வியாழன், ஏப்ரல் 09, 2015

அம்பேத்கரும் தேசியமும்

Ambedkar 2
அண்ணல் அம்பேத்கர்
அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை புரட்சியாளர்களுக்கே உரித்த மேடு பள்ளங்கள் நிரம்பியது. அதுபோலவே அவரது கருத்துகளிலும் பலத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவின் கொடிய பழக்கங்களுள் ஒன்றான தீண்டாமையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவரான அம்பேத்கரின் உடனடி எதிர்வினை இயல்பு, அவரது கருத்துப் பரிமாற்றங்களில் காணப்படுகிறது. அவரது தேசியம், ஹிந்துத்துவம் தொடர்பான கருத்துகளிலும், அவரது ஆரம்பகால கருத்துகளில் இருக்கும் கோபமும் கடுமையும் பின்னாளில் நிதர்சனத்தை உணர்ந்து கனிந்தவையாக ஆவதைக் காண முடியும்.

இந்தப் பின்னணியுடன் தான், அம்பேத்கரின் தேசியம் குறித்த பார்வையை அணுக வேண்டும். விடுதலைப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த காலகட்டத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக அம்பேத்கர் செயல்பட்டார் என்று இன்றும் அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இவ்விஷயத்தில் அம்பேத்கரை நேர்மையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், பல்வேறு சமயங்களில் அவர் தேசியம், தேசப்பிரிவினை, தீண்டாமை, சுய நிர்ணய உரிமை குறித்துக் கூறிய பல்வேறு கருத்துகளை கவனமுடன் பரிசீலிக்க வேண்டும்.

அம்பேத்கர் ஏதாவது ஒரு காலகட்டத்தில் கூறிய சில கருத்துகளைக் கொண்டு அவரை ஒட்டுமொத்தமாக மதிப்பிடுவதும், புறக்கணிப்பதும் தவறாகவே முடியும். இன்று ஹிந்துத்துவத்தை எதிர்க்கும் பல அறிவுஜீவிகள், வருண அடிப்படையிலான ஹிந்து மதத்தை கடுமையாக விமர்சிக்கும் அம்பேத்கரின் கருத்துகளைக் கையாள்கிறார்கள். அவர்கள் பின்னாளில் ஹிந்துத்துவம் குறித்து என்ன கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை அவர்கள் வசதியாக மறைத்துவிடுகிறார்கள். அதுபோலவே தான், தேசியம் குறித்த அண்ணலின் கருதுத்துகளில் உள்ள முரண்பாட்டையும் புரிந்துகொள்ள வேண்டும்.

அம்பேத்கர் மிகவும் தாழ்த்தப்பட்ட மஹார் ஜாதியைச் சார்ந்தவராக இருந்ததால், அவர்கள் குடும்பம் வசதியாக இருந்தபோதும் (அவரது தந்தை ஆங்கிலேய ராணுவத்தில் சுபேதாராகப் பணியாற்றியவர்) புறக்கணிக்கப்பட்ட அனுபவங்களை இளமையிலேயே அடைந்தவர். தனது முன்னேற்றத்துக்கு ஜாதி அடையாளமே ஒவ்வொருமுறையும் தடையாக இருந்ததைக் கண்டபோது அவருக்குள் இருந்த புரட்சியாளர் வெளிவந்தார். தனக்கு பல உயர்ஜாதியினர் உதவியதை அவர் எக்காலத்திலும் மறக்கவில்லை. அதேசமயம், தன்னை மேலிருந்து அழுத்தும் நாசகரமான தீண்டாமை என்னும் பாரத்திற்குக் காரணம் யாது என்பதை அவர் தீவிரமாக ஆராய்ந்தார். அவர் பயின்ற உயர்கல்வியும் ஆராய்ச்சிப் படிப்பும் சட்டமும் அவருக்கு ஒளிவிளக்காக உதவின.

இந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் வேகமடைந்து வந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான கொடுமைகள் தீராதவரை விடுதலைப் போராட்டம் நியாயமற்றதாகவே இருக்கும் என்பதை மகாத்மா காந்தியும் உணர்ந்திருந்தார். அவரது செயல்திட்டங்களில் ஹரிஜன மேம்பாடு முக்கியத்துவம் பெற்றது அதனால் தான். காந்தியின் வரவுக்குப் பிறகே (1915) இந்திய விடுதலைப் போராட்டம் வேகம் பெற்றது.

ஆனால், மகாத்மா காந்தி ஆங்கிலேய அரசுடன் விடுதலைக்காகப் போராடிய காலத்தில், தனது மக்களின் சுயநிர்ணயத்துக்காகவும் சமூக விடுதலைக்காகவும் போராடும் மனநிலையில் அம்பேத்கர் இருந்தார். எனவே அவர் மகாத்மா காந்தியால் தனது மக்களுக்கான போராட்டங்கள் குலையாமல் இருக்க மிகக் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்தார். அவற்றை மகாத்மா காந்தி புன்னகையுடன் கடந்தார். ஏனெனில் அண்னல் அம்பேத்கரின் வலியை அவர் உணர்ந்திருந்தார்.

காந்தி தாழ்த்தப்பட்டோர் விஷயத்தில் நாடகமாடுகிறார் என்று அம்பேத்கர் விமர்சித்தபோதும், மகாத்மா காந்தி அதனால் கோபமடையவில்லை. நாடு விடுதலை அடைந்தபோது அமைந்த தேசிய அரசில் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருக்க வேண்டும் என்று பிரதமர் நேருவை காந்திஜி கட்டாயப்படுத்தினார் என்பது வரலாறு.

நமது துரதிர்ஷ்டம், மகாத்மா காந்தியும் அண்ணல் அம்பேத்கரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்ய முடியவில்லை என்பது தான். எனினும், அம்பேத்கர் எக்காலத்திலும் தேச விரோதமாகச் செயல்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் அவரைச் சூழ்ந்திருந்தன. ஆனால் அவர் அதிகாரத்திற்காகவோ, புகழுக்காகவோ தனது தேசபக்தியை விட்டுக் கொடுத்ததில்லை.
பூன ஒப்பந்தம் செய்யச் சென்ற தலித தலைவர்கள்
பூனா ஒப்பந்தம் செய்யச் சென்ற அம்பேத்கர் உள்ளிட்ட தலித் தலைவர்கள்
தனது சமுதாய மக்களின் மீட்புக்காக எங்கிய அண்ணல், “யாராலும் நம் குறைகளைத் தீர்க்க இயலாது. நமது கைகளில் அரசியல் அதிகாரத்தைப் பெற்ற ஒரு வாய்ப்பில் அமைந்த அரசியல் சட்டத்தால் மட்டுமே அவ்வாறு தீர்க்க இயலும். இத்தகைய அரசியல் அதிகாரம் இல்லையெனில் நம் மக்களால் நம் பிரச்னைகளைத் தீர்வுக்குக் கொண்டுவர இயலாது’’ என்றார்.
அவரது வழிகாட்டுதலால் தான், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் விடுதலைப் போராட்டத்தில் உடன் இணைந்து பணியாற்றினர்.

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, அவரைப் பயன்படுத்தி விடுதலைப் போராட்டக் களத்தில் குழப்பம் விளைவிக்க ஆங்கிலேயர் பல முயற்சிகளை மேற்கொண்டனர். லண்டன் முதலாவது வட்டமேஜை மாநாட்டில் (1931) அவரைக் கலந்துகொள்ளச் செய்வதன் மூலமாக காந்திக்கு எதிராக அவரை முன்னிறுத்த முயன்றனர். ஆனால், வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், “என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்” என்று கூறிச் சென்றார் அம்பேத்கர்.

தனது வழித்தடத்தின் முந்தைய பயணியான மகாத்மா ஜோதிராவ் புலேவின் கருத்துகள் அம்பேத்கரின் கருத்துருவாக்கத்தில் பெரும் தாக்கம் செலுத்தின. அதன் அடிப்படையில் தான் அவரது ‘தலித்- பகுஜன் தேசியம்’ என்ற சிந்தனை வெளிப்பட்டது. அடிப்படையில் தான் அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்குரிமை தேவை என்று குரல்கொடுத்தார். அதை மகாத்மா காந்தி எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது, 1931-இல் பூனா ஒப்பந்தம் என்ற சரித்திர முக்கியத்துவம் வாஇந்த நிகழ்வு அரங்கேறியது. அதன்படியே இன்றும் தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதி தேர்தல் முறையில் நீடிக்கிறது.

1931-இல் மகாத்மா காந்தியும் அண்ணல் அம்பேத்கரும் நேரில் சந்தித்தபோது இருவரிடையிலான பார்வை முரண்பாடு தெளிவாக வெளிப்பட்டது. அவர் சொன்னார்:

“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன்- எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகம் யுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.”

“தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கியதாக இந்திய தேசியம் இல்லை. எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை தேசியத்துக்காகத் தியாகம் செய்ய முடியாது” என்றார் அம்பேத்கர்.
உரிமைக்குரல் அம்பேத்கர்
உரிமைக்குரல் அம்பேத்கர்
அவரைப் பொருத்தமட்டிலும், தான் பிறந்த ஜாதியின் சமூக விடுதலையே முதன்மையானது. மிகவும் நசுக்கப்பட்ட ஜாதியில் பிறந்த அவருக்கு பிறப்பிலிருந்தே மறுக்கப்பட்ட உரிமைகள் – ஆங்கிலேயரால் அல்ல, இந்த நாட்டின் பிரஜைகளான பிற உயர்ஜாதி இந்துக்களால் மறுக்கப்பட்டவை- மீட்கப்பட வேண்டும். அந்த அடிமைத் தளையிலிருந்து தனது சமுதாயம் விடுதலை பெறாமல், தேச விடுதலை பற்றிப் பேசுவது போலித்தனம் என்று அம்பேத்கர் உணர்ந்திருந்தார்.

“மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்” என்று தனது நிலைப்பாட்டை அம்பேத்கர் விளக்கினார்.

“ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்… அவர்களும் குடிமக்கள்தான்; ஆனால், குடிமக்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் கட்டிய வரியிலிருந்து பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆனால், அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பள்ளியில் அனுமதிக்க முடியவில்லை. அவர்கள் கட்டிய வரிப் பணத்திலிருந்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால், அவர்கள் அந்தக் கிணற்றிலிருந்து குடிதண்ணீர் எடுக்க முடியாது”. என்று சொன்ன அவர், இந்த நிலைமையில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தேச விடுதலைக்காக ஓரணியில் நிற்க முடியாது என்று தெளிவுபடுத்தினார்.
மகாத்மா காந்தி
மகாத்மா காந்தி
இருப்பினும், தேசியம் குறித்த தெளிவான பார்வைகளை அம்பேத்கர் கொண்டிருந்தார். தேசிய ஒருமைப்பாடு அமைவதென்பது அரசதிகாரம், பூகோள அமைப்பு போன்ற காரணிகளால் மட்டுமே அமையப்பட முடிந்த ஒன்றா? எனும் கேள்விக்கு “புவியமைப்பு ரீதியிலான ஒற்றுமை என்பது இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒன்று. ஒரு தேசியம் உருவாக்கப்படுகையில் பல சமயங்களில் இயற்கையின் உருவாக்கம் மனிதரால் மறுதலிக்கப்படுகிறது. புற காரணிகளால் ஏற்படுத்தப்படும் ஒற்றுமை குறுகிய ஒன்று. அது ஒருமைப்பாடே அல்ல. அரசதிகார அமைப்பினால் தேசிய ஒருமை உருவாக்கப்படலாமென்றால் அதுவும் மேலோட்டமான ஒன்றே. என்றென்றும் மாறாத தேசிய ஒருமைப்பாடு என்பது ஆன்மிக ஒருமைப்பாடே” என்கிறார்.

(ஆதாரம்: டாக்டர் அம்பேத்கர் 'Thoughts on Pakistan ' Part-II Chapter IV)

“தேசிய ஒருமை என்பது அதன் சிதறிக் கிடக்கும் ஆன்மிக சக்திகளை ஒருங்கிணைப்பதே ஆகும். தம் இருதய துடிப்பினை பாரதத்தின் ஆன்மிக இசையுடன் லயப்படுத்திக் கொள்வதே பாரதத்தின் தேசிய ஒருமைப்பாடாகும்” என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனையுடன் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனை ஒத்திருப்பதை இங்கு காண முடியும்.

(ஆதாரம்: சுவாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாயக் கருத்துகள்- அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை -திண்ணை)

ஜாதி விஷயத்தில் கீழ் ஜாதி, மேல் ஜாதி என்று இருந்தது போன்றே அக்காலத்தில் பெண்ணடிமையும் ஆணாதிக்கமும் இந்தியாவில் அதிகமாக இருந்தது. அக்காலத்தில் விடுதலைப் போரில் பங்கேற்றவரான சகோதரி நிவேதிதை, சமுதாயத்தில் சரிபாதியான பெண்களை ஆண்கள் அடிமைப்படுத்தியிருக்கும் வரை நாட்டின் சுதந்திரம் அடைய முடியாது என்று மகாகவி பாரதியிடம் கூறினார் என்றும், அதுவே பாரதியாரின் பெண்விடுதலைக் கருத்துகளுக்கு வித்திட்டது என்றும் பாரதி வரலாறு கூறுகிறது. அதைப் போலவே அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளும் உள்ளன என்பதைக் காண முடியும்.

அவர் காலத்தில் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் தாழ்த்தப்பட்ட மக்கள்- ஜாதி ஹிந்துக்கள் என்ற பிரிவினை அரசால் திணிக்கப்பட்டிருந்தது. உயர்ஜாதியினர் மட்டுமே ஹிந்துக்கள் என்ற எண்ணம் ஆங்கிலேய அரசின் உச்சத்தில் இருந்தவர்களால் கவனமாகப் பரப்பப்பட்டது. அதற்கேற்றதுபோல தன்னுணர்வு இழந்த சமுதாயமாக ஹிந்து சமுதாயமும் வீழ்ந்து கிடந்தது. தாழ்த்தப்பட்டவர்களின் வலியை அறியாத உயர்ஜாதி மக்கள் ஆங்கிலேய அரசிடம் அடிமைகளாக இருப்பதை பெருமிதமாக நம்பிய காலம் அது.

“ஹிந்துக்கள் மட்டுமே தேசியத்தைக் கட்டமைத்துவிட முடியாது” என்ற அம்பேத்கரின் கருத்தானது ஜாதி ஹிந்துக்கள் என்ற கருத்தின் மீதான தாக்குதலாகும். அதை பொதுவான ஹிந்துத்துவத்துடன் ஒப்பிட முடியாது. பின்னாளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வல்கருடன் அவர் கொண்டிருந்த நட்புறவும், தொடர்பும், பௌத்த மதத்தை நாகபுரியில் (1956) அவர் தழுவியபோது அவர் ஆற்றிய உரையும் இதனை நிரூபிக்கின்றன.

இந்த ஜாதி ஹிந்துக்களின் மனநிலையை மாற்றவே பல விடுதலை வீரர்கள், சமுதாயப் போராளிகள் உருவானார்கள். அவ்வாறு நாட்டின் விடுதலைக்கு உழைத்த அனைவரிடமும் தீண்டாமைக்கு எதிரான கருத்து நிலவியுள்ளது. ராஜராம் மோகன் ராய், சுவாமி தயானந்த சரஸ்வதி, சுவாமி விவேகானந்தர், பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, வீர சாவர்க்கர், டாக்டர் ஹெட்கேவார், நேதாஜி என இந்த தேசத்தை மறுசீரமைக்கப் போராடிய அனைவரிடமும் தீண்டாமைக்கு எதிரான குரலைக் கேட்க முடியும். ஆனால், அவர்களிடமிருந்து அண்ணல் அம்பேத்கர் வேறுபடுவது, பிறப்பின் அடிப்படையிலான வேறுபாட்டால் ஆகும்.

இந்த தேசம் நலமுடன் வாழ தீண்டமையை ஒழிக்க வேண்டும் என்று கூறிய தலைவர்கள் பலரும் பிறப்பினால் உயர்ஜாதியினர். அவர்கள் தங்கள் உணர்வூக்கத்தாலும், மனிதாபிமானத்தாலும், உயர் சிந்தனையாலும், தீண்டாமையை எதிர்த்தனர். ஆனால், அம்பேத்கர் பிறப்பிலேயே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்; அதன் கொடும் கரத்தால் அவதிப்பட்டவர். அவரது உள்ளும் புறமும் அனலாகக் கொதித்தது தனது சமுதாய விடுதலைக்காகவே. அதன் பிறகே அவர் தேச விடுதலை தேவை என்றார். “எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்” என்பது அண்ணலின் கருத்து.
மனைவி சவிதாவுடன் அம்பேத்கர்
மனைவி சவிதாவுடன் அம்பேத்கர்
அம்பேத்கரின் தேசியம் குறித்த சிந்தனை, பாகிஸ்தான் பிரிவினையின் போது மிகத் தெளிவாக வெளிப்பட்டது. ஆரம்பத்திலேயே முஸ்லிம் லீகின் வெறித்தனத்தைக் கண்டித்தவர்களுள் அம்பேத்கர் முதன்மையானவர். தேசபக்தி – தேசிய உணர்வைப் பொறுத்தவரை இஸ்லாத்தில் கொஞ்சம்கூட இல்லை என்பது அம்பேத்கரின் வாதமாகும்.

அம்பேத்கர் கூறுகிறார் : “இஸ்லாமின் குறைபாடு அது ஸ்தல தன்னாட்சி முறையிலிருந்து மாறுபட்ட ஒரு சமூகத் தன்னாட்சி முறையாக அமைந்திருப்பதாகும். ஏனென்றால்  ஒரு முஸ்லிம் தான் வாழும் நாட்டின் மீதன்றி, தான் கடைப்பிடிக்கும் சமயத்தின்மீது விசுவாசம் கொண்டிருக்கிறான். எங்கெல்லாம் இஸ்லாம் ஆட்சி நடைபெறுகிறதோ அவையெல்லாம் அவனது சொந்த நாடு. வேறுவிதமாகச் சொன்னால், ஓர் உண்மையான முஸ்லிம் இந்தியாவைத் தனது தாயகமாக வரித்துக்கொள்ளவும் இந்துக்களை உற்றார் , உறவினர்களாகக் கருதவும் இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது. ஒரு மாபெரும் இந்தியராகவும் உண்மையான முஸ்லிமாகவும் திகழ்ந்தவருமான மௌலானா முகமது அலி இந்திய மண்ணை விட ஜெருசலேமில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பியதற்கு ஒருவேளை இதுவே காரணமாக இருக்கலாம்.’’ என்று கூறுகிறார்.

அதாவது இஸ்லாமியர்கள் இந்திய மண்ணைவிட இஸ்லாமிய மண்ணையே விரும்புகிறார்கள், விரும்புவார்கள் என்பதை இங்கு படம்பிடித்துக் காட்டியுள்ளார். முஸ்லிம்களுடைய தேசபக்தி, தேசிய உணர்வு எப்படிப்பட்டது, எதை நோக்கியது என்பதை துல்லியமாக விளக்குகிறார் அம்பேத்கர்.

‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ என்ற நூலில் அம்பேத்கர் கூறுகிறார்: “சுதந்திர இந்தியாவைப் பேணிக் காப்பதிலும் கருத்தொற்றுமை நிலவ வேண்டும். எனவே, இந்தியா பிரிட்டனிடமிருந்து விடுதலையும் சுதந்திரமும் பெறுவதில் மட்டுமல்லாது அந்த விடுதலையையும் சுதந்திரத்தையும் வேறு எந்த அந்நிய சக்தியிடமிருந்தும் பாதுகாப்பதிலும் உடன்பாடு ஏற்படுவது அவசியம். உண்மையில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெறுவதை விடவும் பெற்ற சுதந்திரத்தை ப் பேணிக் காப்பது அதை விடவும் முக்கியமான கடமை என்பதில் ஐயமில்லை.”

“ஆனால் இந்த மிக முக்கியமான கடமை விஷயத்தில் முன்போல் ஒருமித்த கருத்து நிலவுவதாகத் தோன்றவில்லை. எது எப்படியிருந்தபோதிலும் இந்த விஷயத்தில் முகம்மதியர்களின் போக்கு அத்தமை நம்பிக்கையளிப்பதாக இல்லை. இந்தியாவின் சுதந்திரத்தைப் பேணிகாக்கும் பொறுப்பைத் தாங்கள் ஏற்க முடியாது என்று முஸ்லிம் தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் வெளியிட்ட கருத்துகளிலிருந்து இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்” என்கிறார்.
(ஆதாரம்: இஸ்லாமும் இந்திய தேசியமும்: அம்பேத்கர்- ம.வெங்கடேசன்; தமிழ் ஹிந்து கட்டுரை)

இந்தியாவில் பிரிட்டிஷாரின் சுரண்டல் தொடரும்போது தாழ்த்தப்பட்ட சாதிகள் தம் நிலையிலிருந்து மேம்பட இயலாது என்பதில் அம்பேத்கர் உறுதியாக இருந்தார். “இந்த அரசாங்கம் தொடர்ந்து இப்படியே இருக்கும்வரை அரசியல் அதிகாரத்தில் எந்தவொரு பங்கும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை” என்றார்.
அடிமை விலங்கைத் த்கர்த்தவர்
அடிமை விலங்கைத் தகர்த்தவர்
இந்தப் பிரச்னையைப் பொருத்த வரை, விடுதலை இயக்கத்தை முன்னடத்திய சிலரைக் காட்டிலும் அம்பேத்கர் முன்னணியில் நின்று 1930 டிசம்பரில் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘தாழ்த்தப்பட்ட மக்கள் டொமினியன் அந்தஸ்தைக் கோரவில்லை. ஆனால் மக்களால் மக்களுக்கான, மக்களின் பெயரிலான அரசாங்கத்தைக் கோருகின்றனர்’’

மொத்தமாகப் பார்த்தால், இந்தியாவுக்கு பூரண சுயராஜ்ஜியம் வேண்டும் என்று திலகர் அல்லாத காங்கிரஸ் தலைவர்கள் கோராத காலத்திலேயே கோரிக்கை விடுத்தவர் அம்பேத்கர் (1930). பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு என்ற இரண்டு அம்சங்களில் பிற அரசியல் தலைவர்கள் சொல்லத் துணியாத கருத்துகளை நேர்மையுடன் முன்வைத்தவர் அம்பேத்கர்.

தீண்டத்தகாதவர்களைப் பாதுகாக்கும் தன் நடவடிக்கையை தனது தேசபக்தி நிலைப்பாட்டிலிருந்தே அம்பேத்கர் அணுகினார். அதேபோல, விடுதலைப் போராட்டத்தையும் தலித் கண்ணோட்டத்துடன் அணுகினார் அவர். விடுதலைப் போராட்டக் களத்தில் சமூகநீதியும் தீண்டாமை ஒழிப்பும் முக்கிய அம்சங்களாக மாறக் காரணம் ஆனவர் அவரே.
குடிமக்களே தேசம் என்பதை முழுமையாக உணர்ந்தால் மட்டுமே, குடிமக்களின் ஒரு பகுதியான தீண்டப்படாதாரின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் வேட்கை புரியும். இந்தத் தேசம் வலுப்பெற வேண்டுமானால், அம்பேத்கரின் அடியொற்றி சமூக ஒருமைப்பாட்டை நாம் வலுப்படுத்தியாக வேண்டும். அதுவே இன்றைய தேவை.

-விஜயபாரதம் (17.04.2015)

-------------
காண்க: தமிழ் ஹிந்து 

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக