வெள்ளி, மே 01, 2015

தாலிக்காக நடந்த போராட்டம்: துவக்கப் புள்ளியும் முற்றுப் புள்ளியும்.

நன்றி: தினமணி/ மதி- 23.04.15


தமிழகத்தில் காலாவதியாகிப்போன திராவிடர் கழகம் என்ற அமைப்பு தனது இருப்பைக் காட்டிக் கொள்ள நடத்திய தாலி அகற்றும் போராட்டம் தான் இந்த ஆண்டின் புத்தாண்டு நகைச்சுவையாக இருக்க முடியும். இந்த நிகழ்வில் நீதிமன்றத்தின் பங்களிப்பு தான் உச்சபட்சம்.

இந்தப் போராட்டத்தின் துவக்கப் புள்ளியும் முற்றுப் புள்ளியும் குறித்த சிறு தொகுப்புடன், இந்த விவகாரம் குறித்து ஆராயப் புகுவது பொருத்தமாக இருக்கும்.

பெண்ணடிமைத்தனத்தின் சின்னம் தாலி என்று கூறி,  அதனை சித்திரை முதல் நாள் அகற்றப்போவதாக தி.க. அறிவித்ததிலிருந்தே தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதை திராவிட இயக்கத்தினர் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அரசியலிலும் சமூகத்திலும் தங்கள் காலம் மலையேறிவிட்டதை இன்னமும் அவர்கள் நம்ப முடியாமல் தத்தளிக்கிறார்கள்.

இந்த நிகழ்வுக்கு வித்திட்டது,  ‘புதிய தலைமுறை’ தொலைக்கட்சி நடத்துவதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்து பல்டி அடித்த “தாலி தேவையா?’’ என்ற விவாதம் தான். அதற்குக் கிளம்பிய எதிர்ப்பால், அந்தத் தொலைக்காட்சி தனது திட்டத்தைக் கைவிட்டது. சுரணையற்ற சமூகமாக இருந்த இந்து சமுதாயம் இப்படிக் கிளர்ந்தெழுவதை நாத்திகவாதிகளால் தாங்க முடியவில்லை. அதன் விளைவே அம்பேத்கர் பிறந்த நாளில் (ஏப்ரல் 14) நடத்தப்பட்ட இந்த தாலி அறுப்புப் போராட்டம்.

ஆரம்பத்தில் இதனை தி.க. அறிவித்தபோது ‘’தாலி அறுப்புப் போராட்டம்’’ என்று தான் குறிப்பிடப்பட்டது. ஆனால், பிற்பாடு அதன் அபத்தத்தை உணர்ந்து “தாலி அகற்றும் போராட்டம்” என்று அதன் பெயர் மாற்றப்பட்டது.

தி.க.வின் இந்த அக்கிரமத்தை எதிர்த்து பல இடங்களில் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன், தி.க.வின் போராட்டம் கேலிக்கூத்தானது என்று அறிக்கை வெளியிட்டார். இதைக் கண்டித்து இந்து முன்னணி போராட்டம் நடத்தும் என்று அவர் அறிவித்தார்.

இதனிடையே, வேறு சில இந்து இயக்கங்களும் இந்தப் போராட்டத்தில் குதித்தன. தி.க.வின் போராட்டத்தை எதிர்த்து சென்னை காவல் ஆணையரகத்தில் ஏப்ரல் 6-இல் புகார் மனு அளித்தார் இந்து மகா சபை தலைவர் தனசேகர். ஆனால், காவல்துறை கண்டுகொள்ளவில்லை.

அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஏப்ரல் 10-இல் வழக்கு தொடுத்தார். “இந்து மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக தி.க. நடத்த உத்தேசித்துள்ள போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தும் தி.க. தலைவர் கி.வீரமணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கோரினார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், “மனுதாரரின் மனு மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.க.வினரின் நிகழ்ச்சியால் இந்துக்களின் உணர்வுகள் புண்படுவதாக இருந்தால் அதன் தலைவர் வீரமணி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

அதன்பின் காட்சிகள் மாறின. சென்னை, வேப்பேரியில் தாலி அறுப்பதாக அறிவிக்கப்பட்ட பெரியார் திடலில் அதை நடத்தத் தடை விதித்து காவல்துறை ஆணையர் ஏப்ரல் 12-இல் உத்தரவிட்டார். அங்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தி.க. அமைப்பு தொடுத்த வழக்கு ஏப்ரல் 13-இல் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்து சுதந்திரத்தைக் காரணம் காட்டி, தி.க.வின் நிகழ்ச்சிக்கு தனி நீதிபதி அனுமதி வழங்கினார். இதனை அமைதியாக நடத்துமாறும், சட்டம் ஒழுங்கு சீர்குலையாத வகையிலும் நடத்துமாறு நீதிபதி மாலையில் உத்தரவிட்டார். இதனால் தி.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.

ஆனால், அவர்களின் ஆனந்தம் நீடிக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போவதாக அவர்களுக்கு உளவுத் தகவல் கிடைத்தவுடன், காற்றுப் போன பலூன் போல ஆகிவிட்டார்கள்.

எதிர்பார்த்தது போலவே, ஏப்ரல் 14-ஆம் தேதி காலையிலேயே உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல்.சோமயாஜுலு மனு தாக்கல் செய்தார். தி.க.வினரின் தாலி அகற்றும் போராட்டம் காரணமாக சமூகத்தில் ஏற்படும் பிரச்னைகளை எடுத்துக் கூறி, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து, அந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதனை ஏற்ற தலைமை நீதிபதி, இதனை சிறப்பு அமர்வு உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.வேணுகோபால் அடங்கிய அமர்வு, அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது. இறுதியில், தி.க.வின் நிகழ்ச்சிக்கு நீதிபதிகள் தடையாணை வழங்கினர்.

ஆனால், இந்தத் தடையை எதிர்பார்த்த தி.க.வினர், காலை 10 மணிக்கு நடத்துவதாக அறிவித்திருந்த தங்கள் தாலி அறுப்பை காலை 7 மணிக்கே அவசர அவசரமாக நடத்தினர். நீதிமன்ற ஆணை வருவதற்குள் தாலி அறுப்பது என்று 21 பேரின் தாலிகளை அகற்றி புன்னகை பூத்தனர். நீதிமன்ற உத்தரவு வந்ததும், தங்கள் நிகழ்ச்சியை நிறுத்துவதாக அறிவித்தனர்.

இதன்மூலமாக, தங்கள் போராட்டத்தில் வென்றுவிட்டதாக, மார்தட்டிக் கொள்கின்றனர். முன்னொரு காலத்தில் சேலத்தில் ராமர் படத்துக்கு செருப்பு மாலை போட்டபோது கொந்தளிக்காத இந்து சமுதாயமா தற்போது இப்படி தங்களை எதிர்க்கிறது என்பதை நம்ப முடியாத இந்த அறிவிலிகள், வேறு எப்படித்தான் தங்களைத் தேற்றிக் கொள்வது? ’தந்தை’ ஈ.வே.ரா.வே இவர்களை மன்னியும்.

இந்த நிகழ்விலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகளும், இதுதொடர்பாகக் கேட்க வேண்டிய கேள்விகளும் பல உள்ளன. அவை தான் முக்கியம்.

இந்த அனுபவத்திலிருந்து கிடைத்துள்ள அனுபவம் என்னவென்றால், சமுதாயம் ஒருங்கிணைந்தால், தனது அதிருப்தியை வெளிப்படுத்தினால், அரசு அதற்கு செவி சாய்த்தே ஆக வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தி உள்ளது.

அடுத்ததாக, நீதிமன்றத்தை சரியான முறையில் பயன்படுத்தினால், இந்து விரோதிகளையும் துரோகிகளையும் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்த முடியும் என்பதும் தெரியவந்துள்ளது.

மூன்றாவதாக, நீதித்துறை என்ன சொன்னாலும், அதை மீற தி.க. போன்ற அமைப்பினர் தயங்க மாட்டார்கள் என்பதை அவர்களது அவசர தாலி அறுப்பு நிரூபித்துள்ளது. இப்போது நீதிமன்றத்தின் உத்தரவை சமயோசிதமாக மீறியுள்ள தி.க.வினரின் செயல்பாடுகள் குறித்து உயர் நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வழக்கு ஏப்ரல் 28-இல் மறுவிசாரணைக்கு வரும்போது, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நாடு ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

முதலாவதாக, காலை 10 மணிக்கு நடத்துவதாக அறிவித்த தங்கள் தாலி அறுப்பை முன்கூட்டியே தி.க. நடத்தியது சட்டமீறலே. இது நீதித்துறையில் உள்ல அதிபுத்திசாலி அனுதாபி ஒருவரின் ஆலோசனையின்றி சாத்தியமில்லை. நீதிமன்றத் தடையை மீறி, அரசு விதித்த தடையை மீறி, முன்கூட்டியே போராட்டம் நட்த்துவது என்பதும் நீதிம்ன்ற அவமதிப்பே. இதைக் கண்டித்துத் தான் சிவசேனை அமைப்பினர் பெரியார் திடல் முன்பு அதே நாளில் போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்களை குண்டாந்தடியால் தாக்கினார்கள் தி.க.வினர்.

அதாவது, தங்களை யாரேனும் எதிர்த்தால் அவர்களைத் தாக்குவதற்கு ஆயுதங்களுடன் தி.க.வினர் அங்கு தயாராக இருந்துள்ளனர். இவர்களா சட்டம் ஒழுங்கை காப்பதாக நீதிமன்றத்தில் உறுதிமொழி கொடுத்தவர்கள்? இப்போது இரு தரப்பிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் வீரமணி. கருத்து சுதந்திரத்திற்கு தான் மட்டுமே ஏகபோக முதலாளி என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது!

இந்த தாலி அறுப்புப் போராட்டத்துடன், மாட்டுக்கறி உண்ணும் போராட்டமும் நடத்தப்பட்டது. உணவுப் பழக்கத்தில் மதத்தைத் திணிக்கும் பாஜகவை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் கூறினர். மஹாராஷ்டிராவில் மாடுகள் கொலை தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டதற்குத் தான் இந்தக் கொந்தளிப்பு. கூடவே பன்றிக்கறியையும் சாப்பிட்டிருந்தால் மதச்சார்பின்மையையும் தி.க.வினர் உறுதிப்படுத்தி இருக்கலாம். அதன்மூலம் தங்கள் நிகழ்ச்சிக்கு உறுதுணை புரியும் அரபு நாட்டவர்களையும் சந்தோஷப்படுத்தி இருக்கலாம்.

தாலி என்பது தமிழரின் பழக்கம் அல்ல என்று கூறும் தி.க.வினர், தமிழின் தொன்மையான இலக்கண் நூலான தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படும் ஐவகை நிலங்களுக்கு உரிய தெய்வங்களை ஏற்கிறார்கள்? உலகப்பொதுமறையாம் திருக்குறளில் ஆதிபகவன், எண்குணத்தான், அறவாழி அந்தணன் என்றஎல்லாம் போற்றப்படும் இறைவனை தி.க.வினர் ஏற்கிறார்களா? சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கூறப்படும் கடவுள் வணக்க நிகழ்வுகளையும் திருமணச் சடங்குகளையும் அவர்கள் மறுப்பார்களா?

தாலிக்கு தமிழ் இலக்கியங்களிலேயே பலநூறு உதாரணங்கள் கூறினாலும், அவற்றுக்கு வேறு பொருள் சொல்லித் தட்டிக் கழிக்கும் இந்தக் கருத்துக் குருடர்களுக்கு உண்மைகளை எப்படிப் புரிய வைப்பது?

பிராமணர்களை எதிர்த்து வளர்ந்த இந்த அமைப்பு, இப்போது பிராமணர் அல்லாத இந்துக்களே இந்து சமுதாயம் காக்கக் குரல் கொடுப்பதைக் கண்டு நிம்மதி இழந்து பொருமுகிறது. பொய்களுக்கு வாழ்நாள் சில காலமே என்பதை ’உண்மை’ பத்திரிகையின் நிறுவனர் ஈ.வே.ராமசாமி இவர்களுக்கு சொல்லித் தரவில்லையா?

ஈ.வே.ராமசாமி என்று பெயர் சொன்னாலே அவரது புனிதம் போய்விட்டது போலக் கோஷமிட்டு அலப்பறை செய்யும் இந்த திராவிடக் குஞ்சுகள், தங்கள் மத நம்பிக்கைகள் புனிதமானவை என்று கருதும் இந்துக்களை மட்டும் சீண்டி விளையாடலாமா? கருத்து சுதந்திரமும், சுயமரியாதையும் ஈ.வே.ரா. தாசர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொதுவானவை என்பதை அவர்கள் உணர்வார்களா?

இந்த நாடகத்தில் நீதித்துறையின் பங்களிப்பு முக்கியமாக இருந்த்து. எனினும், எந்த அடிப்படையில் காவல் ஆனையரின் உத்தரவுக்கு ஏப்ரல் 13-இல் நீதிபதி தடை விதித்தார்? அவர் மட்டும் குழப்பாமல் இருந்திருந்தால், தி.க.வினரின் கயமைத்தனம் முழுவதும் தடுக்கப்பட்டிருக்கும். இதுகுறித்து நீதித்துறையினர் ஆலோசிக்க வேண்டும்.

சமுதாயத்தின் வளர்ச்சிக்கேற்ப சில கட்டுப்பாடுகளை சமுதாயமே உருவாக்குகிறது. அப்படி வந்தது தான் தாலி அணியும் வழக்கமும். சொல்லப்போனால், இப்போது நாம் கடைபிடிக்கும் சட்டங்கள் அனைத்தும் நமக்காக நாமே உருவாக்கிக் கொண்டவை தான். கால மாற்றத்துக்கேற்ப சட்டங்களும் மாறுகின்றன. அதற்காக, சட்டத்தை மீறுகிறேன் பேர்வழி என்று முயன்றால் கராக்கிரஹம் தான் பரிசாகக் கிடைக்கும்.

‘தாலி பெண்ணுக்கு வேலியல்ல; காவல்’ என்பது அதன் புனிதம் உணர்ந்தவர்களுக்குத் தெரியும். இதனைக் கண்ணால் கேட்க முடியாது; காதால் பார்க்க முடியாது. நமது கருத்துக் குருடர்களான தி.க.வினர், புனிதம் என்றால் என்ன என்று கேள்வி எழுப்பி அதிலேயே சாகசம் செய்வதாக இறுமாப்பு அடைகிறார்கள். இவர்களுக்குப் புரியும் வகையில் விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பதை விட, பொட்டில் அடித்தது போல கேள்வி எழுப்புவதே சரியாக இருக்கும். ஈ.வே.ரா.- மணியம்மை திருமணத்தின் தாத்பரியம் என்ன என்று முதலில் தி.க.வினர் கூறட்டும். அதன்பிறகு அவர்களுக்கு தாலியின் மகிமை குறித்து நிதானமாக விளக்கம் அளிக்கலாம்.

---------------
விஜயபாரதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக