வெள்ளி, டிசம்பர் 31, 2010

முட்டாள்தனமான உளறலும் கிறுக்குத்தனமான தீர்மானமும்

சரித்திரம் அவ்வப்போது முட்டாள் தலைவர்களை அம்பலப்படுத்துகிறது.
அதனைப் புரிந்துகொள்ளாத மக்கள் முட்டாள்களாகி விடுகிறார்கள்.
-யாரோ-
--------------------------------------------------

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவரும் விக்கி லீக்ஸ் இணையதளம், தில்லி அமெரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணத்தை அண்மையில் (டிச. 17) வெளியிட்டது. அதில், ‘லஷ்கர்- இ- தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளைவிட இந்து தீவிரவாதக் குழுக்களின் வளர்ச்சிதான் இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும்’ என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி அமெரிக்கத் தூதரிடம் கூறியது அம்பலமாகியுள்ளது.

கடந்த 2009 ஜூலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இந்திய பயணம் மேற்கொண்டார். அப்போது அவரை கவுரவிக்கும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் விருந்தளித்தார். அந்த விருந்தின்போது இந்தியாவுக்கான அச்சுறுத்தல் குறித்தும், லஷ்கர்-இ-தொய்பாவின் நடவடிக்கைகள் குறித்தும் ராகுல் காந்தியிடம் அமெரிக்க தூதர் திமோதி ரோமர் விசாரித்திருக்கிறார். இதுபோன்ற சந்திப்புகளின்போது அதிகாரப் பூர்வமற்ற வகையில் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வது வழக்கமான நடைமுறை. இதில் கிடைக்கும் கருத்துகள், இரு நாடுகள் இடையிலான உறவுகளைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

இது
தெரியாமல், தன்னையும் ஒரு பெரிய மனிதராகக் கருதி கருத்து கேட்ட அமெரிக்கத் தூதரிடம் தத்துப்பித்தென்று உளறிக்கொட்டி தனது மேதாவித்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ராகுல் வின்சி (அது தானே அவரது உண்மையான பெயர்!)

“இந்திய முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள சில குழுவினரும் லஷ்கர்-இ-தொய்பாவை ஆதரிப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன; எனினும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளை விட, இந்தியாவில் செயல்படும், பழமைவாத இந்து அமைப்புகளின் வளர்ச்சி, நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்து அமைப்புகளால், முஸ்லிம் சமூகத்தினருடன் மதரீதியான பதட்டங்கள் மற்றும் அரசியல் ரீதியான மோதல்கள் உருவாகின்றன. பா.ஜ., கட்சியை சேர்ந்த முதல்வர் நரேந்திர மோடியால் உருவான மத ரீதியான மோதல்களே இதற்கு உதாரணம். உள்நாட்டிலேயே வளர்ந்த இந்து பயங்கரவாத முன்னணியினர், பாகிஸ்தானிலிருந்து வருபவர்களால் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க துவங்கிவிட்டது கவலை தரும் விஷயம்’' என்று கூறியுள்ளார் ராகுல்.

இதனை தங்கள் நாட்டு வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய ரகசிய ஆவணத்தில் அமெரிக்கத் தூதர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஆவணம் தான் தற்போது விக்கி லீக்ஸ் இணையதளத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

விக்கி லீக்ஸ் வெளியிட்ட ராகுலின் கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்து இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள இத்தகவலின் பின்னணியில் சதி இருக்கலாம் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி கூறியிருக்கிறார். அதே சமயம், இதனை அமெரிக்க தூதரோ ராகுலோ மறுக்கவில்லை.

இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு

“இந்து அமைப்புகள் பற்றி ராகுல் தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இந்துக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது” என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கூறியுள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியின் வியாதி ராகுலையும் பீடித்திருப்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது. நாட்டுக்காக பாடுபடும் அமைப்புகளையும் பயங்கரவாதத்தால் நாட்டை சின்னாபின்னமாக்கும் அமைப்புகளையும் ஒப்பிட்டதே தவறு. அதிலும், லஸ்கர்-இ-தொய்பாவை விட இந்து அமைப்புக்கள் அபாயமானவை என்று சொல்வது முட்டாள்தனமானது. ராகுல் முதலில் வரலாற்றைப் படிக்க வேண்டும்'' என்று கூறி இருக்கிறார்.

பா.ஜ.க. தலைவர் நிதின் காட்கரி, ''முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையே ராகுலின் பேச்சு நிரூபித்துள்ளது. அமெரிக்கத் தூதரிடம் என்ன பேசலாம், என்ன பேசக் கூடாது என்று தெரியாத சிறுபிள்ளைத் தனத்தை ராகுல் வெளிப்படுத்தியுள்ளார். இதன்மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான உலக அளவிலான முயற்சிகளையும் ராகுல் சிறுமைப் படுத்தியிருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளின் ஒத்துழைப்பை இந்தியா கோரிவரும் நிலையில், இந்திய அரசின் முயற்சிகளை நாசாமாக்குவதாக ராகுலின் கருத்து உள்ளது'' என்று கண்டித்தார்.

இது தொடர்பாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் தருண் விஜய் கூறுகையில், "ஊழல் விவகாரங்கள் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்னையால் காங்கிரஸ் கட்சியினர் விரக்தி அடைந்துள்ளனர். தேர்தலில் தோற்று விடுவோமோ என்று அஞ்சுகின்றனர். அதனால், இந்துஅமைப்புகள் மீது குறைசொல்கின்றனர். இது அவர்களின் பழைய தந்திரம்” என்றார்.

"ராகுலின் கருத்துக்கள் பொறுப்பற்றவை. மும்பை தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் நடத்திய பின்னரும், ராகுல் இப்படி கூறுகிறார் எனில், இந்தியா மற்றும் அதன் பிரச்னைகளை பற்றி ராகுல் தெரியாமல் இருக்கிறார் என்றே அர்த்தம். நாட்டின் மீது அவருக்கு அபிமானம் இல்லை என்பதும் உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஊக்கம் கொடுப்பது போல ராகுலின் கருத்து அமைந்துள்ளது,'' என, பா.ஜ.க.வின் மற்றொரு செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

மோடி கடும் கண்டனம்

ராகுலின் கருத்து குறித்து கருத்து தெரிவித்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ''ராகுல் பாகிஸ்தான் ஆதரவாளர் என்பது இதன்மூலம் உறுதியாகி உள்ளது. பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத இயக்கங்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உலக நாடுகள் கூறிவருகின்றன. பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுவது தெரிந்தும், அமெரிக்கா ஏன் அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதற்கான உண்மையான காரணம் இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா எடுத்து வரும் கொள்கை முடிவுகளை ஊக்குவிக்கும் வகையில், ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். அவரிடம் தேசப்பற்றுடன் கூடிய கருத்துக்களை எதிர்பார்க்க முடியாது'' என்று கண்டித்தார்.

பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், "ராகுலின் பேச்சு பொறுப்பற்றது, பக்குவமற்றது. இது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையை பலவீனப்படுத்துவதாக அமையும். பயங்கரவாதத்திற்கு உதவும், நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும்' என்றார்.

பாரதிய ஜனசக்தி தலைவர் உமாபாரதி கூறுகையில், ''ராகுல் அனுபவமற்றவர் என்பதால் தான், இத்தகைய கருத்துக்களை வெளியிடுகிறார். காங்கிரஸ் ஒரு பொறுப்பற்ற கட்சி. அக்கட்சி, தன் அரசியல் ஆதாயத்துக்காக பயங்கரவாதிகளை ஊக்குவிக்கிறது. முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஆதரவை கேட்டார். அதுமட்டுமல்லாமல், 1963 ல் நடந்த குடியரசு தின அணிவகுப்பிலும், ஆர்.எஸ்.எஸ்.,க்கு இடம் கொடுத்தார். இது வரலாற்று உண்மை. இதை முதலில் ராகுல் தெரிந்துகொள்ள வேண்டும்'' என்று அறிவுரை கூறினார்.

சிவசேனா தலைவர் பால்தாக்கரே, "இந்து சமுதாயத்திற்கு எதிரான ராகுலின் கருத்தை சகித்துக் கொள்ள முடியாது'' என கூறியுள்ளார். இந்து அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த ராகுலுக்கு நாடு முழுவதும் ஹிந்து இயக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கண்டனம் தெரிவித்தன.

இஸ்லாமிய தலைவர்களும் எதிர்ப்பு

இந்த நிகழ்வினால் இஸ்லாமிய சமுதாயத்தினரின் ஆதரவு கிட்டும் என்று மனப்பால் குடித்த ராகுலுக்கு, முஸ்லிம் மத குருக்களின் கண்டனங்கள் கசப்பாக இருக்கக் கூடும். இத்தாலி ராணியின் பிள்ளைக்கு உள்நாட்டு இஸ்லாமியர்கள் தேசப்பற்றுப் பாடம் எடுத்திருப்பது நிம்மதி அளிக்கிறது. 'ஹிந்து தீவிரவாதம்’ குறித்து அமெரிக்கத் தூதரிடம் ராகுல் காந்தி பேசியிருக்கவே கூடாது என்று முஸ்லிம் மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சன்னி முஸ்லிம் தலைவர் மௌலானா காலித் ரஷீத் பிராங்கி மஹாலி கூறுகையில், “தீவிரவாதம் என்பது முஸ்லிம் சமுதாயத்தோடு இணைத்து பார்க்கப்படுகிறது. இதனால், முஸ்லிம் சமுதாய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அண்மைக்கால சம்பவங்களை ஆராயும்போது சில ஹிந்து குழுக்களுக்கும் தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. ஆயினும் இது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம். இது குறித்து வெளிநாட்டுத் தூதரிடம் ராகுல் காந்தி ஏன் பேச வேண்டும்?'' என்று கேட்டிருக்கிறார்.

'தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. முஸ்லிம் வாக்கு வங்கியைக் கைப்பற்றுவதற்காக இது போன்ற முயற்சிகளில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டால் அவர்கள் நிச்சயம் ஏமாறுவார்கள். முஸ்லிம்கள் புத்திசாலிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடும்போது, வளர்ச்சிப் பணிகளுக்கு முதலிடம் அளித்தே முஸ்லிம்கள் வாக்களித்துள்ளனர்...

... ஏழைகள், குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகள் பயன் அடைகிறார்களா என்பதில் மட்டுமே முஸ்லிம்கள் அக்கறை கொண்டுள்ளனர். அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகள் இதனை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளன. மதஅடையாளத்தை மக்கள் மறந்து வருகின்றனர். ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் வாக்களிக்கின்றனர்'' என்றும் அவர் கூறினார்.

ஷியா முஸ்லிம் தலைவர் மௌலானா கல்பே ஜவ்வாத் கூறுகையில், ''பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் ராகுல் காந்தி. அவர், குறிப்பிட்ட ஒரு மதத்தை தீவிரவாதத்துடன் ஒப்பிட்டுப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நமது நாட்டுச் சட்டம், மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்துப் பார்க்கவில்லை. தவறு செய்தவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுகிறார்கள். மதத்தின் அடிப்படையில் அல்ல'' என்று தெரிவித்தார்.

பேராசிரியர் அத்தர் சித்திக், “காவி தீவிரவாதம் குறித்து ராகுல் காந்தி முன்னரே பேசியிருக்கிறார். இதுபோன்ற விவகாரங்களை அமெரிக்க தூதரிடம் அவர் ஏன் பேச வேண்டும்? தேவைப்படும்போது இந்தக் கருத்துகளை அமெரிக்கா, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்'' என்று எச்சரித்திருக்கிறார். நாடு முழுவதும் பெரும்பாலான முஸ்லிம் மதத் தலைவர்கள் இதே கருத்தைத் தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதிகார மமதை ஆட்டுவிக்கிறது

பாடுபட்டு கட்சியை வளர்த்தவர்கள் எல்லாம் சலாம் போடும்போது, வாரிசு அடிப்படையில் கட்சியின் அதிகார மையத்தைக் கைப்பற்றிய ராகுலுக்கு அதிகார மமதை தலைக்கேறுவது சகஜம் தான். 'தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை' என்ற பழமொழியை தெரியாமலா சொல்லி வைத்தார்கள்?

வயதிற்கு மீறிய தலைமைப் பொறுப்பு ராகுலை கண்டபடி உளறச் செய்கிறது. அதற்கு நமது ஊடகங்கள் அளிக்கும் அதீத முக்கியத்துவம் அவரை மேலும் கிறுகிறுக்கச் செய்கிறது. அவர் மேலும் மேலும் இதே போலத் தான் உளறி வருகிறார். ஆனால் ராகுல் சுயகாரியப் புலி. மறந்தும்கூட, தனது கொலம்பியா நாட்டு தோழி குறித்து உளறுவதில்லை. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களும் கூட, குவாத்ரோச்சி குறித்தோ, இத்தாலியிலுள்ள சோனியாவின் சகோதரிகளுக்கு மடைமாறிய ஸ்பெக்ட்ரம் பணம் குறித்தோ ஏதும் உளறுவதில்லை. நமது 'விழிப்புணர்வுள்ள' ஊடகங்களும் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. அதனால் தான், நாட்டின் அனைத்து அம்சங்கள் குறித்தும் கருத்து தெரிவிக்க கிளம்பி விடுகிறார் ராகுல்.

பாவம், தாதா பாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பால கங்காதர திலகர், சித்த ரஞ்சன் தாஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற காங்கிரஸ் தலைவர்கள்! அவர்கள் பாடுபட்டு வளர்த்த காங்கிரஸ் கட்சியில்தான், 'கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல' சோனியா குடும்பம் ஆதிக்கம் செலுத்துகிறது.

அமெரிக்கத் தூதரிடம் இவ்வாறு கூறுவதால், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுக்கு எதிரான நமது அணுகுமுறைக்கு அமெரிக்காவிடம் ஆதரவு கிடைக்காதே என்ற எண்ணமே இல்லாமல் ராகுல் கருத்து தெரிவித்திருக்கிறார். முட்டாள்தனமான இந்த உளறலை அமெரிக்கா பெரிதுபடுத்தவில்லை என்பது நிம்மதி அளிக்கிறது. ஆனால், மத்தியில் ஆள்வதாலேயே தலைக்கனம் பிடித்து அலையும் காங்கிரஸ் தலைவர்கள், ராகுலுக்கு சற்றும் சளைத்தவர்களல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.

தங்கள் தலைவர் கூறிய கருத்து தவறானது என்று ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்ளும் பாங்கு காங்கிரஸிடம் காணப்படவில்லை. மாறாக, ராகுலின் முட்டாள்தனமான உளறலையும் புத்திசாலித்தனமான அரசியல் நடவடிக்கையாக மாற்ற முயன்று, தில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் (டிச. 19, 20 ) கிறுக்குத்தனமான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

காரியக் கிறுக்குத் தீர்மானம்

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள அதிருப்தி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் நாடாளுமன்றம் முடக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பிரச்னையை திசை திருப்பக் கிடைத்த அரிய வாய்ப்பாக இந்த விவகாரத்தை காங்கிரஸ் பயன்படுத்த முயன்றுள்ளது. இந்து தீவிரவாத குறித்த பூச்சாண்டி தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமாக, நாட்டு மக்கள் கவனத்தை திசை திருப்பவும், பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தவும் காங்கிரஸ் சகுனிகள் திட்டமிட்டு நிறைவேற்றிய தீர்மானம், ராகுலின் சிறுபிள்ளைத் தனத்தை விஞ்சுவதாக இருக்கிறது.

டிச. 19 ம் தேதி தில்லியில் நடந்த 83-வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்து இயக்கங்களுக்கு எதிரான கிறுக்குத்தனமான தீர்மானத்தைக் கொண்டு வந்தார். ''நாட்டில் அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு இருப்பதால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் பயங்கரவாதத் தொடர்பு குறித்து விசாரணை நடத்தவேண்டும்'' என மத்திய அரசை வலியுறுத்தும் அந்தத் தீர்மானம், காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

''ஆர்.எஸ்.எஸ் தேசத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். பா.ஜ.க மற்றும் அதன் சகோதர அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ், விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்டவை வெறுப்பையும் வன்முறையையும் பிரசாரம் செய்துவருகின்றன. இது தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாகும். தேசத்தை தகர்ப்பதற்கு இவர்கள் முயல்கிறார்கள். பயங்கரவாத செயல்பாடுகளில் இவர்களின் தொடர்பை கண்டறிவதற்காக தீவிர விசாரணை தேவை'' என அந்தத் தீர்மானம் நீட்டி முழங்குகிறது. இறுதியில், ' தீவிரவாதம் எந்த மதத்திலிருந்து வந்தாலும் அதனை உறுதியாகவும், பயன் தரத்தக்க வகையிலும் எதிர்கொள்ள வேண்டும்' என உபதேசமும் செய்துள்ளது.

''இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடி மதசார்பற்ற கொள்கையாகும். ஆர்.எஸ்.எஸும், பா.ஜ.கவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் மதசார்பற்றக் கொள்கைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. 2002 ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்திற்கு காரணமான அனைவரையும் விசாரணைச செய்யவேண்டும். சிறுபான்மை மக்கள் தாக்கப்படும் சூழலில் கலவரத் தடுப்பு மசோதாவை கொண்டுவந்த மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது'' என்றும் காங்கிரஸ் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய ம.பி. முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான திக்விஜய் சிங், வழக்கம்போல, கருணாநிதி பாணியில், ஹிந்து இயக்கங்கள் மீது அவதூறுமழை பொழிந்தார்.

மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கார்கரே மும்பையில் கசாப் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு முந்தைய நாள் ஹிந்து தீவிரவாதிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இவரிடம் தொலைபேசியில் பேசினாராம்! இவ்வாறு கூறி வாங்கிக் கட்டிக் கொண்ட பின்னரும், தனது கருத்துக்கு சாட்சி இல்லை என்று ஊடகங்களிடம் வழிந்த பின்னரும், காங்கிரஸ் மாநாட்டில் திக்விஜய் சிங் முழங்கினார். தனது கருத்துக்கு சோனியா, ராகுல் ஆகியோரின் ஆசிகள் உண்டு என்று மாநாட்டில் அறிவித்தார் திக்விஜய் சிங். இறுதியில் கேவலமான குற்றச்சாட்டின் பின்னணி வெளிப்பட்டுவிட்டது.

இந்தத் தீர்மானம் மூலமாக, நாட்டு மக்களை திசை திருப்பவும், ஊழலுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை மழுங்கச் செய்யவும் காங்கிரஸ் முயன்றது. ஆனால், எதிர்க்கட்சிகள் புத்திசாலித்தனமாக அமைதி காத்தன. அதனால், காங்கிரஸ் கொண்டுவந்த கிறுக்குத் தனமான தீர்மானம், முட்டாள்தனமான முயற்சியாக பயனிழந்தது.

ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், இதனையும் பா.ஜ.க.வின் அரசியல் சதியாகச் சித்தரித்து, அதன்மூலமாக ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு மதவாத சாயம் பூசி எதிர்க்கட்சிகளைக் கூறுபோட்டு, ஊழல் குற்றங்களிலிருந்து தப்ப காங்கிரஸ் மற்றொரு தீர்மானம் மூலமாக முயன்றது. இதுவும் எடுபடவில்லை. மொத்தத்தில் காங்கிரசின் தில்லி மாநாடு, அக்கட்சி திட்டமிட்ட எதனையும் அக்கட்சிக்கு வழங்கவில்லை. மாறாக, அதன் கபட வேடமும், கயமையும் நாட்டு மக்களிடம் மேலும் வெளிப்படவே உதவியுள்ளது.

சரித்திரத்திலிருந்து பாடம் கற்குமா காங்கிரஸ்?

லஸ்கர்-இ-தொய்பா நடத்திவரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கொடூர முகம் குறித்தும் நாட்டு மக்கள் அறிந்தே உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து இயக்கங்களின் சேவைகளையும் தேவையையும் நாட்டு மக்கள் நன்கு உணர்ந்தே உள்ளனர்.

'ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்களுக்கு தொடர்பில்லை' என்று சோனியா தலையிலடித்து சத்தியம் செய்தாலும் இனிமேல் யாரும் நம்பப் போவதில்லை. காங்கிரஸ் நடத்திவரும் தேசநலனுக்கு விரோதமான நாடகங்கள் அனைத்தையும் பிற அரசியல் கட்சியினரும் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். இத்தகைய மோசடிப் பேர்வழிகள் இந்து இயக்கங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது நல்லது தான். வில்லன்கள் நல்லவர்களைப் பாராட்ட மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.

ஆர்.எஸ். எஸ். அமைப்புக்கு எதிராக முன்னாள் பிரதமர் நேரு கடுமையான வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டார். 1948 ல் மகாத்மா காந்தி கொலையைக் காரணம் காட்டி சங்கத்தை தடையும் செய்தார். அந்த குற்றச்சாட்டுகளிலிருந்து சட்டப்படி நிரபராதியாக வெளியேறிய சங்கம் ‘அக்னிபிரவேசம் செய்த சீதை போல’ தனது களங்கமின்மையை நிரூபித்தது. தனது வாழ்வின் இறுதியில், சீனப்போரின் போது உண்மை நிலையை உணர்ந்து, தனது தவறைத் திருத்திக் கொண்டார் நேரு.

அவரது மகள் இந்திரா காந்தியும் சங்க பரிவார் அமைப்புகளுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்தார். 1975 ல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது முதலில் தடை செய்யப்பட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். தான். அதுவே அவரது எதேச்சதிகார ஆட்சிக்கு சாவுமணியானது. அரசின் கொடுமையான அடக்குமுறைகளை மீறி, தலைமறைவுப் போராட்டம் வாயிலாக மக்களிடம் இந்திராவின் சர்வாதிகார முகத்தை அம்பலப்படுத்தி ஜனநாயகத்தை காத்தது ஆர்.எஸ்.எஸ். சங்கத்தின் முன்முயற்சிகளால் உருவான ஜனதா இந்திரா ஆட்சியை தூக்கி எறிந்தது. அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ். மீது கை வைக்க இந்திரா காந்தி துணியவே இல்லை.

மூன்றாவது முறையாக, 1992 ல் அயோத்தியில் சர்ச்சைக்குரிய அடிமைச் சின்னம் அகற்றப்பட்டபோது, நரசிம்ம ராவ் அரசால் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. அந்தத் தடையை நீதிமன்றமே ரத்து செய்தது. பின்னாளில் பாரதிய ஜனதா கட்சி நாட்டின் அரசியலில் பிரதான இடம் பெறவும், மத்தியில் (1998) வாஜ்பாய் பிரதமர் ஆகவும், ராவ் விதித்த தடைதான் உதவியது.

ஆக, ஆர்.எஸ்.எஸ். மீது காங்கிரஸ் அரசுகள் ஏவும் தடைகள், விசாரணைகள், துஷ்பிரசாரங்கள் அனைத்தும், இந்து அமைப்புகளுக்கு நன்மையே நல்கும். காங்கிரசின் சுயரூபம் வெளிப்படவே அவை உதவுகின்றன. அந்த வகையில், தற்போதைய காங்கிரஸ் மாநாடு நிறைவேற்றியுள்ள தீர்மானங்களும் சங்கத்தை பலப்படுத்தி, நாட்டுக்கு நலம் அளிக்கும்.

முட்டாள்தனமாக அமெரிக்கத் தூதரிடம் உளறிக் கொட்டிய கட்சியின் இளவரசரைப் பாதுகாப்பதற்காக கட்சியின் தேசிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட கிறுக்குத்தனமான தீர்மானம், கடவுள் அருளால் குப்பைக்கூடைக்குச் சென்றுவிட்டது.

நாட்டு மக்களை சிறுபான்மை- பெரும்பான்மை என்று பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் தொடர்வதன் அபாயம் குறித்து நாட்டிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களிடம் இந்துத்துவ அமைப்புகள் விளக்க வேண்டிய நேரம் இது.


----------------------------

நன்றி: விஜயபாரதம் (7.1.2011)

.

புதன், டிசம்பர் 22, 2010

அருண் ஷோரியின் உபதேசமும் கருணாநிதியின் உபன்யாசமும்


சென்னையில், பல்கிவாலா அமைப்பு மற்றும் சென்னை தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் சார்பில், ‘ஊழலின் உண்மையான தாக்கம்' என்ற தலைப்பில் டிச. 17 ல் கருத்தரங்கம் நடந்தது. இதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும் பத்திரிகையாளருமான அருண் ஷோரி, ''2001 முதல் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறேன். அப்போதுதான், தே.ஜ.கூட்டணி ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற கோட்பாட்டையும் ஆ.ராசா கடைபிடிக்கவில்லை என்பது தெரியவரும். இந்த வழக்கில் எப்போது சி.பி.ஐ விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராகி உண்மைகளை கூற நான் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

பிறகு ஊடகங்களின் தற்போதைய போக்கு குறித்து கவலை தெரிவித்த அவர் மேலும் கூறியது:

ஊழல் தொடர்பான செய்திகளை வெளியிடும்போது, ஊடகங்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதனை செய்தியாக்கக் கூடாது. அவ்வாறு செய்வது, ஊழலில் தொடர்புடைய அரசியல்வாதிகள் தப்பிக்க வழி ஏற்படுத்திவிடும். பத்திரிகைகள், அரசியல்வாதிகளின் பேச்சை அப்படியே எழுதாமல், அதில் உள்ள உண்மையை மட்டும் எழுத வேண்டும்.

ஊழல் என்பது புற்றுநோய் போல நாட்டை அரிக்கிறது. ஊழல் செய்தவர்களை பொதுவாழ்வில் இருந்து நீக்குவதுடன், சிறைத் தண்டனை வழங்க வேண்டும். நம் நாட்டில் ஒரு ஊழலை பற்றி விசாரிக்கும் போதே, அதை விட பெரிய ஊழல் பேச்சு ஏற்பட்டால், பழையதை மக்கள் மறந்து விடும் நிலை உள்ளது. சி.பி.ஐ., அமைப்பு, யாருக்கும் அடிபணியாமல் தனித்திறன் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஊழல் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் வழக்கை காலதாமதம் ஏற்படுத்தாமல், விரைந்து முடிக்க வேண்டும்.

தனிநபராக ராசா ஒருவரால் இவ்வளவு பெரிய தொகையை ஊழல் செய்திருக்க முடியாது. அவருக்கு பின்னணியில் இருந்தவர்கள் குறித்து, ராசா அப்ரூவராக மாறி எல்லா உண்மைகளையும் தெரிவிக்க வேண்டும், என்றார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள், தங்கள் மீதான அஸ்திரத்தை திசைதிருப்பிவிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் என்ற முறையில், அருண் ஷோரி துணிவுடன் விசாரணையை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. அதே சமயம், 2001 முதல் விசாரணை என்பதைப் பயன்படுத்தி தற்போதைய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையை இழுத்தடிக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.

ஆ.ராசா தனது துறை அலுவலகத்தில் கிடப்பில் இருந்த 300 க்கு மேற்பட்ட விண்ணப்பங்களை நிராகரித்து, அவசர அவசரமாக தகுதியற்ற விண்ணப்பங்களை உள்நுழைத்தது ஏன் என்ற கேள்வியையும் அவர் கேட்டிருக்கிறார். உண்மையில் இந்தக் கேள்வியை சி.பி.ஐ ராசாவிடம் கேட்க வேண்டும். அவர்கள் ராசாவிடம் கேட்காவிட்டால், அருண் ஷோரியே இக்கேள்வியை சி.பி.ஐ.இடம் கேட்கும் நிலையும் ஏற்படலாம்.

இந்நிலையில், அருண் ஷோரியின் கருத்துக்களை தமிழக முதல்வர் கருணாநிதி அவருக்கே உரித்த சுயநலத்துடன் தனது ஊடக உபன்யாசத்திற்கு வழக்கம் போலப் பயன்படுத்தி இருக்கிறார்.

கடந்த இரு நாட்களாக பத்திரிகையாளர் சந்திப்புகளில் அருண் ஷோரியின் கருத்துக்களையே கருணாநிதி மேற்கோள் காட்டிவருகிறார். அதிலும் தனக்குத் தேவையான பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து பயன்படுத்தி வருகிறார்.

''ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி இருக்க வாய்ப்பில்லை; அநேகமாக ரூ. 40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்பது எனது கருத்து'' என்ற ஷோரியின் கருத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்ட கருணாநிதி, 'அருண் ஷோரியே கூறிவிட்டார்' என்று தனது பாதுகாப்பிற்கு அவரை கவசமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறார்.

இதுவரை, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த ஊழலும் நடக்கவில்லை என்று கூறிவந்த கருணாநிதி, தற்போது, ரூ. 40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதை ஒப்புக் கொள்கிறாரா? இந்தக் கேள்விக்கான பதிலை மட்டும் அவர் நாசூக்காக தவிர்க்கிறார்.

அடுத்ததாக ''ராசா மட்டும் இவ்வளவு பெரிய ஊழலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை'' என்ற ஷோரியின் கருத்தை எடுத்துக்கொண்டு, ராசாவை ஷோரி ஆதரிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் கருணாநிதி முயன்றிருக்கிறார். அதே சமயம் 'ராசா ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வேண்டும்' என்ற ஷோரியின் வேண்டுகோள் குறித்து மஞ்சள்துண்டு மகான் கண்டுகொள்ளவே இல்லை.

ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது, செய்தியின் ஆழத்தைப் புரிந்துகொண்டு வெளியிட வேண்டும். அரசியல்வாதிகள் சொல்வதை அப்படியே வெளியிடாமல் அதனை ஆராய்ந்து வெளியிட வேண்டும் என்று ஊடக வாதிகளுக்கு அறிவுரை கூறிய அருண் ஷோரி, 'அரசியல்வாதிகள் பிறர் கூறுவதன் முழு சாராம்சத்தையும் புரிந்துகொண்டு பேச வேண்டும்' என்றும் கூறியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ராசாவின் பின்னணியில் இருந்து ஊழல் செய்தவர்களில் சோனியா, கருணாநிதி ஆகியோருக்கு முக்கிய இடம் இருப்பதாக நாட்டு மக்கள் சந்தேகிக்கிறார்கள். எனவேதான், பலிகடா ஆகாமல் 'எல்லா உண்மைகளையும்' கூறுமாறு ராசாவுக்கு ஷோரி அறிவுரை கூறியிருக்கிறார். அதனையே, மூக்கறுந்த முதல்வர் தனக்கு சாட்சியாகப் பயன்படுத்த விழைவது, அவர் எப்படிப்பட்ட சிக்கலில் தவிக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

.

செவ்வாய், டிசம்பர் 21, 2010

அரசுக்கு விண்ணப்பம்

1963 ல் தில்லியில் நடந்த குடியரசுதின அணிவகுப்பில்
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு.

அக்னியை சிறைசெய்ய எண்ண வேண்டாம்;
ஆதவனை மறைத்துவைக்க முயல வேண்டாம்!
இடிமுழக்க ஓசையினை மறுக்க வேண்டாம்;
ஈடில்லா இயக்கமடா எங்கள் சங்கம்!

உண்மையினைப் பொய்களினால் மூட வேண்டாம்;
ஊதற்காற்றாய்ச் சீறும் எங்கள் சங்கம்!
எழுந்துவிட்ட ஹிந்துக்கள் இதயம் நாங்கள்;
ஏனிதனைத் தடை செய்து மாளுகின்றாய்?

ஐயையோ எனப் புலம்பி அரற்ற வேண்டாம்!
ஒற்றுமையைக் கண்டென்றும் அஞ்சலாமா?
ஓடையல்ல எம்சங்கம் அணைகள் கட்ட;
ஔவியத்தால் சமுத்திரத்தைத் தடுக்க வேண்டாம்!

------------------------------
நன்றி: விஜயபாரதம் (18.02.2000)
குறிப்பு: தற்போதைய சூழலைக் கருதி மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.
.

திங்கள், டிசம்பர் 20, 2010

ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்- 2


வானவில்லின் நிறங்கள் ஏழாயினும் அவை அனைத்தும், ஒரே நிறமற்ற ஒளியின் நிறப்பிரிகைகளே என்பது விஞ்ஞான உண்மை. முந்தைய பதிவில்/ சென்ற இதழில் ( கட்டுரையின் முதல் பகுதி.... ) நான்கு நிறங்கள் குறித்துக் கண்டோம். இப்போது மீதமுள்ள மூன்று நிறங்கள்...

மஞ்சள் நிறம்:

மஞ்சள் பத்திரிகை என்றால் என்ன என்று அனைவருக்கும் தெரியும். இப்போதைய அதிகாரத் தரகர்களான ஊடக அறிஞர்களைக் காணும்போது வானவில்லில் தோன்றும் மஞ்சள் நிறம் நினைவில் வந்தால் அதற்கு வானவில் பொறுப்பில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு உள்ள தொடர்புக்கு சிறிதும் குறைவில்லாதது பத்திரிகையாளர்களின் தொடர்பு. 2009 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபின் மன்மோகனார் ஆட்சி அமைக்கும் முன்பு நடந்த அதிகாரத் தரகு வேலைகளில் ஊடக ஞானிகளான வீர் சாங்க்வி, பர்கா தத் ஆகியோர் பங்கேற்றது நீரா ராடியா 'டேப்' வாயிலாக வெளியாகி சந்தி சிரிக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து 2008 முதலாகவே, நாட்டுப்பற்றுள்ள சில ஊடகங்களால் ‘புலம்பப்பட்டு’ வந்துள்ளது. ஆயினும், ஊழல்கறை படிந்த ஆண்டிப்பட்டி ராசாவையே மீண்டும் அதே தொலைதொடர்புத் துறைக்கு அமைச்சராக்க ஊடக மேதாவிகள் சிலர் நடத்திய தொழில் துஷ்பிரயோகம் நாட்டுக்கு செய்துள்ள தீங்கு சாதாரணம் ஆனதல்ல. கடந்த 2 ஆண்டுகளாக வீர் சாங்க்வியின் ஹிந்துஸ்தான் டைம்சும், பர்கா தத்தின் என்டிடிவியும் வெளியிட்ட செய்திகள் எப்படிப்பட்டவையாக இருந்திருக்கும் என்பதை இப்போது சிந்தித்துப் பார்த்தால், அந்த செய்திகளை உண்மையென்று நம்பிய மக்களுக்கு தேள் கொட்டியது போல இருக்கிறது. ஆனால், தரகு வேலை செய்த அதிபுத்திசாலிகள் எதுவுமே நடக்காதது போல இப்போதும் செய்தி வாசிக்கிறார்கள்.

இப்போதும்கூட, வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே அலைக்கற்றை மோசடி துவங்கிவிட்டது என்று கை கூசாமல் எழுதும் பத்திரிகைகள் இருக்கின்றன. முன்னாள் பத்திரிகையாளரும் தே.ஜ.கூட்டணி ஆட்சியில் தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தவருமான அருண் ஷோரி இதற்கு அற்புதமான பதில் கொடுத்திருக்கிறார். கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையை 2001 முதல் நடத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கூடிய கருத்தை வரவேற்ற அவர், ''அலைக்கற்றை விநியோகம் தொடர்பாக 1998 முதலாகவே கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணையை நடத்தலாம். அப்போது தான், ராசா கூறிவரும் 'முந்தைய நடைமுறையையே கடைபிடித்தேன்' என்ற பித்தலாட்டம் அமபலமாகும். விசாரணைக் குழு முன் ஆஜராக நான் தயாராகவே இருக்கிறேன். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எப்படி அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன என்பதை விளக்க நான் தயாராகவே இருக்கிறேன். உண்மையில் ராசா எந்த முன்னுதாரணத்தையும் பின்பற்றவில்லை. எந்த விதிமுறைகளையும் மதிக்கவில்லை என்பது அப்போதுதான் வெளிப்படும்'' என்று கூறி இருக்கிறார்.

கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜே.பி.சி.) விசாரணையை எதிர்க்கட்சிகள் கோருவதே பிரதமர் மன்மோகன் சிங்கை கூண்டில் ஏற்றும் நோக்கத்துடன் தான் என்று சில காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன. அதில் என்ன தவறு? ஊழல் செய்த மத்திய அமைச்சரை ஒன்றரை ஆண்டுகாலம் போஷித்த பிரதமரை கேள்வி கேட்காமல் தெருவில் செல்பவரிடமா விசாரிக்க முடியும்? ராசா விவகாரத்தில் பல பல்டிகளை அடித்த மன்மோகன் சிங்கிடம், அந்த பல்டிகளுக்கு காரணம் யார் என்று கேட்பது தானே விசாரணை நிறைவடைய உதவும்? ''மன்மோகன் சிங் ஏற்கனவே இருமுறை ஜே.பி.சி. விசாரணைக் குழு முன்பு ஆஜரானவர் தானே?’’ என்று அருண் ஷோரி கேட்டிருக்கிறார். எப்போதும் வாயாடும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களிடம் இதற்கான பதிலில்லை.

இப்போதும்கூட, அருண் ஷோரியை பா.ஜ.க.வுக்கு எதிராக கிளப்பிவிட முயற்சிகள் நடக்கின்றன. கரண் தாப்பரின் அண்மைய 'டெவில் அட்வகேட்' நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள், ராசா விவகாரத்தை அமுக்க நடத்தப்பட்ட நாடகமே. அதற்கு, அனுபவசாலியான ஷோரியே பலியாகி விட்டதைக் காண முடிந்தது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் யார் பேசுவது என்பதை நீரா ராடியா தீர்மானம் செய்ததாக கரண் தாப்பர் உறுதிப்படுத்த முயன்றார். கட்சி மீது சிறு அதிருப்தியில் இருப்பவரை மேலும் சொறிந்து, பிரச்னையை திசைதிருப்ப அவர் முயன்றார். ஆயினும், அதில் கிளம்பிய பரபரப்பால் ராசா விவகாரத்தை கரண் தாப்பரால் நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியவில்லை.

வீர் சாங்க்வி, பர்கா தத் மட்டுமலாது, மேலும் பல ஊடகவாதிகள் ராசா விஷயத்தில் வெளிப்படாமல் இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. உதாரணமாக, தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று, ராசா விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டபோதும், மிக மிக அடக்கமாக, ராசா பெயரையே குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டது. இப்போது பிரச்னை பெரிதாகிவிட்டவுடன், ராசாவை கடுமையாகத் தாக்கி செய்திகள் வெளியிட்டு, பிராயச்சித்தம் செய்கிறது அந்தப் பத்திரிகை. இதே போன்ற நிலையை நாடு முழுவதிலும் காண முடிகிறது. இப்போது அதிர்ச்சிகரமான தலைப்புகளுடன் ‘ராசா’ செய்தியை வெளியிடும் பல தமிழ் புலனாய்வுப் பத்திரிகைகள், ஊழல் வெளிப்பட்ட ஆரம்பக் காலத்தில், யாருக்கோ காய்த்திருக்கிறது புளித்த மாங்காய் என்பதுபோல கண்டுகொள்ளாமல் இருந்தவைதான்.

இப்போதும்கூட, ஊடக அறிஞர்கள் என்ற பெயரில் தி.மு.க. சார்பு பத்திரிகையாளர்கள், ‘ராசா மீது நடவடிக்கை எடுக்க, அவர் தலித் என்பதுதான் காரணம்’ என்று பசப்பித் திரிகிறார்கள். மஞ்சள்துண்டு மகானுக்கு அடிமையான மஞ்சள் பத்திரிகையாளர்களிடம் வேறெதை எதிர்பார்ப்பது?

ஆரஞ்சு நிறம்:

வானவில்லின் நிறங்களில் எதிரிடையான நிறம் கொண்டது ஆரஞ்சு. மத்திய ஊழல் கூட்டணி அரசை எதிர்த்துப் போராடும் பா.ஜ.க. போல. ஊழலுக்கு காரணமானவர்கள் போலவே ஊழலை வெளிப்படுத்தியவர்களும் வானவில்லின் வண்ணங்களாக மிளிர்கின்றனர். உண்மையில், பா.ஜ.க.வின் கடுமையான எதிர்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், ராசா விவகாரத்தை மூடி மறைக்கும் சாகசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றத்தில் நடத்திய ஆர்ப்பாட்டத்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பட்டிதொட்டி எல்லாம் பரவிவிட்டது. பா.ஜ.க.வுக்குப் போட்டியாக இடதுசாரிக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் களமிறங்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலேயே சில கட்சிகள் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க, வானவில் விவகாரத்தில், காங்கிரஸ் தனிமைப் படுத்தப்பட்டது. இந்த விஷயத்தில் முக்கிய ஊழல் கூட்டாளியான தி.மு.க.வுடனும் கூட காங்கிரஸ் கட்சியால் நிம்மதியாக உரையாட முடியவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள் தங்கள் மீதான புகார்களை நாசூக்காக திசை திருப்ப முயன்றனர். தே.ஜ.கூட்டணி ஆட்சியிலேயே முறைகேடுகள் துவங்கிவிட்டன என்று நடந்த பிரசாரத்தை மீறி, பா.ஜ.க. ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிப்படுத்தி இருக்கிறது. இதற்காக, நாடாளுமன்றத்தை முடக்கவும் பா.ஜ.க. தயங்கவில்லை. இதனால், குளிர்காலக் கூட்டத் தொடரில், மொத்த நாட்களான 23 நாட்களும் நாடாளுமன்றம் முடங்கியது.

இதனை காங்கிரஸ் வன்மையாகக் கண்டித்தது. ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக புலம்பிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களுக்கு, யாரேனும், முந்தைய வாஜ்பாய் ஆட்சியில் காங்கிரஸ் நடந்துகொண்ட முறையை நினைவுபடுத்தினால் நல்லது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு என்ன ஊழல் செய்தாலும் கண்டுகொள்ளாமல், அதற்கான பிரதிபலனைப் பெற்றுக் கொண்டு சும்மா இருக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியிடம் பிரதமர் எதிர்பார்க்கிறாரா?

பா.ஜ.க மட்டும் ஒழுங்கா என்று கேட்டு திசை திருப்புகிறார் அந்தோனியோ மைனோ (அதாங்க, சோனியா காந்தி) பங்காரு லக்ஷ்மணன் லஞ்சம் வாங்கியது, கர்நாடகாவில் நடந்துள்ள ஊழல் குறித்து கூறும் சோனியா, என்ன சொல்ல வருகிறார்? காங்கிரஸ் ஊழல் செய்யவில்லை என்றா? அல்லது, பா.ஜ.க.வுக்கு அதை சுட்டிக்காட்ட தகுதி இல்லை என்றா? அல்லது ஊழல் ஒரு பெரிய விஷயமில்லை என்றா?

எது எப்படியாயினும், பங்காரு லக்ஷ்மணன் மீது எடுத்த நடவடிக்கை போல எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்காதது, பா.ஜ.க.வை குற்றம் சாட்டும் ஊழல்வாதிகளுக்கு வாய்ப்பாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஆயினும், பேருந்தில் ஜேப்படி செய்து சிக்கிய திருடனும், பல லட்சம் கோடி அரசுப் பணத்தை கபளீகரம் செய்த அதி புத்திசாலிகளும் ஒரே தராசில் நிறுத்தப்படக் கூடாது என்பதை மக்கள் அறிந்தே இருக்கின்றனர். தன் மீதான புகாரை அடுத்து முறைகேடாக ஒதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அரசு நிலத்தை திருப்பி அளிக்க எடியூரப்பா முன்வந்தார். அதன்மூலமாக தனது தவறை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த மனசாட்சி ராசாவிடமோ, நாட்டின் ராசாவிடமோ, ‘ராணி’யிடமோ நாட்டின் ராணியிடமோ இல்லையே?

வாஜ்பாய் ஆட்சி மீது குற்றம் சாட்டினால் பா.ஜ.க. அமைதியாகிவிடும் என்று தப்புக் கணக்கு போட்ட ராசா, சோனியா, கருணாநிதி. டாடா உள்ளிட்டோருக்கு, பா.ஜ.க.வின் முனைப்பு முன்னைவிட அதிகரித்திருப்பது கிலி ஏற்படுத்தியுள்ளது. தவிர, ஆளும் கட்சி சார்பான இந்த விஷமப் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை என்பதை அரசு உணர்ந்துகொண்டது.

நாடாளுமன்றத்தில் ஆணவப் போக்குடன் நடந்துகொண்ட காங்கிரஸ் கூட்டணிக்கு பாடம் கற்பிக்க நாடு முழுவதும் பிரசார இயக்கத்தை மேற்கொள்ள பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூட்டணி முடிவு செய்துள்ளது. அதன் தெருமுனை ஆர்ப்பாட்டங்கள் ஏற்கனவே துவங்கிவிட்டன. இதுவிஷயத்தில் தங்கள் கூட்டணியில் இல்லாத மாற்றுக் கட்சிகளின் ஆதரவை சேகரிப்பதிலும் தே.ஜ.கூ. வெற்றி பெற்றுள்ளது.

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக 'பாமாயில் ஊழல் புகழ்' பி.ஜே.தாமசை நியமிக்க பா.ஜ.கவின் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்த எதிர்ப்புக்கு நல்ல பலன் இப்போது கிடைத்திருக்கிறது. தற்போது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் வீசும் கேள்விக்கணைகளுக்கு பதில் கூற முடியாமல் மத்திய அரசு தடுமாறுவதை நாடே வேடிக்கை பார்க்கிறது. வேறு வழியின்றி, 'ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையிலிருந்து விலகி இருப்பதாக' பி.ஜே.தாமஸ் உச்சநீதி மன்றத்தில் விளம்பி இருக்கிறார். ஆயினும் அவரை பதவியில் இருந்து விலக்காமல், சோனியா அடிவருடியான பிரதமர் அமைதி காக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலை வெளிப்படுத்தியதில் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி, அருண் ஷோரி, ரவி சங்கர் பிரசாத், சரத் யாதவ் ஆகியோருக்கு பெரும் பங்குண்டு. இவர்கள் மீதான நல்லெண்ணம் நாட்டில் நிலவுவதன் காரணமாகவே, காங்கிரஸ் கிளப்பிய அவதூறு பிரசாரம் வலுவிழந்தது. ஆயினும், பா.ஜ.க, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை இன்னும் வேகமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய காலகட்டம் இது.

ஸ்பெக்ட்ரம் ஊழலைக் காரணமாகக் கொண்டு மத்திய அரசைக் கவிழ்க்க வேண்டும் என பா.ஜ.க. விரும்பவில்லை என்று அத்வானி கூறி இருக்கிறார். அது அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தலாம். ஆனால், இப்போது இந்த ஆட்சியைக் கவிழ்க்காவிட்டால் வேறு எப்போது கவிழ்ப்பது? பெருந்தன்மையைக் காட்ட வேண்டிய இடத்தில் மன்மோகனோ அவரது தலைவியோ இல்லை. உண்மையில், இந்த ஊழலின் ஆணிவேர் ராசாவிடம் இல்லை. அதன் வேர்மூலத்தைத் தோண்டினால், காங்கிரஸ் தான் காயம் படும். அந்த வாய்ப்பை பா.ஜ.க விட்டுவிடக் கூடாது.

மன்மோகன் சிங் நல்லவர் என்று ஊடகங்களும் சில அரசியல்வாதிகளும் நடத்திவரும் பிரசாரத்தை பா.ஜ.க தொடரக் கூடாது. ராசா விவகாரத்தில் இத்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றியது பிரதமரின் குற்றம். அதற்கான பலனை அவர் அடைந்தே தீர வேண்டும். நடவடிக்கை எடுக்காததற்கு பிரதமர் கூறும் காரணம் 'நிர்பந்தம்' எனில், நாட்டிற்கு தலைமை தாங்கும் தகுதியை அவர் இழக்கிறார். தெரிந்தே ராசாவை ஆதரித்ததால் அவர் கூட்டுக் களவானியாகவும் ஆகிறார். அவரை பதவியில் இருந்து அகற்றாமல் அரசியல் நாகரிகம் பார்ப்பது பா.ஜ.க.வின் வேலை அல்ல.

சிவப்பு நிறம்:

அபாயத்தின் அறிகுறி என்றுமே சிவப்புத் தான். வானவில்லில் உள்ள அதிக அலைநீளம் கொண்ட நிறமும் சிவப்பே- ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு அபாய எச்சரிக்கை செய்து உதவிய நீதிமன்றங்கள் போல. நீதிமன்றங்களின் தலையீடு மட்டும் இல்லையென்றால், வானவில் ஊழலில் பல லட்சம் கோடி நாட்டிற்கு நஷ்டம் ஏற்படுத்திய சதிகாரர்கள் எந்த குற்ற உணர்வும் இன்றி மாபெரும் தியாகியர் போல நாட்டில் இன்றும் உலவிக் கொண்டிருந்திருப்பார்கள்.

முதலாவதாக, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நிலவும் முறையற்ற நடைமுறைகளை பிட்டுப் பிட்டுவைத்து கேள்வி கேட்டது உச்சநீதிமன்றம் தான். சுப்பிரமணியம் சாமி தொடர்ந்த வழக்கைப் பயன்படுத்திக் கொண்டு மத்திய ஊழல் அரசை கிழி கிழியென்று கிழித்தது உச்சநீதி மன்றம். நீதிமன்ற விசாரணையில் நீதிபதிகள் இன்று என்ன சொல்லப் போகிறார்களோ என்று அஞ்சி நடுங்கும் நிலைக்கு மத்திய அரசு ஆளானது. மத்தியப் புலனாய்வுத் துறையின் பசப்பல்களுக்கு ‘நறுக்’ என்று கொட்டு வைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ''நாங்கள் வேடிக்கை பார்ப்பதாக நினைக்கிறீர்களா?'' என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.

''இன்னும் ஏன் ராசாவிடம் விசாரணை செய்யவில்லை? ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறீர்கள்? ஊழல் புகாருக்கு ஆளான தாமசால் எப்படி நியாயமான முறையில் விசாரணையை வழிநடத்த முடியும்? நீரா ராடியா 'டேப்' வெளியானது எவ்வாறு தவறாகும்? பிரதமரின் யோசனைப் புறந்தள்ளி ராசா அவமதித்துள்ளார்; அவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? அலைக்கற்றை ஒதுக்கீடுகளை ஏன் ரத்து செய்யக் கூடாது? '' போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மூலமாக நாட்டின் மனசாட்சியாகத் திகழ்கிறது உச்சநீதிமன்றம். தில்லி உயர்நீதிமன்றமும் சளைக்கவில்லை. இதே போன்ற கேள்விகளால், மத்திய அரசின் ஆணவப் போக்கையும் ஊழலை மறைக்கும் சதிகளையும் இரு நீதி மன்றங்களும் அம்பலப்படுத்தி உள்ளன.

அதன் விளைவாகவே, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராசா விலக வேண்டி வந்தது. ராசா வீடுகளில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்த வேண்டிவந்தது. ராசாவின் செயலர் கைது செய்யப்பட்டதும், நீரா ராடியாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதும், நீதிமன்றத்தால் தான் சாத்தியமானது. நீதிமன்றம் ஊழலுக்கு எதிரான போர்க்குரலை வெளிப்படுத்திய காரணத்தால்தான், அதனை ஊடகங்களும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அடுத்தகட்ட விசாரணைகளில் இன்னும் என்னென்ன உண்மைகள் வெளிப்படப் போகின்றனவோ, தெரியவில்லை. ஒருவகையில் அவை நாட்டிற்கு அவமானம் தான் என்றாலும், அவை அனைத்தும் நாட்டிற்கு நன்மையே அளிக்கும். ஏனெனில் வெட்கப்பட்டு வேதனைப்பட வேண்டியவர்கள் புனிதர்களாக நடமாடும் நாட்டில், நீதிமன்றங்களின் பங்கு அளப்பரியதாகி விடுகிறது.

ஆண்டிமுத்து ராசாவின் ''முந்தைய ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையிலேயே ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் விற்பனை நடந்து'' என்ற தொடர் புழுகால் கோபம் அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ''அவ்வாறெனில், 2001 முதலாகவே மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணையை நடத்தட்டும். அப்போது உண்மை வெளிப்படும்'' என்று காட்டமாகவே கூறினர். அதையடுத்து, அவசர அவசரமாக, தனி நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷனை மத்திய அரசு அவசர அவசரமாக அறிவித்தது. ஆயினும், இது விசாரணையை மேலும் ஒத்திப்போட நடத்தப்படும் நாடகமே என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

உச்சநீதி மன்றத்தின் கண்டிப்புக்கு அஞ்சி, அலைக்கற்றை மோசடியில் தொடர்புடைய 85 நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு தொலைதொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அநேகமாக பல மோசடி நிறுவனங்களின் உரிமங்கள் ரத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல தொலை தொடர்பு நிறுவனங்கள் அரண்டுபோய் உள்ளன.

மத்திய அமைச்சர் ராசா எந்த நேரமும் கைதாகலாம் என்ற சூழல் (டிச. 15 நிலவரம்) ஏற்பட்டுள்ளதற்கும் உச்சநீதி மன்றத்திற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இதனால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் ஏலகிரி சென்று ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் (டிச. 13) தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது. கருணாநிதியுடன் நிழலாகத் திரிந்த ராசா எங்கிருக்கிறார் என்று தேட வேண்டிய நிலையில் இருப்பதும், அதனால் மாறன்கள் நிம்மதி அடைந்திருப்பதும், உச்சநீதி மன்றத்தின் சாதனைகள்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்த காலத்தில் அரசை நிலைகுலையவைக்கும் வகையில் பல கேள்விகள் கேட்டு நாட்டை உலுக்கிய நீதிமன்றங்களும் கூட, 'பிரதமர் நல்லவர்' என்ற புராணம் பாடுவதைத் தான் இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஒருவேளை இது வஞ்சப் புகழ்ச்சி அணியாக இருக்கக் கூடும்.

நீரா ராடியா 'டேப்' வெளியானது எப்படி என்றும் மத்திய அரசை குடைந்திருக்கிறது நீதிமன்றம். இதனாலும் மத்திய அரசிற்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரிக்க மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகருக்கு பிரதமர் உத்தரவிட்டிருக்கிறார். இதுவும் மூடுமந்திரமாகிவிடக் கூடாது என்பதே தொழில்துறையினரின் எதிர்பார்ப்பு.
வானவில் ஊழலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நிகழ உச்சநீதி மன்றமே காரணமாகி உள்ளது.

இதனை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டதால் மத்திய அரசின் வேடம் கலைந்துள்ளது. அதன் மூலமாக 2-ஜி ஊழலில் பின்னணியில் இருப்பவர் 'ராசா'ஜி மட்டுல்ல என்பதும், அரசை ஆட்டுவிக்கும் மாபெரும் 'ஜி' தான் அனைத்திற்கும் ஆதிமூலம் என்பதும் புலப்படத் துவங்கி உள்ளன. மழை மேகமூட்டம் மறைந்து சூரியனின் முழுக் கதிர்வீசும் வெளிப்படும்போது வானவில்லின் வண்ணங்கள் அனைத்திற்கும் அடிப்படையான- ஒளிச்சிதறலின் மூலம் வெளிவரும். அப்போது தான், வானவில் ஊழலுக்கு பிராயச்சித்தம் கிடைக்கும்.

------------------------------

நன்றி: விஜயபாரதம் (31.12.2010)
.

சனி, டிசம்பர் 18, 2010

ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்- 1

நன்றி: தினமணி/மதி/16.12.2010


எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இப்போதைய மன்மோகன் சிங்கனார் அரசு 'ஸ்பெக்ட்ரம்' ஊழலில் சிக்கிக்கொண்டு நடத்தும் நாடகங்கள், இந்தப் பழமொழியையே நிரூபிக்கின்றன. கையும் களவுமாகச் சிக்கிய திருடன், பொதுமக்களின் அடிகளுக்கு பயந்து, தட்டுப்படுபவர்களை நோக்கி எல்லாம் கை காட்டுவதுபோல, 'ஸ்பெக்ட்ரம்' ஊழலில் முகமூடி கிழிந்தவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள, புதிய வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். மொத்தத்தில் ஸ்பெக்ட்ரம்- வானவில் ஊழல்களின் வெளிப்பாடு வண்ண ஜாலங்கள் நிறைந்ததாக, அடுத்து என்ன நிகழுமோ என்று பரபரப்புடன் எதிர்பார்க்கும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதையாக மாறி வருகிறது.

ஊதா நிறம்:

வண்ணங்களில் ஊதா நிறம் மிக மென்மையானது. மிகவும் கூர்ந்து கவனித்தால் தான் இந்நிறத்தைக் கண்டறிய இயலும்- சக்தி வாய்ந்த தொழிலதிபர் ரத்தன் டாடா போல. இவரது ‘வாக்குமூலம்’ தற்போது வெளியாகி உள்ளது. அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடனான தொடர்பு டாடா அதிபருக்கு இருப்பது தெரிந்தபோதே, இந்திய தொழில்துறை அரண்டது. இவருமா இப்படி என்று அதிர்ந்தது. டாடா நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பெற உதவியதற்காக நீரா ராடியா தரகுக் கட்டணம் பெற்றது உறுதியானவுடன், ஸ்பெக்ட்ரம் ஊழலின் பலதிசைப் பரிமாணம் தெரிய வந்தது.
ராடியாவுடன் டாடா நிகழ்த்திய தொலைபேசி உரையாடல் வெளிவரத் தடை விதிக்கக் கோரி அவர் நீதிமன்றத்தை அணுகியவுடன், அவரது சுயரூபம் தெளிவானது. அதற்கு இரு வாரங்கள் முன்னதாக, உத்தராஞ்சல் அரசைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தன்னிடம் ரூ.15 கோடி லஞ்சம் கேட்டதாகவும் அதனை மறுத்துவிட்டதாகவும் கூறிய அவர், பிறகு பல்டி அடித்திருந்தார்.

தனியார் விமான சேவை துவங்க முயற்சித்தபோது லஞ்சம் கேட்ட அமைச்சரால், அந்த திட்டத்தையே கைவிட்டுவிட்டதாக, அடுத்த வாரம் ஒரு பொது நிகழ்வில் குற்றம் சாட்டி கைதட்டல்களைப் பெற்றிருந்தார். டாடா ரூ. 60 கோடியை ராடியாவுக்கு வழங்கி இருப்பது தெரிந்தவுடன், அவரும் சாமானிய தொழிலதிபர் தான் என்பதை நாடு கண்டுகொண்டது.

அவர்தான், தற்போது, 2001 முதலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குளறுபடி துவங்கியது என்று குற்றம் சாட்டி இருக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலையே, சி.டி.எம்.ஏ- ஜி.எஸ்.எம் அலைபேசி சேவை நிறுவனங்களிடையிலான மோதலாக உருவகித்து புதிய விளக்கத்தை அளித்திருக்கிறார் டாடா. இத்தனை நாட்கள் இதனை இவர் ஏன் சொல்லாமல் அமைதி காத்தார் என்பது புரியாத புதிரல்ல. இதுவரை அவர் ஊழல் கண்காணிப்பு வளையத்திற்குள் வரவில்லை; தற்போது அவரது முகமூடியும் கிழிந்துவிட்டதால், தற்காப்பு நடவடிக்கையில் முனைந்திருக்கிறார் டாடா.

''வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அலைக்கற்றை ஏலம் விடும் முறை மாற்றப்பட்டு, வருவாய்ப் பகிர்வு முறை கொண்டுவரப்பட்டது. இப்போதைய மத்திய தணிக்கை ஆணைய கணக்கீட்டின்படி கணக்கிட்டால், அப்போது ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம்'' என்று டாடா கூறி இருக்கிறார். இந்த ஒப்பீடு எதற்காக என்பது விவரம் அறிந்தவர்கள் அறிந்தது தான். அதாவது இப்போது கையும் களவுமாகச் சிக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு பொருட்டல்ல; வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கடைபிடிக்கப்பட்ட முறையே தற்போதும் கடைபிடிக்கப்பட்டது என்ற ராசாவின் குரலுக்கு ஒத்து ஊதுவதுதான் டாடாவின் நோக்கம்.

இவ்வாறு யூகத்தின் அடிப்படையில் வாஜ்பாய் அரசு மீது புதுப்புகார் கூறும் அதே டாடா, ''தற்போது அரசுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்டுள்ள இழப்பு தோராயமான யூகக் கணக்கீடு'' என்றும் முரண்பாடாக விளக்கம் அளித்திருக்கிறார். ராசாவின் ஊழலால் அதிக பலன் பெற்றவர் டாடா என்று தகவல் வெளியாகிவரும் நிலையில், அவர் இப்படி எதிர்த்தரப்பு மீது பாய்ந்தால்தானே, சிறிது காலத்திற்கேனும் தப்ப முடியும்?

இவரது முகமூடியைக் கிழித்தவர், தே.ஜ.கூட்டணியின் ராஜ்யசபா எம்.பி. ராஜீவ் சந்திரசேகர். அவர் டாடாவுக்கு எழுதிய கடிதம் தான் அவரை உசுப்பிவிட்டிருக்கிறது. ''2-ஜி அலைக்கற்றை மோசடியில் அதிக ஆதாயம் பெற்றது டாடா டெலி சர்வீஸ் நிறுவனம் தான். அதனால், அரசுக்கு ரூ. 19,074.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது'' என்று டாடாவுக்கு சந்திரசேகர் கடிதம் எழுத, 'பிரதமருக்கு (மன்மோகன் சிங்) தர்ம சங்கடத்தை ஏற்படுத்த சதி நடப்பதாக அங்கலாய்த்திருக்கிறார் 'திருவாளர் புனிதம்' டாடா.

ராசாவை கண்மூடித்தனமாக ஆதரித்த பிரதமருக்கு சரியான இடத்திலிருந்து உதவிக்கரம் நீண்டிருக்கிறது. டாடாவைக் கொண்டு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்க நடக்கும் சதியாக இது இருக்கலாம். ஏனெனில், இந்தக் குற்றச்சாட்டை டாடா முன்வைத்தவுடன், இடதுசாரி கட்சிகளின் தாக்குதலில் காங்கிரசுடன் பா.ஜ.க.வும் அவசரமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கூட்டு நாடாளுமன்ற விசாரணைக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

கருநீல நிறம்:

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனியொரு மனுஷியாக நீரா ராடியா சாதித்தவை அதிகம்- வானவில்லின் கருநீல நிறம் போல. இதுவரை அவரது தொலைபேசி பேச்சுகளில் வெளியாகி இருப்பவை ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை. இதற்கே அரசியல் அரங்கம் தாங்க முடியாமல் தள்ளாடுகிறது. அனில் அம்பானி, ரத்தன் டாடா போன்ற பெருமுதலாளிகளுடனும், ராசா, ராசாத்தி, ராசாவின் ராசாத்தி ஆகியோருடனும் ராடியா பேசிய தொலைபேசி பேசுக்கள் வெளியானதால்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஆணிவேரை அறிய முடிந்தது.

ராடியா தொடர்பான தொலைபேசி பதிவுகள் அனைத்தும் இப்போது உச்சநீதிமன்றத்தின் பாதுகாப்பில் உள்ளன. இதிலும் சில பேச்சுப்பதிவுகள் காணாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவருடன் ராடியா பேசிய தொலைபேசி பேச்சுக்களின் பதிவுகள் காணாமல் போயிருக்க வாய்ப்பிருக்கிறது.

இப்போது டாடா தொடர்ந்த தனிமனித உரிமை மீறல் வழக்கில், இந்த தொலைபேசிப் பேச்சுக்கள் வெளியில் கசிந்தது எப்படி என்ற விசாரணையும் தொடங்கி இருக்கிறது. சி.பி.ஐ முன் ஆஜரான ராடியா தன்னிடமுள்ள அனைத்து தகவல்களையும் வழங்குவதாக உறுதி அளித்துவிட்டு, கைமாறிய கமிஷனின் அளவு ( ரூ. 60 கோடியாம்!) குறித்து விளக்கிவிட்டு, ஊடகங்களுக்கு பளிச் புன்னகையுடன் தரிசனம் கொடுத்துவிட்டு, வீடு திரும்பிவிட்டார்.

இவருடன் பேசி அம்பலத்திற்கு வந்த ஊடக அறிஞர்கள் வீர் சாங்க்வி, பர்காதத் ஆகியோரிடம் அதற்கான எந்த வெட்கமும் இல்லை. பிற ஊடகங்களும் மிகவும் ஜாக்கிரதையாக அந்த விஷயத்தையே மறந்துவிட துடிக்கின்றன.

ஓர் அமைச்சரின் நியமனத்தில் ராடியா போன்ற இடைத்தரகர்களுக்கு என்ன வேலை என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் அதனைப் பொருட்படுத்துவதாகவே தெரியவில்லை. மௌனம் சம்மதத்தின் அறிகுறியா? பதில் சொல்ல முடியாத இக்கட்டா?

தொலைதொடர்புத் துறை அமைச்சராக்க வேண்டி, கருணாநிதி குடும்பத்திற்கு தயாநிதி மாறன் (தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறல்லவா?) ரூ. 600 கோடி கொடுத்ததாக ராடியா தொலைபேசி பதிவில் கூறப்படுகிறது. இதற்கு இதுவரை கருணாநிதியோ, மாறனோ எந்த மறுப்பும் தெரிவிக்காதது ஏன்? குறைந்தபட்சம், வாங்கிய பணத்திற்கு நாணயமாக தொலைதொடர்புத் துறையை பேரனுக்கு பகுத்தறிவுப் பகலவன் கொடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் தடுத்தது எது? என்பதையேனும், ‘கலாகார்’ இப்போது சொல்லலாம். ஏனெனில் இது வாக்குமூலங்களின் காலம்.

நீல நிறம்:

நிறங்களில் குறைந்த அலைநீளம் கொண்டது நீலம். எனினும், வண்ணங்களில் நீலத்தின் பங்களிப்பு அடிப்படையானது- 'தலித்' ராசாவின் பங்களிப்பு இல்லாமல் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தேற வாய்ப்பில்லை என்பது போல. உச்சநீதிமன்றத்தின் கெடுபிடிகளாலும், மானத்தை வாங்கும் கேள்விகளாலும், மத்திய புலனாய்வுத் துறை அரைகுறை மனதுடன் எடுத்துள்ள நடவடிக்கைகளில் முதன்மையானது, ராசா மற்றும் அவரது நெருங்கியவர்களின் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ. நடத்தியுள்ள (டிச. 8, 15) சோதனை. ராசாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா, தொலைதொடர்புத் துறை முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுரியா உள்ளிட்ட அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடந்திருக்கிறது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ராசாவின் நாட்குறிப்பேடுகளில் பல ரகசியங்கள் கிடைத்துள்ளதாக ஊடகங்கள் கிளப்பி விடுகின்றன. ராடியா தொலைபேசி பேச்சுக்கள் பதிவில் செய்யப்பட்ட 'திருக்கல்கள்' இதிலும் நிகழ்த்தப்பட அதிக வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது. ஏனெனில், மத்திய அரசின் கையாளாக சி.பி.ஐ. மாறி ஆறு ஆண்டுகள்
(ஐ.மு.கூட்டணி ஆட்சிக்கு வந்துதான்) ஆகிவிட்டன. இதிலும் குறிப்பிட வேண்டிய அம்சம்: ராசா அமைச்சராக இருந்தபோது, தொலைதொடர்புத் துறை செயலராக பதவிவகித்து, ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு வித்திட்ட பி.ஜே.தாமஸ் வீட்டில் மறந்தும்கூட சி.பி.ஐ கால் வைக்கவில்லை. அவர்தான் தற்போது ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சி.வி.சி) ஆணையர் ஆயிற்றே!

தனது வீட்டில் நடந்த சோதனை குறித்து இதுவரை ராசா எதுவும் கூறாமல் மௌனம் சாதிக்கிறார். இந்த சோதனையே கண்துடைப்பு நாடகமாக இருக்கலாம். சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று வழக்கம் போல காங்கிரஸ் பெரியதோரனையுடன் விளக்கம் அளிக்கிறது. இதுவரை சட்டம் ஏன் தன் கடமையைச் செய்யவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதிலே இல்லை.

விஷயம் இத்துடன் முடியவில்லை. ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா என்பவரின் வீட்டிலும் சி.பி.ஐ சோதனை நடத்தியுள்ளது. ராசா மத்திய வனத்துறை அமைச்சராக இருந்தபோது (2004) இவர் துவக்கிய 'கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்' நிறுவனத்தில் அனில் அம்பானியின் குழுமத்தில் ஒன்றான ஸ்வான் டெலிகாம் (இதுவும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கிய நிறுவனம்) முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக ராசாவின் மனைவி பரமேஸ்வரி இருந்திருக்கிறார். பிறகு விலகிவிட்டார். தற்போது ராசாவின் அண்ணன் கலிய பெருமாள் இதன் இயக்குனராக உள்ளார். அதாவது, 'கிரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ்' ராசாவின் பினாமி அமைப்பு என்பதும், இந்நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பும் உறுதியாகி உள்ளன. சாதிக் பாட்சாவுக்கு வெளிநாடுகளிலும் கிளை நிறுவனங்கள் உள்ளன. அவை மூலம் லஞ்சப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல். தற்போது சாதிக் பாட்சா கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் வேலையில் தான் சி.பி.ஐ ஈடுபட்டுள்ளது. இன்னும் ராசாவிடம் சி.பி.ஐ (டிச. 15 நிலவரம்) விசாரிக்காதது, ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

ராசாவின் வீடுகளில் சோதனை நடத்திய சி.பி.ஐ அதிகாரி டி.ஐ.ஜி. வினிதா தாகூர், ''ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த வலுவான் ஆதாரங்கள் சிக்கியுள்ளன. சில அதிகாரிகளும் தனியார் நிறுவன பிரதிநிதிகளும் பிறரும் சேர்ந்து, அலைக்கற்றை ஒதுக்கீடு கோரும் மனுதாரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் கிரிமினல் சதியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது'' என்று கூறி இருக்கிறார். இதற்குப் பிறகே ரத்தன் டாடா மத்திய அரசால் களம் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

பச்சை நிறம்:

பச்சை பச்சையாய் பொய் பேசுபவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். வானவில்லுக்கு வண்ணம் சேர்க்கும் நிறம் பச்சை என்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்- வானவில் ஊழலில் கருணாநிதியின் பங்களிப்பு போல.
ஆரம்பத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானவுடன், 'தலித் என்பதால் ராசாவை குற்றம் சாடுகிறார்கள்' என்றவர் நமது தமிழினத் தலைவர். முந்தைய பா.ஜ.க ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையிலேயே தன் அன்புத் தம்பி (ஐம்பது ஆண்டுகளில் சம்பாதித்ததை ஒரே மாதத்தில் சம்பாதித்துக் கொடுத்தவர் அல்லவா?) செயல்பட்டிருப்பதாகவும் செம்மொழி கொண்டான் விளக்கம் அளித்தார். பிறகு, 'ராசாவை நீண்ட நாட்களாகத் தெரியும்; அவர் தப்பு செய்யவே வாய்ப்பில்லை' என்றார்.

அம்மையார் மீது குற்றம் சுமத்தப்பட்டவுடன் அவர் பதவி விலகினாரா என்று எதிர்க் கேள்வி கேட்ட அவர், மதவாதிகளின் பூச்சாண்டிகளுக்கு மத்திய அரசு பணியக் கூடாது என்று உபதேசமும் செய்தார். பிறகு திடீரென்று, ''ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ரூ. 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு என்றால் அதனை ராசா மட்டும் செய்திருக்க முடியுமா என்று கேட்டார். இதைத் தானே அய்யா நாடும் கேட்டுக் கொண்டிருக்கிறது?'' ராசாவுடன் கூட்டுக் களவாணிகளாக இருந்தவர்கள் யாரென்று சொல்ல வேண்டியது தானே என்று கேட்டால், வர்ணாசிரமத்தைத் தாக்கத் துவங்கி விடுகிறார்.

அதே கலாரசிகர், இப்போது (டிச. 7), 'குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராசாவைத் தூக்கி எறிவோம்' என்று முழங்கி இருக்கிறார். ராசா வீடுகளில் நடந்த சி.பி.ஐ.சோதனையை அடுத்து, நிருபர்களுக்கு அவர் அளித்த கேள்வி- பதில் இதோ...

கேள்வி: சி.பி.ஐ.சோதனையை அவமானமாகக் கருதுகிறீர்களா?
பதில்: அப்படி நினைக்கவில்லை. ஆனால், அவமானத்திலேயே ஊறியவர்கள் சிலர் நாட்டிலேயே இருக்கிறார்கள்.

கேள்வி: கட்சியிலிருந்து ராசா ஓரங்கட்டப்படுவார் என்று சொல்லப்படுகிறதே?

பதில்: அவருடைய குற்றம் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டால், அதற்குப் பின் அவரைத் தூக்கி எறிவோம். அதுவரை அவரை கைவிட திமு.க.தயாரில்லை.

- இது தான் கருணாநிதியின் பதில். அதாவது ராசாவை கைகழுவ கருணாநிதி தயாராகிவிட்டார் என்று தெரிகிறது. ஆனால், கனிவான மொழியில் பேசும் சாமர்த்தியம் கொண்ட 'அன்புத்தம்பி'யை அவ்வளவு எளிதாக கைகழுவ முடியாது என்பதால்- திக்கித் திணறி ஏதேதோ உளறுகிறார் மு.க. இவரது உளறல்கள் நாட்டிற்கு புதியதல்ல என்றாலும், வானவில் மோசடியில் இது புதிய திருப்பம் என்று ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.


தொடர்ச்சி: ஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்- 2
-------------------------------
காண்க: தமிழ் ஹிந்து
நன்றி: விஜயபாரதம் (24.12.2010)..

வெள்ளி, டிசம்பர் 10, 2010

அவன் நம்மவன்.. ..அவன் நம்மவன்…


அவன் நம்மவன்... அவன் மன்மதன்...

அகங்காரத்தை நடிப்பில் மறைக்கும் காமுகன்
அவலமே வாழ்க்கையாகக் கொண்டவன்.
அவனை நம்பிவந்த பெண்கள் அபலைகள்.
இனியும் நம்பும் ரசிகர்களும் கோமாளிகள்.
அவன் நம்மவன்.. ..அவன் நம்மவன்…
பகுத்தறிவுத் தாத்தாவின் பேரனின் கணவன்.
முற்போக்குத் திலகத்தின் பேரனின் கணவன்…
.
மனம் முழுவதும் காமம் வழிபவனிடம்
மலரினும் மெல்லிய குறள் எடுபடுமோ?
அழகிய மலரிலும் காம்பே பிடிக்கும்
உன்மத்தனுக்கு விருது கிடைக்குமோ?
மனமே வக்கரித்துப்போன வயசாளியிடம்
வக்கனை மட்டுமே கவியாய் விடைக்குமோ?
என்ன இருந்தாலும் அவன் நம்மவன்..

‘தான்திருடி’ மற்றோரை இகழ்தலும் இயல்பே.
இல்லறம் கெட்டவர் கழிசடையாவதும் இயல்பே.
நாய் வாலை நிமிர்த்துதல் இலமே.
ஆயினும் அவன் நம்மவன்.
அவன் வாலை அறிதலும் இலமே.
அவன் வாலை அரிதலும் இலமே.

- ‘ரதி அன்பு’ படப் பாடல்.
(கவிமாமணிகள் காலி, மைரமுத்து ஆகியோரால் பாராட்டப்பட்டது)

-------------------
.

வியாழன், டிசம்பர் 02, 2010

அனாதை யாருமில்லை; குருதேவரே தந்தை

திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில்
முன்னுள்ள தோரண வாயில்

தாய், தந்தையரை இழந்த ஆதரவற்ற மாணவர்கள் தென்னந்தோப்பில் வேலை செய்து கொண்டிருக்­கிறார்கள். தூய வெண்ணிற ஆடை உடுத்திய பெரியவர் அங்கு வருகிறார். அவரைக் கண்டதும் புதிதாய் வந்த மாணவன் ஒருவன் விம்மி அழுகிறான். அவர் அவனை ஆதுரத்துடன் அணைத்துக் கொள்கிறார்.

“உங்கள் அனைவருக்கும் அப்பா குரு மகராஜ்; அம்மா சாரதாமணி; அண்ணன் விவேகானந்தர். அவர்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருங்கள், எல்லாம் சரியாகிவிடும்” என்கிறார். மாணவன் கண்ணைத் துடைத்துக் கொண்டு, அங்கிருந்து செல்கிறான்.

இச்சம்பவம் நடந்தது 1980ம் ஆண்டு. அந்த வெண்ணிற ஆடை பெரியவர் தான் பிரம்மச்சாரி ராமசாமி அடிகள். ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையை உயர்த்துவதே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த மகான் அவர்.

ஈரோடு மாவட்டம், சத்திய­மங்கலம் அருகிலுள்ள கெம்ப­நாயக்கன் பாளையத்தில் பிறந்த ராமசாமி, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவிய சுவாமி சித்பவானந்தரால் ஆன்மிகப் பாதைக்கு இழுக்கப்பட்டவர். அவரது அணுக்கத் தொண்டராக இருந்த ராமசாமி பிறகு ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக 1949ல் திருச்சி அருகிலுள்ள திருப்பராய்த்துறையில் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில்’ என்ற தர்ம ஸ்தாபனத்தைத் துவக்கினார். .

.ஐந்து அனாதைச் சிறுவர்­களுடன் சிற்றோடையாகத் துவங்கிய இந்த அறப்பணி, இதுவரை 3,000க்கு மேற்­பட்ட ஆதரவற்றோரின் வாழ்வில் ஒளியேற்றி இருக்கிறது. தற்போது, இக்குடிலில் 300 மாணவர்­கள் இருக்கிறார்கள். இவர்­களுக்கென குடில் வளாகத்­திலேயே ஆரம்பப் பள்ளி­யும் உயர்நிலைப் பள்ளியும் செயல்படுகின்றன.

.
இங்குள்ள மாணவர்கள் தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதுதான் விசேஷம். பெரிய வகுப்பு மாணவர்கள் சமையல் செய்கிறார்கள்; மாணவர் விடுதிகளைப் பராமரிப்பது மற்றொரு மாணவர் குழு; பசுமடத்தைப் பராமரிக்க ஒரு மாணவர் குழு; கட்டிடங்களை சுத்தப்படுத்துவது ஒரு மாணவர் குழு; பூஜை வழிபாடுகளை நடத்துவது ஒரு மாணவர் குழு. இவ்வாறு மாணவர்களின் அன்றாடத் தேவைகள் அனைத்தையும் மாணவர்களே பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இதனால், எந்தச் சூழலையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடன் அவர்கள் வளர்கிறார்கள்.
.
காவிரி ஆற்றை ஒட்டியுள்ள 70 ஏக்கர் நிலம், அழகிய தென்னந்தோப்பாக விரிந்திருக்­கிறது. இதை அமைத்தவர்களும் மாணவர்கள்தான், பராமரிப்­பதும் மாணவர்கள்தான். இந்த தோப்பில் கிடைக்கும் வருவாய், மாணவர்களின் பராமரிப்புச் செலவுக்கு போதுமானதாக இருக்கிறது.
.
தற்போதைய கல்வி ஏட்டுச்சுரைக்காயாக மாறியுள்ள நிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடிலில் ஆதரவற்ற மாணவர்­களுக்கு அற்புதமான வாழ்க்கைக் கல்வி அளிக்கப்படுகிறது. பாரம்பரியமான குருகுலம் போன்ற அமைப்புடன், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்­ஸரின் ஆசிகளுடன், குடில் ஒரு சரணாலயமாக விளங்கி­வருகிறது. இந்தச் சாதனையை நிகழ்த்த பிரம்மச்சாரி ராமசாமி செய்த தவ முயற்சிகளை விவரிக்க இங்கு இடம் போதாது.
.
பெற்றோரை இழந்த குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை குடிலில் சேர்ப்பதே மிக சிரமமான பணி. கிறிஸ்தவ மிஷனரிகள் இதற்கென மிகப்பெரும் ‘நெட்ஒர்க்’ உடன் பல கோடி ரூபாய் வெளிநாட்டு நிதியுதவியுடன் இயங்கு­கின்றன. அத்தகைய அசுர பலத்துக்கு முன், ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசத்தை மட்டுமே நெஞ்சில் கொண்டு, மிகப்­பெரிய அறநிலையத்தை உருவாக்கி வளர்த்தெடுத்­திருக்கிறார், பிரம்மச்சாரி ராமசாமி. இவருக்கு பக்க பலமாக, கிருபானந்த வாரி­யார் சுவாமிகள், ஜஸ்டிஸ் மகா­ராஜன், திருச்சி முன்­னாள் கலெக்டர் மலையப்­பன், நங்க­வரம் பண்ணையார், ரங்க­நாதய்யர் உள்­ளிட்ட அன்பர்கள் பேரு­தவி புரிந்திருக்கிறார்கள்.
.
குடிலில் சேர்த்த குழந்தை­களைக் கொண்டே குடிலைப் பராமரித்து, அவர்களையே குடிலின் ஆதாரமாக மாற்றியதும் பெரும் சாதனை. இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் ஞாயிறன்று சந்தித்து மகிழ்கிறார்கள்.
.
இங்கு பயின்ற மாணவர்கள் மிகப்பெரிய பதவிகளில் இல்லாதபோதும், மன­நிறைவான வாழ்க்கையைப் பெற்றிருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலர் ஐ.டி.ஐ., தொழில்­ படிப்பு முடித்து திறன்மிகு தொழி­லாளர்களாக உயர்ந்திருக்­கிறார்கள். இதற்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்­சந்திரனது உதவி அடித்தள­மிட்டது. குடில் மாணவர்­கள் பத்து பேருக்கு ஆண்டுதோறும் திருச்சி அரசு ஐ.டி.ஐ., யில் இடம் அளிக்க அவர் உத்தரவிட்­டது, இன்றும் தொடர்கிறது.
.
முன்னாள் முதல்வர்கள் காம­ராஜ், அண்ணா­துரை, எம்.ஜி. ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகி­யோர் இக்­குடிலுக்கு வருகை தந்து மகிழ்ந்­திருக்கிறார்கள்.
.
இங்கு பயிலும் மாணவர்­களிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தனிப்பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் ‘பிரம்மச்­சாரி’களாக தரம் உயர்ந்து குடிலை நிர்வகிக்கிறார்கள். குடிலின் தற்­போதைய தலைமை நிர்­வாகியான பிரம்மச்சாரி துரை, 1950 ல் இங்கு சேர்ந்த முன்னாள் மாணவர்தான். இவருக்கு துணை­யாக மேலும் நான்கு பிரம்மச்சாரிகள் குடிலை நிர்வகிக்கிறார்கள்.
.
குடில் வளாகம் எங்கும் விதவிதமான மரங்கள்; ஆன்மிக மணம் கமழும் கட்டிடங்கள்; பிரார்த்தனை மண்டபம் பேலூர் மடம் வடிவில் வரவேற்கிறது. குடிலின் எதிர்ப்புறம் ஸ்ரீ ராமகிருஷ்ண குருதேவரின் பிரமாண்ட­மான சிலை அருட்பார்வையுடன் அமைக்கப் பட்டிருக்­கிறது. இவ்வளவு பெரிய நிறுவனத்திற்கு நன்கொடைகள் பெறப்படுவதில்லை என்பது கூடுதல் தகவல்.
.
இதுபற்றி கேட்டபோது, “வெள்ளி விழா (1979) ஆண்டிலேயே குடில் தன்னிறைவு பெற்றுவிட்டது. எங்கள் இப்போதைய தேவை, மாணாக்கர்கள்தான். பெற்றோரை இழந்த, 5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் எத்தனை பேரை அழைத்து வந்தாலும் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம், இந்த சேவையை அன்பர்கள் செய்தால் போதும்” என்கிறார் பிரம்மச்சாரி துரை.
.
இங்கு சேரும் மாணவரின் கணக்கில் வரவு வைக்கப்படும் ஆயிரம் ரூபாய், பள்ளிப்படிப்பு முடிந்து சொந்தக் காலில் நிற்கும் திறனுடன் மாணவன் வளர்ந்திருக்கும் போது அவனுக்கு வழங்கப்படுகிறது. அவன் குடிலிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு ஆயத்தமாகி வெளியேறுகிறான்; புதிய மாணவர்கள் குடிலில் நுழைகிறார்கள். குடில் ஓர் அழகிய, இனிய வேடந்தாங்கல் என்றால் மிகையில்லை.
.
சமுதாயத்திலுள்ள ஆதரவற்றோரின் எண்ணிக்கை பல மடங்காக இருப்பினும், ஸ்ரீராமகிருஷ்ணர் குடில் தன்னளவில் ஆர்ப்பாட்டமின்றி அரும்பணி புரிகிறது. சிறு நன்கொடை அளிப்பதைக்கூட விழாவாக எடுத்து விளம்பரப்படுத்திக் கொள்ளும் இக்காலத்தில், ஆரவாரம் இன்றி அகன்று ஓடும் காவிரி போலவே குடில், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற இலக்குடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை நிறுவிய பிரம்மச்சாரி ராமசாமி அடிகளின் நினைவாலயம், காவிரிக்கரை அருகே அமைதியுடன் காட்சி அளிக்கிறது.
.
குடில் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு, உதவியாக வந்த மாணவரிடம், “படிப்பு முடித்து என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டோம். அவன் நெஞ்சு நிமிர்த்தி சொன்ன பதில், மனதை நெகிழவைத்து­விட்டது. “என்னை... ஒரு ஆளாக்கி காத்த இந்த நிறுவனத்துக்கு உதவும் வகையில் ஏதாவதொரு வேலை செய்யவே எனக்கு விருப்பம்” என்று கூறினான், அந்த மாணவன்.

.
உங்கள் பகுதியில் உள்ள என்னைப் போன்ற ஆதரவற்ற மாணவர்களை இங்கு சேர்த்து விடுங்கள்” என்றும் அவன் வேண்டுகோள் விடுத்தான். சந்தனக் கலத்தில் வைத்த தேன் நறுமணம் கமழாது என் செய்யும்?

.
ஆன்மிக நெறிகளை அடிப்படையாகக் கொண்டு, ஆதரவற்ற மாணவர்களுக்கு வாழ்க்கையும் கல்வியும் வழங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடிலுக்கு உதவி செய்ய விரும்பினால், உங்கள் பகுதியிலுள்ள அனாதை (யாருமில்லை; குருதேவரே தந்தை) களை இங்கு சேர்த்துவிடலாம், அவர்களுக்கு நீங்கள் காப்பாளர் ஆகலாம், இந்தப் புண்ணியம் உங்கள் சந்ததிக்கும் உதவும்.
.
தொடர்பு முகவரி:
பிரம்மச்சாரி துரை, நிர்வாகி,
ஸ்ரீ ராமகிருஷ்ணர் குடில்,
திருப்பராய்த்துறை,
திருச்சி - 639115.

தொலைபேசி: 0431- 2614235 / 2614548

------------------------------------------------

நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர் (16.10.2009)


.

ஞாயிறு, நவம்பர் 28, 2010

நல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு!


நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்த்திருந்த பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. முதல்வர் நிதிஷ் குமார் வெற்றிவாகை சூடுவார் என்று பலரும் கூறியிருந்தாலும், கடைசிநேரம் வரை 'மின்னணு வாக்குப் பதிவு இயந்திர' உபயத்தால் சந்தேகம் இருந்தது. அப்படியே வென்றாலும்கூட முந்தைய நிலையைவிட பலம் குறையலாம் என்று 'மதச் சார்பற்ற' ஊடகங்களால் பரப்பப்பட்டு வந்தது. அனைத்து ஹேஷ்யங்களையும் மீறி, மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 206 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம்- பா.ஜ.க. கூட்டணி வென்று, நாட்டையே வியக்க வைத்துள்ளது.

இந்த மகத்தான வெற்றிக்கு நிதிஷ்குமார் தான் அடிப்படைக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆர்ப்பாட்டமில்லாத ஆட்சி, மக்கள் நலனில் அக்கறை கொண்ட செயல்பாடு, குற்றவாளிகளை கருணையின்றி ஒடுக்கியது, ஊழலுக்கு வாய்ப்பளிக்காதது, யாரும் அணுகக் கூடிய எளிமை ஆகிய அம்சங்கள் நிதிஷ் குமாரின் வெற்றிக்கு வித்திட்டிருக்கின்றன. அவருக்கு பக்கபலமாக பா.ஜ.க. உதவியுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்புலத்தில் பலரும் அறியாத பா.ஜ.க.வின் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி இருப்பதையும் பதிவு செய்தாக வேண்டும். நிதிஷுக்கு கூறப்பட்ட அனைத்து சிறப்பம்சங்களும் இவருக்கும் உண்டு.

1999- ல் சென்னையில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழுவுக்கு சுஷில்குமார் மோடி வந்திருந்தபோது ‘விஜயபாரதம்’ வார இதழுக்காக அவரை பேட்டி எடுத்தது நினைவுக்கு வருகிறது. அப்போது பீகாரின் முடிசூடா மன்னராக லாலு வீற்றிருந்தார்; ஜாதி அரசியலும் மதச்சார்பின்மை கோஷமும் அவரது ஊழல்களை மறைக்க போதுமானவையாக இருந்தன. ஆயினும், ‘லாலுவை மிக விரைவில் வீழ்த்துவோம்’ என்று நம்பிக்கையோடு சொன்னார் மோடி. அந்த நம்பிக்கை பலிக்க 2005 வரை அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. 2005 ல் ஆட்சியைக் கைப்பற்றிய நிதிஷ்- மோடி கூட்டணி, தங்கள் சுயநலமற்ற, வெளிப்படையான ஆட்சியால், அதை தக்கவைத்துக் கொண்டதுடன், முந்தைய வெற்றியை முறியடிக்கும் சாதனையையும் படைத்துள்ளது!

பாரத சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் மகத சாம்ராஜ்யம், தற்போது பீகார் என்று அழைக்கப்படும் பகுதியில்தான் தோன்றியது. பாடலிபுத்திரம் (தற்போதைய பாட்னா) தான் அர்த்தசாஸ்திரம் தந்த சாணக்கியரை உலகுக்கு அளித்தது. நாலந்தாவும், விக்கிரமசீலாவும் இங்கு உயர்ந்தோங்கி விளங்கிய பலகலைக்கழகங்கள். மகான் புத்தரும் மகாவீரரும் தோன்றிய புண்ணிய பூமி பீகார். அத்தகைய பீகார்- விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் வலுவான தளமாக விளங்கிய பீகார் - 'மாட்டுத் தீவன ஊழல்' புகழ் லாலு பிரசாத் யாதவ் வசம் சிக்கிக் கொண்டு 15 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்தது. அப்போது தான் வாராது வந்த மாமணியாக நிதிஷ்குமார் லாலுவுக்கு சரியான மாற்றாக உருவானார்.

சமதா கட்சித் தலைவாரக இருந்த அவரை பீகார் மக்களுக்கு முதல்வராக அடையாளம் காட்டியவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய்தான். தனது அமைச்சரவையில் இடம் பெற்ற நிதிஷை 2000 - ம் ஆண்டு தேர்தலின்போது முதல்வராக பொறுப்பேற்குமாறு அவர்தான் அறிவுறுத்தினார். ஆனால், போதிய பெரும்பான்மை இல்லாததால், ஒரு வார காலத்தில் அவர் பதவி விலக வேண்டி வந்தது. பீகார் மக்களுக்கு நன்மை விளைய மேலும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?

லாலுவின் காட்டாட்சி, யாதவ ஜாதி அபிமானம், கட்டுக்கடங்காத ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற காரணங்களால் வெறுப்புற்ற பீகார் மக்கள், 2005 தேர்தலில் லாலுவை (அவரது பினாமியாக ஆண்ட மனைவி ராப்ரி தேவியை) வீட்டுக்கு அனுப்பி, நிதிஷை முதல்வராக்கினர். சுஷில்குமார் மோடி துணை முதல்வரானார்.

நிதிஷ் அரசு, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை முதல் கடமையாகக் கொண்டது. அதன் விளைவாக, தாதாக்கள் ராஜ்யமாக இருந்த பீகாரின் தோற்றம் மாறியது. அதிகாரபலம் கொண்டவர்களையும்கூட குற்றவாளிகள் எனில் தயங்காமல் சிறைக்குள் தள்ளியது, நிதிஷுக்கு மக்களிடையே நற்பெயரை ஏற்படுத்தியது. ஆட்சியில் களங்கமின்மை, மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை, தான் சார்ந்த (குர்மி) ஜாதிக்கு அப்பாற்பட்டு செயல்பட்டது, மத்திய அரசின் பாராமுகத்தையும் தாண்டி வளர்சிப்பநிகளில் காட்டிய கவனம் ஆகியவை, நிதிஷை மக்கள் நாயகனாக உயர்த்தின. ஆயினும் அவர் என்று அடக்கத்தின் எளிய வடிவமாகவே காட்சியளித்தார்.

அதன் விளைவே தற்போதைய இமாலய வெற்றி. சென்ற தேர்தலில் 143 இடங்களில் வென்ற தே.ஜ.கூட்டணி, நல்லாட்சிக்கான பரிசாக மீண்டும் ஆட்சியை, நான்கில் மூன்று பங்குக்கு மேல் (206 /243) பெரும்பான்மையுடன் தற்போது வென்றுள்ளது. குறிப்பாக நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிட்ட 141 இடங்களில் 115 இடங்களை வென்றுள்ளது. கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வோ, போட்டியிட்ட 102 தொகுதிகளில் 91 இடங்களைக் கைப்பற்றியுள்ளது! இவர்களின் வெற்றிவிகிதம் 84 சதவிகிதம்!

மாறாக லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் 22 (54), பஸ்வானின் லோக் ஜனசக்தி 3 (10), இளவரசர் ராகுலின் காங்கிரஸ் 4 (9) இடங்களில் மட்டுமே வென்றன. (அடைப்புக் குறிக்குள் முந்தைய தேர்தலில் வென்ற இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன). ஒருகாலத்தில் பீகார் அரசியலில் முத்திரை வகித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப் பெரும் தோல்வியை இத் தேர்தலில் சந்தித்துள்ளன.

தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றபோதும் இப்போதும் அடக்கமாகவே நிதிஷ் காட்சி தருகிறார். ''இந்த வெற்றிக்கு எந்த மாயமும் மந்திரமும் காரணமில்லை. மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை தேர்தலில் வெளிப்பட்டிருக்கிறது'' என்கிறார் நிதிஷ். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வின் தலைவர்களுள் ஒருவரான அருண் ஜேட்லியோ, ''இந்த வெற்றி சிறந்த நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றி'' என்று பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.

தேர்தலுக்கு முன் பீகாரில் வலம் வந்து கொக்கரித்த ராகுல் இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் வரைமுறை மீறி, 'மத்திய நிதியை நிதிஷ் அரசு பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டது'' என்று அபாண்டமாகக் குற்றம் சாட்டிய பிரதமர் மன்மோகன் சிங், ''பீகார் வளர்ச்சிக்கு மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பணி புரியும்'' என்று இப்போது வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

உண்மையில் நிதிஷ் பெருமளவில் எந்த மாற்றத்தையும் பீகாரில் நிகழ்த்திவிடவில்லை. 15 ஆண்டுகால லாலு தர்பாரால் சீரழிந்த பீகாரை அவ்வளவு சீக்கிரம் சீர்திருத்திவிடவும் முடியாது; ஆனால் அதற்காக உண்மையாக உழைத்தார். நிலைகுலைந்திருந்த காவல்துறையை மேம்படுத்தியது, அரசு அலுவலகங்கள் முறைப்படி இயங்கச் செய்தது, நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது ஆகியவற்றால் பீகாரின் சூழலில் படிப்படியான மாற்றத்தை அவரால் கொண்டுவர முடிந்தது. நிதிஷின் ஆட்சி, பீகாரில் மாற்றம் நிகழ்வதை உறுதிப்படுத்தியது.

இயன்ற வளர்ச்சிப்பணிகளை செய்த நிதிஷ், பீகாருக்கு தன்னால் அரிய பணிகளை செய்ய முடியும் என்று அவற்றின் மூலமாக நிரூபித்தார். தங்கள் முதல்வர் நாணயமானவர் என்ற நற்பெயரை நிதிஷ் பெற்றார். அதுவே அவரது வெற்றிக்கு அடிப்படையானது.
தவிர ஆட்சியில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதை அவர் தவிர்த்தார். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வை அரவணைத்துக்கொண்டு, ஊடகங்கள் நிகழ்த்திய 'மதவாதப் பூச்சாண்டி' விஷமப் பிரசாரத்தைக் கண்டுகொள்ளாமல், நல்ல கூட்டணி சகாவாக தன்னை அவர் நிலைநாட்டினார். சிற்சில உரசல்கள் ஏற்பட்டபோதும், அதனால் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்குபவர்களாக அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் சுஷில்குமார் மோடியும் விளங்கினர். ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர் சரத் யாதவுக்கு கூட்டணியின் உறுதிப்பாட்டில் பெரும் பங்குண்டு என்பதை கண்டிப்பாக நினைவுகூர வேண்டும். நல்லாட்சியுடன் நல்ல கூட்டணியும் அமைந்ததால், மகத்தான வெற்றி இப்போது சாத்தியமாகி இருக்கிறது.

நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே நல்லது நடக்கும் என்பதற்கு பீகார் முதல்வர் நல்ல உதாரணம். நாட்டுமக்கள் நலன் கருதி உழைப்போருக்கு பீகார் தேர்தல் முடிவுகள் நற்செய்தி எனில் மிகையில்லை.

பெட்டிச் செய்தி- 1
ஊடகங்களின் லாலு மனப்பான்மை

பீகார் தேர்தல் முடிவுகளை வெளியிட்டபோது தங்கள் பாரபட்ச அணுகுமுறையை பெரும்பாலான ஊடகங்கள் மீண்டும் வெளிக்காட்டின. இந்த மகத்தான வெற்றி குறித்த செய்திகளை வெளியிடும்போதுகூட, ஊடகங்கள் குசும்பு செய்தன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பீகார் தேர்தல் பிரசாரத்திற்கு வராததால் தான் வெற்றி கிடைத்தது என்று பிரசாரம் செய்த ஊடகங்கள், பீகாரிலேயே உள்ள சுஷில்குமார் மோடியின் அரும்பணியை கூறாமல் தவிர்த்தன.

பா.ஜ.க.வைக் கட்டுக்குள் வைத்த நிதிஷ் மதச்சார்பின்மையைக் காத்ததால்தான் இந்த வெற்றி கிடைத்ததாம். ஐக்கிய ஜனதாதளத்தின் வெற்றி சதவிகிதம் 82 %; உடனிருந்த பா.ஜ.க.வின் வெற்றி விகிதமோ 89 %. இதை சுட்டிக்காட்ட எந்த ஊடகமும் தயாரில்லை.

சில ஊடகங்கள் 'சரியான தலைமையின்றித் தள்ளாடும் தே.ஜ.கூட்டணிக்கு புதிய தலைவர் கிடைத்துவிட்டார்' என்று பா.ஜ.க.வை பக்கவாட்டில் குத்தின. ஆனால், அதிலுள்ள விஷமத்தைப் புரிந்துகொண்ட நிதிஷ்குமார், 'பிரதமர் பதவியை நோக்கி நான் பயணிக்கவில்லை' என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி, ஊடகங்களின் திருக்கல்தனத்தை மட்டுப்படுத்தினார்.

நிதிஷும் பா.ஜ.க.வும் சேர்ந்து நிகழ்த்திய அரசியல் அற்புதத்தை நிதிஷின் தனிப்பட்ட சாதனையாகவே பல ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. தேர்தல் முடிவுக்குப் பிறகு வாய் திறந்த லாலு, ''நிதிஷுக்கு வாழ்த்துக்கள்; ஆனால் பா.ஜ.க.வுக்கு வாழ்த்து கூற மாட்டேன்'' என்று சொன்னது தான் நமது ஊடகங்களைக் காணும்போது நினைவில் இடறுகிறது.


பெட்டிச் செய்தி- 2
நடந்துள்ள நல்ல நிகழ்வுகள்:

பீகார் சட்டசபைக்கு ஆறுகட்டமாக தேர்தல் நடந்தது. அக். 31 -ல் துவங்கிய தேர்தல் நவ. 20 -ல் முடிவுற்றது. மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தலையும் மீறி, நக்சல் ஆதிக்கமுள்ள பல பகுதிகளிலும் கூட, மக்கள் அச்சமின்றி ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். குறிப்பாக நக்சல் ஆதிக்கம் மிகுந்த மாவட்டங்களிலும் கூட மக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடி வந்து வாக்களித்துள்ளனர்.

இதில் மிகவும் முக்கியமான அம்சம், தேர்தலில் பெண்களின் உற்சாகமான பங்கேற்பு. பெண்களில் பெரும்பகுதியினர் நிதிஷுக்கே வாக்களித்துள்ளனர். மகளிர்நலத் திட்டங்களில் நிதிஷ் காட்டிய அக்கறைக்குக் கிடைத்த பரிசு இது. இத்தேர்தலில்தான், 33 பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்!

இத் தேர்தலில் லாலு குடும்பத்தினர் எவருமே வெற்றி பெறவில்லை. அரசியலையே குடும்பச் சொத்தாக்கிய லாலுவுக்கு மக்கள் கொடுத்துள்ள அடி இது. லாலுவின் மனைவியும் முன்னாள் பினாமி முதல்வருமான ராப்ரி தேவி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோற்றார். லாலுவின் மைத்துனர் சாது யாதவ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்றார்.

தலித் மக்களை பகடையாக்கி அரசியல் நடத்திய ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர்கள் இருவரும் லோக்ஜனசக்தி சார்பில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினர். சிறையில் இருந்தபடி அரசியல் நடத்திவந்த பப்பு யாதவ் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளார். மற்றொரு சிறைத் தண்டனைக் குற்றவாளி ஆனந்தின் மனைவி லவ்லி ஆனந்தும் தோல்வியுற்றார்.

2005 தேர்தலின்போது தே.ஜ.கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் பெரும்பாலும் லாலுவுக்கு எதிரான வாக்குகள். இம்முறையோ, நிதிஷ் அரசு மீதான நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் வகையில் வாக்குகள் கிடைத்துள்ளன. இது ஆக்கப்பூர்வமான விஷயம். 2005 -ல் மொத்த வாக்குகளில் 38 சதவிகிதம் பெற்ற தே.ஜ.கூட்டணி, 2010 -ல் 40 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. லாலு, காங்கிரசுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்பப்பட்ட யாதவர்களும் முஸ்லிம்களும் கூட, நல்லாட்சி என்ற அடிப்படையில் மத, ஜாதி எல்லைகளைத் தாண்டி வாக்களிதுள்ளதும் இத் தேர்தல் கூறும் பாடம்.

இனிமேலும், முஸ்லிம் வாக்குகள் போய்விடுமே என்று பயந்து அரசியல் நடத்த வேண்டிய துர்பாக்கிய நிலையை பீகார் தேர்தல் முடிவு போக்கியுள்ளது என்றால் தவறில்லை. நல்லாட்சி நடத்தினால், இஸ்லாமியர்களும் மதத்தைத் தாண்டி சிந்தித்து செயல்படுவார்கள் என்பதற்கு ஏற்கனவே குஜராத்தில் மோடியின் வெற்றி நிரூபித்தது. அதனை நிதிஷின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.


பெட்டிச் செய்தி- 3
நிதிஷ்குமார்- ஓர் அறிமுகம்:

பீகாரின் பக்தியார்புரில், கவிராஜ் ராம்லக்கன் சிங் - பரமேஸ்வரி தேவிக்கு, 1951, மார்ச் 1 -ல் பிறந்தவர் நிதிஷ்குமார். இவரது தந்தை விடுதலைப் போராட்ட வீரர்; நவீன பீகார் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த அனுக்ரக நாராயண் சின்ஹா என்ற காந்தீயவாதியின் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்தவர் ராம்லக்கன் சிங். ஆரம்பத்திலிருந்தே காந்தீயக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நிதிஷ், மதுவையும் புகைபிடித்தலையும் தொடாதவர். எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிப்பில் பட்டம் பெற்ற நிதிஷ், மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டார். சோஷலிசக் கொள்கையுடன் அரசியல் நடத்திவந்த ராம் மனோகர் லோகியா, கர்ப்பூரி தாகூர் ஆகியோரை தனது அரசியல் குருவாகக் கொண்டார்.

இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடிநிலையை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயண் நடத்திய போராட்டத்தில் (1974 - 1977) நிதிஷ் பங்கேற்றார். அவரது இளமைத் துடிப்பு அரசியலில் அவரை பிரபலப்படுத்தியது. 1980 -ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்ற அவர், அதனால் நிலைகுலையவில்லை. அவரது அரசியல் பயணம் எதிர்பார்ப்பின்றி தொடர்ந்தது. அந்தக் காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் ஆகியோருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. 1985 -ல் முதல்முறையாக சுயேச்சையாகப் போட்டியிட்டு பீகார் சட்டசபை உறுப்பினர் ஆனார். 1987 -ல் லோக்தளத்தின் இளைஞர் பிரிவு தலைவரானார்.

1989 -ல் ராஜீவின் போபர்ஸ் ஊழலை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய வி.பி.சிங்கின் தலைமையில் ஜனதாதளம் உதயமானது. அதில் லோக்தளம் இணைந்தது. அப்போது பீகார் ஜனதாதளத்தின் பொதுச்செயலாளர் ஆனார் நிதிஷ். அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற அவர், வி.பி.சிங் அமைச்சரவையில் விவசாயத் துறை இணை அமைச்சர் ஆனார். அடுத்து வந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 2004 வரை அவர் உறுப்பினராகத் தேர்வானார்.

ஆட்சிகள் மாறிய சூழலில், ஜனதா தளத்தின் முன்னணித் தலைவராக உயர்ந்த அவர், பீகாரில் லாலுவின் மோசமான ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் ஆகியோருடன் சமதா என்ற கட்சியாகப் பிரிந்தார். சமதா கட்சி வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் இடம் பெற்றது. வாஜ்பாய் அமைச்சரவையில் நிதிஷ் ரயில்வே, தரைவழிப் போக்குவரத்து, விவசாயத் துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். 1999 -ல் நடந்த ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் நிதிஷ். பிறகு சமதா உள்ளிட்ட ஜனதா கிளைகள் இணைத்து ஐக்கிய ஜனதாதளம் உருவானபோது அதன் நாடாளுமன்றத் தலைவரானர் நிதிஷ்.

2001 -ல் நடந்த பீகார் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டபோது பிரதமர் வாஜ்பாய் அறிவுரைப்படி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், ஒருவார காலத்தில் பதவி விலகினார். பிறகு பீகாரில் லாலுவின் ஆட்சியை அகற்ற தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

2005 -ல் நடந்த தேர்தலில் 143 தொகுதிகளில் வென்று தே.ஜ.கூட்டணி சார்பில் ஆட்சியைக் கைப்பற்றிய நிதிஷ், பீகாரில் சீர்குலைந்திருந்த ஆட்சி நிர்வாகத்தை செம்மைப்படுத்தி, வளர்ச்சியை நோக்கி மாநிலத்தை அழைத்துச் சென்றார். அதன் விளைவாக 2010 சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மீதும் மூன்றாவது முறையாக பீகார் முதல்வர் ஆகியிருக்கிறார்.

இவரது மனைவி மஞ்சு குமாரி சின்ஹா, பள்ளி ஆசிரியை. இவர் அண்மையில் (2007) இறந்தார். இவரது மகன் நிஷாந்த் பொறியியல் பட்டதாரி. அரசியலில் குடும்ப உறுப்பினர்கள் நுழைவதை நிதிஷ் ஊக்குவிக்கவில்லை. ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ் மிக எளிமையானவர்; யாரும் இவரை சிரமமின்றி அணுக முடியும்.

அரசியல் என்பது பிழைக்கும் வழியல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்கான மார்க்கம் என்று நம்பும் இயல்பான அரசியல்வாதி நிதிஷ்குமார்.

-------------------------------------
நன்றி: விஜயபாரதம் (10.12.2010)
.

வெள்ளி, நவம்பர் 26, 2010

ராசா விலகல் முடிவல்ல.... ஊழலின் ஆரம்பம்

நன்றி: மதி/தினமணி (24.11.2010)
.
சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பலநாள் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்ற முடியாது - என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். ஸ்பெக்ட்ரம் ஊழல் சந்தி சிரித்த பின்னும், மத்தியில் உள்ள ஊழல் காங்கிரஸ் அரசு, தவறுகளை மறைக்க மேலும் மேலும் தவறுகளையே செய்து வருவது, நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்களுக்கு மேலும் மேலும் கவலை அளிக்கிறது.

ஆ.ராசா பதவி விலகலுடன், நாடாளுமன்ற பொது கணக்குக் குழு விசாரணையுடன், ஸ்பெக்ட்ரம் ஊழலை ஊற்றி மூடிவிட காங்கிரஸ் துடிப்பதன் பின்னணி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகும். அதனை உணர வேண்டுமானால், ஆதியோடந்தமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு துவங்கி ஆராய வேண்டும். தனது தலைமையிலான அமைச்சரவையில் உள்ள ஒருவர் நிகழ்த்திய முறைகேடுகள் தெரிந்திருந்தும் 'ஏதோ ஒரு காரணத்தால்' அமைதி காத்த பிரதமர் மன்மோகன் சிங்கை இனியும் ' ஊழல் கறைபடாதவர்' என்று ஊடகங்கள் பாராட்டாமல் இருந்தால் நல்லது.

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி 2007, அக். 1 என்று தொலைதொடர்புத் துறையால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதையேற்று மத்திய தொலைதொடர்புத் துறைக்கு வந்த விண்ணப்பங்கள்: 575. ஆனால், திடீரென்று செப். 25ம் தேதியே கடைசி தேதி என்று (யாருடைய உத்தரவுப்படியோ) அமைச்சக வட்டாரங்கள் அறிவித்தன. அதன்படி 232 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

பிறகு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று கூறி, முன்கூட்டியே திட்டமிட்ட 9 நிறுவனங்களுக்கு தலா ரூ. 1,651 கோடி விலையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன. இதன்மூலமாக அரசுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கூட கிடைக்கவில்லை. ஆனால், இந்த உரிமங்களை ஒரு மாதத்திற்குள் விற்று கொள்ளை லாபம் பார்த்தன, பல 'லெட்டர்பேடு' நிறுவனங்கள்.

உதாரணம்: 2008, ஜன. 10 ம் தேதி, 122 - 2ஜி உரிமங்கள் வழங்கப்பட்டன. 13 மண்டலங்களில் உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனம், தனது உரிமங்களில் சரிபாதியை ரூ. 7,195 கோடிக்கு வேறொரு நிறுவனத்திற்கு விற்றுவிட்டது. தற்போது ‘எடிசலாட் டிபி’ என்று பெயர் மாற்றிக் கொண்டு செயல்படுகிறது ஸ்வான் டெலிகாம். துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்திற்கும், ஸ்வான் டெலிகாமுக்கும் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இடிஏ ஸ்டார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

யுனிடெக் நிறுவனம் பெற்ற உரிமங்களும் ஸ்வான் போலவே அதிகப்படியான விலைக்கு விற்கப்பட்டுள்ளன. ஒரு கணக்கீட்டின்படி, ஸ்பெக்ட்ரம் ஊழலால் மத்திய ஊழல் கூட்டாளிகள் பெற்ற பணப்பயன் ரூ. 70 ஆயிரம் கோடி என்று தெரிகிறது. இத்தொகை முழுவதும் வெளிநாடுகளில் மூலதனமாக்கப்பட்டுள்ளதாகவும் கேள்வி.

இந்த ஊழலில் ராசா உள்ளிட்ட தி.மு.க. தரப்பு முறையற்ற வகையில் பலகோடி லாபம் சம்பாதித்தது எவ்வளவு உண்மையோ, அதே அளவு மத்தியிலுள்ள காங்கிரஸ் அரசின் சூத்திரதாரிகளும் சம்பாதித்துள்ளனர் என்பதும் உண்மை. இல்லையென்றால், ''2ஜி உரிம விநியோகத்தில் நியாயமாகச் செயல்பட வேண்டும்'' என்று ராசாவுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மன்மோகன், இத்தனை ஊழல் நடந்த பின்னும் கண்டும்காணாமல் இருந்திருக்க முடியாது.

ஒன்று, ஊழலில் கிடைத்த பல கோடிகள் சரிசமமாகப் பங்கிடப்பட்டிருக்க வேண்டும். அல்லது, ராசாவை முன்னிறுத்தி பலகோடி லாபம் ஈட்டிய மிகவும் 'சக்தி வாய்ந்த' வேறு யாரோ ஊழலின் பின்னணியில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சி.ஏ.ஜி. அறிக்கை, சி,பி,ஐ விசாரணை, உச்ச நீதிமன்ற கண்டனம், எதிர்க்கட்சிகளின் போர்க்குரல், ஊடகங்களின் விமர்சனம் அனைத்தையும் தாண்டி, ஆ.ராசாவால், கடைசிக் கட்டம் வரை பதவியில் நீடித்திருக்க முடியாது. காங்கிரஸ்காரர்கள் ஈடுபட்ட காமன்வெல்த் விளையாட்டு ஊழல், கார்கில் வீரர்களின் வீடு ஊழல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாக விலக்கிவைத்த பிரதமரால், ஆண்டிமுத்து ராசாவை விலக்க முடியாமல் திணற வேண்டி இருந்திருக்காது.

வேறு வழியின்றியே, அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடன் ராசா, கனிமொழி, ஊடகத் தரகர்கள் பர்கா தத், வீர் சாங்வி ஆகியோர் நிகழ்த்திய உரையாடல்களை வேறொரு வழக்கு வாயிலாக வெளிப்படுத்தி, தி.மு.க.வுக்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கோட்டினை சிறிய கோடாக்க அதன் அருகில் பெரிய கோடு போடும் உத்தியே என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதன்மூலமாக, தேசிய அளவில் தி.மு.க. மீது அனைத்து கறைகளையும் பூசி, திரைமறைவில் இயங்கியோர் தப்பிக்க முயற்சிக்கின்றனர் என்று கருத அதிக வாய்ப்புகள் உள்ளன.

'யாரோ' தன்னை காப்பாற்றிவிடுவார் என்று கடைசிவரை நம்பியிருந்த ராசாவுக்கு, 'அல்வா' கொடுத்தது காங்கிரஸ். அதைவிட, தொலைதொடர்புத் துறை தி.மு.க.வுக்கே மீண்டும் வழங்கப்படும் என்ற கருணாநிதியின் எதிர்பார்ப்பில் பிரதமர் மண்ணைப் போட்டது, 'இருட்டுக்கடை அல்வா' கதையாகிவிட்டது. (தற்போது இத்துறை கபில் சிபல் பொறுப்பில் உள்ளன!) ஆக, கூட்டணி தர்மத்திற்காக இத்தனை நாட்கள் மன்மோகனார் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கவில்லை என்பது நிதர்சனம்.

அலைக்கற்றை ஏல மோசடியில் தொடர்புடைய நிறுவனகள் குறித்து மத்திய தணிக்கைத் துறை வெளியிட்டுள்ள பல தகவல்கள், ஊழலின் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன. போலி பெயர்களில் இயங்கும் பினாமி நிறுவனங்கள் குறித்து மத்திய அரசின் இதர துறைகளுக்கு (குறிப்பாக வருமான வரித்துறையை கொண்டுள்ள நிதி அமைச்சகத்திற்கு) தெரியாமல் இருந்திராது. நீரா ராடியா நிகழ்த்திய ஆட்சிபேர விவகாரங்கள் அனைத்தும் பிரதமருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும். இப்போது வெளியாகியுள்ள தொலைபேசிப் பேச்சு பதிவுகளில் சில இடங்கள் தெளிவின்றி இருப்பதிலும் கூட மத்திய அரசின் திருவிளையாடல் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, ராசா பதவி விலகல் முடிவல்ல, ஆரம்பமே என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதும் அவசியம்.

ஆக மொத்தத்தில், ஆ.ராசாவை பலிகடாவாக்கி பெருமுதலைகளும், அரசை ஆட்டுவிப்பவர்களும் தப்பி இருக்கலாம் என்ற சந்தேகத்தை மறுக்க முடியாது. நாடாளுமன்றம் 10 நாட்களுக்கு மேல் எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டும் கூட, நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணையை ஏற்க மத்திய அரசு தயங்குவது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது.

உச்சநீதி மன்றம் இத்தனை கண்டித்தும் சுரணை இல்லாதவர் போல நடிக்கும் பிரதமரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய காலம் வரும். இந்த ஊழலில், மத்திய அரசை பின்னிருந்து ஆட்டுவிக்கும் சோனியாவின் பங்கையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. இப்போதைக்கு ராசா மாட்டியிருக்கிறார். எதிர்காலத்தில் உண்மையான 'ராசா'வும் 'ராணி'யும் மாட்டலாம். உப்பைத் தின்றவர்கள் என்றாவது தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும்.
------------------
நன்றி: விஜயபாரதம்

.

புதன், நவம்பர் 24, 2010

ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ் கட்சி!


வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்...

உப்பு தின்றவன் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும்; ஊழல் செய்பவர் கண்டிப்பாக மாட்டித்தான் ஆகவேண்டும். ஆனாலும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்கள், தாங்கள் செய்யும் ஊழல்களுக்கு உடனடியாக மாட்டிக்கொள்ளும் அவசியம் இல்லை. தலையிலேயே இடி விழுந்தாலும் எங்கே இடி விழுந்தது என்று எட்டிப் பார்க்கும் அற்புதமான பொருளாதார மேதை நமக்கு பிரதமராக வாய்த்திருக்கிறார். ஊழல்கறையே படியாதவர் என்ற பெயரை வேறு அவர் கட்டியுள்ள தலைப்பாகையோடு சேர்த்துக் கட்டி இருக்கிறார். இதையும் மீறி பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஏதாவது குரல் எழுப்பினால் இருக்கவே இருக்கிறது மதவாதப் பூச்சாண்டி. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சேவகம் செய்யவே பிறப்பெடுத்த ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் உள்ளவரை மன்மோகன் சிங்கத்திற்கு எந்தக் கவலையும் இல்லை.

ஆனால், இந்த நவம்பர் மாதம், மன்மோகன் நினைத்ததுபோல அவ்வளவு எளிதாக கடக்கவில்லை. அயோத்தி வழக்கில் வெளியான தீர்ப்பு சென்றமாதம் நாடு முழுவதும் ஏற்படுத்திய பரபரப்பை விழுங்கிவிட்டது இந்த நவம்பர் மாதம். எல்லாமே, மத்திய அமைச்சர் திருவாளர் 'தலித்' ராசாவின் உபயம். 2008ல் அவர் நடத்திய ஊழல் உறுத்துவந்து 2010ல் ஊட்டும் என்று அவர் மட்டும் கனவா கண்டார்? கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளை விருப்பம்போல விற்று ஏப்பம் விட்டது யாருக்கும் தெரியாது என்று இறுமாந்திருந்த ராசாவுக்கும் அவருக்கு துணைபோன ராணிக்கும் (இந்த ராணி, மத்திய அரசின் சூத்திரதாரியான சோனியாவையே குறிக்கிறது) இந்த நவம்பர் மாதம் கறுப்பு மாதமாக மாறியது அதிர்ச்சி அளித்திருக்கலாம். அதைவிட, நாட்டு மக்களுக்குத் தான் அதிர்ச்சி- அலைக்கற்றை ஏலத்தில் நடந்த ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு ரூ. 17,60,00,00,00,000 (அதாவது ஒரு லட்சத்து 76 ஆயிரம் லட்சம் கோடி!) என்பது தெரியவந்து பேரதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்!

அது எப்படி கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளில் ஊழல் செய்ய முடியும்? கேள்வி கேட்கும் புத்திசாலி பகுத்தறிவாளர்களுக்காக ஒரு விளக்கம்:

இப்போது உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அலைபேசிகள் இயங்குவது வளிமண்டலத்திலுள்ள மின்காந்த அலைகளால்தான். அவற்றை கிரகித்துப் பகிரவே அலைபேசி கோபுரங்கள் எங்கு பார்க்கினும் தட்டுப்படுகின்றன. இந்த மின்காந்த அலைகள், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நமது செயற்கைக்கோள்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவற்றை நிர்வகிப்பது மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை.

இந்த மின்காந்த அலைக்கற்றைகளை முறைப்படுத்துவதும் வர்த்தக ரீதியாக விநியோகிப்பதும் மத்திய அரசின் கடமை. இதில் மூன்று தலைமுறை அலைக்கற்றைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. ஆரம்பகால கம்பிமுறை தொலைபேசிக்கு மாற்றாக முதலில் உருவானது முதல் தலைமுறை அலைக்கற்றைகள். (அதற்கு அவ்வாறு எந்தப் பெயரும் சூட்டப்படவில்லை. வாசகர்கள் குழப்பமின்றி தெரிந்துகொள்ளவே இந்த விளக்கம்). இந்த அலைக்கற்றைகளின் ஆதிக்கம் 2008 வரை நீடித்தது. உலக அளவில் ஏற்பட்ட தொலைதொடர்புப் புரட்சி தாமதமாக வந்தாலும் இந்தியா அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டது. 1998 முதல் 2009 வரையிலான இந்தக் காலகட்டத்தில்தான் அலைபேசிகளின் எண்ணிக்கை நாட்டில் பல மடங்கு அதிகரித்தது.

1998 காலகட்டம் தொலைபேசியின் இடத்தை அலைபேசிகள் வெற்றி கொள்ளாத காலகட்டம். 'பேஜர்' எனப்படும் சிறு கருவியே அதிசயமாகப் பார்க்கப்பட்ட காலம் அது. ஆரம்பத்தில் நமது நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களே புதிய அலைக்கற்றைகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டின. அதன் விளைவாக 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் அந்த அலைக்கற்றைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. எனினும் இந்த விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய தொலைதொடர்பு ஆணையம் (டிராய்) செயல்பட்டது.

ஆனால், விரைவிலேயே நாடு முழுவதும் அலைபேசிகளின் ஆதிக்கம் பரவிவிட்டது. இந்தியாவில் தற்போதைய அலைபேசி பயனாளிகளின் எண்ணிக்கை 70 கோடி என்கிறது ஒரு புள்ளிவிபரம். பத்து ஆண்டுகளில் நம்ப முடியாத வளர்ச்சி பெற்றது இந்திய தொலைதொடர்புத் துறை. அதன் விளைவாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள் கொண்டுவரப்பட்டன. இதனை '2ஜி ஸ்பெக்ட்ரம்' என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். இந்த அலைக்கற்றைகள் 2008ல் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. இதில்தான் முறைகேடு நிகழ்ந்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தது தான் இந்த ஆண்டு வெளியான மூன்றான் தலைமுறை மின்காந்த அலைக்கற்றைகள் (3ஜி). இதன்மூலமாக அலைபேசி அல்லது தொலைபேசியில் பேசுபவரது முகத்தையும் பார்த்தபடி பேசலாம்.
இப்போது விஷயத்திற்கு வருவோம்... 2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் எப்படி மோசடி நடந்தது?

அப்போது மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா. புதிதாக அறிமுகமாகும் மின்காந்த அலைக்கற்றைகள் வற்றாத சுரங்கம் என்பதைக் கண்டுகொண்ட ராசா, அவற்றை விற்பதில் (2008) தனக்கென ஒரு வட்டத்தை வரைந்துகொண்டு செயல்பட்டார். ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார்.

இதில் நிலவும் முறைகேடுகள் குறித்து அப்போதே சலசலப்பு எழுந்தது. பகிரங்க ஏல முறையில் 2ஜி அலைக்கற்றைகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற தொலைதொடர்பு நிறுவனங்களின் கோரிக்கை அரசால் கண்டுகொள்ளப்படவில்லை. இதிலும் ஏலத்திற்கு மிகக் குறைந்த நாட்களே அவகாசம் வழங்கப்பட்டு, கேடு தேதிக்கு முன்னதாகவே அலைக்கற்றைகள் அவரச அவசரமாக விற்பனை செய்யப்பட்டன. இதனால், நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அவை கிடைக்காமல் போயின. தவிர, தொலைதொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத 'லெட்டர்பேடு' நிறுவனங்களுக்கு எல்லா விதிமுறைகளையும் மீறி அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இது குறித்து கேள்வி எழுந்த போதெல்லாம், தனக்கு முன் அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் (அவரும் தி.மு.க. தான்; தாத்தாவுடனான சண்டையால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதே இடத்தில் தான் ராசா அமைச்சராக நியமிக்கப்பட்டார்) கடைபிடித்த 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற விதியின் அடிப்படையிலேயே அலைக்கற்றைகள் விற்கப்பட்டதாக ராசா கூறி வந்தார்.

ஆயினும், சில வடக்கத்திய ஊடகங்களில் வெளியான செய்திகள், 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதை வெளிப்படுத்தின. அதன் பின்னணியில் முந்தைய அமைச்சர் தயாநிதி மாறன் இருப்பதாக அப்போது ராசா குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் ராசாவால் விற்கப்பட்ட அலைக்கற்றைகளை ஒரே மாதத்தில் வேறு நிறுவனங்களுக்கு பல மடங்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்தன 'லேட்டேர்பேடு' பினாமி நிறுவனங்கள் (காண்க: பெட்டிச் செய்தி: 1).
அதன்மூலமாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருப்பது உறுதியானது. இதனை முதன்முதலில் அம்பலப்படுத்தியது, பயனீர் நாளிதழ். அதன் நிருபர் கோபி கிருஷ்ணன் எழுதிய தொடர் புலனாய்வுக் கட்டுரைகள், ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்தின. தமிழகத்தில் தினமணி நாளிதழும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்சும், ராசாவின் முகத்திரையைக் கிழிப்பதில் முன்னணி வகித்தன.

மதுரை தினகரன் எரிப்பு, அரசு கேபிள் கழகம் ஆகிய அத்தியாயங்களைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானவுடன், மாறன் சகோதரர்களுடன் திமுக. சமரசமானது. அப்போது ''குடும்பங்கள் இணைந்தன; இனி ஊழல் குற்றச்சாட்டுகள் மறையும்'' என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போதே ‘குடும்பங்கள் ஒன்றானால் எப்படி ஊழல் மறையும்?’ என்று புத்திசாலிப் பத்திரிகைகள் சில (கண்டிப்பாக தமிழக புலனாய்வுப் பத்திரிகைகள் அல்ல) கேள்வி எழுப்பின. அதாவது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா மட்டுமே பெற்ற பயன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பங்கிடப்பட்டுவிட்டதால், இனிமேல் மாறனின் தொந்தரவு இருக்காது என்பதுதான் கருணாநிதியின் அறிவிப்புக்கு விளக்கமாக இருக்க முடியும். அப்போது தான், ''முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி (1998- 2004) ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட நெறிமுறைகளே ஸ்பெக்ட்ரம் விற்பனையிலும் கடைபிடிக்கப்பட்டன'' என்று தனது முந்தைய கருத்தில் சிறு மாற்றம் செய்து கொண்டார் ராசா.

அப்போதைய தொலைதொடர்புத் துறை அமைச்சரான அருண்ஷோரி, ராசாவின் தற்காப்பு உத்தியான ''முந்தைய அரசு கடைபிடித்த வழிமுறைகளையே தானும் கடைபிடித்தேன்'' என்ற கருத்தைக் கண்டித்திருக்கிறார். தே.ஜ.கூ. ஆட்சியில் டிராய் பரிந்துரையின்றி எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். தவிர, 1998 - 2004 ல் விற்ற விலைக்கே 2008 லும் விற்க முடியாது என்ற சாமானிய அறிவும் கூட இல்லாது பேசும் ராசாவை எப்படி தெளியவைப்பது? பிரச்னை அவரிடம் உள்ள குழப்பமல்ல; செய்த தவறை மறைக்க அவர் போடும் நாடகம் தான்.

1998 - 2004 காலகட்டத்தில் அலைபேசி எண்ணிக்கை பெருகாத காலகட்டத்தில் இருந்த 'முதலில் வருவோருக்கு முன்னுரிமை' என்ற கோட்பாடு, போட்டி மிகுந்த தற்போதைய (2008) காலத்திற்கு எவ்வாறு ஏற்புடையதாகும் என்ற கேள்வியை சமத்காரமாக ராசா தவிர்த்து வந்தார். டிராய் பரிந்துரைகள், பிரதமர் அலுவலக அறிவுரைகள், தொலைதொடர்புத் துறை அமைச்சக அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி, தன்னிச்சையான முறையில், 2 ஜி அலைக்கற்றைகளை மூடுமந்திரமான முறையில் பகிரங்க ஏலம் அல்லாது விற்பனை செய்துள்ளார் vராசா. இது குறித்த செய்திகள் வெளிவந்தவுடன் பா.ஜ.க, மற்றும் இடதுசாரி கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால், ''பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரிந்துதான் அனைத்தும் நடந்துள்ளன'' என்று ராசா விளக்கம் அளித்தார். பிரதமரோ, ''ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அந்தத் துறையின் அமைச்சர் ராசாவே கூறிவிட்டார்'' என்று மழுப்பினார். நல்ல பிரதமர்! நல்ல அமைச்சர்! இவரைத்தான் நமது பத்திரிகைகள் தூய்மையானவர் என்று புகழ்ந்து எழுதி மத்திய அரசு விளம்பரங்களைப் பெற்றுக் கொள்கின்றன!

உண்மையில், இந்த முறைகேட்டில் கிடைத்த லஞ்சப் பணம் (பல ஆயிரம் கோடிகள்) முறைப்படி, காங்கிரஸ் தலைமை, தி.மு.க. தலைமை, ராசா குழு மற்றும் சம்பந்தப்பட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டதாகத் தகவல். கைநீட்டி காசு வாங்கிவிட்டவர்கள், ராசாவின் அமர்த்தலான பதிலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்துதானே ஆகவேண்டும்?

இந்நிலையில்தான், 2009 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தேர்தலில் முக்கிய பிரசார அம்சமானது. ஆயினும் அந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் வென்றது. அதையடுத்து மத்திய ஆட்சியில் தி.மு.க.வின். பிடி இறுகியது. தொலைதொடர்பு துறையில் நடந்துவிட்ட ஊழல்களை அடுத்து, ராசாவுக்கு மீண்டும் அதே துறையை ஒதுக்க பிரதமர் மன்மோகன் தயங்கினார். ஆயினும், தில்லிவரை போர்தொடுத்து கூட்டணி உரிமையை நிலைநாட்டிய கழகத் தலைவர் கருணாநிதி, மீண்டும் ராசாவுக்கே தொலைதொடர்புத் துறையைப் பெற்றுத் தந்தார். கைநீட்டி வாங்கிய காசுக்கு நன்றிக்கடன் காட்டித்தானே ஆகவேண்டும்? பிரதமர் மன்மோகன் சிங் நாணயஸ்தர். அவரது கட்சித் தலைவியோ கூட்டணிதர்மம் காக்கவே இத்தாலியிலிருந்து இறக்குமதி ஆனவர். ராசாவின் காட்டில் மீண்டும் மழை பொழியத் துவங்கியது.

இந்நிலையில் தான், மூன்றாம் தலைமுறை (3 ஜி) அலைக்கற்றைகள் மே மாதம் பகிரங்க ஏல முறையில் ஏலம் விடப்பட்டன. இதனையும் மூடுமந்திரமான முறையில் விற்க ராசா முற்பட்டதாகவும், பிரதமர் நேரடியாகத் தலையிட்டதால் பகிரங்க ஏலம் நடப்பதாகவும், ஆங்கில ஊடகங்கள் மன்மோகன் புகழ் பாடின. இதன் விளைவாக அரசுக்கு 67.7 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. இத்தனைக்கும் 3 ஜி அலைக்கற்றைகளின் ஒருபகுதிக்கே இவ்வளவு லாபம்! உடனே மத்திய தணிக்கை ஆணையம் (சி.ஏ.ஜி)விழித்துக் கொண்டது. 2 ஜி அலைக்கற்றை விற்பனையில் நிகழ்ந்த நஷ்டத்தை சி.ஏ.ஜி கணக்கிட்டது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வாங்கி குறுகிய காலத்தில் வேறு நபர்களுக்கு விற்றவர்களை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்கு தோராயமாக ஏற்பட்டுள்ள இழப்பை சி.ஏ.ஜி கணக்கிட்டது.
.
இம்மாதம் 10ம் தேதி, சி.ஏ.ஜி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கொடுக்கப்பட்ட தகவல் தான், ராசா மூலம் ஏற்பட்ட இழப்பை (ரூ. 17,60,00,00,00,000) நாட்டுக்கு விண்டுவைத்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் பலவகையாகக் கூறிவந்தபோதும், சி.ஏ.ஜி அறிக்கை, ஸ்பெக்ட்ரம் ஊழலின் மதிப்பை தெளிவாக வரையறுத்துள்ளது. தவிர அதன்மூலமாக பயன் பெற்றவர்கள் யார் என்பதையும் பட்டியலிட்டு, திருவாளர் புனிதரின் லட்சணத்தையும் தியாக நாயகி லட்சணத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டது.

ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் கட்டட ஒதுக்கீடு ஊழலால் கறைப்பட்ட மத்திய அரசுக்கு, ராசாவை நீக்குவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. கனத்த நெஞ்சத்தோடு, ராசாவை பதவி விலகுமாறு கோரினார் (கெஞ்சினார்) பிரதமர். ராசாவோ, பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றார். தலித் என்பதால் ராசாவை குறி வைக்கிறார்கள் என்று ஏற்கனவே சொன்ன கருணாநிதி வழக்கம்போல, ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று சாதித்தார். சீடருக்கு ஏற்ற குரு! இந்நிலையில், ''தி.மு.க.வு.க்கு பயந்து ராசாவை அமைச்சராகத் தொடரச் செய்ய வேண்டாம்; ராசாவுக்காக தி.மு.க. ஆதரவை விலக்கினால், அ.தி.மு.க. ஆதரவளிக்கும்'' என்று சந்தில் சிந்து பாடினார் அதன் தலைவி ஜெயலலிதா.

இதற்கெல்லாம் மயங்குபவரா மன்மோகன்? அவருக்கு, உச்சநீதிமன்றம் (காண்க: பெட்டிச் செய்தி: 2) என்ன சொல்லப் போகிறதோ என்பதுதான் கவலை. அதைவிட, தானைத்தலைவி சோனியா அம்மையார் கண்ணசைவில் சதிராடும் பிரதமாரால் என்னதான் சிந்திக்க முடியும்? மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) விசாரணைக்கு உத்தரவிட்டு ராசாவைக் காப்பாற்றலாம் என்றால், அதற்குள், சுப்பிரமணியம் சாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார். உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிரதமர் மன்மோகனுக்கு காட்டமான அறிவுரையைக் கூறியுள்ள நிலையில், ராசா வேறு வழியின்றி, விருப்பமின்றி (கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றவும், நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகளிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்கவும்!) பதவி விலகினார். காங்கிரஸ் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

பிரதமருக்கு மேலும் பேரிடியாக, ஊழலில் தொடர்புடைய 6 நிறுவனங்களின் 69 உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது டிராய். இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கின. காங்கிரஸ் கட்சியோ, முரளி மனோகர் ஜோஷி (பா.ஜ.க) தலைமையிலான பொது கணக்குக் குழு விசாரித்த பிறகே ஜே.பி.சி. விசாரணைக்கு செல்ல முடியும் என்று சண்டித்தனம் செய்தது. ‘’தங்கள் தலைவர் மீது பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லையா?’’ என்று வேறு கேட்டார் நமது கலாகார். உண்மையில், பொது கணக்குக் குழு வரம்பிற்குள் வராத பல விஷயங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று முரளி மனோகர் ஜோஷியே கூறி இருக்கிறார். அதை காங்கிரஸ் வசதியாக மறந்துவிட்டது.

தவிர, ஆ.ராசா அமைச்சர் ஆனதன் பின்னணியில் அதிகாரத் தரகர் நீரா ராடியா உடன் ஊடக தரகர்கள் பர்கா தத் (என்.டி.டி.வி), வீர் சாங்க்வி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) ஆகியோரும் சம்பந்தப்பட்டிருப்பது வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் பா.ஜ.க எதிரிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். இவர்கள் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடல் உச்சநீதிமன்றத்தில் சாமி தொடர்ந்த வழக்கில் முக்கிய சாட்சியாகி இருப்பது, பத்திரிகையாளர்கள் மீதான நம்பகத் தன்மையையும் கேள்விக் குறி ஆக்கியுள்ளது.

இத்தனைக்கும் பிறகும், காங்கிரஸ் எதுவுமே நடக்காதது போல நடிப்பது தான் வியப்பளிக்கிறது. நடிகர் வடிவேலுவின் 'இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க'' நகைச்சுவைதான் நினைவில் வருகிறது. கட்சியின் இளவரசர் ராகுல், ''எனக்கு தெரிந்தவரை, ஸ்பெக்ட்ரம் விவகாரம் பிரதமருக்கு எந்த தர்மசங்கடமும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை'' என்று சான்றிதழ் அளித்திருக்கிறார். பிரதமரின் அமைச்சரவை சகா கபில் சிபலோ, ''பிரதமர் குற்றமற்றவர்'' என்கிறார். பிறகு ஏன் ராசா விவகாரத்தில் முடிவெடுக்காமல் 16 மாதம் காலம் தாழ்த்தினார் என்ற கேள்விக்கு மட்டும் சோனியா முதல் கார்த்தி சிதம்பரம் வரை யாரிடமும் பதிலில்லை.

இந்த நாடகம் என்ன ஆகும்? இந்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பில் ராசா வகையறாவுக்கு கிடைத்து எத்தனை? கைமாறிய லஞ்சப் பணம் சென்றது எங்கே? இந்த நஷ்டத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை வருமா? குற்றவாளிகளைப் பாதுகாத்தவர்கள் (பிரதமர் உள்பட) மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா? ஊழலில் பயன் பெற்ற நிறுவனங்கள் உரிமங்களை இழக்குமா? அவற்றிடம் டிராய் பரிந்துரைப்படி கூடுதல் தொகை வசூலிக்கப்படுமா?

ராசா உயிருக்கு உண்மையிலேயே சுப்பிரமணியம் சாமி சொல்வது போல ஆபத்து ஏற்பட்டுள்ளதா? ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசு இழந்த 1.76 லட்சம் கோடியும் மீட்கப்பட்டு விடுமா? அப்படியே தொகை மீட்கப்பட்டாலும் இந்திய அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயர் மறைந்துபோகுமா?

இனிமேலும் 'தலித்' என்ற போர்வையில் ஊழல் செய்வதை நியாயப்படுத்தலாமா? கூட்டணியின் நிர்பந்தத்திற்காக ஊழல்களை கண்டும் காணாமல் இருக்கலாமா? அதிகாரத் தரகர்களாக மாறியுள்ள பத்திரிகையாளர்கள் மீதும் சட்டம் பாயுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, ஊழல் மலிந்த தற்போதைய 'மதச்சார்பற்ற' காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நாட்டில் தொடரத் தான் வேண்டுமா?

- கேள்விகள் தொடர்கின்றன.

இவற்றுக்கான பதில்கள் எங்கோ இல்லை; இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் வாக்காளராகிய மக்களிடம் தான் இவற்றுக்கான பதில்கள் கிடைக்கும். அவர்களிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விலாவாரியாக விளக்க வேண்டியது நாட்டுநலனில் அக்கறை கொண்டோரின் கடமை. வெறும் ரூ. 64 கோடி போபர்ஸ் ஊழலுக்காக ராஜீவ் காந்தியை வீட்டுக்கு அனுப்பிய நாட்டுமக்களுக்கு, ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் குறித்து (உலக அளவில் மாபெரும் ஊழல் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!) உண்மை நிலையை சொல்ல வேண்டியது தேசபக்தர்களின் கடமை.

பெட்டிச் செய்தி - 1
யாருடைய பினாமிகள்?

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி 2007, அக். 1 என்று தொலைதொடர்புத் துறையால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென்று செப். 25ம் தேதியே கடைசி தேதி என்று எந்த முன்னறிவிப்பும் இன்றி விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டது. பிறகு முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று கூறி, முன்கூட்டியே திட்டமிட்ட 9 நிறுவனங்களுக்கு தலா ரூ. 1,650 கோடி விலையில் அலைக்கற்றைகள் விநியோகிக்கப்பட்டன. இதன்மூலமாக அரசுக்கு ரூ. 20 ஆயிரம் கோடி கூட கிடைக்கவில்லை. ஆனால், ஏலத்தில் பயன் பெற்ற சில நிறுவனங்கள் ஒருமாத காலத்திற்குள் தங்கள் பங்குகளை பல மடங்கு விலைக்கு விற்று லாபம் பார்த்தன.

ராசா மூலம் உரிமத்தை தரைக் கட்டணத்திற்கு வாங்கிய ஒன்பது நிறுவனங்களில் ஸ்வான், யுனிடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு செல்போன் சேவையில் எந்த முன்னனுபவமும் கிடையாது. 13 மண்டலங்களுக்கான உரிமத்தை 1,537 கோடி ரூபாய்க்கு வாங்கிய ஸ்வான் நிறுவனம் அதை வெறுமனே கைமாற்றி ரூ. 4,200 கோடி கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.

தற்போது நடந்துவரும் விசாரணையில் மேலும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று...

‘ஸ்வான் டெலிகாம்’ என்ற பெயரில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலத்தில் பங்கேற்ற எடிசலாட் டிபி நிறுவனத்திற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 2ஜி ஏலம் நடந்தபோது ஸ்வான் டெலிகாம் நிறுவனமும் அதில் பங்கேற்றது. இது அனில் அம்பானியின் பினாமி நிறுவனமாக முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு தமிழகத்தில் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தவிர, தன்மீதான புகாரை அனில் அம்பானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தற்போது ‘எடிசலாட் டிபி’ என்று பெயர் மாற்றிக் கொண்டு செயல்படுகிறது ஸ்வான் டெலிகாம். சிஏஜி அறிக்கையில் ‘’ஸ்வான் நிறுவனத்திற்கு தேவையே இல்லாமல் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது. துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்திற்கும், ஸ்வான் டெலிகாமுக்கும் தொடர்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இடிஏ ஸ்டார் நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.2008, ஜனவரி மாதம் 2ஜி உரிமத்தைப் பெற்றது ஸ்வான் டெலிகாம். அடுத்த 9 மாதங்களில் துபாயைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனமான எடிசலாட், ஸ்வான் நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வாங்கி நிறுவனத்தின் பெயரை எடிசலாட் டிபி என்று மாற்றியது.

2008, செப். 17ம் தேதி சென்னையில் ‘ஜெனெக்ஸ் எக்ஸிம் வென்சர்ஸ்’ என்ற நிறுவனம் வெறும் ரூ. ஒரு லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்து, டிச. 17ம் தேதி, இந்த ஜெனெக்ஸ் நிறுவனம், எடிசலாட் நிறுவனத்தின் ரூ. 300 கோடி மதிப்புள்ள பங்குளை வாங்கியுள்ளது. வெறும் ரூ. ஒரு லட்சம் மூலதனத்தை மட்டு்மே கொண்டிருந்த ஜெனெக்ஸ் நிறுவனத்திற்கு எப்படி திடீரென ரூ. 300 கோடி அளவுக்கு வசதி வந்தது என்பது குறித்துத் தெரியவில்லை.ஜெனெக்ஸ் எக்ஸிம் நிறுவனத்தின் சார்பில் எடிசலாட் டிபி நிறுவன இயக்குனர் குழுவைச் சேர்ந்தவர் அகமது சையத் சலாஹுதீன். இவர் துபாயைச் சேர்ந்த இடிஏ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருடைய மகன் ஆவார். இடிஏ ஸ்டார் குழுமம் தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் பல அரசு திட்டங்களில் இந்நிறுவனம் தொடர்பு கொண்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

தற்போது எடிசலாட் நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்ட 2ஜி உரிமத்தை ரத்து செய்ய மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஸ்வான் டெலிகாம் யாருடைய பினாமியாக செயல்பட்டது என்பது தான் இப்போதைய பலகோடி ரூபாய் கேள்வி. இது குறித்து விசாரிக்க சி.பி.ஐ. விரைவில் நியமிக்கப்படலாம். அப்போதுதானே மூடி மறைக்க முடியும்?


பெட்டிச்செய்தி - 2

எல்லாப் புகழும் சாமிக்கே!

அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா மீது வழக்கு தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது (நவ. 16) அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், ஜனதா கட்சி தலைவருமான சுப்பிரமணியசாமி தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர், 'மிஸ்டர் கிளீன்' மன்மோகன் சிங்கை கேட்ட கேள்விகள், மிகவும் கூர்மையானவை. ஆனால், மன்மோகன் சிங் எதுவுமே நடக்காதது போல நடமாடுகிறார். மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியமோ, பிரதமரை உச்சநீதி மன்றம் ஏதும் விமர்சிக்கவில்லை என்று முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கிறார்.

''தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை மின்காந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அமைச்சர் ராசாவின் தன்னிச்சையான செயல்பாட்டால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராசா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும்'' என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி புகார் மனு அளித்திருந்தார். இந்த மனு 2008, நவ. 29-ம் தேதி அளிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு இந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டது. இந்தப் பதில் கடிதத்தில் ''விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராசா மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப்படாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சுப்பிரமணியசாமி. சாமியின் வழக்கு கடந்த நவ. 16ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதுதான், ஆ. ராசா மீது வழக்கு தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாகக் கூறி நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
.
''வழக்கு தொடர அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய நல்ல அரசுக்கு மூன்று மாதங்கள் போதுமானது. அமைச்சர் மீது வழக்கு தொடர அனுமதி அளிப்பதற்கான காலவரையறையை (ஏற்கனவே விநீத் நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கில்) உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. தேவைப்பட்டால் இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரை ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் அலைக்கற்றை ஊழல் புகாரில் அரசு 16 மாதங்களுக்கு மேலாக பதில் அளிக்காமல் இருந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் வருத்தத்துக்கு உரியது'' என்ற நீதிபதிகள், ''அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமருக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பு நவ. 20 க்குள் பதிலளிக்க வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.

சுப்பிரமணியசாமி பிரதமருக்கு அனுப்பிய மனுவில், அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புள்ள `ஸ்வான் டெலிகாம்' நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு பற்றி குறிப்பிட்டு இருந்தார். ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு, `ஆர் காம்' மற்றும் `ஸ்வான்' என்ற பெயர்களில் இரு முறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின் அவற்றின் பங்குகள் மொரிஷியஸ் நிறுவனம் ஒன்றுக்கு மிக குறைந்த விலையில் விற்கப்பட்டு இருப்பதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டும் தீவிரத்தைப் பார்த்தால், கூடிய விரைவில் மத்திய ஊழல் அரசுக்கு மேலும் பல சங்கடங்கள் காத்திருக்கின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது. உண்மையில், மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா அவசர அவரசமாக விலகியதே, சாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தால் அரசுக்கு கேவலமான நிலை ஏற்படும் என்பதால் தான். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தைவிட, மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பது தான்.

-------------------------------------
நன்றி: விஜயபாரதம் (03.12.2010)
.