திங்கள், டிசம்பர் 21, 2015

நாடாளுமன்ற முடக்கம்: காங்கிரஸின் கீழ்த்தரமான சதி



காங்கிரஸ் கட்சியினர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், 2019 மே வரை மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த நாட்டை ஆளும். அதன் பிறகும் பாஜக அரசு தொடர்வதற்குரிய பணிகளையே காங்கிரஸ் கட்சியின் துர் நடத்தைகள் உருவாக்கி வருகின்றன. 

ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள். அவர்கள் பொறுமையுடன் நடப்பவை அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியினரின் நயவஞ்சகத் தந்திரங்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சியினருக்கே எமனாகும். இதனை மக்கள் அவர்களுக்குப் புரிய வைப்பார்கள்.

...................

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

விஜயபாரதம் (25.12.2015)

வெள்ளி, டிசம்பர் 18, 2015

ஊழித் தாண்டவமாடிய மழை உணர்த்துவதென்ன?


தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஏற்பட்ட வெள்ளச்சேதம் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பருவநிலை மாற்ரமே இதற்குக் காரணம் என்று சூழலியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். எது எப்படியோ, இயற்கையின் முன் மனித சக்தி முடங்கிப்போகும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வெள்ளத்தில் ஆயிரக் கணக்கானோர் வீடுகளை இழந்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் கூவம், அடையாறுகளின் கரைகளில் வசித்தவர்கள். எப்போது மழை வெள்ளம் வந்தாலும் இவர்கள் பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை கடந்த நூறு ஆண்டுகளில் பெய்யாத கனமழையால், மாடிவீட்டு ஏழைகளை இயற்கை உருவாக்கிக் காட்டி இருக்கிறது. மாடி வீடுகளில் வசித்தவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் கூட,  வெள்ளத்தில் சிக்குண்டு வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்தார்கள்.

இந்த வெள்ளச் சேதத்துக்கு இயற்கை காரணமா, மனிதத் தவறுகள் காரணமா என்ற விவாதமும் துவங்கி இருக்கிறது. மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தைவிட, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரி முன்னெச்சரிக்கையின்றித் திறந்துவிடப்பட்டதே பேரழிவுக்குக் காரணம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அரசைக் குற்றம் சாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் வெள்ளத்திலும் சுயலாப மீன் பிடிக்கவே முயல்கிறார்கள். இந்த ஆண்டு பெய்த அடைமழையின் போக்கைக் கண்ணுறும் எவரும், ஒற்றைப்படையான முடிவுக்கு வர மாட்டார்கள்.

தமிழகத்தில் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் வட கிழக்கு பருவமழை பொழியும். ஐப்பசி அடைமழை என்பது பொதுவான பழமொழி. ஆனால், கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகம் முழுவதிலுமே அதிக மழைப்பொழிவு நவம்பர் 10 முதல் டிசம்பர் 10 வரையிலான நாட்களில் பதிவாகி இருக்கிறது. ஆண்டு முழுவதும் பெய்யும் மழை அளவையே இந்தக் காலகட்ட மழை விஞ்சிவிட்டது. குற்இப்பாக, சென்னை, திருவள்ளூஊர், காஞ்சிபுரம், கடலூர், நாகை மாவட்டங்களில் இயல்புநிலையை விட பல மடங்கு மழை பெய்தது.

இத்தகைய மழைபெய்யும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. அரசும் ஆயத்தமாக இல்லை. அதுவே மழைவெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களின் அளவு அதிகரித்ததன் காரணம். கடந்த 15 ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் ஏரி, குளப்பகுதிகளை ஆக்கிரமித்து மனைப்பிரிவாக்கிய புண்ணியவான்களுக்கும் இதில் பெரும் பங்குண்டு. நீர்நிலைகளை முறைப்படி பராமரிக்காமல் வெற்றுக் கணக்கு எழுதிய பொதுப்பணித் துறைக்கும், கண்ணை மூடிக்கொண்டு மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கிய உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நகரமைப்புத் திட்ட அதிகாரிகளுக்கும் இந்த வெள்ளச் சேதம் இப்போது உண்மையை உணர வைத்திருக்கும். நீர்நிலைப் புறம்போக்கு என்றாலே, ஆளும் கட்சியினர் ஆக்கிரமிக்கத் தோதான இடம் என்ற எண்ணத்தையும், அரசு கட்டடங்கள் எழுப்பக் கிடைத்த இடம் என்ற அரசின் எண்ணத்தையும் தவிடுபொடி ஆக்கியிருக்கிறது இந்த மழை.

நீர்நிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த முதல்வர் காமராஜ் ஆட்சி தமிழகத்தில் எப்போது முற்றுப் பெற்றதோ, அப்போதே நீர்நிலைகளுக்கு கெட்டநேரம் துவங்கிவிட்டது. பெருமழையின் வடிகால்களாக விளங்கிய ஏரிகள் பலவும் பரப்பளவில் சுருக்கப்பட்டன. ஏரி, குளசம், கோயில் தெப்பக்குளங்களுக்கு நீர் வரும் வாய்க்கால்களும் அடைக்கப்பட்டன. வேகமான நகரமயமாதலின் விளைவாக ஏற்பட்ட இந்தச் சீரழிவின் அடையாளமே, தண்ணீர் தேங்க இடமின்றி, பல இடங்களை வெள்ளக் காடாக்கிய காட்சிகள்.

இம்முறை பருவமழை நவ. 9-இல் துவங்கியது. அன்று முதல் தொடர்ந்து டிச. 10 வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து கொண்டே இருந்தது. இதில் மிக அதிக மழைப்பொழிவால் முதலில் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம். நெய்வேலியில் டிச. 9-இல் பெய்த பெருமழையால் நிலக்கரிச் சுரங்கங்களும் மூழ்கின; கடலூர் வெள்ளக்காடானது. பண்ருட்டி அருகே விசூர் என்ற கிராமமே வெள்ளத்தில் அழிந்துபோனது.

நவ. 12-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களை பதம் பார்த்தது மழை. இந்த முதல் மழையிலேயே தலைநகரம் திண்டாடிப்போனது. நவ. 16 வரையிலான ஒருவாரத்தில் மட்டும், வழக்கத்தைவிட 82 சதவீதம் அதிகமாக (910 மி.மீ) மழை தமிழகம் முழுவதும் பதிவானது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிக மூன்று மாதங்களில் பெய்யும் மழை இந்த ஒரே வாரத்தில் பெய்து தீர்த்தது. இதனால், சென்னை அருகே வேளச்சேரி, செம்மஞ்சேரி ஏரிகள் உடைந்தன; காஞ்சி மாவட்டத்திலும் 8 ஏரிகள் உடைந்தன. இதனால் மாநிலம் முழுவதும் 108 பேர் பலியாகினர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகள் அனைத்துமே நவ. 16-லேயே நிரம்பிவிட்டன. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 10,000 கன அடி நீர் அடையாற்றில் திறந்துவிடப்பட்டது. அதன் தாக்கம் சென்னை மாநகரில் எதிரொலித்தது.
அதேசமயம், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் பெய்த கனமழையால், அங்கிருந்து உற்பத்தியாகும் குசஸ்தலை, ஆரணி, பாலாறு ஆகிய ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடியது. கூவத்தின் இணைப்பான பக்கிங்ஹாம் கால்வாயிலும் நீர் வரத்து அதிகரித்து, சென்னை மக்களை மிரட்டியது.

இதனிடையே, நவ. 24-இல் மீண்டும் பலத்த மழை சென்னையை நிலைகுலைய வைத்தது. சென்னை நகரில் உள்ள 36 சுரங்கப்பாதைகளில் பெரும்பாலானவை மூழ்கியதால் போக்குவரத்து முடங்கியது. கொரட்டூர் ஏரி நிரம்பி வழிந்ததில், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்பேட்டைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று மத்தியக் குழு தமிழகத்தைப் பார்வையிட வந்து மூன்று நாட்கள் ஆய்வு செய்தது.

மழை இடைவிடாது மிரட்டிக் கொண்டிருந்தது. குசஸ்தலை ஆற்றுப்பாலம், புதுசத்திரம் கூவம் பாலம் ஆகியவை உடைந்தன. சென்னையின் பல புறநகர்ப்பகுதிகளில் முதல் மழையின் வெள்ளமே வடியாத நிலையில் இரண்டாவது மழை நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. பள்ளிக்கரணை, முடிச்சூர், நங்கநல்லூர், குரோம்பேட்டை, வளசரவாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருந்தது. பல வீடுகள் முதல்மாடி வரை நீரில் மூழ்கின. அங்கிருந்த வசதியான மக்கள் பலரும் உயிரைக் காக்க அதுவரை சம்பாதித்த அனைத்தையும் விட்டுவிட்டு ஓடிவர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ராணுவம் சரியான நேரத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு பல்லாயிரக் கணக்கானோரை மீட்டது.

இந்த நிலையில் மூன்றாவது பெருமழை டிச. 1-இல் துவங்கியது. அதன்  விளைவாக செம்பரம்பாக்கம் ஏரி முழுமையாக நிரம்பி உடையும் நிலை ஏற்பட்டதால், விநாடிக்கு 30,000 கன அடி திறக்கப்பட்டதால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சைதாப்பேட்டை பாலம் மூழ்கிய காட்சி இன்னமும் பல ஆண்டுகளுக்கு சென்னைவாசிகளுக்கு மறக்காது.

 பெருங்களத்தூர், அனகாபுத்தூர், மனப்பாக்கம், ஜாபர்கான் பேட்டை போ
ன்ற பல பகுதிகள் வெள்ளத்தின் சீற்றத்தால் தத்தளித்தன. பல்லாயிரம் வீடுகள் நாசமாயின. லட்சக் கணக்கானோர் அகதிகள் ஆயினர். சென்னை விமான நிலைய ஓடுதளங்களை வெள்ளம் மூழ்கடித்து விமான சேவையை நிறுத்தச் செய்தது. தண்டவாளங்கள் பாதிப்பால் ரயில் சேவையும் முடங்கியது. நகரில் சாலைகள் எங்கும் வெள்ளம் பாய்ந்த நிலையில் பேருந்துப் போக்குவரத்தும் நின்றுபோனது. கலியுகத்தின் கடைசி ஊழிக்காலம் எப்படி இருக்கும் என்பதற்கான சிறு மாதிரியாக இந்த காட்சிகள் அமைந்தன.

இந்த வெள்ளத்தால் இதுவரை சுமார் 10,000 வீடுகள் நாசமாகி இருப்பதாக அரசு கூறுகிறது. உண்மை நிலவரம் இதைவிட பல மடங்கு இருக்கலாம்.  வெள்ளப்பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மட்டுமே 16.97 லட்சம். அவர்களுக்காக அரசு சார்பில் நடத்தப்பட்ட நிவாரண மையங்களின் எண்ணிக்கை 6,081. கிட்டத்தட்ட 1.13 கோடி பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இவையல்லாமல், ஆர்.எஸ்.எஸ். போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உடனடி நிவாரண உதவி தனிக் கணக்கு.

வெள்ளத்தால் சிக்கியவர்களை மீட்க 1,200 ராணுவ வீர்ர்கள், 600 கப்பல் படை, விமானப்படை வீரர்கள், 10-க்கு மேற்பட்ட ஹெலிகாப்டர்கள், 1,920 தேசிய பேரிடர் மீட்புப் படையினர், 30,000 காவல் துறையினர், 1,400 தீயணைப்புப் படையினர், 45,000 அரசுத் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். இது ஒரு மாபெரும் மீட்புப் பணி.

டிச. 10-இல் மழை நிற்கும் வரை, மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இப்ப்போது வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து நிற்பவர்களின் மறுவாழ்வுக்கான நிவாரண நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கெடுக்கிறார்கள். இந்த மழை, வெள்ளத்தால் தொழில் துறைக்கு ரூ. 30,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்றும், மக்களின் இழப்பு லட்சம் கோடியைத் தாண்டும் என்றும் மதிப்பிடப்படுகிறது.

எனவே, தமிழக வெள்ளச் சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஏற்கனவே வெள்ளச்சேதத்தை நேரில் வந்து பார்வையிட்ட பிரதமர் மோடி, உடனடி உதவியாக அறிவித்த ஆயிரம் கோடியும், அதற்கு முன் அறிவித்த ரூ. 939 கோடியும் தமிழகத்தின் பாதிப்புக்கு ஈடாகாது.

தற்போது நிவாரணப்பணியில் கண்ணும் கருத்துமாக ஈடுபட வேண்டிய நேரம். இதில் அரசியல் செய்யக் கூடாது. ஆளும் கட்சியினர் அதீத ஆர்வத்தால் ஜெயலலிதாவின் படங்களை நிவாரணப் பொருள்களில் ஒட்டுவது போலவே, எதிர்க்கட்சியினரின் வசைபாடல்களும் அதீதமாகத் தான் இருக்கின்றன. இத்தகையை இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள நமக்கு இதுவரை போதிய பயிற்சி இல்லை என்பதே இந்த வெள்ளச் சேதத்தால் தெரிய வந்த சேதி.

மழையின் சக்தியை எதிர்பார்க்காத சுயநலவாதிகளின் ஆக்கிரமிப்பு சேதத்தை அதிகப்படுத்திவிட்டது. இதற்கு தனிப்பட்ட யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஏரிப்பகுதி என்று தெரிந்திருந்தும் அங்கு வீடு கட்டிய மக்கள் முதல் அனைவருக்குமே இதில் பொறுப்புண்டு.

தலைநகர் சென்னையில் ஏற்பட்ட பாதிப்பில் கடலூர் பாதிப்பும் பிற மாவட்ட பாதிப்புகளும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. அங்கும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த இடர்மிகு தருணத்தில் அரசை நிலைகுலையச் செய்யாமல், அனைவரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள நிவாரண அறிவிப்புகள் ஏழை மக்களுக்கானவை. நடுத்தர மக்கள் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களின் நலனையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். கல்வி நிலையங்கள் சுமார் ஒருமாத காலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டங்களில் இயங்கவில்லை. எனவே, நடப்புக் கல்வியாண்டின் நிகழ்ச்சிநிரல்களை அரசு மாற்றி அமைக்க வேண்டும்.

இந்த வெள்லத்தால் மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உரிய கடனுதவி, நிவாரண உதவிகளும் முக்கியமானவை. இந்நேரத்தில் தன்னார்வ அமைப்புகளும் அரசும் இணைந்து செயல்படுவது மக்களின் துயரைக் குறைக்கும். மக்கள் இந்த மாபெரும் தியரிலிருந்து முதலில் மீளட்டும். அதன் பிறகு வெள்ளச் சேதத்தின் பின்புலங்களை தீர்க்கமாக ஆராயலாம்.



விஜயபாரதம் (18.12.2015)
.

வெள்ளி, நவம்பர் 27, 2015

அன்புள்ள இதய நாயகன் அமீர் கானுக்கு….



அன்புள்ள இதய நாயகன் அமீர் கானுக்கு…

2001-ஆம் ஆண்டு வெளியான ‘லகான்’ திரைப்படத்தைப் பார்த்து உங்கள் ரசிகன் ஆனவர்களுள் நானும் ஒருவன். 2007-ல் வெளியான ’தாரே ஜமீன் பர்’ படமும், 2009-ல் வெளியான ‘3 இடியட்ஸ்’ படமும் உங்கள் ரசிகன் என்பதில் என்னை பெருமிதம் கொள்ளச் செய்தன. தமிழில் கமலஹாசன் போல ஹிந்தி திரையுலகில் பல பரீட்சார்த்தங்களை நிகழ்த்தியவர் நீங்கள். அதனாலேயே இந்திய திரையுலகில் முக்கியமான ஆளுமையாக மாறி இருக்கிறீர்கள். என்னைப் போன்ற லட்சக் கணக்கான ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான் உங்களை இந்த நிலைக்கு உயர்த்தின என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

சென்ற ஆண்டு வெளியான உங்கள் ‘பி.கே’ படம் தான் உங்களைப் பற்றி முதலில் சற்று ஐயத்தை ஏற்படுத்தியது. அதில் நீங்கள் நான் வழிபடும் கடவுள்களை கேவலமாக சித்தரித்திருந்தீர்கள். அப்போதும் கூட, உங்கள் படத்தை எதிர்த்தவர்களிடம், கருத்துரிமைக்காக நான் வாதிட்டிருக்கிறேன். ஏனெனில் கலைஞர்களின் கருத்து சுதந்திரமே நாட்டின் ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். அதே காரணத்தால் தான் பாஜக மூத்த தலைவர் அத்வானி ‘அந்தப் படத்தை விமர்சிக்கலாம்; தடுக்காதீர்கள்’ என்று அறிவுறுத்தினார்.

ஆனால், கடந்த நவம்பர் 24-ம் தேதி தில்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய சிறந்த பத்திரிகையாளருக்கு விருது வழங்கும் விழாவில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் உங்கள் மீதிருந்த நல்லெண்ணத்தையும் அபிமானத்தையும் போக்கிவிட்டன என்பதை வேதனையுடன் இங்கு பதிவு செய்கிறேன். ”நாட்டில் பாதுகாப்பின்மை உணர்வு அதிகரித்து வருவதால் குழந்தைகளுடன் இந்தியாவை விட்டு வெளியேறிவிடலாமா?’’ என்று உங்கள் மனைவி கிரண் கேட்டதாகக் கூறிய நீங்கள், நானும் அதையே உணர்கிறேன் என்று சொன்னீர்கள். அப்போதுதான் நீங்களும் அடிப்படைவாதத்துக்கு அடிபணிந்த முஸ்லிம் என்று புரிந்துகொண்டேன்.

உங்களுக்கு ஓர் அரசியல் பார்வை உண்டு என்பதை பல நிகழ்வுகளில் நான் ஏற்கனவே கண்டு வந்திருக்கிறேன். அதுவே இயல்பும் கூட. குஜராத் மாநில அரசின் நர்மதை அணைத் திட்டத்தை சமூக சேவகர் மேதா பட்கர் எதிர்த்துப் போராடியபோது அவருடன் இணைந்து நீங்களும் குரல் கொடுத்தீர்கள். பிறகு சபனா ஆஸ்மி, தருண் தேஜ்பால், டீஸ்டா செதல்வாட் போன்ற இடதுசாரி அறிவுஜீவிகளுடன் பல மேடைகளில் பங்கேற்றீர்கள். அதுவும் ஜனநாயக உரிமையே.

கலைஞர்கள் தங்கள் பிழைப்பைக் கவனிக்கும் அதே நேரத்தில் ஏதாவது ஒரு கொள்கைக்காகவும் சமூகத்துக்காகவும் குரல் கொடுப்பதை நான் ஆதரிக்கிறேன். அதுவும் உங்களைப் போன்ற பிரபலமான ஒருவரின் சொல்லுக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகம். அதனால் தான் ஸ்டார் டி.வி.யில் நீங்கள் நடத்திய ‘சத்தியமேவ ஜெயதே’ மக்களின் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றது. நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு ஒரு வடிவம் கொடுப்பதாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. உங்கள் சமூக சேவை செயல்பாடுகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் திரைத்துறையைத் தாண்டி சிந்திக்கும் நல்ல குடிமகனாக உங்களை அடையாளம் காட்டின. ஆனால், அவை அனைத்தையும் உங்கள் ஒரே நேர்காணலில் வீணடித்து விட்டீர்கள் என்பது தான் எனது வருத்தம்.

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் பல சாதனைகளை நிகழ்த்தியதால் தேசிய அரசியலுக்கு வந்தார். அவரை பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்தியது. திரைத்துறையில் நீக்கள் என்னைக் கவர்ந்தது போலவே அரசியலில் அவர் என்னைக் கவர்ந்தார். நாட்டின் மக்களில் பெருவாரியானவர்களும் அதே கருத்தைத் தான் கொண்டிருந்தார்கள் என்பதை சென்ற ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டின. அவர் பிரதமரும் ஆகிவிட்டார்.

ஆனால், எனது விருப்பத்துக்குரிய அமீர் கான் மோடி பிரதமராவதை விரும்புபவர் அல்ல என்பது, உங்கள் பேச்சுகளிலிருந்து தேர்தலுக்கு முன்னமே தெரிய வந்தது. அதை நான் பொருட்படுத்தவில்லை. அது உங்கள் உரிமை. நீங்களும் உங்கள் சகாக்களும் மதச்சார்பின்மை என்ற பெயரில் நிகழ்த்திய பிரசாரத்தை மக்கள் ஏற்கவில்லை. 2003-ல் குஜராத்த்தில் நடைபெற்ற மதக் கலவரத்தைக் காட்டி மக்களைப் பலவாறாக அச்சுறுத்தியும் கூட, மக்கள் அதை ஏற்கவில்லை. ஏனெனில் மதச்சார்பின்மை என்பது அறிவுஜீவிகளின் இந்து மதச்சார்பின்மையே என்பதும், இந்து விரோதம் தான்  என்பதும் அவர்களுக்குப் புரிந்துபோனது. இதை அறிவுஜீவிகளால் ஏற்க முடியவில்லை.

மோடி பிரதமரானது முதலே, அவரை எப்படி வீழ்த்தலாம் என்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள்; இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் பாஜகவின் வளர்ச்சியில் அச்சம் கொள்ள நியாயம் இருக்கிறது. அவர்கள் மோடியை ஆதரித்தால் தான் ஆச்சரியம். ஆனால், அறிவுஜீவிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களும், இடதுசாரி செல்வாக்குள்ள எழுத்தாளர்களும், கலைஞர்களும் ஆரம்பத்திலிருந்தே மோடியை எதிர்த்து வந்தார்கள். இது நமக்கு ஜனநாயகம் கொடுத்த கருத்துரிமை. ஆனால், பாஜக ஆட்சியில் கருத்துரிமை பறிபோவதாக அவர்கள் கூக்குரலிட்டார்கள்.

ஆரம்பத்தில் அதை மக்கள் கேட்கவில்லை. ஆனால், ஒரே கருத்தை திரும்பத் திரும்பச் சொன்னால் அது கொஞ்சமேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த அவர்கள் தங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தினார்கள். அதற்கு எப்போதும் பாஜகவை எதிர்க்கும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான ஆங்கில ஊடகங்கள் சாமரம் வீசின. ஆட்சியாளர்களின் உறுதிப்பாட்டைக் குலைப்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. நீங்களும் அவர்களின் வரிசையில் சேர்வீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் உங்களிடம் சற்று நிதானத்தையும் பக்குவத்தையும் எதிர்பார்த்தேன்.

நரேந்திர மோடி பிரதமர் ஆனதிலிருந்தே பலத்த விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும். அதையும் மீறி பல முக்கியமான திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். ஊழலுக்கு அவரது அரசு நெருப்பாகவே இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்திலும் மீட்சி தென்படுகிறது. உலக அளவிலும் இந்தியாவின் செல்வாக்கு கூடி இருக்கிறது.

இதையெல்லாம் அவரது அரசியல் எதிரிகள் ஜீரணிக்க முடியாமல் தவிப்பதற்கு காரணம் உண்டு. ஏனெனில் மோடியின் அரசு ஒவ்வொரு படி உயரும்போதும் அவரது அரசியல் எதிரிகளின் எதிர்காலம் ஆட்டம் காண்கிறது. எனவே இந்த அரசு நல்லது செய்தாலும் கூட அவர்கள் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், கலைஞர்களும் எழுத்தாளர்களும் கல்வியாளர்களும் அரசியல் சாயமற்றவர்களாக இருக்க வேண்டும். அதையே மக்களும் விரும்புகிறார்கள். அரசு தவறு செய்தால் அதை நடுநிலைமையுடன் தட்டிக் கேட்கும் திராணி அவர்களுக்கே உண்டு.
அந்தக் கடமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டுமானால், அவர்கள் எந்தப் பக்கமும் சாராதவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நமது அறிவுஜீவிகளில் பெரும்பாலோர் முன்முடிவுகளுடன் கூடிய பிரசாரத்தை எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகவும் மோடிக்கு எதிராகவும் நடத்தி வந்திருக்கிறார்கள்.

மோடி பிரதமரானால் நாட்டை விட்டே வெளியேறி விடுவதாக முழங்கிய பலர் உண்டு. அவர்கள் இப்போதும் இந்தியாவில் தான் இருக்கிறார்கள். அவர்கள் தான் சகிப்புத் தன்மை நாட்டில் குறைந்துவிட்டதாக மீண்டும் சர்ச்சையைக் கிளப்பினார்கள். உ.பி. மாநிலத்தின் தாத்ரி என்ற இடத்தில் ஒரு முஸ்லிம் சகோதரர் பசுவதை செய்தார் என்பதற்காகக் கொல்லப்பட்டார் என்பது, அவர்களின் வெறும் வாய்க்கு மெல்லக் கிடைத்த அவலானது.

அதேபோல, காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் இரு எழுத்தாளர்கள் கொல்லப்பட்ட பழைய நிகழ்வுகளையும் அத்துடன் கோர்த்துக் கொண்டார்கள். நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து விட்டது, சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரிட்டு விட்டது என்று தங்கள் யுத்தத்தைத் தொடங்கினார்கள். இந்த புதிய வகை யுத்தத்தில், பல எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சாஹித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்து பிரபலம் ஆனார்கள். இந்த யுத்தம் பிகார் சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியுற்றவுடன் காணாது போய் விட்டது என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இந்திய எக்ஸ்பிரஸ் விருது வழங்கும் விழாவில் உங்களிடம் சிறப்பு நேர்காணல் நடத்தப்பட்டது. மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, நஜ்மா ஹெப்துல்லா, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் போன்ற பிரபலங்களின் முன்னிலையில் நிகழ்ந்த அந்த நேர்காணலில் அற்புதமான பல நல்ல கருத்துகளையும் நீங்கள் குறிப்பிட்டீர்கள். ”என்னை இஸ்லாமியனாகப் பார்க்காதீர்கள்; நான் இந்தியனாகவே கருத்து தெரிவிக்க விரும்புகிறேன்” என்று நீங்கள் சொன்னபோது மிகவும் மகிழ்ந்தேன். அதேபோல, “அப்பாவி மக்களை மதத்தின் பெயரால் கொல்பவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல; திருக்குர்ஆன் அவ்வாறு செய்யச் சொல்லவில்லை; ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனத்தை என்னால் ஏற்க முடியாது” என்று சொன்னபோதும், புளகாங்கிதம் அடைந்தேன்.

’பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது’ என்று அண்மையில் மலேசியாவில் பிரதமர் மோடி சொன்ன கருத்தையே உங்கள் நேர்காணலில் நீங்களும் சொன்னீர்கள். அதுவரை சரிதான். ஆனால், சகிப்பின்மை விவகாரம் வந்தவுடன் உங்கள் பேச்சு மாறிவிட்டது. “நாட்டில் பாதுகாப்பின்மை நிலவுவதாக கருதுவோருக்கு தங்கள் விருதுகளை திருப்பி அளித்து அஹிம்சை முறையில் போராட உரிமை உண்டு” என்று கூறிய நீங்கள், ”எனது மனைவியும் கூட பாதுகாப்பின்மையை உணர்கிறார்’ என்றீர்கள். அதனால், இந்தியாவை விட்டு வெளியேறலாமா என்று மனைவி கேட்டதாகவும் கூறினீர்கள். அதாவது மோடி ஆட்சியில் நாட்டில் நிம்மதியாக வாழ முடியாத சூழல் நிலவுவதாக, யதார்த்தத்துக்கு மாறான கருத்தை முன்மொழிந்தீர்கள்.

நாட்டில் உண்மையிலேயே அப்படிப்பட்ட சிக்கலான நிலை காணப்படுகிறதா?
வெடிகுண்டுகளுடன் சகஜமாக நடமாடியவர்கள் இப்போது முடங்கிக் கிடக்கின்றனர். மற்றபடி சாதாரண முஸ்லிம் சகோதரர்கள் வாழ்வில் என்ன இடையூறு ஏற்பட்டது மோடியின் ஆட்சியில்? மதமாற்றத்துக்கும் இந்திய விரோத பிரசாரங்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து தடையில்லாமல் வந்துகொண்டிருந்த கள்ளப்பணம் தடுக்கப்பட்டிருக்கிறது மோடியின் ஆட்சியில். மற்றபடி எந்த சிறுபான்மையின சகோதரரின் இயல்பு வாழ்க்கையை பாஜக அரசு பாதிக்கச் செய்தது? தன்னை எதிர்த்தவர் என்று தெரிந்தும் தானே, உங்களையும் கமலஹாசனையும் சசி தரூரையும் தூய்மை பாரத இயக்கத்தின் விளம்பரத் தூதராக பிரதமர் மோடி அறிவித்தார்?

நாட்டுக்கு விரோதமாக செயல்படுவோருக்கு இந்த ஆட்சியில் பல தடைகள் உள்ளன என்பது உண்மை தான். இத்தனை நாட்களாக கல்வித் துறையிலும் கலாசாரத் துறையிலும் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் போல ஒட்டி இருந்தவர்கள் அகற்றப்பட்டார்கள் என்பதும் உண்மைதான். முந்தைய ஆட்சி போலல்லாது சுயநலவாதிகளின் ஊழல் குற்றங்களையும் சிறுபான்மையினரின் மத அடிப்படைவாதக் குற்றங்களையும் கண்டுகொள்ளாமல் இருக்க மோடி அரசால் முடியாது. அதேசமயம், பெரும்பான்மையினர் என்பதற்காக ஹிந்துக்களே தவறு செய்தாலும் அதைக் கண்டிக்காமல் இந்த அரசு இருக்காது. குஜராத் கலவரத்திற்காக சிறையில் தள்ளப்பட்ட ஹிந்துக்களின் எண்ணிக்கை புள்ளிவிவரங்களிலிருந்தே இந்த உண்மையை உணர முடியும். அதாவது மோடியின் அரசு சட்டம் ஒழுங்கைப் பொருத்த மட்டிலும் மதரீதியான பாகுபாட்டை அனுமதிப்பதில்லை.

ஆயினும் எந்த ஒரு ஜனநாயக இயக்கத்திலும் உள்ளிருந்து பலவகைப்பட்ட குரல்கள் ஒலிக்கவே செய்யும். மக்களவையில் பெரும்பான்மை பெற்றும் பசுவதை தடை சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை, ராமர் கோயில் கட்ட முடியவில்லை என்ற ஆதங்கங்கள் இருக்கவே செய்கின்றன. அதை சிலர் வெளிப்படுத்துகிறார்கள். தவிர, மதச்சார்பின்மை என்ற பெயரில் சீண்டப்படும்போது, பாஜகவினர் சற்று அதிகமாகவே பதிலடி கொடுக்கிறார்கள். அதற்காக, சில அதிதீவிர இந்துத்துவரகள் ஆற்றாமையால் பேசுவதே அரசின் குரல் என்பதுபோல எடுத்துக்கொள்ள முடியுமா?

அரசு நிர்வாகத்தில் பாரபட்ச அணுகுமுறை காணப்பட்டால் அதைக் கண்டிப்பது நாட்டுநலம் விழைவோரின் கடமை. இந்த அரசு முந்தைய காங்கிரஸ் அரசுகள் போல சிறுபான்மையினரை தாஜா செய்யும் நடவடிக்கையில் இறங்கவில்லை என்பது உண்மை. அதேசமயம், அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்டு மக்களை பெரும்பான்மை- சிறுபான்மை என்று பிரித்து பாகுபாடு காட்டிய காங்கிரஸ் ஆட்சி போல மோடி ஆட்சி செயல்படவில்லை என்பதும் உண்மை.

தாத்ரியில் நிகந்த கொடூரத்துக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியவர் உ.பி. முதல்வர் (சமாஜ்வாதி) என்பதும், கல்புர்கி கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டியவர் கர்நாடக முதல்வர் (காங்கிரஸ்) என்பதும், சிறுபிள்ளைக்கும் தெரியும் . இங்கு எதற்கு பிரதமரை வம்புக்கு இழுக்க வேண்டும்? மத்திய உள்துறை அமைச்சர் என்ற முறையில் இவ்விரு சம்பவங்களிலும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டது, அறிவுஜீவிகள் கவனத்துக்கு வரவில்லையா?

நிலைமை இவ்வாறிருக்க, நாட்டில் ஏதோ நடக்கக்கூடாத 1975-ம் வருடத்திய நெருக்கடிநிலை அல்லது 1984-ம் வருடத்திய சீக்கியர் படுகொலை போன்ற அசம்பாவிதங்கள் நடந்துவிட்டது போல நீங்கள் ஏன் பேசினீர்கள்? உங்களை இவ்விஷயத்தில் பின்னிருந்து காங்கிரஸ் கட்சி தான் இயக்குகிறது என்று பாஜக தலைவர் ஷாநவாஸ் உசேன் கூறியிருப்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

அரபு நாடுகளில் உள்ள முஸ்லிம் ரசிகர்களை திருப்திப்படுத்தவே நீங்கள் இவ்வாறு பேசியதாகவும், நிழல் உலக தாதா ஒருவரின் சமிக்ஞைப் படியே நீக்கள் இவ்வாறு பேசினீர்கள் என்றும் சமூக ஊடகங்களில் உங்கள் ரசிகர்களே கொந்தளித்தார்கள். அதை நான் நம்பவில்லை. இது உங்கள் திரையுலக வர்த்தக தந்திரம் என்றும் கூட கமஹாசனால் (அவரும் இப்படித்தான் ’விஸ்வரூபம்’ படத்துக்கு பயங்கரவாதிகளால் மிரட்டல் வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவதாகச் சொன்னார்;. இப்போதும் சென்னையில் தான் இருக்கிறார்) அனுபவம் பெற்றவர்கள் சொல்கிறார்கள். உங்களை அந்த அளவுக்கு கீழ்த்தரமானவராக என்னால் நினைக்க முடியவில்லை.

பிற்பாடு எதிர்ப்பு எழுந்தவுடன், “இந்தியாவை விட்டு நானோ எனது குடும்பமோ வெளியேறப்போவதில்லை. இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். எனக்கு யாருடைய சான்றிதழும் தேவையில்லை” என்று பல்டி அடித்தீர்கள். இந்த அளவுக்கு மக்களிடம் எதிர்ப்புக் கிளம்பும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்பது உங்கள் விளக்கத்தில் தெரிய வந்தது. உங்கள் விளக்கத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி.

ஆனால், உங்கள் குழந்தைகளை இதியாவில் பாதுகாப்பாக வளர்க்க முடியாது என்று தோன்றியபோது வேறெந்த நாட்டுக்கு குடி பெயரலாம் என்று நீங்கள் நினைத்தீர்கள்? அதைக் குறிப்பிட்டால், எனக்கும் அப்படிப்பட்ட சூழல் வந்தால் தப்பியோடி வர வசதியாக இருக்கும். நான் உங்களைப் போல கோடீஸ்வரன் அல்ல என்பதால், இப்போதே சொன்னால் தான் பத்து வருடங்கள் கழித்தேனும் இந்தியாவில் இருந்து தப்ப வசதியாக இருக்கும்.

நீங்கள் அல்குவைதாவையும், தலிபான்களையும் வளர்த்துவிடும் பாகிஸ்தானுக்குப் போக நிச்சயம் விரும்ப மாட்டீர்கள் என்று எனக்கே தெரியும். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட அமெரிக்காவுக்கோ, நிறவெறி தாண்டவமாடும் ஆஸ்திரேலியாவுக்கோ, அண்மையில் குண்டுகள் வெடித்த பெருமைக்குரிய பிரான்ஸுக்கோ, எப்போது குண்டு வெடிக்குமோ என்ற பீதியில் நாடு முழுவதும் கோட்டை போல அரண் அமைத்து நடுங்கிக்கொண்டிருக்கும் பெல்ஜியத்துக்கோ போக நீங்கள் நிச்சயம் விரும்ப மாட்டீர்கள்.

இஸ்லாமிய நாடு எதற்கேனும் பொக நீங்கள் விரும்பினாலும், போகோஹரம், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் போன்ற பலநூறு மதவெறிக் குழுக்கள் சக இஸ்லாமியரையே கொல்லும் காட்சிகள் தினந்தோறும் அரங்கேறுவதால் அந்த நாடுகளை உங்கள் மனைவி ஆதரிக்க மாட்டார் என்று நினைக்கிறேன். சீனா செல்லலாம் என்றால் அங்கு இஸ்லாமியர் என்றாலே கம்யூனிஸ அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. ரஷ்யாவில் போய் வாழலாம் என்றால் சிரிய பயங்கரவாதிகளால் புடினுக்கும் இஸ்லாமியர்கள் மேல் ஆத்திரமாக இருக்கிறது.

எந்த ஐரோப்பிய நாட்டுக்குச் சென்றாலும் உங்கள் பெயரின் பின்னோட்டான ’கான்’ என்ற சொல்லால் அவதிப்பட நேரும் என்பதால் (ஷாரூக் கானின் அனுபவம் உங்களுக்கும் நேரலாம்) அதை உங்கள் மகன்களான கான்கள் இருவரும் விரும்ப வாய்ப்பில்லை. பிறகு வேறெந்த நாட்டுக்கு நீங்கள் செல்ல உத்தேசித்தீர்கள் என்பதை அடுத்த நேர்காணலிலேனும் தெளிவாகக் குறிப்பிடுங்கள். உங்கள் ரசிகர்களுக்கும் பிற்காலத்தில் அது உதவும்.
அதேபோல, அரவிந்த் கேஜ்ரிவால், ராகுல், யெச்சூரி போன்ற அரசியல்வாதிகள் உங்கள் கருத்தை ஆதரிப்பதாக நம்பி அவர்கள் பின்னே சென்று விடாதீர்கள். நீங்கள் இந்தியாவை விட்டு செல்ல எண்ணியது தான் இந்த நீளமான கடிதம் எழுத என்னைத் தூண்டிவிட்டது. அதைவிட, உங்கள் கருத்து அரசியலாக்கப்படும் அபாயம் தெரியாமல் இப்படி கள்ளம் கபடம் இல்லாதவராக நீங்கள் இருக்கிறீர்களே என்பதும் என் கவலை.

\ மற்றபடி உங்கள் அடுத்த திரைப்படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அதிலாவது ‘பி.கே’ படத்தில் செய்தது போன்ற மத உணர்வுகளைக் காயப்படுத்தும் காரியங்களை செய்து விடாதீர்கள் என்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
உங்கள் அன்பு ரசிகன்
சேக்கிழான்


சில தன்மானக் குரல்கள்: 

ராம்கோபால் வர்மா (முன்னணி திரைப்பட இயக்குநர்):
சகிப்பின்மை குறித்து சில பிரபலங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள். சகிப்பின்மை அதிகரித்துவிட்டதாக அவர்களால் குறிப்பிடப்படும் இந்த நாட்டில்தான் அவர்கள் பிரபலமாக வளர்ந்தார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
அனுபம் கெர் (மூத்த நடிகர்):
அமீர்கான், இந்த நாடுதான் உங்களை இந்த உச்சத்தில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறது. இதைவிட்டு நீங்கள் எந்த நாட்டுக்குச் செல்ல முடியும்? பல மோசமான தருணங்களிலும் கூட இந்த நாட்டில் தான் நீங்கள் வாழ்ந்து வந்தீர்கள். அப்போதெல்லாம் ஏன் வேறு நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லை?உன்னதாமன் இந்தியா உங்களுக்கு எப்போது சகிப்பற்ற இந்தியாவாக மாறியது?
ரவீணா தாண்டன் (பிரபல நடிகை): 
யாரெல்லாம் மோடி பிரதமராகக் கூடாது என்று விரும்பினார்களோ, அவர்கள் தான் இந்த அரசு வீழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். அரசியலுக்காக நாட்டைக் களங்கப்படுத்துகிறார்கள்…. மும்பையின் இதயப்பகுதியில் குண்டுகள் வெடித்தபோதோ, 26/11 நிகழ்வில் நமது பாதுகாப்பு நடைமுறைகள் தகர்க்கப்பட்டபோதோ, இவர்கள் ஏன் பாதுகாப்பின்மையை உணரவில்லை?... மோடி பிரதமரானதிலிருந்து தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று தைரியமாகச் சொல்ல முடியாதவர்கள் தான் நாட்டின் பெயரை சீர்குலைக்கிறார்கள்…. உண்மையிலேயே உங்களுக்கு துணிவு இருக்குமானால், யாரை எதிர்க்கிறீர்களோ அதை தெளிவாகச் சொல்லுங்கள். அதற்காக ஒட்டுமொத்த நாட்டின் மீதும் பழி சுமத்தாதீர்கள்…. 
ரிஷி கபூர் (மூத்த நடிகர்):
அமீர்கானுக்கும் அவரது மனவிக்கும் எனது வேண்டுகோள். சில விஷயங்கள் உங்களுக்கு மாறானதாகத் தோன்றினால், அதை மாற்ற முயலுங்கள். அமைப்பில் திருத்தம் செய்யப் பாடுபடுங்கள். அதை விடுத்து தப்பியோடக் கூடாது. ஒரு கதாநாயகனுக்கு இது அழகல்ல!


-விஜயபாரதம்

வெள்ளி, நவம்பர் 20, 2015

மியான்மரில் நம்பிக்கை ஒளிக்கீற்று


அண்டை நாடான மியான்மரில் (பர்மா) ஜனநாயகம் மீட்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதற்கு, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூகியின் தியாகமயமான வாழ்க்கையே காரணமாகி உள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி மாறி ஜனநாயக ஆட்சி அமைவதற்கான புதிய நம்பிக்கை ஒளி தோண்டியிருப்பது இந்தியாவுக்கு மிகவும் நல்லது.

இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. புவியியல் ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் இந்தியாவுடன் மிகவும் ஒருங்கிணைந்த நாடு பர்மா. இரு நாடுகளுமே ஆங்கிலேயக் காலனியாதிக்கத்தால் பாதிக்கப்பட்டவை. இந்தியா சுதந்திர பெற்று சிறிது காலம் கழித்தே (1948 ஜனவரி 4) பர்மா சுதந்திரம் பெற்றது. அதற்காக பிரிட்டாஷாருடன் போராடியவர் தான் ஜெனெரல் ஆங் சான். அவர் நவீன பர்மிய ராணுவத்தை உருவாக்கியவர். பிரிட்டீஷ் ஆட்சியின்போது பர்மியப் பிரதமராக இருந்த ஆங் சான் 1947-இல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகள் தான் இப்போது மியான்மர் மக்களின் நம்பிக்கை ஒளியாக உருவாகியுள்ள ஆங் சான் சூகி.

பர்மா விடுதலை பெற்ற பிறகு பிரிட்டாஷாரின் உதவியுடன் அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டது. பிறகு நாட்டின் பெயரும் மியான்மர் என்று மாற்றப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை அங்கு ராணுவ ஆட்சியாளர்களின் கரமே ஓங்கி இருக்கிறது. இதை எதிர்த்துப் போராடியதற்காக பல்லாண்டுகள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார் சூகி.

1945, ஜூன் 19-இல் பிறந்த ஆங் சான் சூகி, தனது பள்ளிப்படிப்பு, இளநிலை கல்லூரிப் படிப்புகளை தில்லியில் (1964)  நிறைவு செய்தார். அப்போது அவரது தாய் இந்தியாவுக்கான மியான்மர் தூதராக தில்லியில் இருந்தார். பிறகு லண்டன் சென்ற சூகி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையிலும் லண்டன் பல்கலையிலும் படித்தார். அரசியல், பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் பட்டம் பெற்ற சூகி, திபெத்திய பண்பாட்டு ஆய்வாளராக இருந்த மைக்கேல் ஆரிஸ் என்ற பிரிட்டன் குடிமகனை திருமணம் (1972)  செய்துகொண்டார். அவர்களுக்கு இரு மகன்கள் பிறந்து பிரிட்டன் குடிமகன்களாகவே வளர்ந்தனர்.

1988-இல் தனது தாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது தாய்நாடு திரும்பிய சூகி, அங்கு ராணுவ ஆட்சியால் நாடு தவிப்பதைக் கண்டு, ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் இறங்கினார். தாயின் மறைவை அடுத்து, தேசிய ஜனநாயக லீக் என்ற மியான்மர் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியின் தலைவரானார்.

சூகியின் அரசியல் பிரவேசம் மியான்மரில் பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், அவரை வீட்டுச்சிறையில் வைத்தனர் ராணுவ ஆட்சியாளர்கள். 1989, ஜூலை 20 முதல், வீட்டுச்சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 2010, நவம்பர் 13 வரையிலான 21 ஆண்டுகளில் இடையிடையே சில காலங்களைத் தவிர்த்து, சுமார் 15 ஆண்டுகள் வீட்டுச்சிறையிலேயே வைக்கப்பட்டு, அவரது வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

இதனிடையே 1990-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சூகியின் கட்சி, போட்டியிட்ட 485 இடங்களில் 395 இடங்களில் வென்றது. ஆனால், அவரை அதிபராக்காமல் சிறையில் வைத்தது ராணுவம். அதற்கு உலக அளவில் எதிர்ப்பு எழுந்தபோதும், ராணுவத்தின் பிடியிலிருந்து சூகியும் மியான்மரும் விடுபட முடியவில்லை.

மியான்மர் ஆட்சியாளர்களுக்கு சீன அரசின் பின்புலம் இருப்பதால், அங்கு ஜனநாயகக் குரல்கள் எடுபடவில்லை. ஆயினும் சூகி தளராமல் ஜனநாயகத்துக்காகப் போராடி வந்தார். 1991-இல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதைப் பெற வெளிநாடு செல்லவும் அவர் அனுமதிக்கப்படவில்லை. 1999-இல் தனது கணவர் ஆரிஸ் இறந்தபோதும் அவர் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்குச் செல்ல சூகி அனுமதிக்கப்படவில்லை.

மியான்மரில் தொடரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக உலக நாடுகளில் கண்டனங்கள் எழுந்தன. ஐக்கிய நாடுகள் சபையும் அங்கு ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. 1996-இல் சூகி பயணம் செய்த கார் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதிலிருந்து அவர் தெய்வாதீனமாகத் தப்பினார்.

இதனிடையே, வெளிநாட்டவரை மணந்தவர்களும் வெளிநாட்டுக் குடியுரிமை கொண்டுள்ள குழந்தைகளைப் பெற்றவர்களும் மியான்மர் தேர்தலில் வென்றாலும் அதிபராக முடியாது என்று 1998-இல் முக்கியமான சட்டத் திருத்தம் ராணுவ ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்டது. இது சூகியின் அதிகாரத்தை நோக்கிய பயணத்தைத் தடுக்கவே என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆயினும் ஆக் சான் சூகியின் அஹிம்சை வழியிலான தொடர் போராட்டம் காரணமாகவும், ராணுவ ஆட்சிக்கெதிராக மக்களை விழிப்புணர்வுடன் வைத்திருந்த அவரது தலைமை காரணமாகவும், உலக நாடுகளின் நிர்பந்தத்தால் அங்கு அண்மையில் ஜனநாயக ரீதியான தேர்தல்கள் நடத்தப்பட்டன. ராணுவத்தின் ஆதிக்கத்தையும் மீறி, மொத்தமுள்ள 3 கோடி வாக்காளர்களில் 80 சதவீதத்தினர் வாக்களித்தனர். இந்த இடத்தில் மியான்மர் தேர்தலின் சிக்கலான சூழலை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மியான்மர் அரசில் ஆட்சியை நிர்வகிக்க இரு அவைகள் உள்ளன. மக்கள் பிரதிநிதிகளின் அவையில் 440 பேரும் மேலவையில் 224 பேரும் இருந்தாக வேண்டும். இவர்களுள் 25 சதவீதம் ராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரதிநிதிகள் அவையில் 110 பேரும், மேலவையில் 56 பேருமாக மொத்தமுள்ள 664 உறுப்பினர்களில் 166 பேர் ராணுவத்தினராக நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த இடங்கள் தவிர்த்த பிற இடங்களுக்கே (498) அங்கு தேர்தல் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நவம்பர் 8-இல் நடைபெற்ற தேர்தலில் 498 இடங்களில் 348 இடங்களில் சூகியின் தேசிய ஜனநாயக லீக் வென்றது. தவிர, அக்கட்சி வென்ற வாக்குவிகிதத்தின் அடிப்படையில் மேலும் 21 இடங்களை தேர்தல் ஆணையம் அளித்தது. சூகி தான் போட்டியிட்ட காஹ்மு தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார்.

ஆளும் கட்சியான ஒற்றுமைக் கட்சி, ராணுவத்தால் இயக்கப்படுவது. அக்கட்சிக்கு 134 இடங்களே கிடைத்துள்ளன. இந்தியாவைப் போலவே மியான்மரிலும் அரசியல் கட்சிகள் அதிகம். அங்கு தேர்தலில் 90 கட்சிகள் போட்டியிட்டன. பல இடங்களில் ராணுவத்தினரும் ஆளும் கட்சியும் தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டும் சூகியை வெல்ல முடியவில்லை. அந்நாட்டு மக்கள் அதிகார மாற்றத்துக்கு வாக்களித்துள்ளனர்.

ஆனால், ராணுவம் இன்னமும் ஆட்சியின் பிடியை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. 2008 சட்டத் திருத்தத்தை காரணம் காட்டி, சூகி அதிபராக முடியாது என்று, தேர்தலுக்கு முன்னமே ராணுவம் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தற்போதைய ஆட்சியாளரான தேய்ன் செய்னே மீண்டும் அதிபராவார் என்று ஆங் சான் சூகி அறிவித்திருப்பது அவரது ராஜதந்திரமாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றபோதும், ஆட்சியில் தற்போது அமர முடியாத சூழல் உள்ளதால், ராணுவ ஆட்சியாளரான தேய்ன் செய்னே அதிபராகத் தொடர்வார் என்றும், அவரை ஜனநாயக முறைப்படி ஆளும்கட்சித் தலைவியாக தான் வழிநடத்துவேன் என்றும் சூகி அறிவித்திருக்கிறார். மிக விரைவில், இடைக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தை மாற்றி அமைக்க முடியும் என்பது சூகியின் நம்பிக்கை.

தவிர, வெற்றிக்களிப்பில் தோற்றவர்களை விமர்சிக்க வேண்டாம்; பழைய காயங்களைக் கிளற வேண்டாம் என்று தனது ஆதரவாளர்களுக்கு சூகி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நாடாளுமன்றத் தலைவரைச் சந்தித்த சூகி, தேசிய சமரச ஆட்சி நடத்த வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். இவை அவரது தலைமைப்பண்பையும் பெருந்தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளன.

மியான்மரில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. தேர்தலில் வென்ற ஆங் சான் சூகி அதிபராக அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர்கள் வழிவிட வேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 2014 நவம்பரில் பிரதமர் நரேந்திர மோடி மியான்மர் சென்றிருந்தபோது, அங்கு ராணுவ ஆட்சியாளர்களையும் ஆங் சான் சூகியையியும் சந்தித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

அப்போது மோடி, “ஜனநாயகத்தின் சின்னம் ஆக் சான் சூகிஎன்று புகழ்ந்துரைத்தார். சூகியும், ”இந்தியா எனது இரண்டாவது தாய்நாடு’’ என்று உணர்ச்சி ததும்பக் குறிப்பிட்டார்.
அண்டை நாடு அமைதியாக இருந்தால்தான் நமது நாட்டிலும் நிம்மதியாக இருக்க முடியும். அந்த வகையில் மியான்மரில் நிகழ்ந்துள்ள ஆட்சி மாற்றத்துக்கான காட்சிகள் ஆரோக்கியமானவையாக உள்ளன. அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர்கள் மக்களின் கருத்தை மதித்து, சூகியை அதிபராக்க வேண்டும். மியான்மரில் ஜனநாயகம் திரும்புவது என்பது, இந்தியாவுக்கும் நல்லது.

முந்தைய பர்மாவின் ரங்கூனிலும் மாண்டலேயிலும் சிறைகளில் வாடிய திலகர் போன்ற உத்தம விடுதலை வீரர்களால் தான் இந்தியா ஜனநாயக சுதந்திரம் பெற்றது. இன்று அதை யாங்கூன் (ரங்கூன்) வீட்டுச் சிறையிலிருந்தபடியே சாதித்துக் காட்டி இருக்கிறார் ஆங் சான் சூகி. அவரை நெஞ்சார வாழ்த்துவோம். ஜனநாயகம் மீள வாக்களித்த அந்நாட்டு மக்களையும் பாராட்டுவோம்!


காந்தியத்தின் உபாசகர்

மியான்மரில் பெரும் மாற்றத்தை அமைதியான முறையில் நிகழ்த்தியுள்ள, 70 வயதாகும் ஆங் சான் சூகி, மகாத்மா காந்தியின் அஹிம்சைக் கோட்பாட்டில் மிகவும் ஈடுபாடு கொண்டவர்; தானே ஒரு பௌத்தர் என்பதால், புத்தர் பெருமானின் அமைதி தவழும் தன்மை கொண்டவராகவும் உள்ளார்.
இடைக்காலத்தில் அவருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாக ராணுவ ஆட்சியாளர்கள் ஆசை காட்டியபோது, அதை வன்மையாக மறுத்தவர் சூகி. “அதிகாரமல்ல, அச்சமே மோசடிகளுக்கும் ஊழலுக்கும் வித்திடுகிறதுஎன்றார் அவர்.
அச்சத்திலிருந்து விடுதலை, பர்மாவிலிருந்து கடிதம்ஆகிய இரு நூல்களை (1991) சூகி எழுதி இருக்கிறார். உலக அளவிலான பல விருதுகளைப் பெற்றுள்ள இவர், எப்போதும் இந்தியாவின் நண்பராக தன்னைக் காட்டிக்கொள்பவர்.


-விஜயபாரதம்