ஞாயிறு, நவம்பர் 28, 2010

நல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு!


நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்த்திருந்த பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. முதல்வர் நிதிஷ் குமார் வெற்றிவாகை சூடுவார் என்று பலரும் கூறியிருந்தாலும், கடைசிநேரம் வரை 'மின்னணு வாக்குப் பதிவு இயந்திர' உபயத்தால் சந்தேகம் இருந்தது. அப்படியே வென்றாலும்கூட முந்தைய நிலையைவிட பலம் குறையலாம் என்று 'மதச் சார்பற்ற' ஊடகங்களால் பரப்பப்பட்டு வந்தது. அனைத்து ஹேஷ்யங்களையும் மீறி, மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 206 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம்- பா.ஜ.க. கூட்டணி வென்று, நாட்டையே வியக்க வைத்துள்ளது.

இந்த மகத்தான வெற்றிக்கு நிதிஷ்குமார் தான் அடிப்படைக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆர்ப்பாட்டமில்லாத ஆட்சி, மக்கள் நலனில் அக்கறை கொண்ட செயல்பாடு, குற்றவாளிகளை கருணையின்றி ஒடுக்கியது, ஊழலுக்கு வாய்ப்பளிக்காதது, யாரும் அணுகக் கூடிய எளிமை ஆகிய அம்சங்கள் நிதிஷ் குமாரின் வெற்றிக்கு வித்திட்டிருக்கின்றன. அவருக்கு பக்கபலமாக பா.ஜ.க. உதவியுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்புலத்தில் பலரும் அறியாத பா.ஜ.க.வின் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி இருப்பதையும் பதிவு செய்தாக வேண்டும். நிதிஷுக்கு கூறப்பட்ட அனைத்து சிறப்பம்சங்களும் இவருக்கும் உண்டு.

1999- ல் சென்னையில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழுவுக்கு சுஷில்குமார் மோடி வந்திருந்தபோது ‘விஜயபாரதம்’ வார இதழுக்காக அவரை பேட்டி எடுத்தது நினைவுக்கு வருகிறது. அப்போது பீகாரின் முடிசூடா மன்னராக லாலு வீற்றிருந்தார்; ஜாதி அரசியலும் மதச்சார்பின்மை கோஷமும் அவரது ஊழல்களை மறைக்க போதுமானவையாக இருந்தன. ஆயினும், ‘லாலுவை மிக விரைவில் வீழ்த்துவோம்’ என்று நம்பிக்கையோடு சொன்னார் மோடி. அந்த நம்பிக்கை பலிக்க 2005 வரை அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. 2005 ல் ஆட்சியைக் கைப்பற்றிய நிதிஷ்- மோடி கூட்டணி, தங்கள் சுயநலமற்ற, வெளிப்படையான ஆட்சியால், அதை தக்கவைத்துக் கொண்டதுடன், முந்தைய வெற்றியை முறியடிக்கும் சாதனையையும் படைத்துள்ளது!

பாரத சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் மகத சாம்ராஜ்யம், தற்போது பீகார் என்று அழைக்கப்படும் பகுதியில்தான் தோன்றியது. பாடலிபுத்திரம் (தற்போதைய பாட்னா) தான் அர்த்தசாஸ்திரம் தந்த சாணக்கியரை உலகுக்கு அளித்தது. நாலந்தாவும், விக்கிரமசீலாவும் இங்கு உயர்ந்தோங்கி விளங்கிய பலகலைக்கழகங்கள். மகான் புத்தரும் மகாவீரரும் தோன்றிய புண்ணிய பூமி பீகார். அத்தகைய பீகார்- விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் வலுவான தளமாக விளங்கிய பீகார் - 'மாட்டுத் தீவன ஊழல்' புகழ் லாலு பிரசாத் யாதவ் வசம் சிக்கிக் கொண்டு 15 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்தது. அப்போது தான் வாராது வந்த மாமணியாக நிதிஷ்குமார் லாலுவுக்கு சரியான மாற்றாக உருவானார்.

சமதா கட்சித் தலைவாரக இருந்த அவரை பீகார் மக்களுக்கு முதல்வராக அடையாளம் காட்டியவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய்தான். தனது அமைச்சரவையில் இடம் பெற்ற நிதிஷை 2000 - ம் ஆண்டு தேர்தலின்போது முதல்வராக பொறுப்பேற்குமாறு அவர்தான் அறிவுறுத்தினார். ஆனால், போதிய பெரும்பான்மை இல்லாததால், ஒரு வார காலத்தில் அவர் பதவி விலக வேண்டி வந்தது. பீகார் மக்களுக்கு நன்மை விளைய மேலும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?

லாலுவின் காட்டாட்சி, யாதவ ஜாதி அபிமானம், கட்டுக்கடங்காத ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற காரணங்களால் வெறுப்புற்ற பீகார் மக்கள், 2005 தேர்தலில் லாலுவை (அவரது பினாமியாக ஆண்ட மனைவி ராப்ரி தேவியை) வீட்டுக்கு அனுப்பி, நிதிஷை முதல்வராக்கினர். சுஷில்குமார் மோடி துணை முதல்வரானார்.

நிதிஷ் அரசு, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை முதல் கடமையாகக் கொண்டது. அதன் விளைவாக, தாதாக்கள் ராஜ்யமாக இருந்த பீகாரின் தோற்றம் மாறியது. அதிகாரபலம் கொண்டவர்களையும்கூட குற்றவாளிகள் எனில் தயங்காமல் சிறைக்குள் தள்ளியது, நிதிஷுக்கு மக்களிடையே நற்பெயரை ஏற்படுத்தியது. ஆட்சியில் களங்கமின்மை, மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை, தான் சார்ந்த (குர்மி) ஜாதிக்கு அப்பாற்பட்டு செயல்பட்டது, மத்திய அரசின் பாராமுகத்தையும் தாண்டி வளர்சிப்பநிகளில் காட்டிய கவனம் ஆகியவை, நிதிஷை மக்கள் நாயகனாக உயர்த்தின. ஆயினும் அவர் என்று அடக்கத்தின் எளிய வடிவமாகவே காட்சியளித்தார்.

அதன் விளைவே தற்போதைய இமாலய வெற்றி. சென்ற தேர்தலில் 143 இடங்களில் வென்ற தே.ஜ.கூட்டணி, நல்லாட்சிக்கான பரிசாக மீண்டும் ஆட்சியை, நான்கில் மூன்று பங்குக்கு மேல் (206 /243) பெரும்பான்மையுடன் தற்போது வென்றுள்ளது. குறிப்பாக நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிட்ட 141 இடங்களில் 115 இடங்களை வென்றுள்ளது. கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வோ, போட்டியிட்ட 102 தொகுதிகளில் 91 இடங்களைக் கைப்பற்றியுள்ளது! இவர்களின் வெற்றிவிகிதம் 84 சதவிகிதம்!

மாறாக லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் 22 (54), பஸ்வானின் லோக் ஜனசக்தி 3 (10), இளவரசர் ராகுலின் காங்கிரஸ் 4 (9) இடங்களில் மட்டுமே வென்றன. (அடைப்புக் குறிக்குள் முந்தைய தேர்தலில் வென்ற இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன). ஒருகாலத்தில் பீகார் அரசியலில் முத்திரை வகித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப் பெரும் தோல்வியை இத் தேர்தலில் சந்தித்துள்ளன.

தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றபோதும் இப்போதும் அடக்கமாகவே நிதிஷ் காட்சி தருகிறார். ''இந்த வெற்றிக்கு எந்த மாயமும் மந்திரமும் காரணமில்லை. மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை தேர்தலில் வெளிப்பட்டிருக்கிறது'' என்கிறார் நிதிஷ். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வின் தலைவர்களுள் ஒருவரான அருண் ஜேட்லியோ, ''இந்த வெற்றி சிறந்த நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றி'' என்று பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.

தேர்தலுக்கு முன் பீகாரில் வலம் வந்து கொக்கரித்த ராகுல் இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் வரைமுறை மீறி, 'மத்திய நிதியை நிதிஷ் அரசு பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டது'' என்று அபாண்டமாகக் குற்றம் சாட்டிய பிரதமர் மன்மோகன் சிங், ''பீகார் வளர்ச்சிக்கு மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பணி புரியும்'' என்று இப்போது வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

உண்மையில் நிதிஷ் பெருமளவில் எந்த மாற்றத்தையும் பீகாரில் நிகழ்த்திவிடவில்லை. 15 ஆண்டுகால லாலு தர்பாரால் சீரழிந்த பீகாரை அவ்வளவு சீக்கிரம் சீர்திருத்திவிடவும் முடியாது; ஆனால் அதற்காக உண்மையாக உழைத்தார். நிலைகுலைந்திருந்த காவல்துறையை மேம்படுத்தியது, அரசு அலுவலகங்கள் முறைப்படி இயங்கச் செய்தது, நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது ஆகியவற்றால் பீகாரின் சூழலில் படிப்படியான மாற்றத்தை அவரால் கொண்டுவர முடிந்தது. நிதிஷின் ஆட்சி, பீகாரில் மாற்றம் நிகழ்வதை உறுதிப்படுத்தியது.

இயன்ற வளர்ச்சிப்பணிகளை செய்த நிதிஷ், பீகாருக்கு தன்னால் அரிய பணிகளை செய்ய முடியும் என்று அவற்றின் மூலமாக நிரூபித்தார். தங்கள் முதல்வர் நாணயமானவர் என்ற நற்பெயரை நிதிஷ் பெற்றார். அதுவே அவரது வெற்றிக்கு அடிப்படையானது.
தவிர ஆட்சியில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதை அவர் தவிர்த்தார். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வை அரவணைத்துக்கொண்டு, ஊடகங்கள் நிகழ்த்திய 'மதவாதப் பூச்சாண்டி' விஷமப் பிரசாரத்தைக் கண்டுகொள்ளாமல், நல்ல கூட்டணி சகாவாக தன்னை அவர் நிலைநாட்டினார். சிற்சில உரசல்கள் ஏற்பட்டபோதும், அதனால் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்குபவர்களாக அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் சுஷில்குமார் மோடியும் விளங்கினர். ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர் சரத் யாதவுக்கு கூட்டணியின் உறுதிப்பாட்டில் பெரும் பங்குண்டு என்பதை கண்டிப்பாக நினைவுகூர வேண்டும். நல்லாட்சியுடன் நல்ல கூட்டணியும் அமைந்ததால், மகத்தான வெற்றி இப்போது சாத்தியமாகி இருக்கிறது.

நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே நல்லது நடக்கும் என்பதற்கு பீகார் முதல்வர் நல்ல உதாரணம். நாட்டுமக்கள் நலன் கருதி உழைப்போருக்கு பீகார் தேர்தல் முடிவுகள் நற்செய்தி எனில் மிகையில்லை.

பெட்டிச் செய்தி- 1
ஊடகங்களின் லாலு மனப்பான்மை

பீகார் தேர்தல் முடிவுகளை வெளியிட்டபோது தங்கள் பாரபட்ச அணுகுமுறையை பெரும்பாலான ஊடகங்கள் மீண்டும் வெளிக்காட்டின. இந்த மகத்தான வெற்றி குறித்த செய்திகளை வெளியிடும்போதுகூட, ஊடகங்கள் குசும்பு செய்தன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பீகார் தேர்தல் பிரசாரத்திற்கு வராததால் தான் வெற்றி கிடைத்தது என்று பிரசாரம் செய்த ஊடகங்கள், பீகாரிலேயே உள்ள சுஷில்குமார் மோடியின் அரும்பணியை கூறாமல் தவிர்த்தன.

பா.ஜ.க.வைக் கட்டுக்குள் வைத்த நிதிஷ் மதச்சார்பின்மையைக் காத்ததால்தான் இந்த வெற்றி கிடைத்ததாம். ஐக்கிய ஜனதாதளத்தின் வெற்றி சதவிகிதம் 82 %; உடனிருந்த பா.ஜ.க.வின் வெற்றி விகிதமோ 89 %. இதை சுட்டிக்காட்ட எந்த ஊடகமும் தயாரில்லை.

சில ஊடகங்கள் 'சரியான தலைமையின்றித் தள்ளாடும் தே.ஜ.கூட்டணிக்கு புதிய தலைவர் கிடைத்துவிட்டார்' என்று பா.ஜ.க.வை பக்கவாட்டில் குத்தின. ஆனால், அதிலுள்ள விஷமத்தைப் புரிந்துகொண்ட நிதிஷ்குமார், 'பிரதமர் பதவியை நோக்கி நான் பயணிக்கவில்லை' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி, ஊடகங்களின் திருக்கல்தனத்தை மட்டுப்படுத்தினார்.

நிதிஷும் பா.ஜ.க.வும் சேர்ந்து நிகழ்த்திய அரசியல் அற்புதத்தை நிதிஷின் தனிப்பட்ட சாதனையாகவே பல ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. தேர்தல் முடிவுக்குப் பிறகு வாய் திறந்த லாலு, ''நிதிஷுக்கு வாழ்த்துக்கள்; ஆனால் பா.ஜ.க.வுக்கு வாழ்த்து கூற மாட்டேன்'' என்று சொன்னது தான் நமது ஊடகங்களைக் காணும்போது நினைவில் இடறுகிறது.


பெட்டிச் செய்தி- 2
நடந்துள்ள நல்ல நிகழ்வுகள்:

பீகார் சட்டசபைக்கு ஆறுகட்டமாக தேர்தல் நடந்தது. அக். 31 -ல் துவங்கிய தேர்தல் நவ. 20 -ல் முடிவுற்றது. மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தலையும் மீறி, நக்சல் ஆதிக்கமுள்ள பல பகுதிகளிலும் கூட, மக்கள் அச்சமின்றி ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். குறிப்பாக நக்சல் ஆதிக்கம் மிகுந்த மாவட்டங்களிலும் கூட மக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடி வந்து வாக்களித்துள்ளனர்.

இதில் மிகவும் முக்கியமான அம்சம், தேர்தலில் பெண்களின் உற்சாகமான பங்கேற்பு. பெண்களில் பெரும்பகுதியினர் நிதிஷுக்கே வாக்களித்துள்ளனர். மகளிர்நலத் திட்டங்களில் நிதிஷ் காட்டிய அக்கறைக்குக் கிடைத்த பரிசு இது. இத்தேர்தலில்தான், 33 பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!

இத் தேர்தலில் லாலு குடும்பத்தினர் எவருமே வெற்றி பெறவில்லை. அரசியலையே குடும்பச் சொத்தாக்கிய லாலுவுக்கு மக்கள் கொடுத்துள்ள அடி இது. லாலுவின் மனைவியும் முன்னாள் பினாமி முதல்வருமான ராப்ரி தேவி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோற்றார். லாலுவின் மைத்துனர் சாது யாதவ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்றார்.

தலித் மக்களை பகடையாக்கி அரசியல் நடத்திய ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர்கள் இருவரும் லோக்ஜனசக்தி சார்பில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினர். சிறையில் இருந்தபடி அரசியல் நடத்திவந்த பப்பு யாதவ் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். மற்றொரு சிறைத் தண்டனைக் குற்றவாளி ஆனந்தின் மனைவி லவ்லி ஆனந்தும் தோல்வியுற்றார்.

2005 தேர்தலின்போது தே.ஜ.கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் பெரும்பாலும் லாலுவுக்கு எதிரான வாக்குகள். இம்முறையோ, நிதிஷ் அரசு மீதான நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் வாக்குகள் கிடைத்துள்ளன. இது ஆக்கப்பூர்வமான விஷயம். 2005 -ல் மொத்த வாக்குகளில் 38 சதவிகிதம் பெற்ற தே.ஜ.கூட்டணி, 2010 -ல் 40 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. லாலு, காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்பப்பட்ட யாதவர்களும் முஸ்லிம்களும் கூட, நல்லாட்சி என்ற அடிப்படையில் மத, ஜாதி எல்லைகளைத் தாண்டி வாக்களிதுள்ளதும் இத் தேர்தல் கூறும் பாடம்.

இனிமேலும், முஸ்லிம் வாக்குகள் போய்விடுமே என்று பயந்து அரசியல் நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலையை பீகார் தேர்தல் முடிவு போக்கியுள்ளது என்றால் தவறில்லை. நல்லாட்சி நடத்தினால், இஸ்லாமியர்களும் மதத்தைத் தாண்டி சிந்தித்து செயல்படுவார்கள் என்பதற்கு ஏற்கனவே குஜராத்தில் மோடியின் வெற்றி நிரூபித்தது. அதனை நிதிஷின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.


பெட்டிச் செய்தி- 3
நிதிஷ்குமார்- ஓர் அறிமுகம்:

பீகாரின் பக்தியார்புரில், கவிராஜ் ராம்லக்கன் சிங் - பரமேஸ்வரி தேவிக்கு, 1951, மார்ச் 1 -ல் பிறந்தவர் நிதிஷ்குமார். இவரது தந்தை விடுதலைப் போராட்ட வீரர்; நவீன பீகார் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த அனுக்ரக நாராயண் சின்ஹா என்ற காந்தீயவாதியின் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்தவர் ராம்லக்கன் சிங். ஆரம்பத்திலிருந்தே காந்தீயக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நிதிஷ், மதுவையும் புகைபிடித்தலையும் தொடாதவர். எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிப்பில் பட்டம் பெற்ற நிதிஷ், மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டார். சோஷலிசக் கொள்கையுடன் அரசியல் நடத்திவந்த ராம் மனோகர் லோகியா, கர்ப்பூரி தாகூர் ஆகியோரை தனது அரசியல் குருவாகக் கொண்டார்.

இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடிநிலையை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயண் நடத்திய போராட்டத்தில் (1974 - 1977) நிதிஷ் பங்கேற்றார். அவரது இளமைத் துடிப்பு அரசியலில் அவரை பிரபலப்படுத்தியது. 1980 -ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்ற அவர், அதனால் நிலைகுலையவில்லை. அவரது அரசியல் பயணம் எதிர்பார்ப்பின்றி தொடர்ந்தது. அந்தக் காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் ஆகியோருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. 1985 -ல் முதல்முறையாக சுயேச்சையாகப் போட்டியிட்டு பீகார் சட்டசபை உறுப்பினர் ஆனார். 1987 -ல் லோக்தளத்தின் இளைஞர் பிரிவு தலைவரானார்.

1989 -ல் ராஜீவின் போபர்ஸ் ஊழலை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய வி.பி.சிங்கின் தலைமையில் ஜனதாதளம் உதயமானது. அதில் லோக்தளம் இணைந்தது. அப்போது பீகார் ஜனதாதளத்தின் பொதுச்செயலாளர் ஆனார் நிதிஷ். அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற அவர், வி.பி.சிங் அமைச்சரவையில் விவசாயத் துறை இணை அமைச்சர் ஆனார். அடுத்து வந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 2004 வரை அவர் உறுப்பினராகத் தேர்வானார்.

ஆட்சிகள் மாறிய சூழலில், ஜனதா தளத்தின் முன்னணித் தலைவராக உயர்ந்த அவர், பீகாரில் லாலுவின் மோசமான ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் ஆகியோருடன் சமதா என்ற கட்சியாகப் பிரிந்தார். சமதா கட்சி வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் இடம் பெற்றது. வாஜ்பாய் அமைச்சரவையில் நிதிஷ் ரயில்வே, தரைவழிப் போக்குவரத்து, விவசாயத் துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். 1999 -ல் நடந்த ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் நிதிஷ். பிறகு சமதா உள்ளிட்ட ஜனதா கிளைகள் இணைத்து ஐக்கிய ஜனதாதளம் உருவானபோது அதன் நாடாளுமன்றத் தலைவரானர் நிதிஷ்.

2001 -ல் நடந்த பீகார் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டபோது பிரதமர் வாஜ்பாய் அறிவுரைப்படி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், ஒருவார காலத்தில் பதவி விலகினார். பிறகு பீகாரில் லாலுவின் ஆட்சியை அகற்ற தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

2005 -ல் நடந்த தேர்தலில் 143 தொகுதிகளில் வென்று தே.ஜ.கூட்டணி சார்பில் ஆட்சியைக் கைப்பற்றிய நிதிஷ், பீகாரில் சீர்குலைந்திருந்த ஆட்சி நிர்வாகத்தை செம்மைப்படுத்தி, வளர்ச்சியை நோக்கி மாநிலத்தை அழைத்துச் சென்றார். அதன் விளைவாக 2010 சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மீதும் மூன்றாவது முறையாக பீகார் முதல்வர் ஆகியிருக்கிறார்.

இவரது மனைவி மஞ்சு குமாரி சின்ஹா, பள்ளி ஆசிரியை. இவர் அண்மையில் (2007) இறந்தார். இவரது மகன் நிஷாந்த் பொறியியல் பட்டதாரி. அரசியலில் குடும்ப உறுப்பினர்கள் நுழைவதை நிதிஷ் ஊக்குவிக்கவில்லை. ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ் மிக எளிமையானவர்; யாரும் இவரை சிரமமின்றி அணுக முடியும்.

அரசியல் என்பது பிழைக்கும் வழியல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்கான மார்க்கம் என்று நம்பும் இயல்பான அரசியல்வாதி நிதிஷ்குமார்.

-------------------------------------
நன்றி: விஜயபாரதம் (10.12.2010)
.

வெள்ளி, நவம்பர் 26, 2010

ராசா விலகல் முடிவல்ல.... ஊழலின் ஆரம்பம்

நன்றி: மதி/தினமணி (24.11.2010)
.
சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது - என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். ஸ்பெக்ட்ரம் ஊழல் சந்தி சிரித்த பின்னும், மத்தியில் உள்ள ஊழல் காங்கிரஸ் அரசு, தவறுகளை மறைக்க மேலும் மேலும் தவறுகளையே செய்து வருவது, நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு மேலும் மேலும் கவலை அளிக்கிறது.

ஆ.ராசா பதவி விலகலுடன், நாடாளுமன்ற பொது கணக்குக் குழு விசாரணையுடன், ஸ்பெக்ட்ரம் ஊழலை ஊற்றி மூடிவிட காங்கிரஸ் துடிப்பதன் பின்னணி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகும். அதனை உணர வேண்டுமானால், ஆதியோடந்தமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு துவங்கி ஆராய வேண்டும். தனது தலைமையிலான அமைச்சரவையில் உள்ள ஒருவர் நிகழ்த்திய முறைகேடுகள் தெரிந்திருந்தும் 'ஏதோ ஒரு காரணத்தால்' அமைதி காத்த பிரதமர் மன்மோகன் சிங்கை இனியும் ' ஊழல் கறைபடாதவர்' என்று ஊடகங்கள் பாராட்டாமல் இருந்தால் நல்லது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி 2007, அக். 1 என்று தொலைதொடர்புத் துறையால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதையேற்று மத்திய தொலைதொடர்புத் துறைக்கு வந்த விண்ணப்பங்கள்: 575. ஆனால், திடீரென்று செப். 25ம் தேதியே கடைசி தேதி என்று (யாருடைய உத்தரவுப்படியோ) அமைச்சக வட்டாரங்கள் அறிவித்தன. அதன்படி 232 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பிறகு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று கூறி, முன்கூட்டியே திட்டமிட்ட 9 நிறுவனங்களுக்கு தலா ரூ. 1,651 கோடி விலையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன. இதன்மூலமாக அரசுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கூட கிடைக்கவில்லை. ஆனால், இந்த உரிமங்களை ஒரு மாதத்திற்குள் விற்று கொள்ளை லாபம் பார்த்தன, பல 'லெட்டர்பேடு' நிறுவனங்கள்.

உதாரணம்: 2008, ஜன. 10 ம் தேதி, 122 - 2ஜி உரிமங்கள் வழங்கப்பட்டன. 13 மண்டலங்களில் உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனம், தனது உரிமங்களில் சரிபாதியை ரூ. 7,195 கோடிக்கு வேறொரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. தற்போது ‘எடிசலாட் டிபி’ என்று பெயர் மாற்றிக் கொண்டு செயல்படுகிறது ஸ்வான் டெலிகாம். துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்திற்கும், ஸ்வான் டெலிகாமுக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இடிஏ ஸ்டார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

யுனிடெக் நிறுவனம் பெற்ற உரிமங்களும் ஸ்வான் போலவே அதிகப்படியான விலைக்கு விற்கப்பட்டுள்ளன. ஒரு கணக்கீட்டின்படி, ஸ்பெக்ட்ரம் ஊழலால் மத்திய ஊழல் கூட்டாளிகள் பெற்ற பணப்பயன் ரூ. 70 ஆயிரம் கோடி என்று தெரிகிறது. இத்தொகை முழுவதும் வெளிநாடுகளில் மூலதனமாக்கப்பட்டுள்ளதாகவும் கேள்வி.

இந்த ஊழலில் ராசா உள்ளிட்ட தி.மு.க. தரப்பு முறையற்ற வகையில் பலகோடி லாபம் சம்பாதித்தது எவ்வளவு உண்மையோ, அதே அளவு மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசின் சூத்திரதாரிகளும் சம்பாதித்துள்ளனர் என்பதும் உண்மை. இல்லையென்றால், ''2ஜி உரிம விநியோகத்தில் நியாயமாகச் செயல்பட வேண்டும்'' என்று ராசாவுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மன்மோகன், இத்தனை ஊழல் நடந்த பின்னும் கண்டும்காணாமல் இருந்திருக்க முடியாது.

ஒன்று, ஊழலில் கிடைத்த பல கோடிகள் சரிசமமாகப் பங்கிடப்பட்டிருக்க வேண்டும். அல்லது, ராசாவை முன்னிறுத்தி பலகோடி லாபம் ஈட்டிய மிகவும் 'சக்தி வாய்ந்த' வேறு யாரோ ஊழலின் பின்னணியில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சி.ஏ.ஜி. அறிக்கை, சி,பி,ஐ விசாரணை, உச்ச நீதிமன்ற கண்டனம், எதிர்க்கட்சிகளின் போர்க்குரல், ஊடகங்களின் விமர்சனம் அனைத்தையும் தாண்டி, ஆ.ராசாவால், கடைசிக் கட்டம் வரை பதவியில் நீடித்திருக்க முடியாது. காங்கிரஸ்காரர்கள் ஈடுபட்ட காமன்வெல்த் விளையாட்டு ஊழல், கார்கில் வீரர்களின் வீடு ஊழல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக விலக்கிவைத்த பிரதமரால், ஆண்டிமுத்து ராசாவை விலக்க முடியாமல் திணற வேண்டி இருந்திருக்காது.

வேறு வழியின்றியே, அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடன் ராசா, கனிமொழி, ஊடகத் தரகர்கள் பர்கா தத், வீர் சாங்வி ஆகியோர் நிகழ்த்திய உரையாடல்களை வேறொரு வழக்கு வாயிலாக வெளிப்படுத்தி, தி.மு.க.வுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கோட்டினை சிறிய கோடாக்க அதன் அருகில் பெரிய கோடு போடும் உத்தியே என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதன்மூலமாக, தேசிய அளவில் தி.மு.க. மீது அனைத்து கறைகளையும் பூசி, திரைமறைவில் இயங்கியோர் தப்பிக்க முயற்சிக்கின்றனர் என்று கருத அதிக வாய்ப்புகள் உள்ளன.

'யாரோ' தன்னை காப்பாற்றிவிடுவார் என்று கடைசிவரை நம்பியிருந்த ராசாவுக்கு, 'அல்வா' கொடுத்தது காங்கிரஸ். அதைவிட, தொலைதொடர்புத் துறை தி.மு.க.வுக்கே மீண்டும் வழங்கப்படும் என்ற கருணாநிதியின் எதிர்பார்ப்பில் பிரதமர் மண்ணைப் போட்டது, 'இருட்டுக்கடை அல்வா' கதையாகிவிட்டது. (தற்போது இத்துறை கபில் சிபல் பொறுப்பில் உள்ளன!) ஆக, கூட்டணி தர்மத்திற்காக இத்தனை நாட்கள் மன்மோகனார் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கவில்லை என்பது நிதர்சனம்.

அலைக்கற்றை ஏல மோசடியில் தொடர்புடைய நிறுவனகள் குறித்து மத்திய தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள பல தகவல்கள், ஊழலின் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன. போலி பெயர்களில் இயங்கும் பினாமி நிறுவனங்கள் குறித்து மத்திய அரசின் இதர துறைகளுக்கு (குறிப்பாக வருமான வரித்துறையை கொண்டுள்ள நிதி அமைச்சகத்திற்கு) தெரியாமல் இருந்திராது. நீரா ராடியா நிகழ்த்திய ஆட்சிபேர விவகாரங்கள் அனைத்தும் பிரதமருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். இப்போது வெளியாகியுள்ள தொலைபேசிப் பேச்சு பதிவுகளில் சில இடங்கள் தெளிவின்றி இருப்பதிலும் கூட மத்திய அரசின் திருவிளையாடல் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, ராசா பதவி விலகல் முடிவல்ல, ஆரம்பமே என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதும் அவசியம்.

ஆக மொத்தத்தில், ஆ.ராசாவை பலிகடாவாக்கி பெருமுதலைகளும், அரசை ஆட்டுவிப்பவர்களும் தப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தை மறுக்க முடியாது. நாடாளுமன்றம் 10 நாட்களுக்கு மேல் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டும் கூட, நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை ஏற்க மத்திய அரசு தயங்குவது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

உச்சநீதி மன்றம் இத்தனை கண்டித்தும் சுரணை இல்லாதவர் போல நடிக்கும் பிரதமரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய காலம் வரும். இந்த ஊழலில், மத்திய அரசை பின்னிருந்து ஆட்டுவிக்கும் சோனியாவின் பங்கையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இப்போதைக்கு ராசா மாட்டியிருக்கிறார். எதிர்காலத்தில் உண்மையான 'ராசா'வும் 'ராணி'யும் மாட்டலாம். உப்பைத் தின்றவர்கள் என்றாவது தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும்.
------------------
நன்றி: விஜயபாரதம்

.

புதன், நவம்பர் 24, 2010

ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ் கட்சி!


வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்...

உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும்; ஊழல் செய்பவர் கண்டிப்பாக மாட்டித்தான் ஆகவேண்டும். ஆனாலும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்கள், தாங்கள் செய்யும் ஊழல்களுக்கு உடனடியாக மாட்டிக்கொள்ளும் அவசியம் இல்லை. தலையிலேயே இடி விழுந்தாலும் எங்கே இடி விழுந்தது என்று எட்டிப் பார்க்கும் அற்புதமான பொருளாதார மேதை நமக்கு பிரதமராக வாய்த்திருக்கிறார். ஊழல்கறையே படியாதவர் என்ற பெயரை வேறு அவர் கட்டியுள்ள தலைப்பாகையோடு சேர்த்துக் கட்டி இருக்கிறார். இதையும் மீறி பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஏதாவது குரல் எழுப்பினால் இருக்கவே இருக்கிறது மதவாதப் பூச்சாண்டி. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சேவகம் செய்யவே பிறப்பெடுத்த ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் உள்ளவரை மன்மோகன் சிங்கத்திற்கு எந்தக் கவலையும் இல்லை.

ஆனால், இந்த நவம்பர் மாதம், மன்மோகன் நினைத்ததுபோல அவ்வளவு எளிதாக கடக்கவில்லை. அயோத்தி வழக்கில் வெளியான தீர்ப்பு சென்றமாதம் நாடு முழுவதும் ஏற்படுத்திய பரபரப்பை விழுங்கிவிட்டது இந்த நவம்பர் மாதம். எல்லாமே, மத்திய அமைச்சர் திருவாளர் 'தலித்' ராசாவின் உபயம். 2008ல் அவர் நடத்திய ஊழல் உறுத்துவந்து 2010ல் ஊட்டும் என்று அவர் மட்டும் கனவா கண்டார்? கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளை விருப்பம்போல விற்று ஏப்பம் விட்டது யாருக்கும் தெரியாது என்று இறுமாந்திருந்த ராசாவுக்கும் அவருக்கு துணைபோன ராணிக்கும் (இந்த ராணி, மத்திய அரசின் சூத்திரதாரியான சோனியாவையே குறிக்கிறது) இந்த நவம்பர் மாதம் கறுப்பு மாதமாக மாறியது அதிர்ச்சி அளித்திருக்கலாம். அதைவிட, நாட்டு மக்களுக்குத் தான் அதிர்ச்சி- அலைக்கற்றை ஏலத்தில் நடந்த ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு ரூ. 17,60,00,00,00,000 (அதாவது ஒரு லட்சத்து 76 ஆயிரம் லட்சம் கோடி!) என்பது தெரியவந்து பேரதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்!

அது எப்படி கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளில் ஊழல் செய்ய முடியும்? கேள்வி கேட்கும் புத்திசாலி பகுத்தறிவாளர்களுக்காக ஒரு விளக்கம்:

இப்போது உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அலைபேசிகள் இயங்குவது வளிமண்டலத்திலுள்ள மின்காந்த அலைகளால்தான். அவற்றை கிரகித்துப் பகிரவே அலைபேசி கோபுரங்கள் எங்கு பார்க்கினும் தட்டுப்படுகின்றன. இந்த மின்காந்த அலைகள், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நமது செயற்கைக்கோள்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவற்றை நிர்வகிப்பது மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை.

இந்த மின்காந்த அலைக்கற்றைகளை முறைப்படுத்துவதும் வர்த்தக ரீதியாக விநியோகிப்பதும் மத்திய அரசின் கடமை. இதில் மூன்று தலைமுறை அலைக்கற்றைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. ஆரம்பகால கம்பிமுறை தொலைபேசிக்கு மாற்றாக முதலில் உருவானது முதல் தலைமுறை அலைக்கற்றைகள். (அதற்கு அவ்வாறு எந்தப் பெயரும் சூட்டப்படவில்லை. வாசகர்கள் குழப்பமின்றி தெரிந்துகொள்ளவே இந்த விளக்கம்). இந்த அலைக்கற்றைகளின் ஆதிக்கம் 2008 வரை நீடித்தது. உலக அளவில் ஏற்பட்ட தொலைதொடர்புப் புரட்சி தாமதமாக வந்தாலும் இந்தியா அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டது. 1998 முதல் 2009 வரையிலான இந்தக் காலகட்டத்தில்தான் அலைபேசிகளின் எண்ணிக்கை நாட்டில் பல மடங்கு அதிகரித்தது.

1998 காலகட்டம் தொலைபேசியின் இடத்தை அலைபேசிகள் வெற்றி கொள்ளாத காலகட்டம். 'பேஜர்' எனப்படும் சிறு கருவியே அதிசயமாகப் பார்க்கப்பட்ட காலம் அது. ஆரம்பத்தில் நமது நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களே புதிய அலைக்கற்றைகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டின. அதன் விளைவாக 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் அந்த அலைக்கற்றைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. எனினும் இந்த விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய தொலைதொடர்பு ஆணையம் (டிராய்) செயல்பட்டது.

ஆனால், விரைவிலேயே நாடு முழுவதும் அலைபேசிகளின் ஆதிக்கம் பரவிவிட்டது. இந்தியாவில் தற்போதைய அலைபேசி பயனாளிகளின் எண்ணிக்கை 70 கோடி என்கிறது ஒரு புள்ளிவிபரம். பத்து ஆண்டுகளில் நம்ப முடியாத வளர்ச்சி பெற்றது இந்திய தொலைதொடர்புத் துறை. அதன் விளைவாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள் கொண்டுவரப்பட்டன. இதனை '2ஜி ஸ்பெக்ட்ரம்' என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். இந்த அலைக்கற்றைகள் 2008ல் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. இதில்தான் முறைகேடு நிகழ்ந்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தது தான் இந்த ஆண்டு வெளியான மூன்றான் தலைமுறை மின்காந்த அலைக்கற்றைகள் (3ஜி). இதன்மூலமாக அலைபேசி அல்லது தொலைபேசியில் பேசுபவரது முகத்தையும் பார்த்தபடி பேசலாம்.
இப்போது விஷயத்திற்கு வருவோம்... 2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் எப்படி மோசடி நடந்தது?

அப்போது மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா. புதிதாக அறிமுகமாகும் மின்காந்த அலைக்கற்றைகள் வற்றாத சுரங்கம் என்பதைக் கண்டுகொண்ட ராசா, அவற்றை விற்பதில் (2008) தனக்கென ஒரு வட்டத்தை வரைந்துகொண்டு செயல்பட்டார். ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார்.

இதில் நிலவும் முறைகேடுகள் குறித்து அப்போதே சலசலப்பு எழுந்தது. பகிரங்க ஏல முறையில் 2ஜி அலைக்கற்றைகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் கோரிக்கை அரசால் கண்டுகொள்ளப்படவில்லை. இதிலும் ஏலத்திற்கு மிகக் குறைந்த நாட்களே அவகாசம் வழங்கப்பட்டு, கேடு தேதிக்கு முன்னதாகவே அலைக்கற்றைகள் அவரச அவசரமாக விற்பனை செய்யப்பட்டன. இதனால், நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அவை கிடைக்காமல் போயின. தவிர, தொலைதொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத 'லெட்டர்பேடு' நிறுவனங்களுக்கு எல்லா விதிமுறைகளையும் மீறி அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இது குறித்து கேள்வி எழுந்த போதெல்லாம், தனக்கு முன் அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் (அவரும் தி.மு.க. தான்; தாத்தாவுடனான சண்டையால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதே இடத்தில் தான் ராசா அமைச்சராக நியமிக்கப்பட்டார்) கடைபிடித்த 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற விதியின் அடிப்படையிலேயே அலைக்கற்றைகள் விற்கப்பட்டதாக ராசா கூறி வந்தார்.

ஆயினும், சில வடக்கத்திய ஊடகங்களில் வெளியான செய்திகள், 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதை வெளிப்படுத்தின. அதன் பின்னணியில் முந்தைய அமைச்சர் தயாநிதி மாறன் இருப்பதாக அப்போது ராசா குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் ராசாவால் விற்கப்பட்ட அலைக்கற்றைகளை ஒரே மாதத்தில் வேறு நிறுவனங்களுக்கு பல மடங்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்தன 'லேட்டேர்பேடு' பினாமி நிறுவனங்கள் (காண்க: பெட்டிச் செய்தி: 1).
அதன்மூலமாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருப்பது உறுதியானது. இதனை முதன்முதலில் அம்பலப்படுத்தியது, பயனீர் நாளிதழ். அதன் நிருபர் கோபி கிருஷ்ணன் எழுதிய தொடர் புலனாய்வுக் கட்டுரைகள், ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்தின. தமிழகத்தில் தினமணி நாளிதழும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்சும், ராசாவின் முகத்திரையைக் கிழிப்பதில் முன்னணி வகித்தன.

மதுரை தினகரன் எரிப்பு, அரசு கேபிள் கழகம் ஆகிய அத்தியாயங்களைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானவுடன், மாறன் சகோதரர்களுடன் திமுக. சமரசமானது. அப்போது ''குடும்பங்கள் இணைந்தன; இனி ஊழல் குற்றச்சாட்டுகள் மறையும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போதே ‘குடும்பங்கள் ஒன்றானால் எப்படி ஊழல் மறையும்?’ என்று புத்திசாலிப் பத்திரிகைகள் சில (கண்டிப்பாக தமிழக புலனாய்வுப் பத்திரிகைகள் அல்ல) கேள்வி எழுப்பின. அதாவது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா மட்டுமே பெற்ற பயன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பங்கிடப்பட்டுவிட்டதால், இனிமேல் மாறனின் தொந்தரவு இருக்காது என்பதுதான் கருணாநிதியின் அறிவிப்புக்கு விளக்கமாக இருக்க முடியும். அப்போது தான், ''முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி (1998- 2004) ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட நெறிமுறைகளே ஸ்பெக்ட்ரம் விற்பனையிலும் கடைபிடிக்கப்பட்டன'' என்று தனது முந்தைய கருத்தில் சிறு மாற்றம் செய்து கொண்டார் ராசா.

அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சரான அருண்ஷோரி, ராசாவின் தற்காப்பு உத்தியான ''முந்தைய அரசு கடைபிடித்த வழிமுறைகளையே தானும் கடைபிடித்தேன்'' என்ற கருத்தைக் கண்டித்திருக்கிறார். தே.ஜ.கூ. ஆட்சியில் டிராய் பரிந்துரையின்றி எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். தவிர, 1998 - 2004 ல் விற்ற விலைக்கே 2008 லும் விற்க முடியாது என்ற சாமானிய அறிவும் கூட இல்லாது பேசும் ராசாவை எப்படி தெளியவைப்பது? பிரச்னை அவரிடம் உள்ள குழப்பமல்ல; செய்த தவறை மறைக்க அவர் போடும் நாடகம் தான்.

1998 - 2004 காலகட்டத்தில் அலைபேசி எண்ணிக்கை பெருகாத காலகட்டத்தில் இருந்த 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற கோட்பாடு, போட்டி மிகுந்த தற்போதைய (2008) காலத்திற்கு எவ்வாறு ஏற்புடையதாகும் என்ற கேள்வியை சமத்காரமாக ராசா தவிர்த்து வந்தார். டிராய் பரிந்துரைகள், பிரதமர் அலுவலக அறிவுரைகள், தொலைதொடர்புத் துறை அமைச்சக அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி, தன்னிச்சையான முறையில், 2 ஜி அலைக்கற்றைகளை மூடுமந்திரமான முறையில் பகிரங்க ஏலம் அல்லாது விற்பனை செய்துள்ளார் vராசா. இது குறித்த செய்திகள் வெளிவந்தவுடன் பா.ஜ.க, மற்றும் இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால், ''பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரிந்துதான் அனைத்தும் நடந்துள்ளன'' என்று ராசா விளக்கம் அளித்தார். பிரதமரோ, ''ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அந்தத் துறையின் அமைச்சர் ராசாவே கூறிவிட்டார்'' என்று மழுப்பினார். நல்ல பிரதமர்! நல்ல அமைச்சர்! இவரைத்தான் நமது பத்திரிகைகள் தூய்மையானவர் என்று புகழ்ந்து எழுதி மத்திய அரசு விளம்பரங்களைப் பெற்றுக் கொள்கின்றன!

உண்மையில், இந்த முறைகேட்டில் கிடைத்த லஞ்சப் பணம் (பல ஆயிரம் கோடிகள்) முறைப்படி, காங்கிரஸ் தலைமை, தி.மு.க. தலைமை, ராசா குழு மற்றும் சம்பந்தப்பட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டதாகத் தகவல். கைநீட்டி காசு வாங்கிவிட்டவர்கள், ராசாவின் அமர்த்தலான பதிலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்துதானே ஆகவேண்டும்?

இந்நிலையில்தான், 2009 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தேர்தலில் முக்கிய பிரசார அம்சமானது. ஆயினும் அந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் வென்றது. அதையடுத்து மத்திய ஆட்சியில் தி.மு.க.வின். பிடி இறுகியது. தொலைதொடர்பு துறையில் நடந்துவிட்ட ஊழல்களை அடுத்து, ராசாவுக்கு மீண்டும் அதே துறையை ஒதுக்க பிரதமர் மன்மோகன் தயங்கினார். ஆயினும், தில்லிவரை போர்தொடுத்து கூட்டணி உரிமையை நிலைநாட்டிய கழகத் தலைவர் கருணாநிதி, மீண்டும் ராசாவுக்கே தொலைதொடர்புத் துறையைப் பெற்றுத் தந்தார். கைநீட்டி வாங்கிய காசுக்கு நன்றிக்கடன் காட்டித்தானே ஆகவேண்டும்? பிரதமர் மன்மோகன் சிங் நாணயஸ்தர். அவரது கட்சித் தலைவியோ கூட்டணிதர்மம் காக்கவே இத்தாலியிலிருந்து இறக்குமதி ஆனவர். ராசாவின் காட்டில் மீண்டும் மழை பொழியத் துவங்கியது.

இந்நிலையில் தான், மூன்றாம் தலைமுறை (3 ஜி) அலைக்கற்றைகள் மே மாதம் பகிரங்க ஏல முறையில் ஏலம் விடப்பட்டன. இதனையும் மூடுமந்திரமான முறையில் விற்க ராசா முற்பட்டதாகவும், பிரதமர் நேரடியாகத் தலையிட்டதால் பகிரங்க ஏலம் நடப்பதாகவும், ஆங்கில ஊடகங்கள் மன்மோகன் புகழ் பாடின. இதன் விளைவாக அரசுக்கு 67.7 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. இத்தனைக்கும் 3 ஜி அலைக்கற்றைகளின் ஒருபகுதிக்கே இவ்வளவு லாபம்! உடனே மத்திய தணிக்கை ஆணையம் (சி.ஏ.ஜி)விழித்துக் கொண்டது. 2 ஜி அலைக்கற்றை விற்பனையில் நிகழ்ந்த நஷ்டத்தை சி.ஏ.ஜி கணக்கிட்டது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வாங்கி குறுகிய காலத்தில் வேறு நபர்களுக்கு விற்றவர்களை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்கு தோராயமாக ஏற்பட்டுள்ள இழப்பை சி.ஏ.ஜி கணக்கிட்டது.
.
இம்மாதம் 10ம் தேதி, சி.ஏ.ஜி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கொடுக்கப்பட்ட தகவல் தான், ராசா மூலம் ஏற்பட்ட இழப்பை (ரூ. 17,60,00,00,00,000) நாட்டுக்கு விண்டுவைத்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் பலவகையாகக் கூறிவந்தபோதும், சி.ஏ.ஜி அறிக்கை, ஸ்பெக்ட்ரம் ஊழலின் மதிப்பை தெளிவாக வரையறுத்துள்ளது. தவிர அதன்மூலமாக பயன் பெற்றவர்கள் யார் என்பதையும் பட்டியலிட்டு, திருவாளர் புனிதரின் லட்சணத்தையும் தியாக நாயகி லட்சணத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டது.

ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் கட்டட ஒதுக்கீடு ஊழலால் கறைப்பட்ட மத்திய அரசுக்கு, ராசாவை நீக்குவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. கனத்த நெஞ்சத்தோடு, ராசாவை பதவி விலகுமாறு கோரினார் (கெஞ்சினார்) பிரதமர். ராசாவோ, பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றார். தலித் என்பதால் ராசாவை குறி வைக்கிறார்கள் என்று ஏற்கனவே சொன்ன கருணாநிதி வழக்கம்போல, ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று சாதித்தார். சீடருக்கு ஏற்ற குரு! இந்நிலையில், ''தி.மு.க.வு.க்கு பயந்து ராசாவை அமைச்சராகத் தொடரச் செய்ய வேண்டாம்; ராசாவுக்காக தி.மு.க. ஆதரவை விலக்கினால், அ.தி.மு.க. ஆதரவளிக்கும்'' என்று சந்தில் சிந்து பாடினார் அதன் தலைவி ஜெயலலிதா.

இதற்கெல்லாம் மயங்குபவரா மன்மோகன்? அவருக்கு, உச்சநீதிமன்றம் (காண்க: பெட்டிச் செய்தி: 2) என்ன சொல்லப் போகிறதோ என்பதுதான் கவலை. அதைவிட, தானைத்தலைவி சோனியா அம்மையார் கண்ணசைவில் சதிராடும் பிரதமாரால் என்னதான் சிந்திக்க முடியும்? மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) விசாரணைக்கு உத்தரவிட்டு ராசாவைக் காப்பாற்றலாம் என்றால், அதற்குள், சுப்பிரமணியம் சாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார். உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிரதமர் மன்மோகனுக்கு காட்டமான அறிவுரையைக் கூறியுள்ள நிலையில், ராசா வேறு வழியின்றி, விருப்பமின்றி (கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றவும், நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகளிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்கவும்!) பதவி விலகினார். காங்கிரஸ் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

பிரதமருக்கு மேலும் பேரிடியாக, ஊழலில் தொடர்புடைய 6 நிறுவனங்களின் 69 உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது டிராய். இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கின. காங்கிரஸ் கட்சியோ, முரளி மனோகர் ஜோஷி (பா.ஜ.க) தலைமையிலான பொது கணக்குக் குழு விசாரித்த பிறகே ஜே.பி.சி. விசாரணைக்கு செல்ல முடியும் என்று சண்டித்தனம் செய்தது. ‘’தங்கள் தலைவர் மீது பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லையா?’’ என்று வேறு கேட்டார் நமது கலாகார். உண்மையில், பொது கணக்குக் குழு வரம்பிற்குள் வராத பல விஷயங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று முரளி மனோகர் ஜோஷியே கூறி இருக்கிறார். அதை காங்கிரஸ் வசதியாக மறந்துவிட்டது.

தவிர, ஆ.ராசா அமைச்சர் ஆனதன் பின்னணியில் அதிகாரத் தரகர் நீரா ராடியா உடன் ஊடக தரகர்கள் பர்கா தத் (என்.டி.டி.வி), வீர் சாங்க்வி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) ஆகியோரும் சம்பந்தப்பட்டிருப்பது வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் பா.ஜ.க எதிரிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். இவர்கள் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடல் உச்சநீதிமன்றத்தில் சாமி தொடர்ந்த வழக்கில் முக்கிய சாட்சியாகி இருப்பது, பத்திரிகையாளர்கள் மீதான நம்பகத் தன்மையையும் கேள்விக் குறி ஆக்கியுள்ளது.

இத்தனைக்கும் பிறகும், காங்கிரஸ் எதுவுமே நடக்காதது போல நடிப்பது தான் வியப்பளிக்கிறது. நடிகர் வடிவேலுவின் 'இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க'' நகைச்சுவைதான் நினைவில் வருகிறது. கட்சியின் இளவரசர் ராகுல், ''எனக்கு தெரிந்தவரை, ஸ்பெக்ட்ரம் விவகாரம் பிரதமருக்கு எந்த தர்மசங்கடமும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை'' என்று சான்றிதழ் அளித்திருக்கிறார். பிரதமரின் அமைச்சரவை சகா கபில் சிபலோ, ''பிரதமர் குற்றமற்றவர்'' என்கிறார். பிறகு ஏன் ராசா விவகாரத்தில் முடிவெடுக்காமல் 16 மாதம் காலம் தாழ்த்தினார் என்ற கேள்விக்கு மட்டும் சோனியா முதல் கார்த்தி சிதம்பரம் வரை யாரிடமும் பதிலில்லை.

இந்த நாடகம் என்ன ஆகும்? இந்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பில் ராசா வகையறாவுக்கு கிடைத்து எத்தனை? கைமாறிய லஞ்சப் பணம் சென்றது எங்கே? இந்த நஷ்டத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை வருமா? குற்றவாளிகளைப் பாதுகாத்தவர்கள் (பிரதமர் உள்பட) மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா? ஊழலில் பயன் பெற்ற நிறுவனங்கள் உரிமங்களை இழக்குமா? அவற்றிடம் டிராய் பரிந்துரைப்படி கூடுதல் தொகை வசூலிக்கப்படுமா?

ராசா உயிருக்கு உண்மையிலேயே சுப்பிரமணியம் சாமி சொல்வது போல ஆபத்து ஏற்பட்டுள்ளதா? ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசு இழந்த 1.76 லட்சம் கோடியும் மீட்கப்பட்டு விடுமா? அப்படியே தொகை மீட்கப்பட்டாலும் இந்திய அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயர் மறைந்துபோகுமா?

இனிமேலும் 'தலித்' என்ற போர்வையில் ஊழல் செய்வதை நியாயப்படுத்தலாமா? கூட்டணியின் நிர்பந்தத்திற்காக ஊழல்களை கண்டும் காணாமல் இருக்கலாமா? அதிகாரத் தரகர்களாக மாறியுள்ள பத்திரிகையாளர்கள் மீதும் சட்டம் பாயுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, ஊழல் மலிந்த தற்போதைய 'மதச்சார்பற்ற' காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நாட்டில் தொடரத் தான் வேண்டுமா?

- கேள்விகள் தொடர்கின்றன.

இவற்றுக்கான பதில்கள் எங்கோ இல்லை; இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் வாக்காளராகிய மக்களிடம் தான் இவற்றுக்கான பதில்கள் கிடைக்கும். அவர்களிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விலாவாரியாக விளக்க வேண்டியது நாட்டுநலனில் அக்கறை கொண்டோரின் கடமை. வெறும் ரூ. 64 கோடி போபர்ஸ் ஊழலுக்காக ராஜீவ் காந்தியை வீட்டுக்கு அனுப்பிய நாட்டுமக்களுக்கு, ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் குறித்து (உலக அளவில் மாபெரும் ஊழல் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!) உண்மை நிலையை சொல்ல வேண்டியது தேசபக்தர்களின் கடமை.

பெட்டிச் செய்தி - 1
யாருடைய பினாமிகள்?

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி 2007, அக். 1 என்று தொலைதொடர்புத் துறையால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென்று செப். 25ம் தேதியே கடைசி தேதி என்று எந்த முன்னறிவிப்பும் இன்றி விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டது. பிறகு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று கூறி, முன்கூட்டியே திட்டமிட்ட 9 நிறுவனங்களுக்கு தலா ரூ. 1,650 கோடி விலையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன. இதன்மூலமாக அரசுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கூட கிடைக்கவில்லை. ஆனால், ஏலத்தில் பயன் பெற்ற சில நிறுவனங்கள் ஒருமாத காலத்திற்குள் தங்கள் பங்குகளை பல மடங்கு விலைக்கு விற்று லாபம் பார்த்தன.

ராசா மூலம் உரிமத்தை தரைக் கட்டணத்திற்கு வாங்கிய ஒன்பது நிறுவனங்களில் ஸ்வான், யுனிடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு செல்போன் சேவையில் எந்த முன்னனுபவமும் கிடையாது. 13 மண்டலங்களுக்கான உரிமத்தை 1,537 கோடி ரூபாய்க்கு வாங்கிய ஸ்வான் நிறுவனம் அதை வெறுமனே கைமாற்றி ரூ. 4,200 கோடி கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.

தற்போது நடந்துவரும் விசாரணையில் மேலும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று...

‘ஸ்வான் டெலிகாம்’ என்ற பெயரில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தில் பங்கேற்ற எடிசலாட் டிபி நிறுவனத்திற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 2ஜி ஏலம் நடந்தபோது ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் அதில் பங்கேற்றது. இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தவிர, தன்மீதான புகாரை அனில் அம்பானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தற்போது ‘எடிசலாட் டிபி’ என்று பெயர் மாற்றிக் கொண்டு செயல்படுகிறது ஸ்வான் டெலிகாம். சிஏஜி அறிக்கையில் ‘’ஸ்வான் நிறுவனத்திற்கு தேவையே இல்லாமல் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது. துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்திற்கும், ஸ்வான் டெலிகாமுக்கும் தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இடிஏ ஸ்டார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.2008, ஜனவரி மாதம் 2ஜி உரிமத்தைப் பெற்றது ஸ்வான் டெலிகாம். அடுத்த 9 மாதங்களில் துபாயைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனமான எடிசலாட், ஸ்வான் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வாங்கி நிறுவனத்தின் பெயரை எடிசலாட் டிபி என்று மாற்றியது.

2008, செப். 17ம் தேதி சென்னையில் ‘ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ்’ என்ற நிறுவனம் வெறும் ரூ. ஒரு லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து, டிச. 17ம் தேதி, இந்த ஜெனெக்ஸ் நிறுவனம், எடிசலாட் நிறுவனத்தின் ரூ. 300 கோடி மதிப்புள்ள பங்குளை வாங்கியுள்ளது. வெறும் ரூ. ஒரு லட்சம் மூலதனத்தை மட்டு்மே கொண்டிருந்த ஜெனெக்ஸ் நிறுவனத்திற்கு எப்படி திடீரென ரூ. 300 கோடி அளவுக்கு வசதி வந்தது என்பது குறித்துத் தெரியவில்லை.ஜெனெக்ஸ் எக்ஸிம் நிறுவனத்தின் சார்பில் எடிசலாட் டிபி நிறுவன இயக்குனர் குழுவைச் சேர்ந்தவர் அகமது சையத் சலாஹுதீன். இவர் துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருடைய மகன் ஆவார். இடிஏ ஸ்டார் குழுமம் தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் பல அரசு திட்டங்களில் இந்நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது எடிசலாட் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட 2ஜி உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்வான் டெலிகாம் யாருடைய பினாமியாக செயல்பட்டது என்பது தான் இப்போதைய பலகோடி ரூபாய் கேள்வி. இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. விரைவில் நியமிக்கப்படலாம். அப்போதுதானே மூடி மறைக்க முடியும்?


பெட்டிச்செய்தி - 2

எல்லாப் புகழும் சாமிக்கே!

அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா மீது வழக்கு தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது (நவ. 16) அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், ஜனதா கட்சி தலைவருமான சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர், 'மிஸ்டர் கிளீன்' மன்மோகன் சிங்கை கேட்ட கேள்விகள், மிகவும் கூர்மையானவை. ஆனால், மன்மோகன் சிங் எதுவுமே நடக்காதது போல நடமாடுகிறார். மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியமோ, பிரதமரை உச்சநீதி மன்றம் ஏதும் விமர்சிக்கவில்லை என்று முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார்.

''தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை மின்காந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அமைச்சர் ராசாவின் தன்னிச்சையான செயல்பாட்டால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராசா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும்'' என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி புகார் மனு அளித்திருந்தார். இந்த மனு 2008, நவ. 29-ம் தேதி அளிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு இந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டது. இந்தப் பதில் கடிதத்தில் ''விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராசா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப்படாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சுப்பிரமணியசாமி. சாமியின் வழக்கு கடந்த நவ. 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதுதான், ஆ. ராசா மீது வழக்கு தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாகக் கூறி நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
.
''வழக்கு தொடர அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய நல்ல அரசுக்கு மூன்று மாதங்கள் போதுமானது. அமைச்சர் மீது வழக்கு தொடர அனுமதி அளிப்பதற்கான காலவரையறையை (ஏற்கனவே விநீத் நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கில்) உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. தேவைப்பட்டால் இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரை ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் அலைக்கற்றை ஊழல் புகாரில் அரசு 16 மாதங்களுக்கு மேலாக பதில் அளிக்காமல் இருந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் வருத்தத்துக்கு உரியது'' என்ற நீதிபதிகள், ''அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமருக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பு நவ. 20 க்குள் பதிலளிக்க வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.

சுப்பிரமணியசாமி பிரதமருக்கு அனுப்பிய மனுவில், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புள்ள `ஸ்வான் டெலிகாம்' நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு பற்றி குறிப்பிட்டு இருந்தார். ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு, `ஆர் காம்' மற்றும் `ஸ்வான்' என்ற பெயர்களில் இரு முறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின் அவற்றின் பங்குகள் மொரிஷியஸ் நிறுவனம் ஒன்றுக்கு மிக குறைந்த விலையில் விற்கப்பட்டு இருப்பதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டும் தீவிரத்தைப் பார்த்தால், கூடிய விரைவில் மத்திய ஊழல் அரசுக்கு மேலும் பல சங்கடங்கள் காத்திருக்கின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது. உண்மையில், மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா அவசர அவரசமாக விலகியதே, சாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தால் அரசுக்கு கேவலமான நிலை ஏற்படும் என்பதால் தான். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தைவிட, மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பது தான்.

-------------------------------------
நன்றி: விஜயபாரதம் (03.12.2010)
.

வெள்ளி, நவம்பர் 05, 2010

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர்...


அனுபவங்களே நமது வாழ்வை வழிப்படுத்துகின்றன. இன்பமும் துன்பமும் கலந்ததுவே வாழ்க்கை. வாழ்க்கையில் இரண்டையும் நாம் சந்தித்தே ஆக வேண்டும். இன்பங்கள் நமக்கு கிடைக்க ஏணிப் படியாக இருப்பவை, துன்பங்கள் தரும் படிப்பினைகளே.

ஒன்று நிகழ்ந்துதான் ஆக வேண்டும் என்பது நியதியானால், அதிலிருந்து கிடைக்கும் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். காட்டாற்று வெள்ளமாக வாழ்க்கைப் படகை இறைவன் இழுத்துச் செல்லும் சூழலிலும், ஒருவர் நிலைகுலையாத மனத்துடன் அதை ஏற்றால், அமைதியான தீவில் படகு நிலை சேரலாம். சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குக் கிடைத்த சிறை அனுபவம் அப்படிப்பட்டது தான்

1990 - அயோத்தி இயக்கம் நாடு முழுவதும் மிக தீவிரமாக இருந்த காலகட்டம். ஹிந்து உணர்வு நாட்டில் பீறிட்டு எழுந்த காலகட்டமும் அதுவே. அயோத்தி நாயகன் ராமனின் ஜன்மபூமியை மீட்பதற்கான போராட்டம் கூர்மை அடைந்திருந்த நேரம். அயோத்தியில் அரசியல் தடைகளைத் தாண்டி சிலான்யாசம் (1989) நடந்து முடிந்திருந்த காலம் அது.

'இல்லம் தோறும் ராமஜோதி; உள்ளம்தோறும் தேசபக்தி' என்ற முழக்கத்துடன் அயோத்தியிலிருந்து கிளம்பிவந்த ராமஜோதி ரதங்கள் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் ஹிந்து விழிப்புணர்வை உருவாக்கி வந்தன. இதன் உச்சமாக, அயோத்தியில் 1990, அக்டோபர் 30 -ல் கரசேவை நடக்க நாள் குறிக்கப்பட்டிருந்தது. அன்று உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் ஆட்சி, தங்களை மீறி அயோத்தியில் ஈ, காக்காய் கூட பறக்க முடியாது என்று கொக்கரித்தது. மத்தியிலோ, 'மதச்சார்பற்ற தன்மை'யைக் குத்தகைக்கு எடுத்த வி.பி.சிங் பிரதமர். மத்திய, மாநில அரசுகள் இணைந்து, அயோத்தியை யுத்தபூமி ஆக்கின. (அயோத்தி என்றாலே யுத்தம் இல்லாத இடம் என்று தான் பொருள்!)

நாடு முழுவதிலுமிருந்து கரசேவகர்கள் அயோத்தி சென்றனர். அவர்கள் பல இடங்களில் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். பலர் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகினர். அயோத்தி செல்லும் அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டன. எங்கும் காவல்துறையின் அதீத கட்டுப்பாடுகள். காவியுடை அணிந்திருந்தாலே கைது செய்யப்படும் நிலைமை. அயோத்தி செல்லும் ரயில்கள், பேருந்துகள் அனைத்தும் ரத்து. ஆனால், இந்த அராஜக தடைகளை மீறி, அன்புடன் உணவிட்டு கால்நடையாகவே பயணித்த கரசேவகர்களை ஆதரித்தனர் மக்கள்.

அனைத்துத் தடைகளையும் மீறி, குறிப்பிட்ட தினமான அக்டோபர் 30ல் அயோத்தியில், அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி பல்லாயிரக் கணக்கில் கரசேவகர்கள் திரண்டனர். காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பலநூறு கரசேவகர்கள் பலியாகினர். சரயு நதிஎங்கும், கரசேவகர்களின் சடலங்கள் மிதந்தன. அந்த நிகழ்வே இந்திய அரசியலில் பாரதீய ஜனதா கட்சி முதன்மையான இடத்தைப் பிடிக்க வித்திட்ட நிகழ்வு என்றால் சற்றும் மிகையல்ல.

அப்போது தமிழகத்தில் திருவாளர் கருணாநிதியின் ஆட்சி. முலாயமுக்கு தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்பதை நிரூபிக்க அவரும் கடும் நெருக்கடிகளை ஹிந்து இயக்கங்களுக்கு ஏற்படுத்திவந்தார். அதையும் மீறி ஹிந்து இயக்கங்கள் ராமஜோதி பிரசார இயக்கத்தை நடத்திவந்தன. நானும், எனது நண்பர்களுடன் அதில் தீவிரமாக ஈடுபட்டேன். எங்கள் ஊரான வடசித்தூருக்கு ராமஜோதி ரதம் வந்தபோது கிராமம் அதுவரை காணாத வரவேற்பளித்தோம். ரதம் வந்த நாளன்று மாலை முதலாகவே ஒலிபெருக்கி பிரசாரம் களை கட்டியிருந்தது. 'வந்துவிட்டது ராமஜோதி ரதம்' என்று சுமார் ஆறு மணிநேரம் சொல்லிக் கொண்டிருந்தோம். இரவு 10.30 மணியளவில் தான் ராமஜோதி ரதம் வந்தது. அப்போது கூடிய கூட்டத்தை இன்றும் எங்களால் மறக்க முடியாது. எங்கள் கிராமம் மட்டுமல்லாது அண்டைக் கிராமங்களில் இருந்தும் நூற்றுக் கணக்கான மக்கள் அருள்மிகு பிளேக் மாரியம்மன் கோயிலில் குழுமினர்.

ரதத்திலிருந்து பெற்ற ஜோதியை மற்றொரு அணையா தீபத்தில் ஏற்றி தனி வாகனத்தில் வைத்து இருபதுக்கு மேற்பட்ட கிராமங்களுக்கு நாங்களே கொண்டு சென்றோம். ஒவ்வொரு கிராமத்திலும் கிடைத்த அற்புத அனுபவங்களை மறக்க முடியாது. ராமபிரான் மீதான கிராம மக்களின் பக்தி எங்களையும் மக்களையும் இணைத்தது. நாடு முழுவதும் நடந்துவந்த அறப்போராட்டத்தில் நாங்களும் எங்களால் இயன்ற மட்டிலும் தீவிரமாகப் பங்கேற்றோம்.

இந்நிலையில் தான், அக்டோபர் 22ம் தேதி, திடீரென நானும் எனது நண்பர்கள் திருவாளர்கள் இளங்கோ, பிரகாஷ், முரளி, கோபால், திருஞானம் உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்யப்பட நாங்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு ஏற்கனவே ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹிந்து இயக்கத் தொண்டர்கள் எங்களுக்கு முன்னதாக கைதாகி சிறையில் இருந்தனர்.

அன்று முதல் நவம்பர் 5ல் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் வரை, 15 நாட்களும் கிடைத்த சிறை அனுபவம் எனது வாழ்வின் ஓரங்கம். அது எனக்கு மகிழ்வையும் தன்னம்பிக்கையையுமே அளித்தது. ஆனால், அந்தக் காலத்தில் என் வீட்டிலும் எனது நண்பர்களின் வீடுகளிலும் அடைந்த கஷ்டங்கள் தனி அத்தியாயம் ஆகத் தகுந்தவை.

கோவை சிறையில் 'வால்மேடு' பகுதியில் ஒரு வளாகத்தில் திறந்தவெளி சிறைக்கூடங்களில் நாங்கள் அடைக்கப்பட்டோம். உறங்க மட்டுமே சிறை அறைகளை தஞ்சம் புகுவோம். சிறைக்குள் தரக்குறைவான உணவு, சுகாதாரமற்ற சூழல், சிறைப்படுத்தப்பட்ட உணர்வு ஆகியவற்றை மீறி, தொண்டர்களின் ஒருங்கிணைந்த பயிற்சி முகாமாக அந்த நாட்கள் மாற்றப்பட்டன. திருவாளர்கள் மிசா நாராயணன், அர்ஜுன் சம்பத், முகாம்பிகை மணி உள்ளிட்டோர் சிறைக்குள் கலகலப்பான பயிற்சிமுகாம் சூழலை ஏற்படுத்தினர். தினமும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், பாடல்கள், அளவளாவல்கள், யோகாசனம், உடற்பயிற்சிகள், என்று சிறை நாட்கள் கழிந்தன.

சிறைக்குள் இருந்த உணர்வே கடைசி நாட்களில் முற்றிலும் மறைந்துவிட்டிருந்தது. தினசரி எங்களைப் பார்க்க ஊரிலிருந்து வரும் உறவுகள் அளிக்கும் தின்பண்டங்களைப் பகிர்ந்து உண்ணுவோம். இதனிடையே தான் அக்டோபர் 30 வந்தது. எங்களுக்கு நாட்டில் நடக்கும் சம்பவங்களைச் சொல்ல ஏற்பாடு இருந்தது. அதன் மூலமாக நாட்டில் மத்திய, மாநில அரசாங்கங்கள் நடத்திவரும் ஹிந்துவிரோத நடவடிக்கைகள் தெரிந்திருந்தன. கரசேவை தினத்தன்று, நாங்கள் வால்மேடு பகுதிக்குள் பிரமாண்ட ஊர்வலம் நடத்தினோம். எங்கிருந்தோ வந்த ராமர் படத்தை அலங்கரித்து சப்பரம் அமைத்து, ராமபஜனை பாடியபடி, ஊர்வலம் சென்றோம். கரசேவகர்களுக்கு எந்த துயரமும் நேரக்கூடாது என்று பிரார்த்தித்தோம்.

அதன் பிறகு நடந்தது சரித்திரம். கரசேவை தடை செய்யப்பட்டது; ரதயாத்திரை சென்ற அத்வானி பிகாரில் கைது செய்யப்பட்டது; வி.பி.சிங் அரசுக்கு பா.ஜ.க. ஆதரவை வாபஸ்; அயோத்தியில் பலநூறு கரசேவகர்கள் உயிரை அர்ப்பணித்தது; வி.பி.சிங் அரசு கவிழ்ந்து சந்திரசேகர் பிரதமர் ; என்று நீளும் சரித்திரம்.

தமிழகத்தில் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்றக் காவலை நீட்டிக்க கருணாநிந்தி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, எங்களுக்கு ஐந்து நாட்கள் முன் கைது செய்யப்பட்டவர்களின் காவல் நீட்டிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் தான் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. உடனடியாக நாங்கள் அனைவரும் நவம்பர் 5ம் தேதி நள்ளிரவு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி விடுதலை செய்யப்பட்டோம்.

இன்று நானும் எனது நண்பர்களும் சிறை மீண்ட நாளின் இருபதாவது ஆண்டு நிறைவு நாள். அயோத்தி இயக்கம் அதன்பிறகு பல கட்டங்களைத் தாண்டிவிட்டது. அங்கிருந்த அடிமைச் சின்னமும் அகற்றப்பட்டவிட்டது. அந்த இடம் ராம்லாலாவுக்கே சொந்தம் என்று தீர்ப்பும் வந்துவிட்டது. அயோத்தி இயக்கம் காரணமாக பாரதீய ஜனதா கட்சி மத்திய ஆட்சியைக் கைப்பற்றவும் காலம் வழிகோலியது. இந்த அனுபவங்கள் நமக்கு படிப்பினைகள். இதனை மறந்துவிட்டு ஆட்சி மயக்கத்தில் பா.ஜ.க. செய்த சில தவறுகளின் பலனை தற்போது அனுபவிக்கிறது. ஆயினும் காலம் சக்கரமாகச் சுழல்வது. ராமன் ஆண்ட மண்ணில் ராமராஜ்யம் மலரும் நாள் விரைவில் வரும்.

நாங்கள் கைது செய்யப்பட நாளில், கைதுக்கு தப்பிய எனது நண்பர்கள் (இருவரும் சகோதரர்கள்) விஜயகுமாரும் குமாரும் நிகழ்த்திய சாகசம் மறக்க முடியாதது. கிராமத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்களை மீறி, ''கைது செய்யப்பட ஹிந்து இயக்கத் தலைவர்களை விடுதலை செய்'' என்று சுவரெழுத்து பிரசாரம் செய்த இவர்கள், ''இந்த சிறு தூறலுக்கே இரும்புக்குடை என்றால், நாளைய நெருப்பு மழைக்கு எந்தக் குடை?'' என்று எழுதிய வாசகத்தை சிறையிலிருந்து வெளிவந்த பிறகு பார்த்து உணர்ச்சிவசப்பட்டோம். உண்மைதான், நாளைய நெருப்பு மழைக்கு இந்த 'மதச்சார்பின்மை'யைக் குத்தகைக்கு எடுத்தவர்களிடம் எந்தக் குடை இருக்கிறது?

********************************
சிறையிலிருந்து விடுதலை ஆனபின் நான் எழுதிய அனுபவ கவிதை இது...
ஜெயில் சோறு

கொட்டையாய் இருந்தது அரிசி -அதன்
கூடவே புழுங்கிய வாடை.
தொட்டதும் ஜில்லென இருக்கும்- மதியச்
சோற்றுக்கு நேற்றைய பாடை.

ஒருநூறு அசுகள் கொண்ட - பாடை
ஒன்றினைக் கைதிகள் கொணர்ந்து
தரும்போது பசியாய்த் தானிருக்கும்- பாழுந்
தொண்டையோ அனுமதி மறுக்கும்.

அச்சு அச்சாகவே இருக்கும்- அதில்
அங்கங்கே நெல்களும் தெரியும்.
மச்சமாய் கற்களும் தெரியும்- அதை
உண்டிடில் கற்குவியல் பிரியும்.

காற்படிக் கரண்டியால் மொண்டு - சாம்பார்
கைதி என்தட்டினில் ஊற்ற,
பாற்கடல் நடுவினில் பள்ளிகொண்டான் போல
படியச்சு கண்ணுக்குத் தெரியும்.

நீரினில் மோரினைக் கலக்கி - பல
நாள்படு புளிச்சுவை மிகவே
மோரென ஊற்றிடுவார்கள் - அதை
முகர்ந்திடில் கள்மணம் வீசும்.

ஏனடா ஜெயிலுக்கு வந்தாய்? என்று
கேட்டிடும் கேள்வியை அங்கு
தானடா நன்றாய் உணர்ந்தோம் - புழுச்
சோற்றினைக் கொட்டியபோது!

இருப்பினும் எம்மனம் முழுதும் -ராமர்
கோயிலில் இருந்தது எனவே
விருப்பமும் வெறுப்புமே அற்று - அதை
உவந்துணவாகவே கொண்டோம்...
.

செவ்வாய், நவம்பர் 02, 2010

மக்களாட்சி நாட்குறிப்பின் துக்கமான பக்கங்கள்...

சர்க்கஸில் கோமாளிக் கூத்துகள் கண்டிருப்போம். அவற்றை எல்லாம் விஞ்சிவிட்டன கர்நாடகா மாநிலத்தில் நிலவும் அரசியலும் அங்கு நடத்தப்படும் ஆட்சிக்கவிழ்ப்பு நாடகங்களும். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த தேவே கவுடாவின் கட்சியும் காங்கிரசும் திரைமறைவில் நடத்திய சதிகளைக் கைவிட்டுவிட்டு, நேரடியாகவே களமிறங்கி நடத்திய கூத்துக்கள் நமது மக்களாட்சி முறையின் அவலங்களை வெளிச்சம் போட்டன. அவற்றை கவுடா பாணியிலேயே முறியடிக்க எடியூரப்பா நடத்திய எதிர்வினைகளும் கண்டிப்பாக பாராட்டத் தக்கவை அல்ல.

அக்டோபர் முதல் வாரத்திலிருந்தே கர்நாடகா அரசியல் நிலவரம் சரியில்லை. முதல்வர் எடியூரப்பா மீதான அதிருப்தியில் இருந்த 14 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும், ஆட்சியை ஆதரித்த 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் திடீரென மாயமானார்கள். உடனே மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாத நிலையில், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்த பா.ஜ.க. பலவகைகளில் முயன்றது.

ஒருவழியாக, அதிருப்தி அணிக்கு தலைமை தாங்கிய அமைச்சர் ரேணுகாசார்யாவைத் தொடர்பு கொண்ட கட்சி நிர்வாகிகள் அவரது கோரிக்கைகளை கேட்டனர். ரேணுகாசார்யாவோ எடியூரப்பா பதவி விலகாமல் சமரசம் சாத்தியமில்லை என்றார். அப்போதுதான், கவுடா கட்சி ஆதரவில் சென்னை ஓட்டலில் அதிருப்தியாளர்கள் தங்கியிருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரும் எடியூரப்பா ஆட்சிக்கு அளித்துள்ள ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், அதிருப்தியாளர் குழுவில் இருந்த இரு அமைச்சர்களை பதவிநீக்கம் செய்தார் எடியூரப்பா.

224 பேர் கொண்ட கர்நாடகா சட்டசபையில் பா.ஜ.க.வின் பலம் (சுயேச்சைகள் உள்பட) 123 ஆக இருந்தது. இதில் 19 பேர் ஆதரவை வாபஸ் பெற்றதால் அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. இதனிடையே அதிருப்தி பா.ஜ.க.வினரை மதச்சார்பற்ற ஜனதாதளமே இயக்குவது வெளிப்படையாகத் தெரிய வந்தது. சென்னை, மகாபலிபுரம், கோவா என்று பல இடங்களுக்கு அதிருப்தி பா.ஜ.க.வினரை அழைத்துச் சென்ற ம.ஜ.தளம் கட்சியினர், அவர்களுக்கு தேவையான அனைத்து உல்லாச ஏற்பாடுகளையும் செய்தனர். கோவாவில் அவர்களை நேரில் சந்தித்த முன்னாள் முதல்வர் குமாரசாமியும் கோவா காங்கிரஸ் தலைவர்களும் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது அதிருப்தி எம்.எல்.ஏ.களுக்கு விலை (ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ரூ. 50 கோடி) நிர்ணயிக்கப்பட்டது. அதன் முடிவில், அதிருப்தியாளர்கள் இருவர் பெங்களூர் சென்று, ஆளுநர் பரத்வாஜிடம், அதரவு வாபஸ் கடிதத்தை அளித்தனர்.

இதற்காகவே காத்திருந்த ஆளுநர், கர்நாடகா சட்டசபையில் அக். 11 ம் தேதிக்குள் பலத்தை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டார். இதில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கு பத்து நாட்கள் முன்னதாகவே ஆளுநர் மாளிகையில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் ஆளுநர் பரத்வாஜை சந்தித்து எடியூரப்பா ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் தீட்டி இருந்தனர். இதுகுறித்த பத்திரிகை செய்திகளை இவர்கள் மூவரும் மறுக்கவே இல்லை.

ஆளுநரின் உத்தரவை அடுத்து எடியூரப்பாவும் அதிரடியில் இறங்கினார். தனது அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற அனைவருக்கும் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பிய அவர், கட்சித்தாவல் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சட்டசபை சபாநாயகர் போப்பையாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதனிடையே சபாநாயகருக்கு பிரத்யேகக் கடிதம் எழுதிய ஆளுநர், ''சட்டசபையில் யாரையும் பதவிநீக்கம் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்'' என்று எச்சரித்தார். இது சபாநாயகரின் உரிமையில் தலையிடுவதாகும் என்று பா.ஜ.க.வும் சபாநாயகரும் கண்டித்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியைக் கவிழ்க்க ஒப்புக்கொள்ளாத அமைச்சர் ரேணுகாசார்யாவும் , இரு எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க.வுக்கு திரும்பினர். மற்றவர்கள் வேறெங்கோ அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 11 பேரையும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 5 பேரையும், ஆளுநரின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல், தனது 'வானளாவிய அதிகாரத்தைப்' பயன்படுத்தி, கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்தார் சபாநாயகர் போப்பையா (அக். 9 ).

இதன்மூலம், கர்நாடகா சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 208 ஆகக் குறைந்தது. இதில் பா.ஜ.க.வின் எண்ணிக்கை 106 என்பதால் நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி உறுதியானது. அக்.10ம் தேதி நடந்த குரல் வாக்கெடுப்பில் எடியூரப்பா ஆட்சி தப்பியது. அதற்கு முன்னதாக பதவி நீக்கம் செய்யப்பட எம்.எல்.ஏக்களும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் நடத்திய ரகளையால் மாநிலத்தின் மானம் கப்பலேறியது.

மீனுக்கு காத்திருந்த கொக்கு போல, உடனடியாக கர்நாடகா அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார். ஆளுநர் பரத்வாஜ். ஆனால், எதிர்க்கட்சியினரின் பித்தலாட்டம் மாநிலத்தில் பரவலாக வெளிப்பட்டிருந்த நிலையில் எடியூரப்பா ஆட்சியைக் கலைக்க மத்திய அரசு தயங்கியது. தவிர, பதவிநீக்கம் செய்யப்பட 16 எம்.எல்.ஏக்களும் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பைப் பார்த்த பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என்று மத்திய அரசு பொறுமை காத்தது.

இதனிடையே மத்திய அரசின் கட்டளையை அடுத்து, மீண்டும் சட்டசபையில் பெரும்பான்மையை 'ஓட்டெடுப்பு முறையில்' நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டார். அதை ஏற்று, அக். 13ல் மீண்டும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார் எடியூரப்பா. அதற்குள் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த எதிர்க்கட்சியினருக்கு, வழக்கு விசாரணையை அக். 18க்கு ஒத்திவைத்து, முகத்தில் கரி பூசியது உயர்நீதிமன்றம்.

நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதில் அளிக்கப்படும் தீர்ப்பு, எடியூரப்பா அரசுக்கு சோதனையாகவும் இருக்கலாம். நம்பிக்கைத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த பிறகே கட்சித்தாவல் சட்டம் பாய முடியும் என்பது காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் வாதம். ஆனால், யாரையும் பதவிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உரிமை உள்ளது என்கிறது பா.ஜ.க.

பத்து நாட்களுக்கு மேலாக நாட்டு மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த கட்சித்தாவல் நாடகங்களுக்காகவே சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது எடியூரப்பா நிலைப்பாடு. இரண்டு தரப்பினரும் தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை சமர்ப்பித்து நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இதில் சிக்கலான விஷயம், 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் பற்றியது அல்ல. அரசுக்கு ஆதரவளித்த 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் பதவி நீக்கியது நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்தப்படலாம். அப்போது, மூன்றாவது முறையாக சட்டசபையில் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபிக்க வேண்டியிருக்கலாம். அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கிவிட்டார் எடியூரப்பா.

ஏற்கனவே நூலிழை பெரும்பான்மையில் ஆட்சி அமைத்த எடியூரப்பா 'ஆபரேசன் லோட்டஸ்' என்ற அதிரடித் திட்டம் மூலமாக, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலரை பதவி விலகச் செய்து அவர்களை பா.ஜ.க. வேட்பாளர்களாக தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து, பெரும்பான்மையை உயர்த்திக் கொண்டார். அதே 'ஆபரேசன் லோட்டஸ்' திட்டத்தின் இரண்டாம் பாகத்தை மீண்டும் அரங்கேற்றினார் எடி. இதை காங்கிரஸ் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தினசரி ஒரு எம்.எல்.ஏ. வீதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து பதவிவிலகல் நிகழவே, காங்கிரஸ் பதறியது. தங்களால் மட்டுமே எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முடியும் என்று இறுமாந்திருந்த காங்கிரஸ், குமாரசாமி குழுவுக்கு இது சரியான பதிலடிதான் என்பதில் சந்தேகமில்லை. இதன்மூலமாக, காங்கிரஸ் தரப்பில் மேலும் மூன்று எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைந்தது.

திகைப்பில் ஆழ்ந்த காங்கிரஸ், எடியூரப்பா ஆட்சியை நீக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் எதிர்க்கட்சிகளின் அட்டூழியத்தை அவர்கள் பாணியிலேயே கிள்ளும் எடியூரப்பாவுக்கு வலுத்துள்ள மக்கள் ஆதரவைக் கண்டு மத்திய அரசு மிரண்டது. ஏற்கனவே தவறான அரசியல் நடவடிக்கைகளால் காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் அமைதி குலைந்திருக்கும் நிலையில், கர்நாடகாவிலும் கைவைத்து பாடம் கற்க பிரதமர் மன்மோகன் சிங் தயாரில்லை. தேன்கூட்டைக் கலைத்தவன் கதை ஆகிவிடக் கூடாது என்று மத்திய அரசு மௌனம் காத்தது. தவிர உயர்நீதிமன்ற விசாரணையில் வெளியாகும் தீர்ப்பு பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கும் என்று மத்திய அரசு கருதியது.

இந்நிலையில் அக். 18ல் உயர்நீதிமன்ற பென்ச் அளித்த தீர்ப்பில் இரு நீதிபதிகளும் எதிரெதிராக தீர்ப்பளித்ததால், மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு வழக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனால், பதவிநீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் நிலை குறித்த நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. எடியூரப்பா மீதான் அதிருப்தியால் எதிரணிக்கு விசுவாசமாக மாறிய பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு ஆதரவாகத் திரும்புவதாக அறிவித்தனர். அதை கட்சி நிராகரித்தது.

நீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் கரம் வலுப்பெற்று வந்த நிலையில், பா.ஜ.க.வின் தொடர் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க, வருமான வரித் துறையை ஏவியது மத்திய அரசு. பா.ஜ.க. அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், ஸ்ரீராமுலு மற்றும் சில எம்.எல்.ஏக்களின் வீடுகளில் அக். 26ல் திடீர் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித் துறையினரை சொல்ல வைத்தது. ஆனால், இதுவரை சோதனைக்கு உள்ளானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்தே அந்த சோதனை, பா.ஜ.க.வை மிரட்டவே நடத்தப்பட்டது உறுதியாகிறது. இருப்பினும், இந்த சோதனையின் விளைவாக 'ஆபரேசன் லோட்டஸ்' திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.

வருமான வரித் துறையை சொந்த லாபங்களுக்காக காங்கிரஸ் கட்சி பயன்படுத்துவது புதிதல்ல. வழிக்கு வராத கூட்டணிக் கட்சியினரைக் கட்டுப்படுத்தவும், எல்லை மீறும் சொந்தக் கட்சியினரைக் கட்டுக்குள் வைக்கவும், அரசுக்கு எதிரான அதிகாரிகளை கேவலப்படுத்தவும், பிரபலங்களை கட்சியில் சேருமாறு நிர்பந்திக்கவும், வருமான வரித் துறையை வேட்டை நாயாக காங்கிரஸ் பயன்படுத்தி வந்துள்ளது. அண்மையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் நடந்த பல்லாயிரம் கோடி ஊழல் அம்பலமானவுடன், குற்றவாளிகளை விட்டுவிட்டு, 20 லட்சம் மதிப்பிலான பணியைச் செய்த பா.ஜ.க. பிரமுகர் சுதான்ஷு மிட்டல் வீட்டில் சோதனை நடத்தி பிரச்னையை திசை திருப்பியது மத்திய அரசு. அதே நாடகத்தை கர்நாடகத்திலும் அரங்கேற்றினார், ‘மிஸ்டர் கிளீன்’ மன்மோகன்.

இதனிடையே, தற்போது (அக். 29 ), பெங்களூர் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கர்நாடகா அரசைக் கவிழ்க்க சதி செய்தவர்களுக்கு சாட்டையடியாக வந்துள்ளது. சட்டசபைக்கு வெளியே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதைக் கொண்டு அவர்களை பதவியில் இருந்து சபாநாயகர் நீக்கியது சரியே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், எடியூரப்பா அரசு தப்பியுள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக தீர்ப்பு வெளியானாலும் கூட, இனிமேல் ஆட்சி கவிழும் நிலை ஏற்படாது. இந்தத் தீர்ப்பால், தேவே கவுடாவும், அவரது மகன் குமாரசாமியும் ஆடிப் போயிருக்கிறார்கள். மத்திய அரசு கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறது. மொத்தத்தில், ஆட்சிக் கவிழ்ப்பு சதிகளை முறியடித்து நாடு முழுவதும் பிரபலம் ஆகியிருக்கிறார் எடியூரப்பா.

ஆயினும், பா.ஜ.க.வின் வெற்றி சற்று நெருடலாகவே உள்ளது என்பதை மறுக்க முடியாது. நமது மக்களாட்சி முறை எவ்வளவு தூரம் சீரழிந்துள்ளது என்பதற்கான சான்றாக கர்நாடகா விளங்குகிறது. நல்லாட்சி நடத்த எண்ணுபவரும் கூட, இந்த சாக்கடை அரசியலில் எதிரிகள் மட்டத்துக்கு தரமிழந்து போரிட வேண்டியிருப்பது காலத்தின் கோலம் தான். சதிகளை சதிகளால் தான் வெல்ல முடியும் என்று எடியூரப்பா நிரூபித்திருக்கிறார். ஆனால், 'ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை எதிர்க்கட்சியினரை விலைக்கு வாங்க மாட்டேன்' என்று சொன்ன (1998 ) அடல் பிகாரி வாஜ்பாய்க்கு கிடைத்த நற்பெயர் எடியூரப்பாவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

எனினும், எதிரிகளின் சதிக்கு எதிராக நேர்மைத் தத்துவம் பேசிக் கொண்டிருந்திருந்தால், இந்நேரம் எடியூரப்பா ஆட்சி கவிழ்ந்து பதவிப் பித்தர் குமாரசாமியின் ஆட்சியோ, மத்திய அரசின் கைப்பாவையான பரத்வாஜின் ஆட்சியோ அங்கு வந்திருக்கும். அப்போது, ஆட்சியைக் காக்கத் துப்பில்லாத கட்சி என்று ஊடகங்கள் புழுதி வாரித் தூற்றி இருக்கும். மக்களும் கூட, ஆட்சியைக் காக்கும் திறனற்றவர் என்று எடியூரப்பா மீது நம்பிக்கை இழந்திருப்பர். அந்த நிலை வாராமல் எடியூரப்பா காத்திருக்கிறார். பா.ஜ.க.வின் அரசியலில் தூய்மை என்ற தத்துவம் நிலைகொள்ள இன்னும் பல்லாண்டு காலம் பொறுத்திருக்க வேண்டும் என்பதையும் அவரது வெற்றி காட்டி இருக்கிறது.
.
வெற்றி பெற்றவருக்கே உபதேசம் செய்யும் தகுதி வாய்க்கிறது. மகாபாரத்தில் கண்ணன் காட்டிய வழி
, அதர்மத்தை அதன் வழியிலேயே தோற்கடிக்கலாம் என்பது தான். இப்போதைக்கு பா.ஜ.க. கர்நாடகாவில் அதை செய்து காட்டி இருக்கிறது. ஆனால், ராமராஜ்யமே பா.ஜ.க.வின் இலக்காக இருக்க வேண்டும் என்பதை இந்நேரத்தில் பா.ஜ.க.வுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.
-----------------------------------
நன்றி: விஜயபாரதம் (12.11.2010)
.