழ்க்கையில், பெண்கள் தங்களைச் சுற்றிய பாலியல் கொடுமைகளுக்கு எதிராக உரத்து குரல் கொடுக்க வேண்டும் என்றே எழுதியும் பேசியும் வலியுறுத்தியும் வந்திருக்கிறேன். நமது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்கி நமது பலத்தை சீர்குலைத்து அதையே நமக்கு எதிரான பலவீனமாக்குவார்கள். இந்த விஷயத்தின் நான் அமைதியாக இருக்க முடியாது.

இந்த விவகாரத்தில் டெஹல்கா நிறுவனத்தின் மரியாதை பாதிக்கப்பட்டிருக்கிறது வருத்தமளிக்கிறது. ஆனால் இது,  வார இதழின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்தவரின் பாலியல் வன்முறையால்தானே தவிர பணியாளராகிய என்னால் அல்ல. அனைவரது ஆதரவுக்கும் நன்றி.

இவ்வாறு அப்பெண் பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

கயவன் தேஜ்பாலுக்கு மாணவர்கள் எதிர்ப்பு

இந்நிலையில் தெஹல்கா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரியும் தனது பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை உடனே விசாரிக்காமல் காலம் தாழ்த்தியதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகி இருக்கிறார். தெஹல்கா நிறுவனத்தின் சில பங்குதாரர்களும் விலகி உள்ளனர்.  மொத்தத்தில், சதிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஓர் ஊடகம், தனது தவறுகளாலேயே தனது புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக்கிறது.
.
பாலியல் புகாரில் தேஜ்பால் தப்பிக்க முடியாது என்பது தெரிந்தவுடன், பாஜக அரசியல்ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குவதாக தேஜ்பால் தரப்பினரும் அவரை ஆதரிக்கும் காங்கிரஸ் தலைவர்களும் புலம்பி வருகின்றனர். குஜராத் முதல்வர் மோடியை இளம்பெண் ஒருவருடன் தொடர்புபடுத்தி கீழ்த்தரமான அரசியல் நடத்தும் காங்கிரஸ் கட்சி இதைச் சொல்வது தான் வேடிக்கை. குஜராத்தில் அந்த இளம்பெண்ணின் தந்தை கேட்டுக் கொண்டதற்காக போலீஸ் பாதுகாப்பு அளித்த மோடியை வில்லனாக சித்தரிப்பவர்கள், கையும் களவுமாக சிக்கியுள்ள் தேஜ்பாலைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்.

தேஜ்பால் தரப்பினரின் திசைதிருப்பும் பிரசாரங்களை கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் (பாஜக) மறுத்திருக்கிறார். ‘தருண் தேஜ்பால் தொடர்பான வழக்கில் அரசியல் நிர்பந்தம் ஏதும் இல்லை. இந்த வழக்கின் போக்கை தாம் கண்காணிக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவான பிறகே கோவா போலீஸார் என்னிமிடம் வழக்கின் விவரங்களை தெரிவித்தனர்’ என்று மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
.
மெல்ல சிறு அவல் கிடைத்தாலும் ஊதிப் பெரிதாக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள், தேஜ்பால் விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. இதுபற்றியெல்லாம் ’24 மணிநேர விவாதங்கள்’ நடத்தப்படக் கூடாதா? நடத்தினால், கண்னாடி வீட்டுக்குள் இருந்து கல் வீசுவதாகிவிடும் என்ற எச்சரிக்கை உணர்வா?
.
இப்போது தேஜ்பால் கைதாகி இருக்கிறார். லாக் அப் அறையில் போலீஸ் விசாரணையில் கதறி அழுகிறாராம் ‘ஊழலுக்கு எதிரான’ இந்த ஹீரோ! அவருக்கு இப்போதும் ஊடக உலகில் சிலர் ஒத்தாசை செய்கிறார்கள். எல்லாமே மோடியின் சதியாம். மோடியா, உடன் பணிபுரியும் மகள் வயதுடைய பெண்ணை (பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பாலின் மகளின் நெருங்கிய தோழி வேறு! தேஜ்பாலின் அக்குறும்புகளை அவரது மகளிடமே சொல்லி அழுதிருக்கிறார் அந்த பெண் பத்திரிகையாளர்) பலவந்தம் செய்யச் சொன்னார்? 
.
தேஜ்பால் இந்த வழக்கில் அவர் செய்த பாவத்திற்குரிய தண்டனை பெறட்டும். அதற்கு பல்லாண்டுகள் ஆகலாம். எனினும், இவ்விவகாரத்தில் துணிந்து புகார் செய்த அந்தப் பெண் போற்றுதலுக்குரியவர். அவரது எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க, நியாயமான ஊடகங்கள் உதவ வேண்டும்.
.
இவ்விவகாரம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஊடகத் துறையில் பெண்கள் சில சமரசங்களைச் செய்தால் தான் முன்னேற முடியும் என்ற நிலை இருப்பது உண்மையா? அவ்வாறு இருக்குமானால், ஊருக்கு உபதேசம் செய்ய தார்மிக உரிமை ஊடகங்களுக்கு உண்டா?
மேலைநாட்டு மோகமும் மது பரிமாறும் விருந்துகளும் நமது ஊடகத் துறையைப் பற்றியிருக்கும் சாபக் கேடுகள் என்பதை நமது ஊடக நண்பர்கள் இனியேனும் உணர்ந்து தவிர்ப்பார்களா?
.
இக்கேள்விகளுக்கு நியாயமான பதில் அளிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தேஜ்பால் விவகாரம் நம் கண்ணுக்குத் தெரியவந்துள்ள ஒரு பிரச்னை மட்டுமே. ஊடகங்கள் சுயபரிசீலனை செய்தாக வேண்டிய விஷயம் இது.

காண்க: தமிழ் ஹிந்து 
------------
விஜயபாரதம் (0612.2013)

புதன், நவம்பர் 20, 2013

கணிப்புகளைக் கண்டு நடுங்கும் காங்கிரஸ்!

modi 2 

காங்கிரஸ் கட்சிக்கு இப்போது எதைக் கண்டாலும் பயமயம் தான்.

மோடி ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசினாலும் பயம்;
முன்னாள் தளபதி வி.கே.சிங் புத்தகம் எழுதினால் பயம்;
ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினால் பயம்;
கருணாநிதி அறிக்கை விட்டால் பயம்;
ஆ.ராசா சாட்சி சொல்ல வருவதாக அறிவித்தால் பயம்:
காமன்வெல்த் என்ற சொல்லைக் கேட்டாலே பயம்;
சட்டசபைத் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரிக்கும் பயம்;
அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை நினைத்தாலே பயம்…

அந்தப் பட்டியலில் இப்போது புதிதாகச் சேர்ந்துள்ளது கருத்துக் கணிப்பு பயம்!............

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

--------------
விஜயபாரதம் (22.11.2013)
.

சனி, நவம்பர் 02, 2013

மோடியைக் கொல்ல நடந்த சதி? – பாட்னா குண்டுவெடிப்பின் பின்புலம்

 
பாட்னா- பாஜக ஹூங்கார் பேரணி- 27.10.13

பிகார் மாநிலம், பாட்னாவில், அக். 27-இல் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ஹூங்காரப் பேரணி (கர்ஜனைப் பேரணி) மீது நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த மாபெரும் பேரணியைக் குலைக்க சதிகாரர்கள் நடத்திய இந்த விபரீதத் தாக்குதலில் மோடி இறைவன் அருளால் தப்பியது தற்போது தெரியவந்துள்ளது. சுயநல அரசியல்வாதிகளும் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் இணைந்து நடத்திய இந்தச் சதிராட்டத்தை பாஜகவினர் தங்கள் பெருந்தன்மையான அணுகுமுறையாலும், நிதானத்தாலும், உயரிய கட்டுப்பாட்டாலும் தவிடுபொடி ஆக்கியுள்ளனர்........................

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

--------------------- 

விஜயபாரதம் (15.11.2013)

சனி, அக்டோபர் 12, 2013

பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!

 
காவல் ஆய்வாளர் லட்சுமணனுக்கு முதல்வர் நன்றி!

இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளின் கொலைகள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலமாக, மாநிலத்தின் அமைதிக்கு விடுக்கப்பட்ட சவால் முறியடிக்கப்பட்டிருக்கிறது....

எனினும், அபுபக்கர் சித்திக் என்ற கொடிய பயங்கரவாதி போலீஸாரின் வலையிலிருந்து தப்பி இருக்கிறான். அவன் சிக்கினால் தான், பயங்கர நாசவேலைகளை வேருடன் கிள்ளி எறிய முடியும். இந்த பயங்கரவாதிகள் அனைவருக்கும் பாகிஸ்தான் ஆதரவு அமைப்பினரின் ஆதரவு இருப்பதை அறிந்து காவல்துறை அதிர்ச்சியில் உள்ளது. இவர்களிடம் விசாரனை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பினரும் (NIA) வந்துள்ளனர்....

மொத்தத்தில், நடந்துள்ள நல்ல செயல்கள் மிகத் தாமதமாயினும், இப்போதேனும் நடந்திருக்கிறதே (Better than Never) என்று நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்துள்ளன. பிடிபட்டுள்ள பயங்கரவாதிகள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் விசாரணையைத் துரிதப்படுத்தி, நாசகாரக் கூலிப்படையினர் அனைவரையும் கைது செய்வது தமிழக அரசின் கடமை.

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

--------------------------
விஜயபாரதம் (25.10.2013)

சனி, செப்டம்பர் 28, 2013

இலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று!



கடந்த 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போராலும், நிச்சயமற்ற அரசியல் சூழலாலும் பந்தாடப்பட்ட இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் மலர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வடக்கு மாகாணத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வென்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழரின் வாழ்வில் புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது....

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

-----------------------
விஜயபாரதம் (11.10.2013)

திங்கள், செப்டம்பர் 23, 2013

தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? – 2

 தமிழகத்திலும் மோடியால் மாற்றம் வருமா?


வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் இப்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிரான தேர்தலாகவே கருதப்படுகிறது. தேர்தலுக்கு இன்னமும் 8 மாதங்கள் உள்ள நிலையிலேயே, இத்தகைய தோற்றத்தை உருவாக்கிக்கொண்ட ஆட்சியாக மன்மோகன் சிங்கின் ஆட்சி தான் இருக்க முடியும். சொல்லப்போனால், இந்த நிலைக்கு தற்போதைய மத்திய அரசு வந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டன....
 
...அடுத்து வரும் தேர்தல், காங்கிரஸ் தலைமையிலான செயலற்ற அரசுக்கு எதிரானது மட்டுமல்ல; நரேந்திர மோடி என்ற- தேசத்திற்கு நம்பிக்கை ஊட்டும் தலைவனை நாட்டின் உயர்பதவிக்குத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாகவும் இருக்கிறது. ஒரு எதிர்மறையான தேர்தல் ஆக்கப்பூர்வமான வடிவம் பெற்றிருக்கிறது. மோடிக்கு நன்றி!...........................................
................................................................................
 
முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

-------------------

விஜயபாரதம் (04.10.2013)
.

வியாழன், செப்டம்பர் 19, 2013

தமிழகத்தில் மாற்று அணி அமையுமா? - 1



"தமிழகத்தில் விஷக் கிருமிகள் நுழைந்துவிட்டன’’ என்று கூறினார் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம். திமுக-விடம் காங்கிரஸ் தோற்று ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தபோது அவர் கூறியது உண்மை என்பது தற்போது நிருபிக்கப்பட்டுவிட்டது. நிரூபித்தவர்கள் கழகக் கண்மணிகளே தான்.....

இவ்விரு கட்சிகளுக்கும் மாற்று தமிழகத்தில் இல்லையா?....

தமிழக அரசியலை கடந்த பல ஆண்டுகளாகக் கூர்ந்து கவனித்து வருபவரும், பல கட்சிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவருமான, காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன்,  ''தமிழகத்தில் பாஜக, மதிமுக, பாமக, தேமுதிக கட்சிகள் இணைந்து புதிய அணி உருவாக வேண்டும்” என்று கூறி இருக்கிறார். இதற்கு வாய்ப்பு உள்ளதா?

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

----------------

விஜயபாரதம் (20.09.2013)

வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013

நமது அரசியல் கட்சிகளின் வெளிவேஷம்



தகவல் அறியும் உரிமை சட்ட அதிகார வரம்பில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இது பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் அமைப்புகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்தது. இந்த அரசின் உருப்படியான முயற்சிகளில் இது முக்கியமானது. தற்போது தான் கொண்டுவந்த சட்டத்தையே நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் ஐ.மு.கூட்டணி அரசு இறங்கி இருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய எதிர்க்கட்சிகளும் அரசுடன் இணைந்து நிற்பது தான் காலத்தின் கொடுமை!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசுத் துறைகளில் இருந்து எந்தத் தகவலையும் கேட்டு குறிப்ப்ட்ட காலத்தில் பெற முடியும். இதற்கென அரசு அலுவலகங்களில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் அறியும் சட்டம் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க தகவல் ஆணையமும் அதற்கு ஒரு தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், ராணுவம், மத்தியப் புலனாய்வுப் பிரிவு, உளவு துறை என குறிப்பிட்ட சில முக்கிய துறைகளுக்கு தகவல் அறியும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் நன்கொடைகள் குறித்த விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று தில்லியைச் சேர்ந்த சமூகசேவர் ஒருவர் தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். நன்கொடை விவரங்களை அரசியல் கட்சிகள் வெளியிட மறுத்ததைத் தொடர்ந்து, அவர் இந்தக் கோரிக்கையை தகவல் கமிஷனுக்கு அனுப்பினார்.

அந்த மனுவை தகவல் ஆணையர் கடந்த ஜூன் மாதம் விசாரித்து, தகவல் அறியும் சட்டம் அரசியல் கட்சிகளுக்குப் பொருந்தும் என்று உத்தரவிட்டார். அரசியல் கட்சிகளின் வரவு செலவு, நன்கொடை, கட்சி நிர்வாக நடைமுறை, வேட்பாளர் தேர்வு போன்றவை குறித்து மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசியல் கட்சிகள் பதிலளிக்கப் பொறுப்புள்ளவை என்று மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டார். இதற்கு காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

’கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்து வேண்டுமென்றே தகவல்களை அறிய இந்தச் சட்டத்தின் மூலம் கோருவது, கட்சிகளின் செயல்பாடுகள், விவாதங்களின் நம்பகத்தன்மை ஆகியவற்றின் மீது கடுமையான பிளவை உண்டாக்கும். அரசியல் கட்சிகளை ஒரு பொது அதிகாரிகளாகக் கருதி அவற்றை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டுவருவதை ஏற்கமுடியாது...

’அரசியல் கட்சிகளின் எதிரிகள் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி கட்சிகளின் செயல்பாட்டினைச் சீர்குலைக்க இதை ஒரு கருவியாகப் பயன்படுத்தமுடியும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளின் பங்கின் மீது ஒரு அடிப்படையான தவறான கண்ணோட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது...

’சட்டப்படி அரசியல் கட்சிகளின் கணக்குகள் வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் மட்டும் காட்டப்பட வேண்டும். தகவல் அறியும் சட்டப்படி தேர்தல் கமிஷனிடமிருந்து தான் அரசியல் கட்சிகளின் நிதிகள் மற்றும் கணக்குகள் குறித்த விவரங்களை எவரும் பெற முடியும்’ - இதுவே அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. இது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் இதே கருத்தை எதிரொலித்தன.

இதையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில், இந்தச் சட்டத்தின் இரண்டாவது பிரிவில் திருத்தம் செய்யும் மசோதாவை சட்டத் துறை அமைச்சகம் தயார் செய்தது.

இந்த்த் திருத்த மசோதா ஆகஸ்ட் 8-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தெலுங்கானா பிரச்னை, எல்லையில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் போன்ற பிரச்னைகளால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தபோதும், இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய எந்தக் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வருகிறது. தகவல் அறியும் உரிமை திருத்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருப்பதால், இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. இந்த மசோதா அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் நிறைவேறுவது உறுதியாகி உள்ளது.

இவ்வாறு, அரசியல் கட்சிகள் அனைத்தும் இணைந்து செயல்படுவது மிகவும் அதிசயமான ஒன்று. தங்கள் நிதி நிலவரம் குறித்து வெளிப்படையாக அறிவிக்க கட்சிகள் தயாரில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வாகும். மடியில் கனமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை. நமது அரசியல் கட்சிகளின் அச்சத்துக்கு என்ன காரணம் என்பது, இந்த மசோதா அவசரகதியில் நிறைவேற்றப்படுவதில் இருந்தே தெரியவருகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம் ஜனநாயக உரிமையைப் பறிப்பதாகும் என்று சமூகவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மத்திய, மாநில அரசுத் துறைகளின் செயல்பாடு மற்றும் அரசுத் திட்டங்கள், முடிவுகள் ஆகியன பற்றி மக்கள் எவரும் உண்மையறிந்து கொள்ள வகை செய்யும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து, தேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம், உண்மையை அறிந்துகொள்ள மக்களுக்கு இச்சட்டத்தின் வாயிலாக கிடைத்துள்ள ஜனநாயக உரிமையை பறிப்பதாகும்- இதுவே நாட்டுநலனில் அக்கறை கொண்ட அறிஞர்களின் கருத்து.

தேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு இச்சட்ட்த்தில் இருந்து தற்போது விலக்கு அளிக்கப்பட உள்ளது. இந்தக் கட்சிகள் தான் நாட்டின் தலைவிதியை நிர்னயிப்பதில் பெரும் பங்காற்றுபவை என்ற நிலையில், அவர்கள் நாட்டிற்கு முன்னுதாரணமகச் செயல்பட வேண்டாமா?

கட்சிகள் வசூலிக்கும் நிதி நேர்மையானதாக இருந்தால் அதனை மறைக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இந்திய பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள் வசூலிக்கும் நிதிகளுக்கு வருமான வரி விலக்கு இருக்கிறது. அப்படியிருக்க, நிதி எவ்வாறு பெறப்படுகிறது என்பதை ஏன் மறைக்க வேண்டும்?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றால், அதன் அரசியல் அங்கங்களாக இருக்கும் கட்சிகளின் அனைத்து செயல்பாடுகளும் வெளி்ப்படையாகத் தானே இருக்க வேண்டும்? இப்படிப்பட்ட மக்கள் உரிமை காக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றிய கட்சிகளே, இப்போது அதன் பல்லைப் பிடுங்க முயற்சிப்பது நியாயம் தானா? ஒரு நாட்டில் வெளிப்படைத்தன்மை கட்டிக் காக்கப்படாவிட்டால், அது சர்வாதிகாரத்திற்கும், ஊழலிற்கும் தானே வழிவகுக்கும்?

இப்படிப்பட்ட ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பது மிகுந்த கவலை அளிக்கும் நிகழ்வாகும்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம்


"குற்ற வழக்குகளில், தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏ.,க்களை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்; போலீஸ் காவலில் அல்லது சிறையில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்யவும் அனைத்து அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து முயன்று வருகின்றன. இதுவும் நமது மக்கள் பிரதிநிதிகளின் வெளிவேஷத்தை அமபலப்படுத்தி இருக்கிறது.

கொள்கைகளில் எதிரெதிர்த் துருவங்களான காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்பட அனைத்துக் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதன்மூலம தாங்கள் எவரும் யோகியமானவர்கள் அல்ல என்பதை அவர்களே அமபலப்படுத்தி இருக்கிறார்கள்.

குற்றவழக்கில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை வருமானால், அதனை ஆளும் கட்சிகள் துஷ்பிரயோகம் செய்ய வாய்ப்புள்ளது என்பதே கட்சிகளின் அச்சம். இதை மறுக்க முடியாது. ஆனால், அதைத் தடுக்கத் தேவையான அம்சங்களை மக்கள் பிரதிநிதுத்துவ சட்டத்தில் கூடுதலாகச் சேர்ப்பது தான் தேவையே ஒழிய, எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்று கூறுவது எந்த வகையில் சரியானது?

’குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். தண்டனையை எதிர்த்து அவர்கள் மேல் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்து இடைக்காலத் தடை பெற முடியாது’ என்று, ஜூலை 10-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. அதே சமயம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் ஏற்கனவே மேல் முறையீடு செய்திருந்திருந்தால் அவர்களை இந்த்த் தீர்ப்பு கட்டுப்படுத்தாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செல்லாததாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், திருத்தம் செய்ய, தில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

அனைத்துக் கட்சி கூட்டத்தை, ஆகஸ்ட் 13-ஆம் தேதி மத்திய அரசு கூட்டியிருந்தது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கமல்நாத், கபில் சிபல், பா.ஜ.க.வைச் சேர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலமாக, ஜனநாயகத்தில் நீதிமன்றங்களைவிட மக்கள் மன்றத்தின் அதிகாரமே இறுதியானது என்பதை நிரூபிக்க அவர்கள் முயன்றனர்.

மக்களவையில் உள்ள 543 உறுப்பினர்களில் சுமார் 150 பேருக்கு எதிராக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் அனைத்துக் கட்சியினரும் அடக்கம். ஜனநாயக சீர்திருத்த கழகம் (ஏ.டி.ஆர்.) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் (என்.இ.டபிள்யூ.) ஆகிய இரு அரசு சாரா அமைப்புக்கள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. தேர்த‌ல் அறிக்கை குறிப்பின்படி சுமார் 15 எம்.பி.,க்கள் மீது குறைந்தது ஒரு கொலை வழக்காவது பதிவு செய்யப்பட்டுள்ளதும், இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே தான் அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கின்றன.

ஜூலை 10-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த மற்றொரு தீர்ப்பில், தண்டனை பெற்று சிறையில் இருக்கும்போதோ அல்லது போலீஸ் விசாரணை காவலில் இருக்கும்போதோ, மக்கள் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்திருந்தது. இதுவும் அரசியல் கட்சியினரின் அச்சத்திற்குக் காரணம்.

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதற்கு அனைத்து அரசியல் கட்சியினரின் ஆதரவையும், சாமர்த்தியமாகப் பெற்றுவிட்டது. அரசின் இந்த நாடகத்தில் ஒத்துழைக்காமல் இருந்து தங்கள் பரிசுத்தத்தை நிருப்பிக்க கிடைத்த வாய்ப்பை, பாஜக-வும் இடதுசாரிக் கட்சிகளும் இழந்துவிட்டன. ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டோருக்கு இது நிச்சயம் வேதனை அளித்திருக்கும்.

உச்ச நீதிமன்றத்தின் இவ்விரு தீர்ப்புக்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி, மத்திய அரசு சார்பில் ஆகஸ்ட் 12-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைப் பின்பற்றினால் அரசின் பெரும்பாலான மக்கள் பிரதிநிதி இடங்கள் காலியாகும் என்ற உண்மை மத்திய அரசின் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை செப்டம்பர் 4-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

மொத்ததில், மக்கள் பிரதிநிதிகளும், அரசியல் கட்சிகளும் தங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதுவது மேற்படி இரு நிகழ்வுகளிலும் தெளிவாகி இருக்கிறது. பல்வேறு முறைகேடு புகார்களிலும் ஊழல்களிலும் சிக்கித் தவிக்கும் மத்திய அரசும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் கொஞம் ஆசுவாசமாக மூச்சுவிட எதிர்க்கட்சிகள் இதன்மூலமாக வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டன. இது நமது ஜனநாயகத்திற்கு கண்டிப்பாக நல்லதல்ல.

------------------------------

விஜயபாரதம் (30.08.2013)

செவ்வாய், ஜூலை 30, 2013

தமிழகத்தை சிந்திக்கவைத்த ஆடிட்டர் ரமேஷ்!

நமது பொய்த் தூக்கத்தைக் கலைத்த
அமரர் சேலம் ஆடிட்டர் ரமேஷ்

2013, ஜுலை 19....

சேலத்தில் அன்றிரவு தூங்காத இரவாக மாறிப்போனது. கடந்த 36 ஆண்டுகளாக ஓய்வின்றி இந்து சமுதாயத்திற்காக உழைத்த ஆடிட்டர் ரமேஷ் என்ற களப்பணியாளர் அன்றிரவு சிந்திய ரத்தம், தமிழகம் முழுவதும் பெரும் தார்மிக ஆவேசத்தை உருவாக்கி, செயலிழந்த மாநில அரசையும் உலுக்கி இருக்கிறது....

அன்பான குடும்பத்தின் தலைவராக, அற்புதமான இயக்க செயல்வீரராக, மக்களின் அன்பை வென்ற தலைவராக, அமைதியாகக் கருத்துகளை வெளிப்படுத்தி கொள்கைகளை விளக்கும் சித்தாந்தியாக, சிரித்த முகமும் இனிய சுபாவமும் கொண்ட எளிய மனிதராக விளங்கிய அவரது இழப்பு கண்டிப்பாக ஈடு செய்ய இயலாததே....

சேலம் ஆடிட்டர் படுகொலை நிகழ்வு- சமூகம், அரசியல்வாதிகள், அரசு நிர்வாகம், ஊடகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் நிலவி வந்த மெத்தனப் போக்கை மாற்றி இருக்கிறது. இந்த விழிப்புணர்வு,  சேலம் ஆடிட்டர் ரமேஷின் உயிர்த் தியாகத்தால் அமைந்தது. அவருக்கு நமது கண்ணீர் கலந்த நன்றிகளும் வீர வணக்கங்களும் என்றும் உண்டு.

--------------------------  

முழுக் கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து 

திங்கள், ஜூலை 29, 2013

மறக்குமா இந்த மாபாதகங்கள்?... தொடரும் படுகொலைகள்!

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ஹிந்து இயக்கத் தலைவர்கள் மீது நடைபெற்றுள்ள தாக்குதல்கள்:

1. டாக்டர் அரவிந்த ரெட்டி கொலை: 
arvind1

வேலூர், கொசப்பேட்டை பகுதியில் கடந்த 2012, அக்டோபர்-23ம் தேதி அன்று தமிழக பா.ஜ.க. மருத்துவ அணித் தலைவர் டாக்டர் அரவிந்த் ரெட்டி தமது மருத்துவமனைக்கு முன்பாக மூன்று நபர் கும்பலால் கொல்லப்பட்டார். இவ்வழக்கு காவல்துறையால் திசைதிருப்ப்ப்பட்டுவிட்டது.

காண்க:

2. பாஜக நிர்வாகிகள் நாகை புகழேந்தி,  பரமக்குடி முருகன், ஆகியோர் 2012, 13-ல் கொலை செய்யப்பட்டனர்.

3. ஆர்.எஸ்.எஸ். மாவ்ட்டச் செயலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்:

ஆர்.எஸ்.எஸ். திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆனந்த், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் 2012, நவம்பர் 6-ல் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானார். பலத்த காயங்களுடன் அவர் உயிர் தப்பினார்.

காண்க:


4.இந்து முன்னணி நிர்வாகி மீது கொலைவெறித் தாக்குதல்:

Manjunath
நீலகிரி மாவட்டத்தில், உதகையில் 2013, ஏப்ரல் 15-ல் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் மஞ்சுநாத் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இக்கொலை தொடர்பாக தமுமுக-வைச் சார்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்தத் தாக்குதல் குறித்த வலைப்பதிவு கட்டுரை:

5. இந்து முன்னணி நிர்வாகிகள் மீது மீண்டும் கொலைவெறித் தாக்குதல்கள்:


நீலகிரி மாவட்டம், குன்னூரில், 2013, ஏப்ரல் 16-ல் இன்னொரு மாவட்டச் செயலாளர் ஹரிஹரன், ஹிந்து முன்னணி தொண்டர்கள் வெங்கட்ராஜ், ஜெயகுமார் ஆகியோர் முஸ்லிம் குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 12 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஹரிஹரனும், ஜெயகுமாரும் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.

காண்க:

6.பாஜக தலைவர் மீது தாக்குதல்:

bjp_leader_m.r.gandhi
நாகர்கோவிலில் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி 2013, ஏப்ரல் 21-ல் மர்ம நபர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் பிழைத்தார்.

7.வெள்ளையப்பன் படுகொலை:

இந்து முன்னணி மாநிலச் செயலாளர் சு வெள்ளையப்பன், வேலூரில் 2013, ஜூலை 21-ல் கொடூரமாக்க் கொல்லப்பட்டார். இது தொடர்பாக முஸ்லிம் அமைப்பைச் சார்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்படுகொலை தொடர்பான இரு பதிவுகள்: 

8.ஆடிட்டர் ரமேஷ் படுகொலை: 


பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் அவரது வீட்டிலேயே, 2013, ஜுலை 19-ம் தேதி இரவு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

காண்க:

------------------
தமிழ் ஹிந்து

செவ்வாய், ஜூலை 09, 2013

இந்து சமுதாய நலனுக்காக மீண்டும் ஒரு களபலி வெள்ளையப்பன்ஜி!


சு. வெள்ளையப்பன் (பலிதான தினம்: ஜூலை 1, 2013)

தமிழகத்தில் ஹிந்து இயக்கத் தலைவர்களும் நிர்வாகிகளும் தாக்கப்படுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இப்பட்டியலில் அண்மையில் சேர்ந்துள்ளார், வேலூரில் கொல்லப்பட்ட இந்து முன்னணியின் மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன். 

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள துரைசாமியாபுரத்தைச் சேர்ந்த சு.வெள்ளையப்பன் (55).  இந்து முன்னணி மாநில செயலாளர்களுள் ஒருவராகச் செயல்பட்டுவந்தார். வேலூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் 20  ஆண்டுகளாகத் தங்கியிருந்த  இவர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி  மாவட்டங்கள் அடங்கிய வேலூர் கோட்டத்தின் பொறுப்பாளராகவும் இருந்து வந்தார். இயக்கப் பணிக்காக, திருமணம் செய்து கொள்ளாமல், முழுநேர ஊழியராக மிகவும் திறம்படப் பணியாற்றி வந்தார். 

ராக்கியில் துவங்கிய பந்தம்:


இவர் இந்து இயக்கங்களுக்கு அறிமுகமானது ஒரு சுவையான நிகழ்வு. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை, தாம்பரத்தில் காய்கறிக்கடை நடத்தி வந்தார் வெள்ளையப்பன். அங்கு காய்கறி வாங்க வந்த சங்க ஆதரவாளரான ‘தாம்பரம் அம்மா’ என்று அழைக்கப்படும் திருமதி ஹேமா அவர்கள் கையில் கட்டியிருந்த ‘ராக்கிக் கயிறு’ அவரைக் கவர்ந்தது. அவரிடம் அந்தக் கயிறு குறித்து வெள்ளையன் கேட்க, ராக்கிக் கயிறின் முக்கியத்துவத்தையும், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் அதன் பின்புலத்தையும் விளக்கினார் தாம்பரம் அம்மா. 

அப்போதே ஹிந்து இயக்கங்களின் சகோதரத்துவ முயற்சிகள் கண்டு மகிழ்ந்த வெள்ளையப்பன், தாமும் இப்பணியில் சேர கங்கணம் பூண்டார். சிறிது காலத்தில் குடும்பத்தை விட்டு, இந்து முன்னணியின் முழுநேர ஊழியராக அவர் பணியாற்றத் துவங்கினார். படிப்படியாக இயக்கப் பணிகளில் தீவிரம் காட்டி, மாநிலச் செயலாளராக உயர்ந்தார். அவரது இயக்கப் பணிக்கான களமையமாக வேலூர் மாறிப் போனது.

தடையை மீறி கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் (1981) மூலவர் சிலையை நிறுவி, இந்து மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணத்தை உருவாக்கிய வேலூரில், உள்ளூர் மக்களின் நெருங்கிய சகாவாக வெள்ளையப்பன் விளங்கினார். அவரது தீவிரச் செயல்பாடுகள் அப்பகுதியில் இந்து இயக்க வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தன.  

மாநிலச் செயலாளராக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வந்த வெள்ளையப்பன்,  கடந்த சில தினங்களாக, வேலூரிலேயே தங்கி இருந்தார். வேலூர்  ஜலகண்டேஸ்வரர் கோவிலை,  இந்து சமய அறநிலையத்துறை அண்மையில் கையகப்படுத்தியதைக்  கண்டித்து,  பல்வேறு போராட்டங்களை வெள்ளையப்பன் நடத்தி வந்தார். இப்போராட்டங்களுக்கு மக்களிடையே மகத்தான வரவேற்பு காணப்பட்டது.

கூலிப்படையின் கொலைவெறி:


இந்நிலையில் தான், கடந்த ஜூலை 1-ம் தேதி, மதியம்  3.15 மணி அளவில், பைக்கில், வேலூர் புது பஸ் ஸ்டாண்ட் அருகில்,  இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வெள்ளையப்பன் மர்மக் கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். டாடா சுமோவில் வந்த  ஆறு பேர் கும்பல்  வெள்ளையப்பனை  வழிமறித்து,  பயங்கர ஆயுதங்களால் வெட்டியுள்ளது.

அவரது உடலில்  26 இடங்களிலும்,  தலையில்  ஆறு இடங்களிலும் வெட்டு விழுந்துள்ளது. மிகக் கொடூரமான முறையில் வெள்ளையப்பனை வெட்டிச் சாய்த்துள்ளனர். அந்தக் கும்பல் தொழில்முறை கொலைகாரர்கள் என்பதும், உள்ளூர் எதிரிகளால் அடையாளம் காட்டப்பட்டு கூலிப்படையால் வெள்ளையப்பன் கொல்லப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர்-23 ம் தேதி,  பா.ஜ.க.  மருத்துவ அணி மாநிலச் செயலர் டாக்டர் அரவிந்த் ரெட்டி,  வேலூரில் உள்ள அவரது கிளினிக்கில் இருந்து வெளியே வந்தபோது,  ஓட  ஓட விரட்டிக்  கொலை செய்யப்பட்டார். அதே பாணியில், வெள்ளையப்பனும் கொலை செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் ரெட்டி கொலையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தால் அடுத்த விபரீதம் அரங்கேறி இருக்காது. 

வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து,  5 பைப்  குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பிறகு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டன. வெள்ளையப்பன் படத்துடன் கூடிய பத்திரிகை செய்தியும் சம்பவ இடத்தில் கிடந்துள்ளது.

கடைகள் அடைப்பு:


வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. இந்து முன்னணியின் அழைப்பை ஏற்று, தமிழகம் முழுவதும் ஜூலை 2–ம் தேதி பரவலாக கடையடைப்பு நடைபெற்றுள்ளது. வெள்ளையப்பன் படுகொலையை அனைத்து இந்து இயக்கங்களும் பாரதிய ஜனதா கட்சியும் வன்மையாகக் கண்டித்துள்ளன. 

கடந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்து இயக்க நிர்வாகிகள் தாக்கப்பட்டுள்ளனர்; டாக்டர் அரவிந்த் ரெட்டி முதல் வெள்ளையப்பன் வரை 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 6 பேர் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இதைக் கண்டிக்க வேண்டிய அரசியல் கட்சிகள் வாய்மூடி மௌனம் சாதிப்பது, யாரை திருப்திப் படுத்த? 

மக்களைக் காக்க வேண்டிய மாநில அரசு யாருக்கு பயந்து நடவடிக்கைகளைத் தவிர்க்கிறது? இந்து முன்னணி நிர்வாகி படுகொலைக்கு உடனடி விளைவாக மக்களே கடையடைப்புகளை பல இடங்களில் நடத்தி இருப்பதைக் கண்ட பிறகும் வாக்குவங்கி அரசியலில் அரசியல்வாதிகள் கன்மூடி இருக்கலாமா? 

- கேள்விகள் எழத் துவங்கி இருக்கின்றன. இந்த தேசத்தை அழிக்க முயல்வோரின் முதல் இலக்கு இந்து இயக்கங்கள் தான் என்பதிலிருந்தே, நாட்டைக் காக்கும் படை எது என்பது மக்களுக்குப் புரியத் துவங்கி இருக்கிறது. இதற்கு வித்திட்டு, பாரத மண்ணுக்காக இன்னுயிர் ஈந்த ஸ்ரீ வெள்ளையப்பனின் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திப்போம். 

வெள்ளையப்பன் உடலுக்கு பல்லாயிரக் கணக்கான மக்கள் வேலூரில் அஞ்சலி செலுத்திய காட்சி உருக்கமானது. அங்கு வந்து கண்ணீர் சிந்திய ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப உறுப்பினரையே இழந்தது போலக் கதறினர். நெல்லை மைந்தனுக்கு வேலூரில் கிடைத்த மரியாதைக்குக் காரணம் அவரது இயக்கப் பணியே. அதனை இன்னமும் வேகமாக ஆற்றுவதே நாம் அவருக்குச் செலுத்தும் உன்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.


இந்து இயக்கத் தலைவர்கள் கண்டனம்:


ஆர்.எஸ்.எஸ். தென் தமிழகத் தலைவர் ஆர்.வி.எஸ். மாரிமுத்து:
தமிழகத்தில் தேசபக்தியை வளர்ப்பதற்கும், இந்து தர்மத்தைக் காப்பதற்கும் பாடுபட்டு வருபவர்களை பயங்கரவாதிகள் கொடூரமாக  வெட்டிக் கொலை செய்வதும், கொடூரத் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர்  வெள்ளையப்பன் வேலூர் பேருந்து நிலையம் அருகே பட்டப் பகலில் பயங்கரவாதிகளால் கொடூரமாக  வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
வெள்ளையப்பன் தனது வாழ்க்கையை சமுதாயப் பணிக்காக அர்ப்பணித்தவர். தேசப்  பணிக்காக இடையாறாத பணி செய்து கொண்டிருந்தவர். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க தமிழக காவல்துறை தவறிவிட்டது.
தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து இந்து இயக்கத் தொண்டர்கள் பயங்கரவாதிகளின்  கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகி  வருகின்றனர். வேலூரில் பா.ஜ.கட்சியை சேர்ந்த அரவிந்த ரெட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார் (2012, அக்டோபர்-23). பா.ஜ.கட்சியை சேர்ந்த புகழேந்தி,  காளையார்கோயில்- படைவென்றான் அம்பலம் ஆகியோரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர்.  
மேட்டுப்பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆனந்த்தும் (2012, நவம்பர் 6),  நாகர்கோவிலில் பா.ஜ. மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தியும் (2013, ஏப்ரல் 21), குன்னூரில் இந்து  முன்னணியின் மாவட்டச் செயலாளர்கள் மஞ்சுநாத், ஹரி, நிர்வாகிகள் வெங்கட்ராஜ், ஜெயகுமார்  உள்ளிட்ட 4 பேரும் (2013, ஏப்ரல் 15) பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் காவல்துறையினர்  பயங்கரவாதிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை  எடுக்கவில்லை. 
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருக்கும் காலங்களில் சமூக விரோதிகளும், பயங்கரவாதிகளும் முழுமையாக கட்டுக்குள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பயங்கரவாதிகள் சுதந்திரமாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. 
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தொடர்ந்து உள்ளாகிவரும் இந்து இயங்கங்களின் தொண்டர்கள் தமிழக அரசு சட்டப்படியான நடவடிக்கை   எடுக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு உடனடியாக பயங்கரவாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கி,  தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும்.
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன்:
இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் சு.வெள்ளையப்பன்,  தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்; ஏராளமான ஊழியர்களை உருவாக்கியவர். அவர் வேலூரில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியையும், சோகத்தையும்  ஏற்படுத்தி உள்ளது. 
இந்து சமுதாய ஒருங்கிணைப்புப் பணியில் கடந்த 16 ஆண்டுகளாக இந்து முன்னணியின் முழுநேர ஊழியராக பணியாற்றியவர். சங்கரன்கோவிலைச் சேர்ந்த வெள்ளையப்பன்  ஜலகண்டேஸ்வர் கோயில்  திருப்பணிகளில் சேவையாற்றி வந்தவர். சமீபத்தில் அறநிலையத் துறை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தை எடுத்ததை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தியவர். 
சு.வெள்ளையப்பன் பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர். சமுதாயத்திற்கு ஒரு  பிரச்னை என்றால், அங்கு இந்து சமுதாயத்தின் பிரதிநிதியாக முதல் நபராகப் பங்கேற்பவர்.  அத்தகைய நல்ல உள்ளம் படைத்தவரை கொடூர மனம் படைத்தவர்கள் கொன்றுள்ளனர். வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலை அரசிடம் இருந்து மீட்பதுதான் வெள்ளையப்பனின் கடைசி விருப்பம். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.  
வெள்ளையப்பன் படுகொலைச் சம்பவத்தில், புலனாய்வுத் துறை முன்கூட்டியே தகவல் தெரிவிக்காவிட்டால் இது அவர்களுடைய திறமையின்மையைக் காட்டுகிறது. புலனாய்வுத் துறை எச்சரித்தும் பாதுகாப்பு கொடுக்காவிட்டால் அது போலீசாரின் திறமையின்மையையே காட்டுகிறது. வேலூரில் தொடர்ந்து படுகொலைகள் நடந்தவண்ணம் உள்ளன.  காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் இதுகுறித்து தனி கவனம் செலுத்த வேண்டும். இந்தப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, உடனடியாக கைது செய்து  தண்டிக்க வேண்டும்.  
பாரதீய ஜனதா மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்:
வேலூரில் சென்ற ஆண்டு நடந்த பாரதீய ஜனதா மருத்துவ அணி மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. எனவே, போலீசார் அந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுபோல வெள்ளையப்பன் கொலையிலும் குற்றவாளிகளை  உடனடியாக கைது செய்ய வேண்டும்.
ராமநாதபுரம்,  ஊட்டி,  மேட்டுப்பாளையம்,  நாகர்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் இந்து முன்னணி,  பாரதீய ஜனதா,  விச்வ இந்து பரிஷத் அமைப்புகளை சேர்ந்தோர் தொடர்ந்து  தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் கொலைகாரர்களின் புகலிடமாக உருவாகி வருகிறது. போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். 

-----------------------------

விஜயபாரதம் (12.07.2013)

ஞாயிறு, ஜூன் 30, 2013

உத்தர்கண்ட் பேரழிவின் பாடங்கள்...


இயற்கைச் சீற்றங்கள் மனித பிரயத்தனங்களுக்கு சவால் விடுபவை. ஒருவகையில் இயற்கையின் சமன்வயத்தை சீர்குலைக்கும் மனிதனுக்கு எச்சரிக்கையாகவே இயற்கைச் சீற்றங்கள் பேரழிவுகளை உருவாக்குகின்றன. அண்மையில் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவையும், அதைச் சமாளிக்கத் தெரியாமல் நமது அரசுகள் திணறியதையும் கண்டபோது, அனுபவங்களிலிருந்து நாம் எப்போதும் பாடம் கற்பதில்லை என்பது தெளிவானது.

நடந்தது என்ன?

கடந்த ஜூன் 17-ம் தேதி, இடைவிடாத தொடர்மழையால், இமாச்சல், உத்தர்கண்ட் மாநிலங்களில் பெருத்த வெள்ளச்சேதம் ஏற்பட்டது. இம்மாநிலங்கள் இமயமலைச் சாரலில் உள்ளவை. பலத்த மழையால் மந்தாகினி, அலக்நந்தா, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுவரை காணாத வகையில் வெள்ளத்தின் சீற்றம் இருந்தது. தொடர்மழையும், ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளமும் மலை மாநிலங்களில் பேரழிவை உருவாக்கின. குறிப்பாக உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாகை, கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனிதத் தலங்கள் வெள்ளத்தின் பாதையில் இருப்பதால் மிகுந்த அழிவுக்கு உள்ளாயின.

ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட பல அணைகளும் மிகக் குறுகிய காலத்தில் நிரம்பியதால், உடனடியாக அணைகள் திறந்துவிடப்பட்டன. இது வெள்ளத்தின் சீற்றத்தை அதிகரித்தது. இதுவரை காணாத மழையும் இதற்குக் காரணமானது. விளைவாக, ஆற்றின் கரையோர நகரங்களும் கிராமங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டன. சுமார் 60 கிராமங்கள் வெள்ளத்தால் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

புனிதத்தல சுற்றுலாவை நம்பியுள்ள உத்தர்கண்டில் ஹிந்துக்களின் மிக முக்கியமான புண்ணியத்தலங்கள் உள்ளன.  உத்தர்கண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய 4 தலங்களுக்கு புனித யாத்திரை செல்வது விசேஷமானது. இதற்கு “சார் தாம் யாத்ரா” என்று பெயர். நாடு முழுவதிலுமிருந்து செல்லும் பக்தர்கள் இந்த யாத்திரையை இதயப்பூர்வமாக நடத்துகின்றனர். ஜூன் 17 ம் தேதி, வெள்ள பாதிப்புக்கு உள்ளானபோது இப்பகுதிகளில் லட்சக் கணக்கான பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.

நிலைகுலைந்த அரசுகள்:

ஆரம்பத்தில் இயற்கைச் சீற்றத்தின் அளவும் பாதிப்பும் மத்திய, மாநில அரசுகளால் உணரப்படவில்லை. கேதார்நாத்தில் இருந்த பெரும்பாலான கட்டடங்களும், கோயிலின் சுற்றுப்புறக் கட்டுமானங்களும் வெள்ளத்தில் அடித்துச்  செல்லப்பட்டதை இரண்டு நாட்கள் கழிந்த பிறகே மாநில அரசு உணர்ந்தது. இந்த வெள்ளத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம். ஆனால் மாநில அரசோ, நூறு பேர், இருநூறு பேர் என்று மனம் போன போக்கில் பலியானோரின் எண்ணிக்கையை குறைத்துக் கூறிக் கொண்டிருந்தது. வெள்ளச்சேதத்தின் விபரீத வடிவத்தை 10 நாட்களுக்குப் பின்னரே மாநில முதல்வர் விஜய் பகுகுணா ஒப்புக்கொண்டார். இதில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரமாக இருக்கலாம் என்றார் அவர்.

வெள்ளம் பாதித்த உடன் நமது அரசுகள் செய்வதறியாமல் திக்பிரமையில் ஆழ்ந்தன. மலைப்பாதைகள் அனைத்தும் வெள்ளத்தில் நிலைகுலைந்தன. பலத்த மழையால் நேரிட்ட நிலச்சரிவுகளும் மக்களை பந்தாடின. போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டன. தொலைதொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டன. அதிகாரவர்க்கம் என்ன நடந்து என்றே தெரியாமல் தத்தளித்தது. வெள்ளத்தால் 1,100 சாலைகளும், 94 பாலங்களும் சிதைந்துவிட்டன. கேதார்நாத்தில் மட்டும் ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் கபளீகரமாகிவிட்டன.

உடனே சுதாரித்துக் கொண்டது தேசிய பேரிடர் மீட்புப் படையும், நமது ராணுவமும் தான். இவர்களுடன் எல்லைப் பாதுகாப்புப் படை, திபெத் இந்தோ- திபெத் படை, உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து மக்களை மீட்கப் போராடினார்கள்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் போக மீதமுள்ள பக்தர்களைக் காக்க வீர்ர்கல் தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து, நேரம் காலம் பாராம்ல் உழைத்தார்கள். இவர்களின் கடும் உழைப்பாலும், சேவையாலும் சுமார் 80 ஆயிரம் பேர் முதல் ஒருவார காலத்தில் மீட்கப்பட்டார்கள். இந்த மீட்புப் பணிகள் சாகச வரலாறாகப் பதிய வேண்டியவை. இப்பணியில் பல காவலர்களும் ராணுவ வீரர்களும் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். பக்தர்களை மீட்கச்சென்று விபத்தில் சிக்கிய (ஜூன் 26) ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானப்படை வீரர்கள் 20 பேரின் உயிர்த்தியாகம் சாதாரணமானதல்ல.

உடனடி மீட்புப் பணியில் மட்டுமல்ல, நிவாரண நடவடிக்கைகளிலும் ராணுவமே முன்னிலை வகித்தது. வெள்ளத்தில் சிக்கிய பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு உணவுப்பொருள்களை விமானத்தில் சென்று போட்டது, எளிதில் சென்றடைய இயலாத பகுதிகளிலும் காடுகளிலும் முடங்கிய மக்களை பாராசூட் வீரர்கள் களமிறங்கி மீட்டது, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்காலிக பாதை அமைத்தது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள் இருந்த பகுதிகளில் தற்காலிகப் பாலங்கள் அமைத்தது ஆகிய பணிகள் தான் மீட்புப்பணிகளின் அடிப்படை.

இவை தவிர, ஆங்காங்கு ஆறுகளில்  மிதக்கும் சடலங்களையும், மண்ணில் புதைந்த சடலங்களையும் மீட்டு, அவற்றை அடையாளம் கண்டு ஒப்படைப்பது, மிகவும் சிதைந்த சடலங்களை தகனம் செய்வது போன்ற பணிகளிலும் வீர்ர்கள் ஈடுபட்டனர். கிடைத்துள்ள தகவல்களின் படி (ஜூன் 28 நிலவரம்) இதுவரை சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பேரழிவின் கொடுமையை இந்த ஒரு புள்ளிவிவரமே காட்டுகிறது.

இதில் குறிப்பிட வேம்டிய விஷயம், ராணுவத்துக்கு உதவியாக ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் செய்துவரும் சேவைப்பணி தான். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட ஜூன் 17-ம் தேதி முதலாகவே, ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் களத்தில் உள்ளனர். செல்லப்போனால், ராணுவத்துக்கு முன்னதாகவே பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைந்தவர்கள் அவர்கள் தான். ராணுவ ஹெலிகாப்டர்கள் இறங்க தளம் அமைத்துக் கொடுத்தவர்களும் அவர்கள் தான். இந்த விவரங்கள் எந்த ஊடகத்திலும் இதுவரை வெளிவரவில்லை.

மீட்புப் பணியில் அரசியல்:

எங்கும் பேரழிவு காணக் கிடைக்கையில், மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் புகார் கூறிக் கொண்டிருந்தது வேதனையான வேடிக்கை. உத்தர்கண்ட் மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ் கட்சி தான். மத்தியில் கூட்டணி ஆட்சி செய்வதும் காங்கிரஸ் தான். ஆனால் இவ்விரு அரசுகளிடமும் சரியான ஒருங்கிணைப்பில்லை. மத்திய உள்துறை அமைச்சர் மாநில அரசை குற்றம் சாட்ட, மாநில அரசோ, இயற்கைச் சீற்றம் குறித்து தெளிவான முன்னறிவிப்புகளை மத்திய அரசு வழங்கவில்லை என்றது. இரண்டு நாட்களுக்குப் பிறகே இரு அரசுகளும் சூழலின் அபாயத்தை உணர்ந்து செயல்படத் துவங்கின. இப்போது புனித யாத்திரைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசிப்பதாகத் தகவல். தனது தோல்விகளை மறைக்க மத்திய அரசு ஆடும் நாடகம் இது.

இதனிடையே, உத்தர்கண்ட் மாநிலத்தில் சிக்கிக்கொண்ட தங்கள் மாநில பக்தர்களை மீட்க ஒவ்வொரு மாநில அரசும் பிரத்யேக முயற்சிகளைத் துவங்கின. இதில் முதல் அடி எடுத்துவைத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா; இதில் முத்திரை பதித்தவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

மத்திய, மாநில அரசுகள் நிலைகுலைந்திருந்த நிலையில் அதிகார வர்க்கம் எப்படிச்  செயல்பட வேண்டும் என்று பாடம் நடத்தும் வகையிலேயே மோடியின் மீட்புப்பணிகள் அமைந்தன. ’15 ஆயிரம் பேரை மோடி மீட்டார்’ என்ற செய்தி மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தபோதும், அவரது மீட்புப்பணியின் நோக்கம் மர்றும் முறைகள் பாராட்டிற்குரியவையே. முதல்வரே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் படையுடன் உத்தரகண்ட் வந்து, டேராடூனில் முகாம் அலுவலகம் அமைத்து, நவீன சாதனங்களைப் பயன்படுத்தி, 200 இன்னோவா கார்கள், 25 பேருந்துகள், 5 விமானங்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கானோரை சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைத்தது அரிய பணியே. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து உடனே அப்புறப்படுத்துவதே இந்த செயல்பாட்டின் முக்கிய நோக்கம். குஜராத்தில் நிகழ்ந்த நிலநடுக்க மீட்புப் பணிகளின் அனுபவமே அம்மாநில முதல்வருக்கும் அதிகாரிகளுக்கும் உதவி உள்ளது எனில் மிகையில்லை.

ஆனால், இதை காங்கிரஸ் கட்சி ’மோடியின் சுயநலம்’ என்று விமர்சித்தது. மோடி அங்கு செல்வதற்கே முட்டுக்கட்டை போட முயன்றவர் தானே சுஷீல் குமார் ஷிண்டே! ’முக்கிய பிரமுகர்கள் உத்தர்கண்ட் வருவது மீட்புப் பணியை பாதிக்கும்’ என்று கூறி மோடி வருவதை அவர் தடுக்க முயன்றார். அதை மீறிச் சென்றே மோடி மீட்புப் பணியில் ஈடுபட்டார். இதே ஷிண்டே காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட வந்ததும் தனது அறிவுரையை மாற்றிக்கொண்டார்! எல்லாம் அரசியல் படுத்தும் பாடு!

மோடி அரசியலுக்காக மீட்புப் பணியில் ஈடுபடுவதாக்க் கூறும் காங்கிரஸ், அங்கு முதல் நாளிலிருந்தே ஆர்ப்பாட்டமின்றி சேவைப்பணிகளில் ஈடுபடும் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து ஏன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை.
இமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங்கே ’கின்னார்’ என்ற இடத்தில் 60 மணிநேரம் பலத்த மழையில் (ஜூன் 17) சிக்கி மீட்கப்பட்ட கதை காங்கிரஸ் கட்சியினரே அறிந்தது தான். அவரை மீட்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் எவ்வளவு துடிப்புடன் இறங்கின! அதே வேகத்துடன் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏன் மீட்புப் பணிகள் நடக்கவில்லை? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

செய்ய வேண்டியது என்ன?

இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களின்போது செய்ய வேண்டிய பணிகள் எவை? முதலில் அரசுகளும் அதிகாரவர்க்கமும் மந்தகதியில் இருந்து துயிலெழுவது அவசியம். அதிர்ச்சியிலிருந்து மீண்டு உடனே மீட்புப்பணியில் ஈடுபடுவது அதைவிட முக்கியம்.

இரண்டாவதாக, இயற்கைச் சீற்றங்களின் காரணங்களைக் கண்டறிந்து பாடம் கற்பது மிக முக்கியமானது. மலைப்பகுதிகளில் மரங்களை வெட்டியதும், காடுகளின் சமநிலையைச் சீர்குலைத்ததும், நதிகளின் போக்கில் மாற்றங்களை (அணைகள் அமைத்தல்) ஏற்படுத்தியதும் தான் பேரழிவுக்கு வித்திட்டுள்ளன. இவை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.

மூன்றாவதாக, இயற்கைப் பேரழிவில் வீடுகள், உடமைகளை இழந்துள்ள லட்சக் கணக்கானோருக்கு உடனடி நிவாரணம் மட்டுமின்றி, வாழ்க்கை மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது அத்தியாவசியமானது. வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் நிலைகுலைந்த மக்களை பழைய நிலைக்கு மாற்ற பல கோடி செலவு செய்தாக வேண்டும். நிவாரண முகாம்களை ஓராண்டுக்கேனும் நடத்த வேண்டிய நிலை அங்கு நிலவுகிறது.

வெள்ளத்தில் சிதைந்த சாலைகள், பாலங்கள், வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை மறுசீரமைப்பது பெரும் சவாலான பணி. இதற்கு குஜராத் மாநில அரசின் கட்ச் அனுபவங்கள் உதவக்கூடும்.

இந்தப் பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஒட்டுமொத்த தேசத்தின் அரவணைப்பையும் பெறுவது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு சுனாமி மீட்பு அனுபவங்கள் நமக்கு வழிகாட்டுபவையாக உள்ளன. சேவைப்பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுபடும் ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் உள்ளிட்டோரை மாநில அரசு தக்க வகையில்- அரசியல் பாராமல்- பயன்படுத்திக் கொள்வது தேவையானதாகும்.

---------------------
விஜயபாரதம் (12.07.2013)

வெள்ளி, ஜூன் 21, 2013

ராசதந்திரமா? பணபலமா? ராஜ்யசபா தேர்தலில் தெரியும்!


தமிழகத்தில் ராஜ்யசபா (மாநிலங்களவை)  தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இம்மாதம் 27-ம் தேதி தேர்தல். கடந்த 14.06.2013 'விஜயபாரதம்' இதழிலேயே இதுகுறித்த விரிவான செய்தியை வாசகர்கள் படித்திருக்கலாம். இப்போது நிலைமை ஓரளவுக்கு தெளிவாகி இருக்கிறது.

இதில் ஆச்சரியப்பட வைத்திருப்பவர் அதிமுக தலைவி ஜெயலலிதா தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் வேட்பாளருக்கு அதிமுக எப்படியும் ஆதரவு தெரிவித்துவிடும் என்று நம்பி இருந்தது. அதிமுக ஆதரவு இருந்தால் ஜெயித்து விடலாம் என்பதால் அந்த ஒரு வேட்பாளர் யார் என்பதில் கட்சிக்குள் பலத்த போட்டியும் இருந்தது. கட்சியின் அகில இந்திய  செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் தா.பாண்டியன் கட்சியின் இப்போதைய மாநிலங்களவை உறுப்பினர் து. ராஜா ஆகியோருக்கு இடையே தான் போட்டி. கடைசியில் அவர்களது திட்டம் பகல் கனவாகி விட்டது.

அதிமுக தலைவி, தங்கள் கட்சி சார்பிலேயே 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டார். அதிமுகவின் சட்டசபை பலத்தில் (150)  அக்கட்சி  4 எம்பிக்களை பெறுவது திண்ணம். ஐந்தாவது எம்பியை பெற வேண்டுமானால் அக்கட்சிக்கு இன்னமும் 14 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். இதை அறிந்தும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியை உருவாக்கி இருக்கிறார் ஜெயலலிதா.

இதன்மூலமாக இரு செய்திகளை ஜெயலலிதா மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அக்கட்சி யாரையும் சார்ந்து இல்லை என்பது அதில் முதன்மையானது. இரண்டாவது, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக எதிர்க்கட்சி வரிசையில் பிளவுகள் உருவாக்கப்படலாம் என்பது.

ஏற்கனவே, தேமுதிக கட்சியின் 7 உறுப்பினர்கள் (கடைசியாக வந்து சேர்ந்த விருதுநகர் எம்எல்ஏ மாபா பாண்டியராஜனையும் சேர்த்து) அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும் சிலர் தேர்தலில் நிறம் மாறக்கூடும். இப்போதைக்கு பதைபதைப்பில் இருப்பவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். அநேகமாக அக்கட்சி மாநிலங்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கக் கூடும். அவ்வாறு தேமுதிக அறிவித்தால் வெற்றிக்குத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை 34-லிருந்து 33-ஆகக் குறையலாம்.

அப்போதும் அக்கட்சியின் அதிருப்தியாளர்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதால், அதிமுகவும் ஐந்தாவது வேட்பாளர் வெற்றிபெற மேலும் 7 பேரின் ஆதரவு மட்டுமே தேவையாக இருக்கும். இதற்கு சட்டசபை தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி (2), புதிய தமிழகம் (2), பார்வர்டு பிளாக் (1) கட்சிகளின் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஐந்தாவது அதிமுக வேட்பாளரின் வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் தான் உள்ளது. தேமுதிகவில் மேலும் உடைசல்கள் ஏற்படுவது திண்ணமாகத் தெரிகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா புத்திசாலித்தனமாக மற்றோர்  அறிவிப்பை வெளிட்டிருக்கிறார். அடுத்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுக எக்கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்ற அறிவிப்பு மிகவும் முக்கியமானது. தனித்தே 40 எம்பி இடங்களையும் வெல்வோம் என்றும் அவர் கூறி இருக்கிறார். அது நிறைவேறுவது கடினம் எனினும், அதிகப்படியான எம்பிக்களை அதிமுக வெல்லும் பட்சத்தில் அக்கட்சியின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேர்தலுக்குப் பிறகு அமையும் ஆட்சி எந்தக் கூட்டணியின் ஆட்சியாயினும் அதில் அதிமுக பிரதான இடம் வகிக்க வேண்டும் எனபதே ஜெயலலிதாவின் திட்டம். அதற்காகவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிக்காமல் ஐந்தாவது வேட்பாளரை அவர் அறிவித்தார்.

அதிமுக ஆதரவு கிடைக்காதபோதும் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது உறுதியாகி இருக்கிறது. அக்கட்சிக்கு உள்ள 8 எம்எல்ஏக்களின் எண்ணிக்கையோடு மார்க்சிஸ்ட் கட்சியின் 10 எம்எல்ஏக்களின்  ஆதரவு உள்ளது. வெற்றி பெற மேலும் 16 பேரின் ஆதரவு தேவை. இப்போது அக்கட்சி தேமுதிகவுக்கு தூது அனுப்பி இருக்கிறது. முடிவு விஜயகாந்த் கையில்.

விஜயகாந்துக்கு தனது மைத்துனர் சுதீஷை மாநிலங்களவைக்கு அனுப்பும் ஆசை இருந்தது. கட்சியில் தொடர்ந்து வெளியேறி 'முதல்வரைச் சந்திக்கும்' தங்கள் கட்சி எம்எல்ஏக்களின்  புரட்சியால் அவரது கனவு சிதைந்துவிட்டது. சென்ற பஞ்சாயத்து தேர்தலில் தங்களைக் கைவிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை எப்படி ஆதரிப்பது என்று கேப்டன் தயங்குவதாகத் தகவல். பண்ருட்டியார் அவரிடம் அரசியல் பாடம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல்.

தேமுதிக மாநிலங்களைத் தேர்தலைப் புறக்கணிக்காமல் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்தால், எப்படியும் அக்கட்சியின் 20 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், வெற்றி பெற முடியும். மாறாக திமுகவை ஆதரிப்பதாக கேப்டன் அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் தேமுதிக பிளவுபடுவது உறுதியாகும்.

தேமுதிகவை நாடுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜெயலலதாவே அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல். ஆறாவது எம்பியாக கம்யூனிஸ்ட் ஜெயித்தாலும் பரவாயில்லை, திமுக இம்முறை மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினரைக்கூட அனுப்பக் கூடாது என்று விரும்புகிறாராம் ஜெயலலிதா. ராசதந்திரத்தில் அம்மையார் செம்மொழி கொண்டானையே விழுங்கி விடுவார் போலிருக்கிறது. தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டால் அக்கட்சி சிறிய சேதாரத்துடன் தப்பிவிடும் என்பது அக்கட்சிக்கு புரிய வைக்கப்பட்டுகள்ளது

தவிர, ஊழல் குற்றச்சாட்டுகளால் கலகலத்துள்ள திமுகவை ஆதரித்து தனது அரசியல் எதிர்காலத்தை நிலைகுலையச் செய்ய வேண்டுமா என்ற கோணத்திலும் விஜயகாந்த் ஆராய்வதாக கூறப்படுகிறது.  எது எப்படி இருப்பினும்தேமுதிகவின் நிலைப்பாடு தான் இப்போது மிக முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது.

திமுகவிலோ, வெற்றிபெறத் தேவையான 34 என்ற எண்ணிக்கையை நெருங்க இன்னமும் அக்கட்சிக்கு தேவை 11 பேரின் ஆதரவு. தனது கூட்டணியில் இருந்தகாங்கிரஸ் (5), பாமக (3) ஆகியோரின் ஆதரவைப் பெற்றாலும் வெல்வது கடினம். எனவே சிறு கட்சிகளுக்கு அக்கட்சி வலை வீசுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்துக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே?

எனவே சில்லறைக் கட்சிகளின் நிலைபாடுகளும் முக்கியமானவையாக மாறி உள்ளன. அக்கட்சிகள் கடைசி நேரத்தில் பெட்டிகளுக்கு தகுந்தவாறு கொள்கை விளக்கம் அளிக்கவும் வாய்ப்புள்ளது. பணம் தான் பிரதானம் என்ற அரசியல் உலகில் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்படும் பட்டங்கள் தானே? அநேகமாக கூட்டணி மாறல்கள் அப்போது தான் தெளிவாகும்.

அடுத்த தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டி என்று அறிவித்திருப்பதும், கூட்டணிக் கட்சிகளுக்காக திமுக பரிதவிப்பதும் தான் இப்போதைய (21.06.2013) நிலை. காங்கிரஸ் கட்சியும் தேமுதிகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மதில் மேல் பூனைகளாக உள்ளன. எனவே இந்த மாநிலங்களவை  உறுப்பினர் தேர்தல் அரசியல் சதுரங்கத்திலும் ஒரு தெளிவு உண்டாக வழியை உருவாக்கும். அதற்கான பாதையை உருவாக்குவதில் பணபலம் பெரும் பங்கு வகிக்கும்.

கடைசியில், வெற்றி பெற்ற 6 உறுப்பினர்களும் ஜனநாயகத்தைக் காக்க டில்லி செல்வார்கள். அப்புறம் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாமும் பார்க்கப்போவதில்லை; செல்பவர்களும் கவனிக்கப்போவதில்லை. நல்ல ஜனநாயகம். வளர்க இதன் புகழ்!

----------------
விஜயபாரதம் (28.06.2013)