சனி, பிப்ரவரி 25, 2012

மக்களைக் காப்பது விளையாட்டல்ல…

திருப்பூரில் கொள்ளை நடந்த நகைக்கடையைப் பார்வையிடும்
காவல்துறை அதிகாரிகள் (நாள்: 20.02.12)

... இவ்வாறாக, அதிமுக அரசின் கவனம் முழுவதும் எங்கு செலுத்தப்பட வேண்டுமோ அங்கு செலுத்தப்படாமல், தேவையற்ற பகுதிகளில் விரயமாகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவலர்கள், முன்னாள் அமைச்சர்களின் பழைய சரித்திரத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசை விழிப்புணர்வுடன் காக்க வேண்டிய உளவுத்துறையோ சில்லறை விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், பொருளாதாரச் சீரழிவின் எதிரொலியாக கொள்ளையர்கள் தமிழகத்தில் வேட்டை நடத்தி வருகின்றனர். அதைத் தடுக்கும் ஆற்றலின்றி கையைப் பிசைகிறது காவல்துறை. அதன் சக்தி ஒருமுகப்படாமல் விழலுக்கு இறைக்கப்படுவதே காரணம் என்பதை இனியேனும் நமது முதல்வர் உணர வேண்டும்...


முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

-------------------------

விஜயபாரதம் (09.03.2012)

வியாழன், பிப்ரவரி 23, 2012

ஊகங்களில் புரளும் ஊடகங்கள்


அரசியலில் தேநீர் விருந்துகளுக்கு எத்தனை முக்கியத்துவம் என்பது வாஜ்பாய் அரசை (1998) கவிழ்த்த தேநீர் விருந்திலிருந்தே தெரிய வரும். தேநீர்க் கோப்பை தானே பதில் கூற முடியாத அஃறிணைப் பொருள்? அதுபோலவே தற்போது விமானப் பயணங்களும் அரசியல் கூட்டணிகளை மாற்ற வல்லவையாக மாறி வருகின்றன. தமிழகத்தின் அரசியல் நிலவரத்தை மாற்றக் கூடிய ஒரு மாபெரும் அரசியல் சந்திப்பு விமானத்தில் நடந்து விட்டதாக நமது பத்திரிகைகள் புளகாங்கிதத்துடன் எழுதி மகிழ்கின்றன.


இரு வாரங்களுக்கு முன்னர் மதுரையிலிருந்து ஏதோ விஷயமாக தேமுதிக. தலைவர் விஜயகாந்த் விமானத்தில் சென்னை சென்றிருக்கிறார். அதே விமானத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினும் வேறு ஏதோ விஷயமாக வந்து சென்றிருக்கிறார். போதாக்குறைக்கு, 'இந்தியாவையே கைக்குள் வைத்திருக்கும்' ப.சி.யின் இளவல் கார்த்தி சிதம்பரமும் அதிலேயே சென்றாராம். இது போதாதா, நமது பத்திரிகைகளுக்கு?


முதன்முதலில் இதை 'ஸ்கூப்' செய்தியாக 'அரசியல் வானில் புதிய கூட்டணி' என்ற தலைப்பில் வெளியிட்டது தினமணி (பிப். 13). அப்போது மூன்று கட்சித் தலைவர்களும் மனம் திறந்து பேசினார்களாம். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசினார்களாம்! (வேறென்ன, கூடன்குளம் அணுமின் நிலையம் குறித்தா பேசுவார்கள்?) இந்தச் செய்தி வந்த மறுநாளே மறுபிரசுரம் செய்யாத பிற பத்திரிகைகள் குறைவு. அந்தந்தப் பத்திரிகைக்கு ஏற்றாற்போல கண், காது, மூக்கு வைத்து புதிய அரசியல் கூட்டணியையே உருவாக்கிவிட்டார்கள் நமது ஊடக வாலாக்கள். புலனாய்வையே முழுமுதல் லட்சியமாகக் கொண்ட நமது வார இதழ்களைக் கேட்கவே வேண்டாம்.


இந்தச் செய்தி குறித்து இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை, மேற்படி சந்திப்பில் ஈடுபட்ட மூவரிடமிருந்தும் எந்த விளைவும் இல்லை. அவர்கள்தான் எதையும் கூற மறுத்தாலும், ஊடகங்களாவது அவர்களை நேரில் சந்தித்து வாயைப் பிடுங்கி விஷயத்தைக் கறக்க வேண்டியது தானே? உண்மை என்னவென்றால், இந்தச் சந்திப்பை அரசியலாக்கி மகிழ்ந்த ஊடகங்களுக்கே தெரிந்திருக்கிறது, இது கவைக்குதவாத சந்திப்பு என்பது. ஆனாலும் பத்திரிகை விற்றாக வேண்டுமே?


எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாகச் சந்திப்பதே அற்புதமான ஒரு சங்கதியாக மாறிவிட்ட தமிழகத்தில், இதுபோன்ற 'ஸ்கூப்' செய்திகளைப் படித்து நாம் ஆறுதல் அடைந்துகொள்ள வேண்டியது தான்.


தமிழகத்தில் கட்சிகளிடையே இருக்கும் அகந்தைப் போக்கை விவரிக்க வேண்டுமானால் தனிக் கட்டுரை தான் எழுத வேண்டும். ஒரு எம்எல்ஏ கூட இல்லாத லெட்டர் பேட் கட்சிகள் போடும் ஆட்டத்தைப் பார்த்தால், தேசிய அளவில் காங்கிரஸ் ஆடும் ஆட்டங்கள் சாதாரணமாகி விடுகின்றன. இந்நிலையில் திடீரென்று பிரதான எதிர்க்கட்சியாகிவிட்ட விஜயகாந்த் கட்சியை சொல்லிக் குற்றமில்லை.


ஸ்பெக்ட்ரம் மோசடியில் தேசிய அளவிலும் நில அபகரிப்பு வழக்குகளில் மாநில அளவிலும் தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டிருக்கும் திமுகவைக் கண்டால் பாவமாகத் தான் இருக்கிறது. தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட கருணாநிதிக்கு எப்படியாவது இந்த ஐந்தாண்டு காலத்தைக் கடத்தி விட்டால் போதும் என்ற மனநிலை வந்துவிட்டது நன்றாகவே தெரிகிறது. தனது இரு மகன்களும் அடித்துக் கொள்ளும் காட்சிகள் நேரில் மட்டுமல்லாது கனவிலும் அவரை இம்சிக்கின்றன. ஈவெகி.சம்பத் இவரிடம் சிக்கிக் கொண்டு பட்ட பாட்டிற்கு, இப்போது பலன் கிடைக்கிறது. திமுகவைப் பொறுத்த மட்டிலும், அதிமுகவை விட நெருடலாக இருப்பது தேமுதிக தான். தனக்கு வந்திருக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோனதற்கு தேமுதிக தானே காரணம்?


கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக- தேமுதிக - கம்யுனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி அமைந்திராவிட்டால், இந்த அளவுக்கு திமுக சேதாரம் அடைந்திருக்காது. அப்போதும் அதிமுக வென்றிருக்கும்; ஆனால், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்க மாட்டார். பிரமாண்டமான எதிர்க்கட்சிக் கூட்டணியை வேறு வழியின்றி (இதை சட்டசபையில் ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டிருக்கிறார்) அமைத்து திமுகவை நசுக்கிய பிறகு, பழைய பாதைக்கே சென்றுவிட்டார் ஜெயலலிதா. அதை உள்ளாட்சித் தேர்தலிலும் காட்டிவிட்டார். அவருக்கும் விஜயகாந்தின் திடீர் வளர்ச்சி பொறுக்கவில்லை. அதனால்தான் சட்டசபையில் நடக்கும் விவாதங்களில் தேமுதிக எம்எல்ஏக்கள் பேசிய போதெல்லாம் மட்டம் தட்டி வந்தனர் அதிமுகவினர். அதன் இறுதிக்கட்ட எதிரொலியே, கடைசியாக நடந்த சட்டசபைக் கூட்டத் தொடர் நிகழ்வுகள்.


ஜெயலலிதாவுக்கு என்று சில பிரத்யேக குணங்கள் உண்டு. அவரை எதிர்த்து யாரும் பேசிவிடக் கூடாது; அவருக்கு யாரும் அறிவுரையும் கூறக் கூடாது; ஜெயலலிதாவின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதும் கூடாது. இந்த குணத்தால் தான் கட்சியினர் அவரிடமிருந்து தனித்து நிற்கிறார்கள். அதைப் பயன்படுத்திக்கொண்டு ராவணன், சசிகலா கும்பல் அண்மைக்காலம் வரை நடத்திய வசூல் வேட்டையை இப்போது ஜெயலலிதாவே உணர்ந்து விட்டார். ஆனாலும், ஜெயலலிதா மாறுவதில்லை. ஜனநாயகத்தில் விமர்சனங்களுக்கு உள்ள முக்கியமான இடத்தை அவர் ஏற்க மறுப்பதே அவரது வீழ்ச்சிக்கு ஒவ்வொரு முறையும் காரணம் ஆகி வருகிறது. சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விஜயகாந்த் முழுமையாகப் பேச அனுமதிக்கப்பட்டிருந்தால், இந்த ஸ்கூப்' செய்திக்கே அவசியம் வந்திருக்காது.


தகுதியற்றவர்களிடம் புதிய பதவிகள் வந்தால் என்ன ஆகும் என்று விஜயகாந்தை ஜெயலலிதா விமர்சித்திருப்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், சட்டசபையில் அவர் பேசவே கூடாது என்று முதல்வர் எதிர்பார்ப்பது சற்றும் நியாயமில்லை.


இறுதியில், ‘தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததற்காக நான் வெட்கப்படுகிறேன் என்று ஜெயலலிதாவும், ‘அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக நான் தான் வெட்கப்பட வேண்டும் என்று விஜயகாந்தும் முழங்கியபடி, ஏற்கனவே உடைந்திருந்த கூட்டணி மண்பானையை சுக்குநூறாக உடைத்து எறிந்திருக்கிறார்கள். தொடர் அடிகளால் நிலைகுலைந்திருந்த திமுகவுக்கு இப்போது சற்றே ஆசுவாசம் கிடைத்திருக்கிறது. அதிமுகவிடமிருந்து என்ன காரணம் சொல்லி விலகுவது என்று நெளிந்து கொண்டிருந்த கம்யுனிஸ்ட் கட்சிகளும், இதுதான் வாய்ப்பு என தங்களை ஓரம் கட்டிக் கொண்டிருக்கின்றன.


இப்போதைய அரசியல் சூழலில் அதிமுக மட்டும் ஒரு புறத்திலும் மற்ற கட்சிகள் மறுபுறத்திலும் அணி வகுத்திருக்கின்றன. சட்டசபையில் விஜயகாந்த் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, கம்யுனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்திருக்கின்றன. ஆனால். இதையே காரணமாக வைத்து புதிய கூட்டணிக்கு ஊடகங்கள் அவசரப்படுவது, ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள தனிப்பட்ட கணக்கீடுகளை மறந்து செய்யும் அவசரக் குடுக்கைத்தனமாகவே தெரிகிறது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கும் நிலையில் இப்போதே 40 எம்.பி. தொகுதிகளைப் பங்கிட்டுப் பரிமாற்ற வேண்டிய பொறுப்பு பத்திரிகைகளுக்கு இல்லை என்பதும் நிதர்சனம்.


வரும் மார்ச் 18 ம் தேதி சங்கரன் கோவில் சட்டசபைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அதில் மதிமுக தனித்து களம் இறங்குவது உறுதியாகிவிட்டது. இத்தேர்தலில் தனித்து போட்டியிடத் தயாரா? என்ற ஜெயலலிதாவின் சவாலுக்கு விஜயகாந்த் பதில் அளித்ததாக வேண்டி இருக்கிறது. திமுகவுக்கோ தோல்வி உறுதி என்றாலும் களத்திலிருந்து விலக முடியாத நிர்பந்தம். அவ்வாறு திமுக முடிவெடுப்பது வைகோவுக்கு சாதகமாகிவிடுமோ என்ற கலாகாரின் கவலைக்கு காரணம் இருக்கிறது. கம்யுனிஸ்ட் கட்சிகள் கடைசி வரை பிற கட்சிகளின் மூக்கை சொறிந்துவிட்டு, இறுதியில், பக்கத்தில் நின்று வேடிக்கை பார்க்கவே போகின்றன. இதையெல்லாம் மறந்துவிட்டு புதிய கூட்டணிக்கு அச்சாரம் என்று புல்லரிக்கும் நமது பத்திரிகைகளைப் பார்த்தால் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.


ஸ்டாலினையும் விஜயகாந்தையும் கூட ஒரு கணக்கில் வைக்கலாம். இந்தப் பட்டியலில் கார்த்தி சிதம்பரம் சேர்ந்ததுதான் புரியாத புதிர். ஒரு ஊராட்சி உறுப்பினராகக் கூட தகுதியல்லாத ஒருவரை அவரது தந்தையின் பதவியைக் கணக்கில் கொண்டு இவ்வளவு உயர்த்திப் பிடிக்கத் தேவையில்லை. இந்த விமானத்தில் இன்னும் நூறு பயணிகள் வந்திருந்தார்களே, அவர்களை ஏன் நமது ஊடகங்கள் புறக்கணித்தன?


காங்கிரசும் புதிய கூட்டணிக்கு தயாராகிறது என்பது உண்மையானால், அதனால் நெருக்கடிக்கு உள்ளாவது திமுகவாகத் தான் இருக்கும். தேசிய அளவில் திமுகவின் முக்கியத்துவம் குறைந்துள்ள நிலையில், காங்கிரசின் மனநிலையை கருணாநிதியை விட வேறு எவராலும் தெளிவாக யூகிக்க முடியாது. பாம்பின் கால் பாம்பறியாததா என்ன? ஆகவே இத்தகைய நம்பகத் தன்மையற்ற யூகச் செய்திகளை தவிர்த்து, மாநில அரசை வழிப்படுத்தும் செய்திகளில் தமிழக ஊடகங்கள் கவனம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.


அதிமுக அரசு ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. முந்தைய நிலையை விட அதிகமான மின்வெட்டு மாநிலத்தையே இருளுக்குள் தள்ளி இருக்கிறது. இதில் கட்ட வேண்டிய கரிசனத்தை, முன்னாள் திமுக அமைச்சர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு தொடுப்பதிலேயே காட்டி வருகிறது ஜெயலலிதா அரசு. செத்த பாம்பை அடிப்பதை விடுத்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் இறங்குமாறு ஜெயலலிதாவை நமது ஊடகங்கள் தூண்டலாமே?


அதிமுக அரசின் பல்வேறு தொடர் தவறுகளை மக்கள் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்திருப்பதற்கு, திமுகவினரின் வானளாவிய ஊழலே காரணம். அதற்காக இசை நாற்காலி விளையாட்டில் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஜெயலலிதா தொடர்ந்து ஈடுபடுத்துவது அவருக்கே நஷ்டமாக முடியும். இதை நேரடியாகச் சொல்ல எந்த தமிழ்ப் பத்திரிகைக்கும் திராணியில்லை. மாறாக, புதிய கூட்டணி மலர்வதாக இட்டுக்கட்டும் இவர்களின் கதைகளைப் படித்தால் நமக்கே சிரிப்பு வருகிறது. ஊகங்களில் புரளும் நமது ஊடகங்கள் திருந்துவது எப்போது?


-----------------------------

விஜய பாரதம் (02.03.2012)