வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

காஷ்மீரில் சேவாபாரதி அரிய சேவை

லே பகுதியில் இயற்கைப் பேரழிவு:
ஸ்வயம்சேவகர்கள் மீட்புப்பணி


காஷ்மீர் மாநிலத்தின் லே பகுதி இதுவரை காணாத கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. லே மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6 -ம் தேதி நிகழ்ந்த இப்பேரழிவில் நிம்மோ, பாஸ்கோ, ஷாபூ, பைங், நே ஆகிய கிராமங்கள் முற்றிலும் நாசமாகிவிட்டன. சொக்லாம்சர், லே நகரங்களும் கடும் பாதிப்புக்கு இரையாகி உள்ளன.

இதுவரை பல நூறு பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆயிரக் கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அழிக்கப்பட்டுவிட்டன. உயிர் பிழைத்தவர்களை கண்டறியும் பணியே சவாலானதாக மாறியுள்ளது. 150 பேர் இறந்ததாகவும், 600 பேர் காணாமல் போனதாகவும் அரசு புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இது வரை 132 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

லே மாவட்ட மருத்துவமனை, பஸ் நிலையம், தொலைபேசி நிலையம் அனைத்தும் வெள்ளத்தில் சிக்கியதால் மீட்புப் பணி சிரமமானதாகி விட்டது. தொலைபேசி சேவை முற்றிலும் செயலிழந்திருப்பதால் தகவல் தொடர்பு அறவே இல்லை. லே பகுதிக்குச் செல்லும் ஸ்ரீநகர் நெடுஞ்சாலை, குலு மணாலி சாலை, கார்கில் நெடுஞ்சாலை, ரோடங் சாலை ஆகியவை நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.


போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் மீட்புக் குழுக்கள் செல்ல முடியவில்லை. எனவே அரசு நிர்வாகம் மீட்பு, நிவாரணப் பணிகளில் மெதுவாகவே ஈடுபடுகிறது. லே விமான நிலையம் வெள்ளத்தால் ஏற்பட்டால் சேறு நிறைந்து காணப்படுகிறது.

இத்தகைய சூழலில், நம்பிக்கை நட்சத்திரமாக, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், இயற்கையின் சவாலை எதிர்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிய சேவைப் பணிகளை செய்து வருகிறார்கள்.


லே அருகில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் (ஐ.டி.சி) நடந்து வந்தது. அந்த சமயத்தில் தான் வெள்ளச்சேதம் ஏற்பட்டது. உடனடியாக முகாம் ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்த தொண்டர்கள் அனைவரும் வெள்ளப் பகுதிக்கு விரைந்தனர். அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் செல்வதற்கு முன் அங்கு சென்ற ஸ்வயம்சேவகர்கள், யாருக்காகவும் காத்திருக்காமல் மீட்புப் பணியைத் துவங்கிவிட்டனர்.

முதல்கட்டமாக வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணி நடந்தது. மீட்கப்பட்டவர்கள் பொது இடங்களில் முகாம் அமைத்து தங்கவைக்கப் பட்டுள்ளனர். ‘லடாக் சிங்காய் கோஷ்பா’ அமைப்புடன் இணைந்து ‘ஜம்மு காஷ்மீர் சேவாபாரதி’ நிவாரண முகாம்களைத் துவக்கிவிட்டது. இங்குள்ளவர்களுக்கு உணவு, உடை, போர்வைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

லே இயற்கை பேரழிவுக்கான தொண்டுப்பணிகளை ஒருங்கிணைக்க, சேவாபாரதி கூட்டிய அவசரக் கூட்டத்தில் பல்வேறு தன்னார்வ இயக்கங்கள் பங்கேற்றன. அப்போது, அனைவரது ஒப்புதலுடன் 'லடாக் ஆப்த சகாய சமிதி' (எல்.ஏ.எஸ்.எஸ்) துவக்கப்பட்டது. பிரிகேடியர் சுச்சித் சிங் இதன் தலைவராகவும், டாக்டர் குல்தீப் குப்தா செயலாளராகவும், அபய் பிரக்வால் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த சமிதி, லே பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்குத் தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து நடத்துகிறது.

உடனடியாக லே பகுதியில் பணியாற்றும் ஸ்வயம்சேவகர்களுக்கு ஜம்முவில் இருந்து நிதி வசூலித்து அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அருகிலுள்ள பகுதியில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகித்து வருகிறார்கள். இதுவரை (ஆக.12 ) 2000 கம்பளிகளும், 500 குடும்பங்களுக்கு பாத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.


அருகில் கிடைக்க ஏதுவான நிலை இல்லாதபோதும், 2000 ஆடைகளும் 500 காலணிகளும் வழங்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் ஜம்முவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தேவியான மருத்துவ உதவி வழங்கப்படுகிறது. இப்பணியில் பல நூறு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

லே பகுதி மக்களுக்கு உதவ விருப்பமுள்ளவர்கள், இதற்கெனத் துவங்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கலாம். 'லடாக் ஆப்த சகாய சமிதி' (எல்.ஏ.எஸ்.எஸ்) இதற்காக ஒரு வங்கிக் கணக்கைத் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துவக்கியுள்ளது (கணக்கு எண்:1948000101057923).


கடுமையான இயற்கைச் சீற்றத்துக்கு ஆளாகித் தவிக்கும் லே சகோதரர்களுக்கு நம்மால் நேரடியாக உதவ முடியாமல் இருக்கலாம். எல்.ஏ.எஸ்.எஸ் அமைப்பும், ஸ்வயம்சேவகர்களும் ஆற்றும் நலப்பணிகளுக்கு நிதி வழங்கி அவர்களுக்கு தோள் கொடுக்கலாமே!
----------------------------------------------------------------------------------
பெட்டிச் செய்தி
என்ன தேவைகள்?


பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போது உடனடித் தேவையாக இருப்பது, உணவு, உடை, போர்வைகள் தான். லே பகுதி மிகவும் குளிரான பனிப்பகுதி. எனவே ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 4 கம்பளிகள், 4 மெத்தைகள், 4 தலையணைகள், கொட்டகைத் துணி, ஸ்வெட்டர்கள், குளிர் தாங்கும் ஆடைகள், பாத்திரங்கள் உள்ளிட்ட ரூ. 16 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள உடனடியாக வழங்க வேண்டியுள்ளது.

தவிர, வெள்ளச் சீற்றத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்பில் இரு அறைகள் கொண்ட சிறு வீடுகள் கட்டித் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 'லடாக் ஆப்த சகாய சமிதி' இதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டது.

தொடர்பு முகவரி:
SEWA BHARTI JAMMU
SEWA BHARTI ,
VISHNU SEWA KUNJ,
VED MANDIR COMPLEX,
AMPHALLA JAMMU,
J & K.
email: sewabhartijammu@gmail.com
Telephone: 094191109 40,09419758339, 09419143516
----------------------------------------------------------------------------------

காண்க: தமிழ் ஹிந்து
.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக