வெள்ளி, டிசம்பர் 31, 2010

முட்டாள்தனமான உளறலும் கிறுக்குத்தனமான தீர்மானமும்

சரித்திரம் அவ்வப்போது முட்டாள் தலைவர்களை அம்பலப்படுத்துகிறது.
அதனைப் புரிந்துகொள்ளாத மக்கள் முட்டாள்களாகி விடுகிறார்கள்.
-யாரோ-
--------------------------------------------------

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விக்கி லீக்ஸ் இணையதளம், தில்லி அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தை அண்மையில் (டிச. 17) வெளியிட்டது. அதில், ‘லஷ்கர்- இ- தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளைவிட இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்’ என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் கூறியது அம்பலமாகியுள்ளது.

கடந்த 2009 ஜூலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இந்திய பயணம் மேற்கொண்டார். அப்போது அவரை கவுரவிக்கும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் விருந்தளித்தார். அந்த விருந்தின்போது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் குறித்தும், லஷ்கர்-இ-தொய்பாவின் நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் அமெரிக்க தூதர் திமோதி ரோமர் விசாரித்திருக்கிறார். இதுபோன்ற சந்திப்புகளின்போது அதிகாரப் பூர்வமற்ற வகையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது வழக்கமான நடைமுறை. இதில் கிடைக்கும் கருத்துகள், இரு நாடுகள் இடையிலான உறவுகளைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இது
தெரியாமல், தன்னையும் ஒரு பெரிய மனிதராகக் கருதி கருத்து கேட்ட அமெரிக்கத் தூதரிடம் தத்துப்பித்தென்று உளறிக்கொட்டி தனது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ராகுல் வின்சி (அது தானே அவரது உண்மையான பெயர்!)

“இந்திய முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள சில குழுவினரும் லஷ்கர்-இ-தொய்பாவை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன; எனினும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை விட, இந்தியாவில் செயல்படும், பழமைவாத இந்து அமைப்புகளின் வளர்ச்சி, நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்து அமைப்புகளால், முஸ்லிம் சமூகத்தினருடன் மதரீதியான பதட்டங்கள் மற்றும் அரசியல் ரீதியான மோதல்கள் உருவாகின்றன. பா.ஜ., கட்சியை சேர்ந்த முதல்வர் நரேந்திர மோடியால் உருவான மத ரீதியான மோதல்களே இதற்கு உதாரணம். உள்நாட்டிலேயே வளர்ந்த இந்து பயங்கரவாத முன்னணியினர், பாகிஸ்தானிலிருந்து வருபவர்களால் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க துவங்கிவிட்டது கவலை தரும் விஷயம்’' என்று கூறியுள்ளார் ராகுல்.

இதனை தங்கள் நாட்டு வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய ரகசிய ஆவணத்தில் அமெரிக்கத் தூதர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஆவணம் தான் தற்போது விக்கி லீக்ஸ் இணையதளத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

விக்கி லீக்ஸ் வெளியிட்ட ராகுலின் கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள இத்தகவலின் பின்னணியில் சதி இருக்கலாம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறியிருக்கிறார். அதே சமயம், இதனை அமெரிக்க தூதரோ ராகுலோ மறுக்கவில்லை.

இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு

“இந்து அமைப்புகள் பற்றி ராகுல் தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்துக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது” என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கூறியுள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியின் வியாதி ராகுலையும் பீடித்திருப்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டுக்காக பாடுபடும் அமைப்புகளையும் பயங்கரவாதத்தால் நாட்டை சின்னாபின்னமாக்கும் அமைப்புகளையும் ஒப்பிட்டதே தவறு. அதிலும், லஸ்கர்-இ-தொய்பாவை விட இந்து அமைப்புக்கள் அபாயமானவை என்று சொல்வது முட்டாள்தனமானது. ராகுல் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும்'' என்று கூறி இருக்கிறார்.

பா.ஜ.க. தலைவர் நிதின் காட்கரி, ''முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையே ராகுலின் பேச்சு நிரூபித்துள்ளது. அமெரிக்கத் தூதரிடம் என்ன பேசலாம், என்ன பேசக் கூடாது என்று தெரியாத சிறுபிள்ளைத் தனத்தை ராகுல் வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான உலக அளவிலான முயற்சிகளையும் ராகுல் சிறுமைப் படுத்தியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா கோரிவரும் நிலையில், இந்திய அரசின் முயற்சிகளை நாசாமாக்குவதாக ராகுலின் கருத்து உள்ளது'' என்று கண்டித்தார்.

இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் தருண் விஜய் கூறுகையில், "ஊழல் விவகாரங்கள் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்னையால் காங்கிரஸ் கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர். தேர்தலில் தோற்று விடுவோமோ என்று அஞ்சுகின்றனர். அதனால், இந்துஅமைப்புகள் மீது குறைசொல்கின்றனர். இது அவர்களின் பழைய தந்திரம்” என்றார்.

"ராகுலின் கருத்துக்கள் பொறுப்பற்றவை. மும்பை தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் நடத்திய பின்னரும், ராகுல் இப்படி கூறுகிறார் எனில், இந்தியா மற்றும் அதன் பிரச்னைகளை பற்றி ராகுல் தெரியாமல் இருக்கிறார் என்றே அர்த்தம். நாட்டின் மீது அவருக்கு அபிமானம் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கம் கொடுப்பது போல ராகுலின் கருத்து அமைந்துள்ளது,'' என, பா.ஜ.க.வின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மோடி கடும் கண்டனம்

ராகுலின் கருத்து குறித்து கருத்து தெரிவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ''ராகுல் பாகிஸ்தான் ஆதரவாளர் என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உலக நாடுகள் கூறிவருகின்றன. பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுவது தெரிந்தும், அமெரிக்கா ஏன் அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதற்கான உண்மையான காரணம் இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா எடுத்து வரும் கொள்கை முடிவுகளை ஊக்குவிக்கும் வகையில், ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். அவரிடம் தேசப்பற்றுடன் கூடிய கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது'' என்று கண்டித்தார்.

பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், "ராகுலின் பேச்சு பொறுப்பற்றது, பக்குவமற்றது. இது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்துவதாக அமையும். பயங்கரவாதத்திற்கு உதவும், நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்' என்றார்.

பாரதிய ஜனசக்தி தலைவர் உமாபாரதி கூறுகையில், ''ராகுல் அனுபவமற்றவர் என்பதால் தான், இத்தகைய கருத்துக்களை வெளியிடுகிறார். காங்கிரஸ் ஒரு பொறுப்பற்ற கட்சி. அக்கட்சி, தன் அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாதிகளை ஊக்குவிக்கிறது. முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஆதரவை கேட்டார். அதுமட்டுமல்லாமல், 1963 ல் நடந்த குடியரசு தின அணிவகுப்பிலும், ஆர்.எஸ்.எஸ்.,க்கு இடம் கொடுத்தார். இது வரலாற்று உண்மை. இதை முதலில் ராகுல் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்று அறிவுரை கூறினார்.

சிவசேனா தலைவர் பால்தாக்கரே, "இந்து சமுதாயத்திற்கு எதிரான ராகுலின் கருத்தை சகித்துக் கொள்ள முடியாது'' என கூறியுள்ளார். இந்து அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராகுலுக்கு நாடு முழுவதும் ஹிந்து இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தன.

இஸ்லாமிய தலைவர்களும் எதிர்ப்பு

இந்த நிகழ்வினால் இஸ்லாமிய சமுதாயத்தினரின் ஆதரவு கிட்டும் என்று மனப்பால் குடித்த ராகுலுக்கு, முஸ்லிம் மத குருக்களின் கண்டனங்கள் கசப்பாக இருக்கக் கூடும். இத்தாலி ராணியின் பிள்ளைக்கு உள்நாட்டு இஸ்லாமியர்கள் தேசப்பற்றுப் பாடம் எடுத்திருப்பது நிம்மதி அளிக்கிறது. 'ஹிந்து தீவிரவாதம்’ குறித்து அமெரிக்கத் தூதரிடம் ராகுல் காந்தி பேசியிருக்கவே கூடாது என்று முஸ்லிம் மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சன்னி முஸ்லிம் தலைவர் மௌலானா காலித் ரஷீத் பிராங்கி மஹாலி கூறுகையில், “தீவிரவாதம் என்பது முஸ்லிம் சமுதாயத்தோடு இணைத்து பார்க்கப்படுகிறது. இதனால், முஸ்லிம் சமுதாய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அண்மைக்கால சம்பவங்களை ஆராயும்போது சில ஹிந்து குழுக்களுக்கும் தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. ஆயினும் இது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம். இது குறித்து வெளிநாட்டுத் தூதரிடம் ராகுல் காந்தி ஏன் பேச வேண்டும்?'' என்று கேட்டிருக்கிறார்.

'தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. முஸ்லிம் வாக்கு வங்கியைக் கைப்பற்றுவதற்காக இது போன்ற முயற்சிகளில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டால் அவர்கள் நிச்சயம் ஏமாறுவார்கள். முஸ்லிம்கள் புத்திசாலிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது, வளர்ச்சிப் பணிகளுக்கு முதலிடம் அளித்தே முஸ்லிம்கள் வாக்களித்துள்ளனர்...

... ஏழைகள், குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகள் பயன் அடைகிறார்களா என்பதில் மட்டுமே முஸ்லிம்கள் அக்கறை கொண்டுள்ளனர். அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகள் இதனை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளன. மதஅடையாளத்தை மக்கள் மறந்து வருகின்றனர். ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் வாக்களிக்கின்றனர்'' என்றும் அவர் கூறினார்.

ஷியா முஸ்லிம் தலைவர் மௌலானா கல்பே ஜவ்வாத் கூறுகையில், ''பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் ராகுல் காந்தி. அவர், குறிப்பிட்ட ஒரு மதத்தை தீவிரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது நாட்டுச் சட்டம், மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்துப் பார்க்கவில்லை. தவறு செய்தவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுகிறார்கள். மதத்தின் அடிப்படையில் அல்ல'' என்று தெரிவித்தார்.

பேராசிரியர் அத்தர் சித்திக், “காவி தீவிரவாதம் குறித்து ராகுல் காந்தி முன்னரே பேசியிருக்கிறார். இதுபோன்ற விவகாரங்களை அமெரிக்க தூதரிடம் அவர் ஏன் பேச வேண்டும்? தேவைப்படும்போது இந்தக் கருத்துகளை அமெரிக்கா, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்'' என்று எச்சரித்திருக்கிறார். நாடு முழுவதும் பெரும்பாலான முஸ்லிம் மதத் தலைவர்கள் இதே கருத்தைத் தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதிகார மமதை ஆட்டுவிக்கிறது

பாடுபட்டு கட்சியை வளர்த்தவர்கள் எல்லாம் சலாம் போடும்போது, வாரிசு அடிப்படையில் கட்சியின் அதிகார மையத்தைக் கைப்பற்றிய ராகுலுக்கு அதிகார மமதை தலைக்கேறுவது சகஜம் தான். 'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்ற பழமொழியை தெரியாமலா சொல்லி வைத்தார்கள்?

வயதிற்கு மீறிய தலைமைப் பொறுப்பு ராகுலை கண்டபடி உளறச் செய்கிறது. அதற்கு நமது ஊடகங்கள் அளிக்கும் அதீத முக்கியத்துவம் அவரை மேலும் கிறுகிறுக்கச் செய்கிறது. அவர் மேலும் மேலும் இதே போலத் தான் உளறி வருகிறார். ஆனால் ராகுல் சுயகாரியப் புலி. மறந்தும்கூட, தனது கொலம்பியா நாட்டு தோழி குறித்து உளறுவதில்லை. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களும் கூட, குவாத்ரோச்சி குறித்தோ, இத்தாலியிலுள்ள சோனியாவின் சகோதரிகளுக்கு மடைமாறிய ஸ்பெக்ட்ரம் பணம் குறித்தோ ஏதும் உளறுவதில்லை. நமது 'விழிப்புணர்வுள்ள' ஊடகங்களும் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. அதனால் தான், நாட்டின் அனைத்து அம்சங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்க கிளம்பி விடுகிறார் ராகுல்.

பாவம், தாதா பாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பால கங்காதர திலகர், சித்த ரஞ்சன் தாஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற காங்கிரஸ் தலைவர்கள்! அவர்கள் பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ் கட்சியில்தான், 'கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல' சோனியா குடும்பம் ஆதிக்கம் செலுத்துகிறது.

அமெரிக்கத் தூதரிடம் இவ்வாறு கூறுவதால், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு எதிரான நமது அணுகுமுறைக்கு அமெரிக்காவிடம் ஆதரவு கிடைக்காதே என்ற எண்ணமே இல்லாமல் ராகுல் கருத்து தெரிவித்திருக்கிறார். முட்டாள்தனமான இந்த உளறலை அமெரிக்கா பெரிதுபடுத்தவில்லை என்பது நிம்மதி அளிக்கிறது. ஆனால், மத்தியில் ஆள்வதாலேயே தலைக்கனம் பிடித்து அலையும் காங்கிரஸ் தலைவர்கள், ராகுலுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.

தங்கள் தலைவர் கூறிய கருத்து தவறானது என்று ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்ளும் பாங்கு காங்கிரஸிடம் காணப்படவில்லை. மாறாக, ராகுலின் முட்டாள்தனமான உளறலையும் புத்திசாலித்தனமான அரசியல் நடவடிக்கையாக மாற்ற முயன்று, தில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் (டிச. 19, 20 ) கிறுக்குத்தனமான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

காரியக் கிறுக்குத் தீர்மானம்

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அதிருப்தி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் நாடாளுமன்றம் முடக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பிரச்னையை திசை திருப்பக் கிடைத்த அரிய வாய்ப்பாக இந்த விவகாரத்தை காங்கிரஸ் பயன்படுத்த முயன்றுள்ளது. இந்து தீவிரவாத குறித்த பூச்சாண்டி தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமாக, நாட்டு மக்கள் கவனத்தை திசை திருப்பவும், பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தவும் காங்கிரஸ் சகுனிகள் திட்டமிட்டு நிறைவேற்றிய தீர்மானம், ராகுலின் சிறுபிள்ளைத் தனத்தை விஞ்சுவதாக இருக்கிறது.

டிச. 19 ம் தேதி தில்லியில் நடந்த 83-வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்து இயக்கங்களுக்கு எதிரான கிறுக்குத்தனமான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ''நாட்டில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு இருப்பதால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் பயங்கரவாதத் தொடர்பு குறித்து விசாரணை நடத்தவேண்டும்'' என மத்திய அரசை வலியுறுத்தும் அந்தத் தீர்மானம், காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

''ஆர்.எஸ்.எஸ் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். பா.ஜ.க மற்றும் அதன் சகோதர அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்டவை வெறுப்பையும் வன்முறையையும் பிரசாரம் செய்துவருகின்றன. இது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகும். தேசத்தை தகர்ப்பதற்கு இவர்கள் முயல்கிறார்கள். பயங்கரவாத செயல்பாடுகளில் இவர்களின் தொடர்பை கண்டறிவதற்காக தீவிர விசாரணை தேவை'' என அந்தத் தீர்மானம் நீட்டி முழங்குகிறது. இறுதியில், ' தீவிரவாதம் எந்த மதத்திலிருந்து வந்தாலும் அதனை உறுதியாகவும், பயன் தரத்தக்க வகையிலும் எதிர்கொள்ள வேண்டும்' என உபதேசமும் செய்துள்ளது.

''இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடி மதசார்பற்ற கொள்கையாகும். ஆர்.எஸ்.எஸும், பா.ஜ.கவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் மதசார்பற்றக் கொள்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. 2002 ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்திற்கு காரணமான அனைவரையும் விசாரணைச செய்யவேண்டும். சிறுபான்மை மக்கள் தாக்கப்படும் சூழலில் கலவரத் தடுப்பு மசோதாவை கொண்டுவந்த மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது'' என்றும் காங்கிரஸ் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய ம.பி. முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான திக்விஜய் சிங், வழக்கம்போல, கருணாநிதி பாணியில், ஹிந்து இயக்கங்கள் மீது அவதூறுமழை பொழிந்தார்.

மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கார்கரே மும்பையில் கசாப் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு முந்தைய நாள் ஹிந்து தீவிரவாதிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இவரிடம் தொலைபேசியில் பேசினாராம்! இவ்வாறு கூறி வாங்கிக் கட்டிக் கொண்ட பின்னரும், தனது கருத்துக்கு சாட்சி இல்லை என்று ஊடகங்களிடம் வழிந்த பின்னரும், காங்கிரஸ் மாநாட்டில் திக்விஜய் சிங் முழங்கினார். தனது கருத்துக்கு சோனியா, ராகுல் ஆகியோரின் ஆசிகள் உண்டு என்று மாநாட்டில் அறிவித்தார் திக்விஜய் சிங். இறுதியில் கேவலமான குற்றச்சாட்டின் பின்னணி வெளிப்பட்டுவிட்டது.

இந்தத் தீர்மானம் மூலமாக, நாட்டு மக்களை திசை திருப்பவும், ஊழலுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை மழுங்கச் செய்யவும் காங்கிரஸ் முயன்றது. ஆனால், எதிர்க்கட்சிகள் புத்திசாலித்தனமாக அமைதி காத்தன. அதனால், காங்கிரஸ் கொண்டுவந்த கிறுக்குத் தனமான தீர்மானம், முட்டாள்தனமான முயற்சியாக பயனிழந்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், இதனையும் பா.ஜ.க.வின் அரசியல் சதியாகச் சித்தரித்து, அதன்மூலமாக ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு மதவாத சாயம் பூசி எதிர்க்கட்சிகளைக் கூறுபோட்டு, ஊழல் குற்றங்களிலிருந்து தப்ப காங்கிரஸ் மற்றொரு தீர்மானம் மூலமாக முயன்றது. இதுவும் எடுபடவில்லை. மொத்தத்தில் காங்கிரசின் தில்லி மாநாடு, அக்கட்சி திட்டமிட்ட எதனையும் அக்கட்சிக்கு வழங்கவில்லை. மாறாக, அதன் கபட வேடமும், கயமையும் நாட்டு மக்களிடம் மேலும் வெளிப்படவே உதவியுள்ளது.

சரித்திரத்திலிருந்து பாடம் கற்குமா காங்கிரஸ்?

லஸ்கர்-இ-தொய்பா நடத்திவரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கொடூர முகம் குறித்தும் நாட்டு மக்கள் அறிந்தே உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து இயக்கங்களின் சேவைகளையும் தேவையையும் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்தே உள்ளனர்.

'ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்களுக்கு தொடர்பில்லை' என்று சோனியா தலையிலடித்து சத்தியம் செய்தாலும் இனிமேல் யாரும் நம்பப் போவதில்லை. காங்கிரஸ் நடத்திவரும் தேசநலனுக்கு விரோதமான நாடகங்கள் அனைத்தையும் பிற அரசியல் கட்சியினரும் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். இத்தகைய மோசடிப் பேர்வழிகள் இந்து இயக்கங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது நல்லது தான். வில்லன்கள் நல்லவர்களைப் பாராட்ட மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆர்.எஸ். எஸ். அமைப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் நேரு கடுமையான வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டார். 1948 ல் மகாத்மா காந்தி கொலையைக் காரணம் காட்டி சங்கத்தை தடையும் செய்தார். அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து சட்டப்படி நிரபராதியாக வெளியேறிய சங்கம் ‘அக்னிபிரவேசம் செய்த சீதை போல’ தனது களங்கமின்மையை நிரூபித்தது. தனது வாழ்வின் இறுதியில், சீனப்போரின் போது உண்மை நிலையை உணர்ந்து, தனது தவறைத் திருத்திக் கொண்டார் நேரு.

அவரது மகள் இந்திரா காந்தியும் சங்க பரிவார் அமைப்புகளுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்தார். 1975 ல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது முதலில் தடை செய்யப்பட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தான். அதுவே அவரது எதேச்சதிகார ஆட்சிக்கு சாவுமணியானது. அரசின் கொடுமையான அடக்குமுறைகளை மீறி, தலைமறைவுப் போராட்டம் வாயிலாக மக்களிடம் இந்திராவின் சர்வாதிகார முகத்தை அம்பலப்படுத்தி ஜனநாயகத்தை காத்தது ஆர்.எஸ்.எஸ். சங்கத்தின் முன்முயற்சிகளால் உருவான ஜனதா இந்திரா ஆட்சியை தூக்கி எறிந்தது. அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ். மீது கை வைக்க இந்திரா காந்தி துணியவே இல்லை.

மூன்றாவது முறையாக, 1992 ல் அயோத்தியில் சர்ச்சைக்குரிய அடிமைச் சின்னம் அகற்றப்பட்டபோது, நரசிம்ம ராவ் அரசால் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அந்தத் தடையை நீதிமன்றமே ரத்து செய்தது. பின்னாளில் பாரதிய ஜனதா கட்சி நாட்டின் அரசியலில் பிரதான இடம் பெறவும், மத்தியில் (1998) வாஜ்பாய் பிரதமர் ஆகவும், ராவ் விதித்த தடைதான் உதவியது.

ஆக, ஆர்.எஸ்.எஸ். மீது காங்கிரஸ் அரசுகள் ஏவும் தடைகள், விசாரணைகள், துஷ்பிரசாரங்கள் அனைத்தும், இந்து அமைப்புகளுக்கு நன்மையே நல்கும். காங்கிரசின் சுயரூபம் வெளிப்படவே அவை உதவுகின்றன. அந்த வகையில், தற்போதைய காங்கிரஸ் மாநாடு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களும் சங்கத்தை பலப்படுத்தி, நாட்டுக்கு நலம் அளிக்கும்.

முட்டாள்தனமாக அமெரிக்கத் தூதரிடம் உளறிக் கொட்டிய கட்சியின் இளவரசரைப் பாதுகாப்பதற்காக கட்சியின் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கிறுக்குத்தனமான தீர்மானம், கடவுள் அருளால் குப்பைக்கூடைக்குச் சென்றுவிட்டது.

நாட்டு மக்களை சிறுபான்மை- பெரும்பான்மை என்று பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் தொடர்வதன் அபாயம் குறித்து நாட்டிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களிடம் இந்துத்துவ அமைப்புகள் விளக்க வேண்டிய நேரம் இது.


----------------------------

நன்றி: விஜயபாரதம் (7.1.2011)

.

புதன், டிசம்பர் 22, 2010

அருண் ஷோரியின் உபதேசமும் கருணாநிதியின் உபன்யாசமும்


சென்னையில், பல்கிவாலா அமைப்பு மற்றும் சென்னை தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில், ‘ஊழலின் உண்மையான தாக்கம்' என்ற தலைப்பில் டிச. 17 ல் கருத்தரங்கம் நடந்தது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும் பத்திரிகையாளருமான அருண் ஷோரி, ''2001 முதல் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். அப்போதுதான், தே.ஜ.கூட்டணி ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற கோட்பாட்டையும் ஆ.ராசா கடைபிடிக்கவில்லை என்பது தெரியவரும். இந்த வழக்கில் எப்போது சி.பி.ஐ விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராகி உண்மைகளை கூற நான் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

பிறகு ஊடகங்களின் தற்போதைய போக்கு குறித்து கவலை தெரிவித்த அவர் மேலும் கூறியது:

ஊழல் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது, ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதனை செய்தியாக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, ஊழலில் தொடர்புடைய அரசியல்வாதிகள் தப்பிக்க வழி ஏற்படுத்திவிடும். பத்திரிகைகள், அரசியல்வாதிகளின் பேச்சை அப்படியே எழுதாமல், அதில் உள்ள உண்மையை மட்டும் எழுத வேண்டும்.

ஊழல் என்பது புற்றுநோய் போல நாட்டை அரிக்கிறது. ஊழல் செய்தவர்களை பொதுவாழ்வில் இருந்து நீக்குவதுடன், சிறைத் தண்டனை வழங்க வேண்டும். நம் நாட்டில் ஒரு ஊழலை பற்றி விசாரிக்கும் போதே, அதை விட பெரிய ஊழல் பேச்சு ஏற்பட்டால், பழையதை மக்கள் மறந்து விடும் நிலை உள்ளது. சி.பி.ஐ., அமைப்பு, யாருக்கும் அடிபணியாமல் தனித்திறன் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வழக்கை காலதாமதம் ஏற்படுத்தாமல், விரைந்து முடிக்க வேண்டும்.

தனிநபராக ராசா ஒருவரால் இவ்வளவு பெரிய தொகையை ஊழல் செய்திருக்க முடியாது. அவருக்கு பின்னணியில் இருந்தவர்கள் குறித்து, ராசா அப்ரூவராக மாறி எல்லா உண்மைகளையும் தெரிவிக்க வேண்டும், என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள், தங்கள் மீதான அஸ்திரத்தை திசைதிருப்பிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் என்ற முறையில், அருண் ஷோரி துணிவுடன் விசாரணையை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. அதே சமயம், 2001 முதல் விசாரணை என்பதைப் பயன்படுத்தி தற்போதைய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

ஆ.ராசா தனது துறை அலுவலகத்தில் கிடப்பில் இருந்த 300 க்கு மேற்பட்ட விண்ணப்பங்களை நிராகரித்து, அவசர அவசரமாக தகுதியற்ற விண்ணப்பங்களை உள்நுழைத்தது ஏன் என்ற கேள்வியையும் அவர் கேட்டிருக்கிறார். உண்மையில் இந்தக் கேள்வியை சி.பி.ஐ ராசாவிடம் கேட்க வேண்டும். அவர்கள் ராசாவிடம் கேட்காவிட்டால், அருண் ஷோரியே இக்கேள்வியை சி.பி.ஐ.இடம் கேட்கும் நிலையும் ஏற்படலாம்.

இந்நிலையில், அருண் ஷோரியின் கருத்துக்களை தமிழக முதல்வர் கருணாநிதி அவருக்கே உரித்த சுயநலத்துடன் தனது ஊடக உபன்யாசத்திற்கு வழக்கம் போலப் பயன்படுத்தி இருக்கிறார்.

கடந்த இரு நாட்களாக பத்திரிகையாளர் சந்திப்புகளில் அருண் ஷோரியின் கருத்துக்களையே கருணாநிதி மேற்கோள் காட்டிவருகிறார். அதிலும் தனக்குத் தேவையான பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து பயன்படுத்தி வருகிறார்.

''ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி இருக்க வாய்ப்பில்லை; அநேகமாக ரூ. 40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பது எனது கருத்து'' என்ற ஷோரியின் கருத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்ட கருணாநிதி, 'அருண் ஷோரியே கூறிவிட்டார்' என்று தனது பாதுகாப்பிற்கு அவரை கவசமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறார்.

இதுவரை, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்று கூறிவந்த கருணாநிதி, தற்போது, ரூ. 40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதை ஒப்புக் கொள்கிறாரா? இந்தக் கேள்விக்கான பதிலை மட்டும் அவர் நாசூக்காக தவிர்க்கிறார்.

அடுத்ததாக ''ராசா மட்டும் இவ்வளவு பெரிய ஊழலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை'' என்ற ஷோரியின் கருத்தை எடுத்துக்கொண்டு, ராசாவை ஷோரி ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் கருணாநிதி முயன்றிருக்கிறார். அதே சமயம் 'ராசா ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும்' என்ற ஷோரியின் வேண்டுகோள் குறித்து மஞ்சள்துண்டு மகான் கண்டுகொள்ளவே இல்லை.

ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது, செய்தியின் ஆழத்தைப் புரிந்துகொண்டு வெளியிட வேண்டும். அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே வெளியிடாமல் அதனை ஆராய்ந்து வெளியிட வேண்டும் என்று ஊடக வாதிகளுக்கு அறிவுரை கூறிய அருண் ஷோரி, 'அரசியல்வாதிகள் பிறர் கூறுவதன் முழு சாராம்சத்தையும் புரிந்துகொண்டு பேச வேண்டும்' என்றும் கூறியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ராசாவின் பின்னணியில் இருந்து ஊழல் செய்தவர்களில் சோனியா, கருணாநிதி ஆகியோருக்கு முக்கிய இடம் இருப்பதாக நாட்டு மக்கள் சந்தேகிக்கிறார்கள். எனவேதான், பலிகடா ஆகாமல் 'எல்லா உண்மைகளையும்' கூறுமாறு ராசாவுக்கு ஷோரி அறிவுரை கூறியிருக்கிறார். அதனையே, மூக்கறுந்த முதல்வர் தனக்கு சாட்சியாகப் பயன்படுத்த விழைவது, அவர் எப்படிப்பட்ட சிக்கலில் தவிக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

.

செவ்வாய், டிசம்பர் 21, 2010

அரசுக்கு விண்ணப்பம்

1963 ல் தில்லியில் நடந்த குடியரசுதின அணிவகுப்பில்
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு.

அக்னியை சிறைசெய்ய எண்ண வேண்டாம்;
ஆதவனை மறைத்துவைக்க முயல வேண்டாம்!
இடிமுழக்க ஓசையினை மறுக்க வேண்டாம்;
ஈடில்லா இயக்கமடா எங்கள் சங்கம்!

உண்மையினைப் பொய்களினால் மூட வேண்டாம்;
ஊதற்காற்றாய்ச் சீறும் எங்கள் சங்கம்!
எழுந்துவிட்ட ஹிந்துக்கள் இதயம் நாங்கள்;
ஏனிதனைத் தடை செய்து மாளுகின்றாய்?

ஐயையோ எனப் புலம்பி அரற்ற வேண்டாம்!
ஒற்றுமையைக் கண்டென்றும் அஞ்சலாமா?
ஓடையல்ல எம்சங்கம் அணைகள் கட்ட;
ஔவியத்தால் சமுத்திரத்தைத் தடுக்க வேண்டாம்!

------------------------------
நன்றி: விஜயபாரதம் (18.02.2000)
குறிப்பு: தற்போதைய சூழலைக் கருதி மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.
.

திங்கள், டிசம்பர் 20, 2010

ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்- 2


வானவில்லின் நிறங்கள் ஏழாயினும் அவை அனைத்தும், ஒரே நிறமற்ற ஒளியின் நிறப்பிரிகைகளே என்பது விஞ்ஞான உண்மை. முந்தைய பதிவில்/ சென்ற இதழில் ( கட்டுரையின் முதல் பகுதி.... ) நான்கு நிறங்கள் குறித்துக் கண்டோம். இப்போது மீதமுள்ள மூன்று நிறங்கள்...

மஞ்சள் நிறம்:

மஞ்சள் பத்திரிகை என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரியும். இப்போதைய அதிகாரத் தரகர்களான ஊடக அறிஞர்களைக் காணும்போது வானவில்லில் தோன்றும் மஞ்சள் நிறம் நினைவில் வந்தால் அதற்கு வானவில் பொறுப்பில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு உள்ள தொடர்புக்கு சிறிதும் குறைவில்லாதது பத்திரிகையாளர்களின் தொடர்பு. 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபின் மன்மோகனார் ஆட்சி அமைக்கும் முன்பு நடந்த அதிகாரத் தரகு வேலைகளில் ஊடக ஞானிகளான வீர் சாங்க்வி, பர்கா தத் ஆகியோர் பங்கேற்றது நீரா ராடியா 'டேப்' வாயிலாக வெளியாகி சந்தி சிரிக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து 2008 முதலாகவே, நாட்டுப்பற்றுள்ள சில ஊடகங்களால் ‘புலம்பப்பட்டு’ வந்துள்ளது. ஆயினும், ஊழல்கறை படிந்த ஆண்டிப்பட்டி ராசாவையே மீண்டும் அதே தொலைதொடர்புத் துறைக்கு அமைச்சராக்க ஊடக மேதாவிகள் சிலர் நடத்திய தொழில் துஷ்பிரயோகம் நாட்டுக்கு செய்துள்ள தீங்கு சாதாரணம் ஆனதல்ல. கடந்த 2 ஆண்டுகளாக வீர் சாங்க்வியின் ஹிந்துஸ்தான் டைம்சும், பர்கா தத்தின் என்டிடிவியும் வெளியிட்ட செய்திகள் எப்படிப்பட்டவையாக இருந்திருக்கும் என்பதை இப்போது சிந்தித்துப் பார்த்தால், அந்த செய்திகளை உண்மையென்று நம்பிய மக்களுக்கு தேள் கொட்டியது போல இருக்கிறது. ஆனால், தரகு வேலை செய்த அதிபுத்திசாலிகள் எதுவுமே நடக்காதது போல இப்போதும் செய்தி வாசிக்கிறார்கள்.

இப்போதும்கூட, வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே அலைக்கற்றை மோசடி துவங்கிவிட்டது என்று கை கூசாமல் எழுதும் பத்திரிகைகள் இருக்கின்றன. முன்னாள் பத்திரிகையாளரும் தே.ஜ.கூட்டணி ஆட்சியில் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தவருமான அருண் ஷோரி இதற்கு அற்புதமான பதில் கொடுத்திருக்கிறார். கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையை 2001 முதல் நடத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கூடிய கருத்தை வரவேற்ற அவர், ''அலைக்கற்றை விநியோகம் தொடர்பாக 1998 முதலாகவே கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையை நடத்தலாம். அப்போது தான், ராசா கூறிவரும் 'முந்தைய நடைமுறையையே கடைபிடித்தேன்' என்ற பித்தலாட்டம் அமபலமாகும். விசாரணைக் குழு முன் ஆஜராக நான் தயாராகவே இருக்கிறேன். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எப்படி அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன என்பதை விளக்க நான் தயாராகவே இருக்கிறேன். உண்மையில் ராசா எந்த முன்னுதாரணத்தையும் பின்பற்றவில்லை. எந்த விதிமுறைகளையும் மதிக்கவில்லை என்பது அப்போதுதான் வெளிப்படும்'' என்று கூறி இருக்கிறார்.

கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜே.பி.சி.) விசாரணையை எதிர்க்கட்சிகள் கோருவதே பிரதமர் மன்மோகன் சிங்கை கூண்டில் ஏற்றும் நோக்கத்துடன் தான் என்று சில காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன. அதில் என்ன தவறு? ஊழல் செய்த மத்திய அமைச்சரை ஒன்றரை ஆண்டுகாலம் போஷித்த பிரதமரை கேள்வி கேட்காமல் தெருவில் செல்பவரிடமா விசாரிக்க முடியும்? ராசா விவகாரத்தில் பல பல்டிகளை அடித்த மன்மோகன் சிங்கிடம், அந்த பல்டிகளுக்கு காரணம் யார் என்று கேட்பது தானே விசாரணை நிறைவடைய உதவும்? ''மன்மோகன் சிங் ஏற்கனவே இருமுறை ஜே.பி.சி. விசாரணைக் குழு முன்பு ஆஜரானவர் தானே?’’ என்று அருண் ஷோரி கேட்டிருக்கிறார். எப்போதும் வாயாடும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களிடம் இதற்கான பதிலில்லை.

இப்போதும்கூட, அருண் ஷோரியை பா.ஜ.க.வுக்கு எதிராக கிளப்பிவிட முயற்சிகள் நடக்கின்றன. கரண் தாப்பரின் அண்மைய 'டெவில் அட்வகேட்' நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள், ராசா விவகாரத்தை அமுக்க நடத்தப்பட்ட நாடகமே. அதற்கு, அனுபவசாலியான ஷோரியே பலியாகி விட்டதைக் காண முடிந்தது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் யார் பேசுவது என்பதை நீரா ராடியா தீர்மானம் செய்ததாக கரண் தாப்பர் உறுதிப்படுத்த முயன்றார். கட்சி மீது சிறு அதிருப்தியில் இருப்பவரை மேலும் சொறிந்து, பிரச்னையை திசைதிருப்ப அவர் முயன்றார். ஆயினும், அதில் கிளம்பிய பரபரப்பால் ராசா விவகாரத்தை கரண் தாப்பரால் நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியவில்லை.

வீர் சாங்க்வி, பர்கா தத் மட்டுமலாது, மேலும் பல ஊடகவாதிகள் ராசா விஷயத்தில் வெளிப்படாமல் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. உதாரணமாக, தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று, ராசா விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டபோதும், மிக மிக அடக்கமாக, ராசா பெயரையே குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டது. இப்போது பிரச்னை பெரிதாகிவிட்டவுடன், ராசாவை கடுமையாகத் தாக்கி செய்திகள் வெளியிட்டு, பிராயச்சித்தம் செய்கிறது அந்தப் பத்திரிகை. இதே போன்ற நிலையை நாடு முழுவதிலும் காண முடிகிறது. இப்போது அதிர்ச்சிகரமான தலைப்புகளுடன் ‘ராசா’ செய்தியை வெளியிடும் பல தமிழ் புலனாய்வுப் பத்திரிகைகள், ஊழல் வெளிப்பட்ட ஆரம்பக் காலத்தில், யாருக்கோ காய்த்திருக்கிறது புளித்த மாங்காய் என்பதுபோல கண்டுகொள்ளாமல் இருந்தவைதான்.

இப்போதும்கூட, ஊடக அறிஞர்கள் என்ற பெயரில் தி.மு.க. சார்பு பத்திரிகையாளர்கள், ‘ராசா மீது நடவடிக்கை எடுக்க, அவர் தலித் என்பதுதான் காரணம்’ என்று பசப்பித் திரிகிறார்கள். மஞ்சள்துண்டு மகானுக்கு அடிமையான மஞ்சள் பத்திரிகையாளர்களிடம் வேறெதை எதிர்பார்ப்பது?

ஆரஞ்சு நிறம்:

வானவில்லின் நிறங்களில் எதிரிடையான நிறம் கொண்டது ஆரஞ்சு. மத்திய ஊழல் கூட்டணி அரசை எதிர்த்துப் போராடும் பா.ஜ.க. போல. ஊழலுக்கு காரணமானவர்கள் போலவே ஊழலை வெளிப்படுத்தியவர்களும் வானவில்லின் வண்ணங்களாக மிளிர்கின்றனர். உண்மையில், பா.ஜ.க.வின் கடுமையான எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், ராசா விவகாரத்தை மூடி மறைக்கும் சாகசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பட்டிதொட்டி எல்லாம் பரவிவிட்டது. பா.ஜ.க.வுக்குப் போட்டியாக இடதுசாரிக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் களமிறங்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே சில கட்சிகள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க, வானவில் விவகாரத்தில், காங்கிரஸ் தனிமைப் படுத்தப்பட்டது. இந்த விஷயத்தில் முக்கிய ஊழல் கூட்டாளியான தி.மு.க.வுடனும் கூட காங்கிரஸ் கட்சியால் நிம்மதியாக உரையாட முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள் தங்கள் மீதான புகார்களை நாசூக்காக திசை திருப்ப முயன்றனர். தே.ஜ.கூட்டணி ஆட்சியிலேயே முறைகேடுகள் துவங்கிவிட்டன என்று நடந்த பிரசாரத்தை மீறி, பா.ஜ.க. ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிப்படுத்தி இருக்கிறது. இதற்காக, நாடாளுமன்றத்தை முடக்கவும் பா.ஜ.க. தயங்கவில்லை. இதனால், குளிர்காலக் கூட்டத் தொடரில், மொத்த நாட்களான 23 நாட்களும் நாடாளுமன்றம் முடங்கியது.

இதனை காங்கிரஸ் வன்மையாகக் கண்டித்தது. ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக புலம்பிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு, யாரேனும், முந்தைய வாஜ்பாய் ஆட்சியில் காங்கிரஸ் நடந்துகொண்ட முறையை நினைவுபடுத்தினால் நல்லது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு என்ன ஊழல் செய்தாலும் கண்டுகொள்ளாமல், அதற்கான பிரதிபலனைப் பெற்றுக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியிடம் பிரதமர் எதிர்பார்க்கிறாரா?

பா.ஜ.க மட்டும் ஒழுங்கா என்று கேட்டு திசை திருப்புகிறார் அந்தோனியோ மைனோ (அதாங்க, சோனியா காந்தி) பங்காரு லக்ஷ்மணன் லஞ்சம் வாங்கியது, கர்நாடகாவில் நடந்துள்ள ஊழல் குறித்து கூறும் சோனியா, என்ன சொல்ல வருகிறார்? காங்கிரஸ் ஊழல் செய்யவில்லை என்றா? அல்லது, பா.ஜ.க.வுக்கு அதை சுட்டிக்காட்ட தகுதி இல்லை என்றா? அல்லது ஊழல் ஒரு பெரிய விஷயமில்லை என்றா?

எது எப்படியாயினும், பங்காரு லக்ஷ்மணன் மீது எடுத்த நடவடிக்கை போல எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்காதது, பா.ஜ.க.வை குற்றம் சாட்டும் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஆயினும், பேருந்தில் ஜேப்படி செய்து சிக்கிய திருடனும், பல லட்சம் கோடி அரசுப் பணத்தை கபளீகரம் செய்த அதி புத்திசாலிகளும் ஒரே தராசில் நிறுத்தப்படக் கூடாது என்பதை மக்கள் அறிந்தே இருக்கின்றனர். தன் மீதான புகாரை அடுத்து முறைகேடாக ஒதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அரசு நிலத்தை திருப்பி அளிக்க எடியூரப்பா முன்வந்தார். அதன்மூலமாக தனது தவறை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த மனசாட்சி ராசாவிடமோ, நாட்டின் ராசாவிடமோ, ‘ராணி’யிடமோ நாட்டின் ராணியிடமோ இல்லையே?

வாஜ்பாய் ஆட்சி மீது குற்றம் சாட்டினால் பா.ஜ.க. அமைதியாகிவிடும் என்று தப்புக் கணக்கு போட்ட ராசா, சோனியா, கருணாநிதி. டாடா உள்ளிட்டோருக்கு, பா.ஜ.க.வின் முனைப்பு முன்னைவிட அதிகரித்திருப்பது கிலி ஏற்படுத்தியுள்ளது. தவிர, ஆளும் கட்சி சார்பான இந்த விஷமப் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்பதை அரசு உணர்ந்துகொண்டது.

நாடாளுமன்றத்தில் ஆணவப் போக்குடன் நடந்துகொண்ட காங்கிரஸ் கூட்டணிக்கு பாடம் கற்பிக்க நாடு முழுவதும் பிரசார இயக்கத்தை மேற்கொள்ள பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூட்டணி முடிவு செய்துள்ளது. அதன் தெருமுனை ஆர்ப்பாட்டங்கள் ஏற்கனவே துவங்கிவிட்டன. இதுவிஷயத்தில் தங்கள் கூட்டணியில் இல்லாத மாற்றுக் கட்சிகளின் ஆதரவை சேகரிப்பதிலும் தே.ஜ.கூ. வெற்றி பெற்றுள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக 'பாமாயில் ஊழல் புகழ்' பி.ஜே.தாமசை நியமிக்க பா.ஜ.கவின் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்த எதிர்ப்புக்கு நல்ல பலன் இப்போது கிடைத்திருக்கிறது. தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் வீசும் கேள்விக்கணைகளுக்கு பதில் கூற முடியாமல் மத்திய அரசு தடுமாறுவதை நாடே வேடிக்கை பார்க்கிறது. வேறு வழியின்றி, 'ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையிலிருந்து விலகி இருப்பதாக' பி.ஜே.தாமஸ் உச்சநீதி மன்றத்தில் விளம்பி இருக்கிறார். ஆயினும் அவரை பதவியில் இருந்து விலக்காமல், சோனியா அடிவருடியான பிரதமர் அமைதி காக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிப்படுத்தியதில் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, அருண் ஷோரி, ரவி சங்கர் பிரசாத், சரத் யாதவ் ஆகியோருக்கு பெரும் பங்குண்டு. இவர்கள் மீதான நல்லெண்ணம் நாட்டில் நிலவுவதன் காரணமாகவே, காங்கிரஸ் கிளப்பிய அவதூறு பிரசாரம் வலுவிழந்தது. ஆயினும், பா.ஜ.க, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய காலகட்டம் இது.

ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காரணமாகக் கொண்டு மத்திய அரசைக் கவிழ்க்க வேண்டும் என பா.ஜ.க. விரும்பவில்லை என்று அத்வானி கூறி இருக்கிறார். அது அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தலாம். ஆனால், இப்போது இந்த ஆட்சியைக் கவிழ்க்காவிட்டால் வேறு எப்போது கவிழ்ப்பது? பெருந்தன்மையைக் காட்ட வேண்டிய இடத்தில் மன்மோகனோ அவரது தலைவியோ இல்லை. உண்மையில், இந்த ஊழலின் ஆணிவேர் ராசாவிடம் இல்லை. அதன் வேர்மூலத்தைத் தோண்டினால், காங்கிரஸ் தான் காயம் படும். அந்த வாய்ப்பை பா.ஜ.க விட்டுவிடக் கூடாது.

மன்மோகன் சிங் நல்லவர் என்று ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் நடத்திவரும் பிரசாரத்தை பா.ஜ.க தொடரக் கூடாது. ராசா விவகாரத்தில் இத்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றியது பிரதமரின் குற்றம். அதற்கான பலனை அவர் அடைந்தே தீர வேண்டும். நடவடிக்கை எடுக்காததற்கு பிரதமர் கூறும் காரணம் 'நிர்பந்தம்' எனில், நாட்டிற்கு தலைமை தாங்கும் தகுதியை அவர் இழக்கிறார். தெரிந்தே ராசாவை ஆதரித்ததால் அவர் கூட்டுக் களவானியாகவும் ஆகிறார். அவரை பதவியில் இருந்து அகற்றாமல் அரசியல் நாகரிகம் பார்ப்பது பா.ஜ.க.வின் வேலை அல்ல.

சிவப்பு நிறம்:

அபாயத்தின் அறிகுறி என்றுமே சிவப்புத் தான். வானவில்லில் உள்ள அதிக அலைநீளம் கொண்ட நிறமும் சிவப்பே- ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு அபாய எச்சரிக்கை செய்து உதவிய நீதிமன்றங்கள் போல. நீதிமன்றங்களின் தலையீடு மட்டும் இல்லையென்றால், வானவில் ஊழலில் பல லட்சம் கோடி நாட்டிற்கு நஷ்டம் ஏற்படுத்திய சதிகாரர்கள் எந்த குற்ற உணர்வும் இன்றி மாபெரும் தியாகியர் போல நாட்டில் இன்றும் உலவிக் கொண்டிருந்திருப்பார்கள்.

முதலாவதாக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நிலவும் முறையற்ற நடைமுறைகளை பிட்டுப் பிட்டுவைத்து கேள்வி கேட்டது உச்சநீதிமன்றம் தான். சுப்பிரமணியம் சாமி தொடர்ந்த வழக்கைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய ஊழல் அரசை கிழி கிழியென்று கிழித்தது உச்சநீதி மன்றம். நீதிமன்ற விசாரணையில் நீதிபதிகள் இன்று என்ன சொல்லப் போகிறார்களோ என்று அஞ்சி நடுங்கும் நிலைக்கு மத்திய அரசு ஆளானது. மத்தியப் புலனாய்வுத் துறையின் பசப்பல்களுக்கு ‘நறுக்’ என்று கொட்டு வைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ''நாங்கள் வேடிக்கை பார்ப்பதாக நினைக்கிறீர்களா?'' என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.

''இன்னும் ஏன் ராசாவிடம் விசாரணை செய்யவில்லை? ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்கள்? ஊழல் புகாருக்கு ஆளான தாமசால் எப்படி நியாயமான முறையில் விசாரணையை வழிநடத்த முடியும்? நீரா ராடியா 'டேப்' வெளியானது எவ்வாறு தவறாகும்? பிரதமரின் யோசனைப் புறந்தள்ளி ராசா அவமதித்துள்ளார்; அவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? அலைக்கற்றை ஒதுக்கீடுகளை ஏன் ரத்து செய்யக் கூடாது? '' போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மூலமாக நாட்டின் மனசாட்சியாகத் திகழ்கிறது உச்சநீதிமன்றம். தில்லி உயர்நீதிமன்றமும் சளைக்கவில்லை. இதே போன்ற கேள்விகளால், மத்திய அரசின் ஆணவப் போக்கையும் ஊழலை மறைக்கும் சதிகளையும் இரு நீதி மன்றங்களும் அம்பலப்படுத்தி உள்ளன.

அதன் விளைவாகவே, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராசா விலக வேண்டி வந்தது. ராசா வீடுகளில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்த வேண்டிவந்தது. ராசாவின் செயலர் கைது செய்யப்பட்டதும், நீரா ராடியாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதும், நீதிமன்றத்தால் தான் சாத்தியமானது. நீதிமன்றம் ஊழலுக்கு எதிரான போர்க்குரலை வெளிப்படுத்திய காரணத்தால்தான், அதனை ஊடகங்களும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அடுத்தகட்ட விசாரணைகளில் இன்னும் என்னென்ன உண்மைகள் வெளிப்படப் போகின்றனவோ, தெரியவில்லை. ஒருவகையில் அவை நாட்டிற்கு அவமானம் தான் என்றாலும், அவை அனைத்தும் நாட்டிற்கு நன்மையே அளிக்கும். ஏனெனில் வெட்கப்பட்டு வேதனைப்பட வேண்டியவர்கள் புனிதர்களாக நடமாடும் நாட்டில், நீதிமன்றங்களின் பங்கு அளப்பரியதாகி விடுகிறது.

ஆண்டிமுத்து ராசாவின் ''முந்தைய ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் விற்பனை நடந்து'' என்ற தொடர் புழுகால் கோபம் அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ''அவ்வாறெனில், 2001 முதலாகவே மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணையை நடத்தட்டும். அப்போது உண்மை வெளிப்படும்'' என்று காட்டமாகவே கூறினர். அதையடுத்து, அவசர அவசரமாக, தனி நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷனை மத்திய அரசு அவசர அவசரமாக அறிவித்தது. ஆயினும், இது விசாரணையை மேலும் ஒத்திப்போட நடத்தப்படும் நாடகமே என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

உச்சநீதி மன்றத்தின் கண்டிப்புக்கு அஞ்சி, அலைக்கற்றை மோசடியில் தொடர்புடைய 85 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு தொலைதொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அநேகமாக பல மோசடி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல தொலை தொடர்பு நிறுவனங்கள் அரண்டுபோய் உள்ளன.

மத்திய அமைச்சர் ராசா எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழல் (டிச. 15 நிலவரம்) ஏற்பட்டுள்ளதற்கும் உச்சநீதி மன்றத்திற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஏலகிரி சென்று ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் (டிச. 13) தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது. கருணாநிதியுடன் நிழலாகத் திரிந்த ராசா எங்கிருக்கிறார் என்று தேட வேண்டிய நிலையில் இருப்பதும், அதனால் மாறன்கள் நிம்மதி அடைந்திருப்பதும், உச்சநீதி மன்றத்தின் சாதனைகள்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த காலத்தில் அரசை நிலைகுலையவைக்கும் வகையில் பல கேள்விகள் கேட்டு நாட்டை உலுக்கிய நீதிமன்றங்களும் கூட, 'பிரதமர் நல்லவர்' என்ற புராணம் பாடுவதைத் தான் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை இது வஞ்சப் புகழ்ச்சி அணியாக இருக்கக் கூடும்.

நீரா ராடியா 'டேப்' வெளியானது எப்படி என்றும் மத்திய அரசை குடைந்திருக்கிறது நீதிமன்றம். இதனாலும் மத்திய அரசிற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகருக்கு பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார். இதுவும் மூடுமந்திரமாகிவிடக் கூடாது என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.
வானவில் ஊழலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ உச்சநீதி மன்றமே காரணமாகி உள்ளது.

இதனை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டதால் மத்திய அரசின் வேடம் கலைந்துள்ளது. அதன் மூலமாக 2-ஜி ஊழலில் பின்னணியில் இருப்பவர் 'ராசா'ஜி மட்டுல்ல என்பதும், அரசை ஆட்டுவிக்கும் மாபெரும் 'ஜி' தான் அனைத்திற்கும் ஆதிமூலம் என்பதும் புலப்படத் துவங்கி உள்ளன. மழை மேகமூட்டம் மறைந்து சூரியனின் முழுக் கதிர்வீசும் வெளிப்படும்போது வானவில்லின் வண்ணங்கள் அனைத்திற்கும் அடிப்படையான- ஒளிச்சிதறலின் மூலம் வெளிவரும். அப்போது தான், வானவில் ஊழலுக்கு பிராயச்சித்தம் கிடைக்கும்.

------------------------------

நன்றி: விஜயபாரதம் (31.12.2010)
.

சனி, டிசம்பர் 18, 2010

ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்- 1

நன்றி: தினமணி/மதி/16.12.2010


எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இப்போதைய மன்மோகன் சிங்கனார் அரசு 'ஸ்பெக்ட்ரம்' ஊழலில் சிக்கிக்கொண்டு நடத்தும் நாடகங்கள், இந்தப் பழமொழியையே நிரூபிக்கின்றன. கையும் களவுமாகச் சிக்கிய திருடன், பொதுமக்களின் அடிகளுக்கு பயந்து, தட்டுப்படுபவர்களை நோக்கி எல்லாம் கை காட்டுவதுபோல, 'ஸ்பெக்ட்ரம்' ஊழலில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். மொத்தத்தில் ஸ்பெக்ட்ரம்- வானவில் ஊழல்களின் வெளிப்பாடு வண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வருகிறது.

ஊதா நிறம்:

வண்ணங்களில் ஊதா நிறம் மிக மென்மையானது. மிகவும் கூர்ந்து கவனித்தால் தான் இந்நிறத்தைக் கண்டறிய இயலும்- சக்தி வாய்ந்த தொழிலதிபர் ரத்தன் டாடா போல. இவரது ‘வாக்குமூலம்’ தற்போது வெளியாகி உள்ளது. அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடனான தொடர்பு டாடா அதிபருக்கு இருப்பது தெரிந்தபோதே, இந்திய தொழில்துறை அரண்டது. இவருமா இப்படி என்று அதிர்ந்தது. டாடா நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பெற உதவியதற்காக நீரா ராடியா தரகுக் கட்டணம் பெற்றது உறுதியானவுடன், ஸ்பெக்ட்ரம் ஊழலின் பலதிசைப் பரிமாணம் தெரிய வந்தது.
ராடியாவுடன் டாடா நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் வெளிவரத் தடை விதிக்கக் கோரி அவர் நீதிமன்றத்தை அணுகியவுடன், அவரது சுயரூபம் தெளிவானது. அதற்கு இரு வாரங்கள் முன்னதாக, உத்தராஞ்சல் அரசைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தன்னிடம் ரூ.15 கோடி லஞ்சம் கேட்டதாகவும் அதனை மறுத்துவிட்டதாகவும் கூறிய அவர், பிறகு பல்டி அடித்திருந்தார்.

தனியார் விமான சேவை துவங்க முயற்சித்தபோது லஞ்சம் கேட்ட அமைச்சரால், அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டதாக, அடுத்த வாரம் ஒரு பொது நிகழ்வில் குற்றம் சாட்டி கைதட்டல்களைப் பெற்றிருந்தார். டாடா ரூ. 60 கோடியை ராடியாவுக்கு வழங்கி இருப்பது தெரிந்தவுடன், அவரும் சாமானிய தொழிலதிபர் தான் என்பதை நாடு கண்டுகொண்டது.

அவர்தான், தற்போது, 2001 முதலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குளறுபடி துவங்கியது என்று குற்றம் சாட்டி இருக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலையே, சி.டி.எம்.ஏ- ஜி.எஸ்.எம் அலைபேசி சேவை நிறுவனங்களிடையிலான மோதலாக உருவகித்து புதிய விளக்கத்தை அளித்திருக்கிறார் டாடா. இத்தனை நாட்கள் இதனை இவர் ஏன் சொல்லாமல் அமைதி காத்தார் என்பது புரியாத புதிரல்ல. இதுவரை அவர் ஊழல் கண்காணிப்பு வளையத்திற்குள் வரவில்லை; தற்போது அவரது முகமூடியும் கிழிந்துவிட்டதால், தற்காப்பு நடவடிக்கையில் முனைந்திருக்கிறார் டாடா.

''வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அலைக்கற்றை ஏலம் விடும் முறை மாற்றப்பட்டு, வருவாய்ப் பகிர்வு முறை கொண்டுவரப்பட்டது. இப்போதைய மத்திய தணிக்கை ஆணைய கணக்கீட்டின்படி கணக்கிட்டால், அப்போது ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம்'' என்று டாடா கூறி இருக்கிறார். இந்த ஒப்பீடு எதற்காக என்பது விவரம் அறிந்தவர்கள் அறிந்தது தான். அதாவது இப்போது கையும் களவுமாகச் சிக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு பொருட்டல்ல; வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட முறையே தற்போதும் கடைபிடிக்கப்பட்டது என்ற ராசாவின் குரலுக்கு ஒத்து ஊதுவதுதான் டாடாவின் நோக்கம்.

இவ்வாறு யூகத்தின் அடிப்படையில் வாஜ்பாய் அரசு மீது புதுப்புகார் கூறும் அதே டாடா, ''தற்போது அரசுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்டுள்ள இழப்பு தோராயமான யூகக் கணக்கீடு'' என்றும் முரண்பாடாக விளக்கம் அளித்திருக்கிறார். ராசாவின் ஊழலால் அதிக பலன் பெற்றவர் டாடா என்று தகவல் வெளியாகிவரும் நிலையில், அவர் இப்படி எதிர்த்தரப்பு மீது பாய்ந்தால்தானே, சிறிது காலத்திற்கேனும் தப்ப முடியும்?

இவரது முகமூடியைக் கிழித்தவர், தே.ஜ.கூட்டணியின் ராஜ்யசபா எம்.பி. ராஜீவ் சந்திரசேகர். அவர் டாடாவுக்கு எழுதிய கடிதம் தான் அவரை உசுப்பிவிட்டிருக்கிறது. ''2-ஜி அலைக்கற்றை மோசடியில் அதிக ஆதாயம் பெற்றது டாடா டெலி சர்வீஸ் நிறுவனம் தான். அதனால், அரசுக்கு ரூ. 19,074.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது'' என்று டாடாவுக்கு சந்திரசேகர் கடிதம் எழுத, 'பிரதமருக்கு (மன்மோகன் சிங்) தர்ம சங்கடத்தை ஏற்படுத்த சதி நடப்பதாக அங்கலாய்த்திருக்கிறார் 'திருவாளர் புனிதம்' டாடா.

ராசாவை கண்மூடித்தனமாக ஆதரித்த பிரதமருக்கு சரியான இடத்திலிருந்து உதவிக்கரம் நீண்டிருக்கிறது. டாடாவைக் கொண்டு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்க நடக்கும் சதியாக இது இருக்கலாம். ஏனெனில், இந்தக் குற்றச்சாட்டை டாடா முன்வைத்தவுடன், இடதுசாரி கட்சிகளின் தாக்குதலில் காங்கிரசுடன் பா.ஜ.க.வும் அவசரமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கூட்டு நாடாளுமன்ற விசாரணைக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

கருநீல நிறம்:

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனியொரு மனுஷியாக நீரா ராடியா சாதித்தவை அதிகம்- வானவில்லின் கருநீல நிறம் போல. இதுவரை அவரது தொலைபேசி பேச்சுகளில் வெளியாகி இருப்பவை ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை. இதற்கே அரசியல் அரங்கம் தாங்க முடியாமல் தள்ளாடுகிறது. அனில் அம்பானி, ரத்தன் டாடா போன்ற பெருமுதலாளிகளுடனும், ராசா, ராசாத்தி, ராசாவின் ராசாத்தி ஆகியோருடனும் ராடியா பேசிய தொலைபேசி பேசுக்கள் வெளியானதால்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஆணிவேரை அறிய முடிந்தது.

ராடியா தொடர்பான தொலைபேசி பதிவுகள் அனைத்தும் இப்போது உச்சநீதிமன்றத்தின் பாதுகாப்பில் உள்ளன. இதிலும் சில பேச்சுப்பதிவுகள் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவருடன் ராடியா பேசிய தொலைபேசி பேச்சுக்களின் பதிவுகள் காணாமல் போயிருக்க வாய்ப்பிருக்கிறது.

இப்போது டாடா தொடர்ந்த தனிமனித உரிமை மீறல் வழக்கில், இந்த தொலைபேசிப் பேச்சுக்கள் வெளியில் கசிந்தது எப்படி என்ற விசாரணையும் தொடங்கி இருக்கிறது. சி.பி.ஐ முன் ஆஜரான ராடியா தன்னிடமுள்ள அனைத்து தகவல்களையும் வழங்குவதாக உறுதி அளித்துவிட்டு, கைமாறிய கமிஷனின் அளவு ( ரூ. 60 கோடியாம்!) குறித்து விளக்கிவிட்டு, ஊடகங்களுக்கு பளிச் புன்னகையுடன் தரிசனம் கொடுத்துவிட்டு, வீடு திரும்பிவிட்டார்.

இவருடன் பேசி அம்பலத்திற்கு வந்த ஊடக அறிஞர்கள் வீர் சாங்க்வி, பர்காதத் ஆகியோரிடம் அதற்கான எந்த வெட்கமும் இல்லை. பிற ஊடகங்களும் மிகவும் ஜாக்கிரதையாக அந்த விஷயத்தையே மறந்துவிட துடிக்கின்றன.

ஓர் அமைச்சரின் நியமனத்தில் ராடியா போன்ற இடைத்தரகர்களுக்கு என்ன வேலை என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் அதனைப் பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை. மௌனம் சம்மதத்தின் அறிகுறியா? பதில் சொல்ல முடியாத இக்கட்டா?

தொலைதொடர்புத் துறை அமைச்சராக்க வேண்டி, கருணாநிதி குடும்பத்திற்கு தயாநிதி மாறன் (தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறல்லவா?) ரூ. 600 கோடி கொடுத்ததாக ராடியா தொலைபேசி பதிவில் கூறப்படுகிறது. இதற்கு இதுவரை கருணாநிதியோ, மாறனோ எந்த மறுப்பும் தெரிவிக்காதது ஏன்? குறைந்தபட்சம், வாங்கிய பணத்திற்கு நாணயமாக தொலைதொடர்புத் துறையை பேரனுக்கு பகுத்தறிவுப் பகலவன் கொடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் தடுத்தது எது? என்பதையேனும், ‘கலாகார்’ இப்போது சொல்லலாம். ஏனெனில் இது வாக்குமூலங்களின் காலம்.

நீல நிறம்:

நிறங்களில் குறைந்த அலைநீளம் கொண்டது நீலம். எனினும், வண்ணங்களில் நீலத்தின் பங்களிப்பு அடிப்படையானது- 'தலித்' ராசாவின் பங்களிப்பு இல்லாமல் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தேற வாய்ப்பில்லை என்பது போல. உச்சநீதிமன்றத்தின் கெடுபிடிகளாலும், மானத்தை வாங்கும் கேள்விகளாலும், மத்திய புலனாய்வுத் துறை அரைகுறை மனதுடன் எடுத்துள்ள நடவடிக்கைகளில் முதன்மையானது, ராசா மற்றும் அவரது நெருங்கியவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ. நடத்தியுள்ள (டிச. 8, 15) சோதனை. ராசாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரியா உள்ளிட்ட அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடந்திருக்கிறது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ராசாவின் நாட்குறிப்பேடுகளில் பல ரகசியங்கள் கிடைத்துள்ளதாக ஊடகங்கள் கிளப்பி விடுகின்றன. ராடியா தொலைபேசி பேச்சுக்கள் பதிவில் செய்யப்பட்ட 'திருக்கல்கள்' இதிலும் நிகழ்த்தப்பட அதிக வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது. ஏனெனில், மத்திய அரசின் கையாளாக சி.பி.ஐ. மாறி ஆறு ஆண்டுகள்
(ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு வந்துதான்) ஆகிவிட்டன. இதிலும் குறிப்பிட வேண்டிய அம்சம்: ராசா அமைச்சராக இருந்தபோது, தொலைதொடர்புத் துறை செயலராக பதவிவகித்து, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்ட பி.ஜே.தாமஸ் வீட்டில் மறந்தும்கூட சி.பி.ஐ கால் வைக்கவில்லை. அவர்தான் தற்போது ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சி.வி.சி) ஆணையர் ஆயிற்றே!

தனது வீட்டில் நடந்த சோதனை குறித்து இதுவரை ராசா எதுவும் கூறாமல் மௌனம் சாதிக்கிறார். இந்த சோதனையே கண்துடைப்பு நாடகமாக இருக்கலாம். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று வழக்கம் போல காங்கிரஸ் பெரியதோரனையுடன் விளக்கம் அளிக்கிறது. இதுவரை சட்டம் ஏன் தன் கடமையைச் செய்யவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதிலே இல்லை.

விஷயம் இத்துடன் முடியவில்லை. ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா என்பவரின் வீட்டிலும் சி.பி.ஐ சோதனை நடத்தியுள்ளது. ராசா மத்திய வனத்துறை அமைச்சராக இருந்தபோது (2004) இவர் துவக்கிய 'கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்' நிறுவனத்தில் அனில் அம்பானியின் குழுமத்தில் ஒன்றான ஸ்வான் டெலிகாம் (இதுவும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய நிறுவனம்) முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக ராசாவின் மனைவி பரமேஸ்வரி இருந்திருக்கிறார். பிறகு விலகிவிட்டார். தற்போது ராசாவின் அண்ணன் கலிய பெருமாள் இதன் இயக்குனராக உள்ளார். அதாவது, 'கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்' ராசாவின் பினாமி அமைப்பு என்பதும், இந்நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பும் உறுதியாகி உள்ளன. சாதிக் பாட்சாவுக்கு வெளிநாடுகளிலும் கிளை நிறுவனங்கள் உள்ளன. அவை மூலம் லஞ்சப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல். தற்போது சாதிக் பாட்சா கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையில் தான் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது. இன்னும் ராசாவிடம் சி.பி.ஐ (டிச. 15 நிலவரம்) விசாரிக்காதது, ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

ராசாவின் வீடுகளில் சோதனை நடத்திய சி.பி.ஐ அதிகாரி டி.ஐ.ஜி. வினிதா தாகூர், ''ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த வலுவான் ஆதாரங்கள் சிக்கியுள்ளன. சில அதிகாரிகளும் தனியார் நிறுவன பிரதிநிதிகளும் பிறரும் சேர்ந்து, அலைக்கற்றை ஒதுக்கீடு கோரும் மனுதாரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் கிரிமினல் சதியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது'' என்று கூறி இருக்கிறார். இதற்குப் பிறகே ரத்தன் டாடா மத்திய அரசால் களம் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

பச்சை நிறம்:

பச்சை பச்சையாய் பொய் பேசுபவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். வானவில்லுக்கு வண்ணம் சேர்க்கும் நிறம் பச்சை என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்- வானவில் ஊழலில் கருணாநிதியின் பங்களிப்பு போல.
ஆரம்பத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானவுடன், 'தலித் என்பதால் ராசாவை குற்றம் சாடுகிறார்கள்' என்றவர் நமது தமிழினத் தலைவர். முந்தைய பா.ஜ.க ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையிலேயே தன் அன்புத் தம்பி (ஐம்பது ஆண்டுகளில் சம்பாதித்ததை ஒரே மாதத்தில் சம்பாதித்துக் கொடுத்தவர் அல்லவா?) செயல்பட்டிருப்பதாகவும் செம்மொழி கொண்டான் விளக்கம் அளித்தார். பிறகு, 'ராசாவை நீண்ட நாட்களாகத் தெரியும்; அவர் தப்பு செய்யவே வாய்ப்பில்லை' என்றார்.

அம்மையார் மீது குற்றம் சுமத்தப்பட்டவுடன் அவர் பதவி விலகினாரா என்று எதிர்க் கேள்வி கேட்ட அவர், மதவாதிகளின் பூச்சாண்டிகளுக்கு மத்திய அரசு பணியக் கூடாது என்று உபதேசமும் செய்தார். பிறகு திடீரென்று, ''ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ரூ. 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்றால் அதனை ராசா மட்டும் செய்திருக்க முடியுமா என்று கேட்டார். இதைத் தானே அய்யா நாடும் கேட்டுக் கொண்டிருக்கிறது?'' ராசாவுடன் கூட்டுக் களவாணிகளாக இருந்தவர்கள் யாரென்று சொல்ல வேண்டியது தானே என்று கேட்டால், வர்ணாசிரமத்தைத் தாக்கத் துவங்கி விடுகிறார்.

அதே கலாரசிகர், இப்போது (டிச. 7), 'குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராசாவைத் தூக்கி எறிவோம்' என்று முழங்கி இருக்கிறார். ராசா வீடுகளில் நடந்த சி.பி.ஐ.சோதனையை அடுத்து, நிருபர்களுக்கு அவர் அளித்த கேள்வி- பதில் இதோ...

கேள்வி: சி.பி.ஐ.சோதனையை அவமானமாகக் கருதுகிறீர்களா?
பதில்: அப்படி நினைக்கவில்லை. ஆனால், அவமானத்திலேயே ஊறியவர்கள் சிலர் நாட்டிலேயே இருக்கிறார்கள்.

கேள்வி: கட்சியிலிருந்து ராசா ஓரங்கட்டப்படுவார் என்று சொல்லப்படுகிறதே?

பதில்: அவருடைய குற்றம் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டால், அதற்குப் பின் அவரைத் தூக்கி எறிவோம். அதுவரை அவரை கைவிட திமு.க.தயாரில்லை.

- இது தான் கருணாநிதியின் பதில். அதாவது ராசாவை கைகழுவ கருணாநிதி தயாராகிவிட்டார் என்று தெரிகிறது. ஆனால், கனிவான மொழியில் பேசும் சாமர்த்தியம் கொண்ட 'அன்புத்தம்பி'யை அவ்வளவு எளிதாக கைகழுவ முடியாது என்பதால்- திக்கித் திணறி ஏதேதோ உளறுகிறார் மு.க. இவரது உளறல்கள் நாட்டிற்கு புதியதல்ல என்றாலும், வானவில் மோசடியில் இது புதிய திருப்பம் என்று ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.


தொடர்ச்சி: ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்- 2
-------------------------------
காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (24.12.2010)..

வெள்ளி, டிசம்பர் 10, 2010

அவன் நம்மவன்.. ..அவன் நம்மவன்…


அவன் நம்மவன்... அவன் மன்மதன்...

அகங்காரத்தை நடிப்பில் மறைக்கும் காமுகன்
அவலமே வாழ்க்கையாகக் கொண்டவன்.
அவனை நம்பிவந்த பெண்கள் அபலைகள்.
இனியும் நம்பும் ரசிகர்களும் கோமாளிகள்.
அவன் நம்மவன்.. ..அவன் நம்மவன்…
பகுத்தறிவுத் தாத்தாவின் பேரனின் கணவன்.
முற்போக்குத் திலகத்தின் பேரனின் கணவன்…
.
மனம் முழுவதும் காமம் வழிபவனிடம்
மலரினும் மெல்லிய குறள் எடுபடுமோ?
அழகிய மலரிலும் காம்பே பிடிக்கும்
உன்மத்தனுக்கு விருது கிடைக்குமோ?
மனமே வக்கரித்துப்போன வயசாளியிடம்
வக்கனை மட்டுமே கவியாய் விடைக்குமோ?
என்ன இருந்தாலும் அவன் நம்மவன்..

‘தான்திருடி’ மற்றோரை இகழ்தலும் இயல்பே.
இல்லறம் கெட்டவர் கழிசடையாவதும் இயல்பே.
நாய் வாலை நிமிர்த்துதல் இலமே.
ஆயினும் அவன் நம்மவன்.
அவன் வாலை அறிதலும் இலமே.
அவன் வாலை அரிதலும் இலமே.

- ‘ரதி அன்பு’ படப் பாடல்.
(கவிமாமணிகள் காலி, மைரமுத்து ஆகியோரால் பாராட்டப்பட்டது)

-------------------
.

வியாழன், டிசம்பர் 02, 2010

அனாதை யாருமில்லை; குருதேவரே தந்தை

திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில்
முன்னுள்ள தோரண வாயில்

தாய், தந்தையரை இழந்த ஆதரவற்ற மாணவர்கள் தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருக்­கிறார்கள். தூய வெண்ணிற ஆடை உடுத்திய பெரியவர் அங்கு வருகிறார். அவரைக் கண்டதும் புதிதாய் வந்த மாணவன் ஒருவன் விம்மி அழுகிறான். அவர் அவனை ஆதுரத்துடன் அணைத்துக் கொள்கிறார்.

“உங்கள் அனைவருக்கும் அப்பா குரு மகராஜ்; அம்மா சாரதாமணி; அண்ணன் விவேகானந்தர். அவர்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருங்கள், எல்லாம் சரியாகிவிடும்” என்கிறார். மாணவன் கண்ணைத் துடைத்துக் கொண்டு, அங்கிருந்து செல்கிறான்.

இச்சம்பவம் நடந்தது 1980ம் ஆண்டு. அந்த வெண்ணிற ஆடை பெரியவர் தான் பிரம்மச்சாரி ராமசாமி அடிகள். ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையை உயர்த்துவதே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த மகான் அவர்.

ஈரோடு மாவட்டம், சத்திய­மங்கலம் அருகிலுள்ள கெம்ப­நாயக்கன் பாளையத்தில் பிறந்த ராமசாமி, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவிய சுவாமி சித்பவானந்தரால் ஆன்மிகப் பாதைக்கு இழுக்கப்பட்டவர். அவரது அணுக்கத் தொண்டராக இருந்த ராமசாமி பிறகு ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக 1949ல் திருச்சி அருகிலுள்ள திருப்பராய்த்துறையில் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில்’ என்ற தர்ம ஸ்தாபனத்தைத் துவக்கினார். .

.ஐந்து அனாதைச் சிறுவர்­களுடன் சிற்றோடையாகத் துவங்கிய இந்த அறப்பணி, இதுவரை 3,000க்கு மேற்­பட்ட ஆதரவற்றோரின் வாழ்வில் ஒளியேற்றி இருக்கிறது. தற்போது, இக்குடிலில் 300 மாணவர்­கள் இருக்கிறார்கள். இவர்­களுக்கென குடில் வளாகத்­திலேயே ஆரம்பப் பள்ளி­யும் உயர்நிலைப் பள்ளியும் செயல்படுகின்றன.

.
இங்குள்ள மாணவர்கள் தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதுதான் விசேஷம். பெரிய வகுப்பு மாணவர்கள் சமையல் செய்கிறார்கள்; மாணவர் விடுதிகளைப் பராமரிப்பது மற்றொரு மாணவர் குழு; பசுமடத்தைப் பராமரிக்க ஒரு மாணவர் குழு; கட்டிடங்களை சுத்தப்படுத்துவது ஒரு மாணவர் குழு; பூஜை வழிபாடுகளை நடத்துவது ஒரு மாணவர் குழு. இவ்வாறு மாணவர்களின் அன்றாடத் தேவைகள் அனைத்தையும் மாணவர்களே பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இதனால், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் அவர்கள் வளர்கிறார்கள்.
.
காவிரி ஆற்றை ஒட்டியுள்ள 70 ஏக்கர் நிலம், அழகிய தென்னந்தோப்பாக விரிந்திருக்­கிறது. இதை அமைத்தவர்களும் மாணவர்கள்தான், பராமரிப்­பதும் மாணவர்கள்தான். இந்த தோப்பில் கிடைக்கும் வருவாய், மாணவர்களின் பராமரிப்புச் செலவுக்கு போதுமானதாக இருக்கிறது.
.
தற்போதைய கல்வி ஏட்டுச்சுரைக்காயாக மாறியுள்ள நிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடிலில் ஆதரவற்ற மாணவர்­களுக்கு அற்புதமான வாழ்க்கைக் கல்வி அளிக்கப்படுகிறது. பாரம்பரியமான குருகுலம் போன்ற அமைப்புடன், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்­ஸரின் ஆசிகளுடன், குடில் ஒரு சரணாலயமாக விளங்கி­வருகிறது. இந்தச் சாதனையை நிகழ்த்த பிரம்மச்சாரி ராமசாமி செய்த தவ முயற்சிகளை விவரிக்க இங்கு இடம் போதாது.
.
பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை குடிலில் சேர்ப்பதே மிக சிரமமான பணி. கிறிஸ்தவ மிஷனரிகள் இதற்கென மிகப்பெரும் ‘நெட்ஒர்க்’ உடன் பல கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியுதவியுடன் இயங்கு­கின்றன. அத்தகைய அசுர பலத்துக்கு முன், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசத்தை மட்டுமே நெஞ்சில் கொண்டு, மிகப்­பெரிய அறநிலையத்தை உருவாக்கி வளர்த்தெடுத்­திருக்கிறார், பிரம்மச்சாரி ராமசாமி. இவருக்கு பக்க பலமாக, கிருபானந்த வாரி­யார் சுவாமிகள், ஜஸ்டிஸ் மகா­ராஜன், திருச்சி முன்­னாள் கலெக்டர் மலையப்­பன், நங்க­வரம் பண்ணையார், ரங்க­நாதய்யர் உள்­ளிட்ட அன்பர்கள் பேரு­தவி புரிந்திருக்கிறார்கள்.
.
குடிலில் சேர்த்த குழந்தை­களைக் கொண்டே குடிலைப் பராமரித்து, அவர்களையே குடிலின் ஆதாரமாக மாற்றியதும் பெரும் சாதனை. இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறன்று சந்தித்து மகிழ்கிறார்கள்.
.
இங்கு பயின்ற மாணவர்கள் மிகப்பெரிய பதவிகளில் இல்லாதபோதும், மன­நிறைவான வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலர் ஐ.டி.ஐ., தொழில்­ படிப்பு முடித்து திறன்மிகு தொழி­லாளர்களாக உயர்ந்திருக்­கிறார்கள். இதற்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்­சந்திரனது உதவி அடித்தள­மிட்டது. குடில் மாணவர்­கள் பத்து பேருக்கு ஆண்டுதோறும் திருச்சி அரசு ஐ.டி.ஐ., யில் இடம் அளிக்க அவர் உத்தரவிட்­டது, இன்றும் தொடர்கிறது.
.
முன்னாள் முதல்வர்கள் காம­ராஜ், அண்ணா­துரை, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகி­யோர் இக்­குடிலுக்கு வருகை தந்து மகிழ்ந்­திருக்கிறார்கள்.
.
இங்கு பயிலும் மாணவர்­களிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் ‘பிரம்மச்­சாரி’களாக தரம் உயர்ந்து குடிலை நிர்வகிக்கிறார்கள். குடிலின் தற்­போதைய தலைமை நிர்­வாகியான பிரம்மச்சாரி துரை, 1950 ல் இங்கு சேர்ந்த முன்னாள் மாணவர்தான். இவருக்கு துணை­யாக மேலும் நான்கு பிரம்மச்சாரிகள் குடிலை நிர்வகிக்கிறார்கள்.
.
குடில் வளாகம் எங்கும் விதவிதமான மரங்கள்; ஆன்மிக மணம் கமழும் கட்டிடங்கள்; பிரார்த்தனை மண்டபம் பேலூர் மடம் வடிவில் வரவேற்கிறது. குடிலின் எதிர்ப்புறம் ஸ்ரீ ராமகிருஷ்ண குருதேவரின் பிரமாண்ட­மான சிலை அருட்பார்வையுடன் அமைக்கப் பட்டிருக்­கிறது. இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு நன்கொடைகள் பெறப்படுவதில்லை என்பது கூடுதல் தகவல்.
.
இதுபற்றி கேட்டபோது, “வெள்ளி விழா (1979) ஆண்டிலேயே குடில் தன்னிறைவு பெற்றுவிட்டது. எங்கள் இப்போதைய தேவை, மாணாக்கர்கள்தான். பெற்றோரை இழந்த, 5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் எத்தனை பேரை அழைத்து வந்தாலும் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம், இந்த சேவையை அன்பர்கள் செய்தால் போதும்” என்கிறார் பிரம்மச்சாரி துரை.
.
இங்கு சேரும் மாணவரின் கணக்கில் வரவு வைக்கப்படும் ஆயிரம் ரூபாய், பள்ளிப்படிப்பு முடிந்து சொந்தக் காலில் நிற்கும் திறனுடன் மாணவன் வளர்ந்திருக்கும் போது அவனுக்கு வழங்கப்படுகிறது. அவன் குடிலிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு ஆயத்தமாகி வெளியேறுகிறான்; புதிய மாணவர்கள் குடிலில் நுழைகிறார்கள். குடில் ஓர் அழகிய, இனிய வேடந்தாங்கல் என்றால் மிகையில்லை.
.
சமுதாயத்திலுள்ள ஆதரவற்றோரின் எண்ணிக்கை பல மடங்காக இருப்பினும், ஸ்ரீராமகிருஷ்ணர் குடில் தன்னளவில் ஆர்ப்பாட்டமின்றி அரும்பணி புரிகிறது. சிறு நன்கொடை அளிப்பதைக்கூட விழாவாக எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் இக்காலத்தில், ஆரவாரம் இன்றி அகன்று ஓடும் காவிரி போலவே குடில், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற இலக்குடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை நிறுவிய பிரம்மச்சாரி ராமசாமி அடிகளின் நினைவாலயம், காவிரிக்கரை அருகே அமைதியுடன் காட்சி அளிக்கிறது.
.
குடில் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு, உதவியாக வந்த மாணவரிடம், “படிப்பு முடித்து என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டோம். அவன் நெஞ்சு நிமிர்த்தி சொன்ன பதில், மனதை நெகிழவைத்து­விட்டது. “என்னை... ஒரு ஆளாக்கி காத்த இந்த நிறுவனத்துக்கு உதவும் வகையில் ஏதாவதொரு வேலை செய்யவே எனக்கு விருப்பம்” என்று கூறினான், அந்த மாணவன்.

.
உங்கள் பகுதியில் உள்ள என்னைப் போன்ற ஆதரவற்ற மாணவர்களை இங்கு சேர்த்து விடுங்கள்” என்றும் அவன் வேண்டுகோள் விடுத்தான். சந்தனக் கலத்தில் வைத்த தேன் நறுமணம் கமழாது என் செய்யும்?

.
ஆன்மிக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு, ஆதரவற்ற மாணவர்களுக்கு வாழ்க்கையும் கல்வியும் வழங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடிலுக்கு உதவி செய்ய விரும்பினால், உங்கள் பகுதியிலுள்ள அனாதை (யாருமில்லை; குருதேவரே தந்தை) களை இங்கு சேர்த்துவிடலாம், அவர்களுக்கு நீங்கள் காப்பாளர் ஆகலாம், இந்தப் புண்ணியம் உங்கள் சந்ததிக்கும் உதவும்.
.
தொடர்பு முகவரி:
பிரம்மச்சாரி துரை, நிர்வாகி,
ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில்,
திருப்பராய்த்துறை,
திருச்சி - 639115.

தொலைபேசி: 0431- 2614235 / 2614548

------------------------------------------------

நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் (16.10.2009)


.