வெள்ளி, மே 25, 2012

நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை?


தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைந்துவிட்டது. இதையொட்டி, 'நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை' என்ற தலைப்பில் பல்வேறு நாளிதழ்களில் 4 பக்க அளவில் விளம்பரம் வெளியாகி இருக்கிறது. இந்த விளம்பரங்கள் அரசு செய்த சாதனைகளைக் கூறுகின்றன. அவை சிறிது உயர்வு நவிற்சியுடன் சொல்லப்பட்டிருக்கலாம். அதில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் விட முக்கியமானது, தமிழகத்தை ஊழல் மிகுந்த திமுக அரசிடம் இரு காப்பாற்றியதாகத் தான் இருக்க முடியும்.

கரை கடந்த ஊழல்கள், ஊழலுக்கு வெட்கப்படாத போக்கு, குடும்ப அரசியல், வாக்குகளை விலைக்கு வாங்கும் அரசியல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று திமுக அரசு நடத்திய களேபர ஆட்சியில் இருந்து விடுபட ஏங்கித் தவித்த தமிழக மக்கள், தேர்தலில் பெருவாரியான ஆதரவுடன் ஜெயலலிதாவை முதல்வராக்கினார்.

முன்பு இருமுறை (1991 - 1996 , 2001 - 2006 ) இருந்தது போலல்லாமல் இம்முறை சிறந்த ஆட்சியை ஜெயலலிதா வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு அதிகமாகவே இருந்தது. அதற்கேற்பவே ஜெயலலிதாவின் ஆரம்பகால நடவடிக்கைகளும் இருந்தன. தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தது போல இலவச மின்விசிறி, கிரைண்டர், மிக்சி ஆகியவற்றை அவர் வழங்கினார். இத்திட்டம் இப்போது மாநிலத்தின் பல பகுதிகளில் படிப்படியாக அமலாகி வருகிறது.

இவை மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சூரிய சக்தியுடன் பசுமை வீடுகள், ஏழைகளுக்கு இலவச ஆடு, மாடுகள், வளர் இளம்பெண்களுக்கு இலவச நாப்கின்கள், பெண்களின் திருமணத்துக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் ஆகிய இலவசத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பெண்களின் திருமணத்துக்கு தங்கத்துடன் ரூ. 25,000 நிதி உதவியும் அளிக்கப்படுகிறது.

இவை அனைத்தையும் விட முக்கியமானது குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் இலவச அரிசி திட்டம் தான். இதன்மூலமாக 1.86 கோடி பேர் பயன் பெறுவதாக தமிழக அரசின் விளம்பரம் கூறுகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் 'விலையில்லா' திட்டங்கள் என்று நாமகரணம் சூட்டப்பட்டிருக்கின்றன.

இத்திட்டங்களால் மக்கள் பலன் அடைகிறார்கள் என்பது உண்மையே. எனினும், மக்களை காலகாலத்துக்கும் இலவசத்தை நாடுபவர்களாக வைப்பது முறையல்ல என்பது தான் தமிழகத்தின் வளர்ச்சியில் நாட்டம் கொண்டவர்களின் கருத்தாக இருக்க முடியும். ஒருவனுக்கு மீன் பிடித்துக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சிறப்பானது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்ற வேண்டும் என்ற அளவில் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை வரவேற்றாலும், நீண்ட கால நோக்கில், இந்தத் திட்டங்களுக்கு ஓர் வரைமுறை அவசியம் என்று சுட்டிக் காட்ட வேண்டி உள்ளது.

அடுத்ததாக, சென்ற ஆட்சியில் ஆளும்கட்சியினர் நடத்திய அடாவடியால் நிலங்கள் பறிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு காண உருவாக்கப்பட்ட நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவை முக்கியமானதாகச் சொல்லலாம். மாநிலம் முழுவதும் 39 நில அபகரிப்பு சிறப்பு காவல் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 34,703 புகார்கள் பெறப்பட்டு, 1,299 நில அபகரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதன் மூலமாக ரூ. 758 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்காக 25 சிறப்பு நீதி மன்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதிகார மமதையில் எளியவர்களை மிரட்டி அவர்களது சொத்துக்களைப் பறித்தோருக்கு இந்த நடவடிக்கைகள் எச்சரிக்கையாக அமைந்தன. இதிலும் அரசியல் காரணங்களுக்காக திமுகவினர் மீது வழக்குகள் பதியப்படுவதாக புகார்கள் உள்ளன. காவல்துறையினர் நடுநிலை தவறாமல் இயங்கினால் இத்தகைய புகார்கள் எழாது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே ‘சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை’ உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. முதியோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட மாத உதவித் தொகையை ரூ. 500 லிருந்து ரூ. ஆயிரமாக உயர்த்தியதும் பாராட்டிற்குரியது. மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்கும் உதவித் தொகையை ரூ. ஆயிரத்திலிருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தியுள்ளதும் சரியான முடிவு. இத்திட்டத்தின் பயனாளிகள் தகுதியானவர்களா என்பதை ஆய்வு செய்து உதவித் தொகை வழங்குவது அவசியம்.

தமிழகத்தில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை உருவாக்க, 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்- 2023' என்ற திட்டத்தை ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். முதல்வராக உள்ளவர்கள் இத்தகைய தொலைநோக்குச் சிந்தனையுடன் தான் செயல்பட வேண்டும். ஆனால், வெறும் காகித அறிவிப்பாக நில்லாமல், இதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பும் முதல்வருக்குண்டு. இத்திட்டத்தின் படி, ரூ. 15 லட்சம் கோடி மதிப்பில் தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரம் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்.

உலமாக்கள் ஊதியம் உயர்வு- ஓய்வூதியம் உயர்வு, கிறிஸ்தவர்கள் ஜெருசலம் சென்று வர நிதி உதவி, கைலாய யாத்திரை செல்லும் ஹிந்துக்களுக்கு நிதி உதவி- போன்ற அறிவிப்புகள், அரசின் மத பாகுபாடற்ற பார்வையைக் காட்டுகின்றன. பெரும்பாலான அரசியல் கட்சிகளும் சிறுபான்மையினரை குஷிப்படுத்தி பெரும்பான்மையினரை நோகடித்துவரும் நிலையில், அனைவரையும் சமமாக பாவிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் பிற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக உள்ளன.

காலி பணியிடங்களை நிரப்புவது என்பது அரசின் நடவடிக்கைகளை முதன்மையானது. அரசு நிர்வாகம் முடங்காமல் இருக்க தகுதியானவர்களைத் தேர்வு செய்வதும், அதில் ஒளிவு மறைவற்ற தன்மை உறுதிப்படுத்தப்படுவதும் அவசியம். வேலைவாய்ப்புத் துறையில் இந்த அரசு கவனம் செலுத்துவதற்கு சரியான உதாரணம், தமிழ்நாடு அரசு பொது தேர்வாணையத்துக்கு (TNPSC) தலைவராக முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் நியமிக்கப்பட்டிருப்பது தான். முந்தைய ஆட்சியில் இந்த அமைப்பில் நிலவிய ஊழல்களை முற்றிலும் சரிப்படுத்தி வருகிறார் புதிய தலைவர் நடராஜ். சரியான, திறனுள்ள, நேர்மையான அதிகாரியை இத்துறையில் நியமித்ததன் மூலமாக முதல்வர் ஜெயலலிதா தனது தலைமைப் பண்பை நிரூபித்திருக்கிறார். இதன்மூலமாக வேலைக்குக் காத்திருக்கும் லட்சக் கணக்கான இளைஞர்களின் மனதில் நம்பிக்கை ஒளி ஏற்றி இருக்கிறார்.

கோவில் யானைகளுக்கு முதுமலையில் மீண்டும் புத்துணர்வு முகாம், புதிய பெரும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள், கேபிள் தொழிலில் நிலவிய ஏகபோகத்தைக் கட்டுபடுத்த கேபிள் டிவி நிறுவனம் அமைப்பு, எளிய மக்களும் தரமான மருத்துவ வசதி பெறும் வகையிலான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம், எனப் பல திட்டங்கள் அதிமுக அரசால் நடைமுறைப்படுத்தப்படுவது பாராட்டிற்குரியது.

எனினும், ஒருவரை மதிப்பிடும்போது, அவரது பலங்களை மட்டுமல்லாது பலவீனங்களையும் மதிப்பிடுவது இன்றியமையாதது. அப்போது தான் குறைகளைத் திருத்திக் கொண்டு, யாரும் முன்னேற முடியும். அந்த வகையில் அதிமுக அரசின் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவது நமது கடமையாகிறது.

இந்த அரசின் மீதான முதல் குற்றச்சாட்டு, முன்னறிவிப்பற்ற அதிகப்படியான பேருந்துக் கட்டண உயர்வு. போக்குவரத்துக் கழகங்களை நஷ்டத்திலிருந்து மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அரசு விளக்கம் அளித்தாலும், மக்களை இது அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்து பால் விலை உயர்வு. இதுவும், பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளுக்கு பலன் அளிக்கவில்லை; அதே சமயம் சாமானிய மக்களை வேதனைப் படுத்தி இருக்கிறது. புதிதாக அறிவிக்கப் பட்டுள்ள மின்கட்டண உயர்வின் தாக்கம் அடுத்துவரும் மாதங்களில் தான் தெரியவரும்.

அடுத்து, தமிழகத்தில் சுமார் 8 மாதங்களாக நிலவிய மின்வெட்டு, மாநிலம் முழுவதும் பலத்த அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, தொழில்துறை முடக்கம், மாணவர்களின் கல்வி பாதிப்பு ஆகியவை அரசு பெற்றிருக்க வேண்டிய மதிப்பெண்களைக் குறைத்துவிட்டன.

இந்நிலையில், கூடங்குளம் அணு உலை விஷயத்தில் தெளிவான முடிவெடுக்காமல் முதல்வர் மூன்று மாதங்கள் தாமதித்தது, ஜெயலலிதாவைப் பற்றிய 'இரும்புப் பெண்மணி' என்ற தோற்றம் மறையவும் காரணமாகிவிட்டது. அதன் விளைவாக தேசவிரோத சக்திகள் அணு உலை எதிர்ப்பு பிரசாரத்தை வேகப்படுத்திவிட்டன. இப்போதும் கூட, அணு உலை எதிப்பாளர்களிடம் மென்மையான போக்கையே தமிழக அரசு பேணி வருகிறது.

மின்வெட்டைத் தொடர்ந்து, வங்கிகள், நகைக்கடைகளில் நடந்த தொடர் கொள்ளைகள் அரசின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டை கேள்விக்குறி ஆக்கின. இன்னமும் கூட கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் சில பிரிவினை இயக்கங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, தேசநலன் விரும்பும் அமைப்புகளின் ஊர்வலத்தை தடுப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறது. காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர், தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது உடனடித் தேவை.

அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது அரசின் நம்பகத் தன்மையைப் பாதித்துவிடும் என்பதையும் முதல்வருக்கு சொல்ல வேண்டிய நேரம் இது. ஆருயிர்த் தோழி சசிகலாவை தோட்டத்திலிருந்து வெளியேற்றியது நல்ல முடிவு. ஆனால், மீண்டும் அவருடன் உறைவைப் புதுப்பிப்பது முதல்வரின் மதிப்பை குலைக்கிறது. சசிகலா உறவினர்கள் அரசில் தலையிடாமல் தடுப்பது ஒன்றே ஜெயலலிதாவின் துணிவை எடுத்துக்காட்டும்.

தானே புயல் நிவாரண நடவடிக்கைகளில் நிலவிய குழப்பங்களும் அரசுக்கு சற்று சறுக்கலே. அதே போல, முந்தைய அரசு அமைத்தது என்பதற்காகவே புதிய தலைமை செயலகம், செம்மொழி நூலகம் ஆகியவற்றை கடாசி இருப்பது, ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கவில்லை.

மத்திய- மாநில உறவில் சீர்குலைவை ஏற்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு அவ்வப்போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜெயலலிதா, நாடு முழுவதும் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முதல்வராக மாறி இருக்கிறார். அவர் தனது தேசிய முக்கியத்துவத்துவத்தை உணர்ந்து, தமிழகத்தில் தனது ஆட்சியின் குறைகளை நிவர்த்தி செய்துகொண்டால், அரசு விளம்பரத்தில் கூறியுள்ள பல புள்ளிவிபரங்கள் நூறு சதவீதம் உண்மையாகும். அதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

--------------------------------------------
விஜயபாரதம் (01.06.2012)

வெள்ளி, மே 18, 2012

கட்சிகளுக்கு ஒரு 'லிட்மஸ் சோதனை'


வேதியியலில் ' லிட்மஸ் சோதனை' என்ற அடிப்படை சோதனை ஒன்று உண்டு. ஒரு திரவம் அமிலத் தன்மை கொண்டதா, காரத்தன்மை கொண்டதா என்பதை அறிய உதவுவது லிட்மஸ் தாள். திரவத்தின் தன்மைக்கு ஏற்ப லிட்மஸ் தாள் நிறம் மாறி அதன் இயல்பைக் காட்டிக் கொடுக்கும்.

அரசியலுக்கும் வேதியியலுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழக்கூடும். அரசியல் வானில் உலவும் பல்வேறுபட்ட கட்சிகளின் மனப்போக்கை அறிய சில நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தேறுகின்றன. அந்த நிகழ்வுகள் கிட்டத்தட்ட 'லிட்மஸ் சோதனை' போலவே இருப்பதை பலர் அறிவதில்லை. நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்போதும், முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படும் போதும் நமது அரசியல் கட்சிகளின் சாயம் வெளுக்கிறது. அதே போன்ற மற்றொரு பொன்னான வாய்ப்பு ஜனாதிபதி தேர்தல் மூலமாக இப்போது வரவிருக்கிறது.

நாட்டின் முதன்மையான பதவியான ஜனாதிபதி பதவி அலங்காரப் பதவியாக இருந்தாலும், அரசின் கௌரவத்துக்கு சின்னமாகத் திகழ்வது. ஆளும் கட்சியைச் சார்ந்தவரே ஜனாதிபதியாக முடியும் என்பது தான் இதுவரையிலான யதார்த்தம். ஆனால், இம்முறை காட்சி மாறி இருக்கிறது. மக்களவையில் மட்டுமே கூட்டணி மற்றும் விலைக்கு வாங்கப்பட்ட எம்.பி.க்களால் பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மாநிலங்களவையில் வலுவின்றி உள்ளது. தவிர நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடப்பதால், மக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் வாக்குகளில் பெரும்பகுதி காங்கிரஸ் கட்சிக்கு எதிரானதாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது.

இன்றைய நிலையில் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்கள் 13 . இவற்றில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை அதிகம் கொண்ட மாநிலங்கள் மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அசாம், ஆந்திரா, கேரளா ஆகியவை மட்டுமே. மாறாக, பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளும் 9 மாநிலங்களிலும், அதிமுக, சமாஜ்வாதி, பிஜு ஜனதாதளம் கட்சிகள் ஆளும் தமிழகம், உ.பி, ஒடிசா ஆகியவற்றிலும் அதிகப்படியான எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் இவர்களது வாக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், காங்கிரஸ் கட்சி நினைக்கும் வேட்பாளர் ஜனாதிபதி ஆவது சிரமம். இது தான் தற்போதைய நிதர்சன நிலைமை.

அதே சமயம் பாஜக கூட்டணி மட்டுமே தனியே வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற முடியாது என்பதும் உண்மை. அதாவது ஆளும் கட்சியோ, பிரதான எதிர்க்கட்சியோ, தனித்து வேட்பாளரை நிறுத்தி பலத்தை பரிசோதிக்கும் நிலையில் இல்லை. இவ்விரு கட்சிகளும் இணைத்து ஜனாதிபதி- துணை ஜனாதிபதி பதவிகளைப் பங்கிட்டுக் கொண்டால் மட்டுமே இரு கட்சிகளின் வேட்பாளர்களும் வெல்வது சாத்தியம். ஆனால், அதற்கான சூழல் தற்போது இல்லை. இரு கட்சிகளும் எதிர்த் துருவங்களாக விளங்கும் நிலையில், ஆணவப் போக்குடன் காங்கிரஸ் செயல்படும் நிலையில், சமரச முயற்சிக்கு வாய்ப்பில்லை.

இந்நிலையில், துணை ஜனாதிபதியாக இருக்கும் ஹமீது அன்சாரியையே ஜனாதிபதி ஆக்க காங்கிரஸ் முயன்றது. இதற்கு முன்னுதாரணங்கள் உள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் கூறினர். ஆனால், இந்த முன்னுதாரணம் அவ்வபோது காங்கிரஸ் கட்சியாலேயே மீறப்பட்டுள்ளதை பாஜக சுட்டிக் காட்டி இருக்கிறது. இடதுசாரி சார்புள்ள அன்சாரியை களம் இறக்கினால் வெல்ல முடியும் என்ற காங்கிரஸ் கணக்கு, மம்தாவால் பிசகிப் போக வாய்ப்பு உள்ளது.

எனவே 'மேற்கு வங்கத் தங்கம்' பிரணாப் முகர்ஜியையே களம் இறக்கலாமா என்று காங்கிரஸ் யோசிக்கிறது. இதற்கு சோனியா சம்மதம் இதுவரை கிடைக்கவில்லை. இந்திரா காந்தியைப் போலவே சோனியாவும் பிரணாபை முழுவதும் நம்ப மறுப்பது தான் சிக்கலுக்குக் காரணம். இது போதாதென்று, 'உயந்த பதவிக்கு செல்ல வாய்ப்புள்ள' பிரணாப் முகர்ஜிக்கு மக்களவையில் வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் கட்சிக்கு கடுப்பேற்றி இருக்கிறார்!

ஆரம்பத்தில் ‘காங்கிரஸ் நிறுத்தும் எந்த வேட்பாளரையும் எதிர்ப்போம்; அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மாட்டோம்’ என்று எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விவாதிக்காமல் சுஷ்மா அறிவித்த இம்முடிவை ஐக்கிய ஜனதா தளம் விமர்சித்தது. உடனே, இதனால், காங்கிரஸ் கட்சியின் கரம் ஓங்கி விட்டதாக காங்கிரஸ் கூலிக்கு மாரடிக்கும் செய்தி நிறுவனங்களும் ஆங்கில பத்திரிகைகளும் சித்திரங்களைத் தீட்டின. ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வெல்வது நிச்சயம் என்பது போலவே செய்திகள் வருகின்றன. இதில் விசித்திரம் என்னவென்றால், காங்கிரஸ் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்படுபவர் யார் என்பதே ஜுனில் தான் தெரியும். அதற்கும் நமது ஊடக அறிஞர் படை தனது வேலையைத் துவங்கிவிட்டது.

சுஷ்மா சொன்னது பாஜகவின் நிலைப்பாட்டையே. இது தொடர்பாக இப்போதுதான் தனது கூட்டணிக் கட்சிகளுடன் பாஜக விவாதிக்கத் துவங்கி இருக்கிறது. இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமையே மீண்டும் களம் இறக்கலாமா என்ற யோசனையும் எதிர்க்கட்சிகள் தரப்பில் விவாதிக்கப்படுகிறது. கலாமிடமே இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் உறுதியான தகவல் எதையும் சொல்லவில்லை. அதே சமயம், தான் களத்தில் இருந்து விலகி இருக்கவில்லை என்பதை அவர் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.

தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டின் பதவிக்காலம் ஜூலை 25 ல் முடிகிறது. ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் நடந்தாக வேண்டும். அதற்குள் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு இன்னமும் நாள் இருக்கிறது என்றாலும், அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை நடத்தவும், வேட்பாளர்களின் தகுதி குறித்த விவாதங்களுக்கும் முன்கூட்டியே வேட்பாளர் அறிவிப்பு அவசியம். இதை துவக்கி வைக்க வேண்டியது ஆளும் பொறுப்பில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கடமை. அக்கட்சியோ, பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில் பாஜக கூட்டணிக் கட்சிகளும், காங்கிரசுக்கு எதிரான மாநிலக் கட்சிகளும் இணைந்து வியூகம் வகுத்து செயல்பட்டால் வெற்றி கிடைப்பது உறுதியாகும். நாட்டு மக்கள் மனம் கவர்ந்த கலாமையே மீண்டும் எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தினால், காங்கிரஸ் கட்சியும் வழிவிடும். நாட்டுக்கும் அது நல்லதாக அமையும். துணை ஜனாதிபதி பதவிக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் பெயர் அடிபடுகிறது. இவ்விரு பதவிகளும் எதிர்க்கட்சிகள் வசமானால், ஊழலில் திளைக்கும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசை சரிப்படுத்த முடியும். இது ஒரு பொன்னான வாய்ப்பு.

ஆனால், காங்கிரஸ் கட்சி இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அக்கட்சி எந்தெந்த வழிகளில் கட்சிகளை மடக்க முடியுமோ அவ்வகையில் எல்லாம் முயற்சிக்கும். ஏற்கனவே சமாஜ்வாதி, ஆர்.ஜே.டி, பகுஜன் சமாஜ் கட்சிகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவதில் காங்கிரஸ் திறமை வெளிப்பட்டிருக்கிறது. பாஜக கூட்டணியிலும் கூட காங்கிரஸ் கட்சியின் கரம் நீளலாம். காங்கிஸ் கட்சியின் காவல் நாயான சி.பி.ஐ,யை துஷ்பிரயோகம் செய்வதன் மூலமாகவும், வாக்குகளை விலை பேசுவதன் வாயிலாகவும், தனது செல்வாக்கை உயர்த்த காங்கிரஸ் கண்டிப்பாக முயற்சிக்கும். இந்த 'லிட்மஸ் சோதன'யில் எந்தெந்தக் கட்சிகள் தாக்குப் பிடிக்கும் என்பதே இன்றைய முக்கியமான வினா.

இவ்விஷயத்தில் நிர்கதியாக இருப்பவை இடதுசாரிக் கட்சிகள் தான். அவற்றின் வலிமை முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துள்ளதால், அவை இப்போது தத்தளிக்கின்றன. கடைசியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க ஏதாவது காரணம் கண்டுபிடிக்கவே அக்கட்சிகள் பாடுபடும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பிராந்திய எதிர்க்கட்சிகளும் கரம் கோர்ப்பதை இடதுசாரிகள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அதன் விளைவு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்பதை அவர்கள் தெளிவாகவே உணர்ந்துள்ளனர்.

ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ், நவீன் பட்நாயக், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் சிங் பாதல் போன்ற மாநில தலைவர்களின் அரசியல் ராஜதந்திரம் தான் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. அதை அந்தத் தலைவர்கள் உணர வேண்டும். பிரதான எதிர்க்கட்சியான பாஜக, இவ்விஷயத்தில் கூடுதல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டால், அடுத்த தேர்தலுக்கு முன்னதாகவே 'ஊழல்' காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க முடியும்.

சென்ற ஜனாதிபதி தேர்தலில் நடந்தது போன்ற தவறான தேர்வு இம்முறை நேரிட்டுவிடக் கூடாது. நாட்டு நலனில் அக்கறையுள்ள, நாட்டின் அரசியல் நிலவரத்தை கூர்ந்து அவதானிக்கும் திறனுள்ள, இளைய தலைமுறையை ஊக்குவிக்கும் ஆற்றல் வாய்ந்தவர் தான் இம்முறை ஜனாதிபதி ஆக வேண்டும். இதை சாதிக்க வேண்டியவர்கள் எதிர்க்கட்சிகள் தான். அவர்கள் இந்த சோதனையில் வெல்வார்களா? நாடு காத்திருக்கிறது.


கடைசித் தகவல்: ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவை ஜெயலலிதாவும் நவீன் பட்நாயக்கும் ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர். காங்கிரஸ், பாஜக, சங்மா சார்ந்த தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இந்த அறிவிப்புக்கு வரவேற்பில்லை. பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தைச் சேர்ந்தவர், கிறிஸ்தவர் ஆகியவை சங்மாவின் பலங்கள். சோனியாவை எதிர்த்தவர், பிற்பாடு மகளுக்காக அவருடன் சமரசம் செய்து கொண்டவர், அரசியல் செல்வாக்கு அதிகம் இல்லாதவர் ஆகியவை இவரது பலவீனங்கள். இனிவரும் நாட்களில் ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்கும் போதுதான், களத்தில் சங்மா இருப்பாரா என்பதே தெளிவாகும்.


-----------------------------------

விஜயபாரதம் (25.05.2012)

காண்க: தமிழ் ஹிந்து
.
.

செவ்வாய், மே 15, 2012

தமிழ் ஹிந்து அன்பர்களுக்கு வேண்டுகோள்


அன்புள்ள
தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு,

மதுரை ஆதீனம் தொடர்பான கட்டுரை வெளியான உடனேயே நான் நினைத்தது, இதற்கு எந்த எதிர்வினையும் காட்டக் கூடாது என்பது தான். அதனால் தான் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தேன். ஆனால், இனிமேலும் பேசாமல் இருப்பது நல்லதில்லை என்ற எண்ணம், இங்கு வந்த சில பின்னூட்டங்களால் ஏற்பட்டுவிட்டது.

நித்யானந்தா – சன் டிவியில் ‘பிரபலமானபோது’ கடுமையாக அவரை விமர்சித்தவர்களுள் நானும் ஒருவன். அதே சமயம், மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அவர் பொறுபேற்ற உடன் (அது விலைக்கு வாங்கப்பட்டதாகவே இருக்கட்டும்) அப்பாடி, மதுரை ஆதீனம் அருணகிரியாரிடம் (தற்போதைய ஆதீனம்) இருந்து தப்பித்தது என்றே நான் நினைத்தேன். அதற்கு பல காரணங்கள் உண்டு. அது பற்றி விரிவான கட்டுரை எழுத திட்டமிட்டிருக்கிறேன்.

ஆனால், திரு. தஞ்சை கோபாலன் என்ன நோக்கத்தில் கட்டுரை எழுதினாரோ, அது நமது அன்பர்களின் ஜாதிச் சண்டையால் வீணாகி விட்டது. இங்கு பின்னூட்டம் இட்ட பலரும் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை முதன்மைப்படுத்துவதையே காண்கிறேன். மதுரை ஆதீனம் விஷயத்துடன் சங்கர மட விவகாரத்தை இழுத்திருக்க வேண்டியதில்லை. இது ஏற்கனவே புகையும் சிலருக்கு சாம்பிராணி போட்டது போலாகி விட்டது. இரண்டும் வெவ்வேறானவை என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், ஜெயேந்திரரை வம்புக்கு இழுத்து தமிழ் ஹிந்துவின் நோக்கத்தையே சிதிலப்படுத்தி இருக்கிறார்கள் சில அன்பர்கள். அந்த அன்பர்களுக்கு பதில் சொல்லக் கிளம்பிய வேறு சில அன்பர்கள் மேலும் பிரச்னையை பெரிதாக்குகிறார்கள். பரமாச்சாரியரும், சிருங்கேரி பீடாதிபதியும் கூட அவர்களிடம் தப்பவில்லை. மொத்தத்தில் இந்தப் பின்னூட்டங்களில் நமது ஒற்றுமையின்மையே வெளிப்படுகிறது.

இதுகுறித்து திருவாளர்கள் ஜடாயு, கோபாலன், சிவஸ்ரீ விபூதிபூஷன் போன்றவர்கள் நாசூக்காக எச்சரித்தும், இந்த விவாதம் இதே திசையில் தொடர்வது நல்லதாகத் தெரியவில்லை. எனது சந்தேகம் என்னவென்றால், ஹிந்து பெயருடன் நமது எதிரிகள் இந்த விவாதங்களில் பங்கேற்று பிரச்னையை ஊதிப் பெரிதாக்குகிறார்களோ என்பது தான். ஆகவே, உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஹிந்து மக்களுக்கு தமிழக நிலவரத்தை வெளிப்படுத்த வேண்டிய நமது தளம் நமது மன மாச்சரியங்களை வெளிப்படுத்தக் காரணமாகிவிடக் கூடாது என்று அஞ்சுகிறேன். பின்னூட்டங்களை மட்டுறுத்தல் செய்வதன் அவசியம் குறித்து தள நிர்வாகிகள் சிந்திப்பது நல்லது.

தமிழகத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக திராவிட இயக்கத்தால் பரப்பப்பட்ட பிரிவினை நஞ்சு இன்னும் முறிந்துவிடவில்லை என்பதையே இந்தப் பின்னூட்டங்கள் காட்டுகின்றன. உணர்ச்சிகரமான நேரத்தில் அறிவுப்பூர்வமாக செயல்படவேண்டும். அறிவு ஸ்தம்பிக்கும் நிலையில் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்போதுதான் நியாயமான முடிவுகளை எடுக்க முடியும். நாமோ, எதிரிடையாக செயல்படுகிறோம். இது வருத்தம் அளிக்கிறது.

நமது சமுதாயம் ஒரே சீருடையை அனைவரும் அணியுமாறு கட்டாயப்படுத்துவதல்ல. ஹிந்துத்துவத்தின் சிறப்பே இதன் தன்னிகரற்ற சுதந்திரமும் சுய கட்டுப்பாடும் தான். பல சம்பிரதாயங்கள் சேர்ந்தது தான் ஹிந்து மதம் . இதில் ஒரு சம்பிரதாயத்தை இழிவுபடுத்துவது என்பது ஒட்டுமொத்த ஹிந்து மதத்தையும் இழிவு படுத்துவதாகவே அமையும். வானை நோக்கி காறி உமிழ்ந்தால் யார் மீது எச்சில் தெறிக்கும்?

ஆகவே , தமிழ் ஹிந்து அன்பர்கள் அனைவரும் தங்கள் வேற்றுமையை மறந்து, ஹிந்து சமுதாய நன்மையைக் கருதி விவாதத்தில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமாய், ஒரு சகோதர ஹிந்துவாக கரம் கூப்பி வேண்டுகிறேன்.

”வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே”

-திருஞான சம்பந்தர்

என,
சேக்கிழான்

.

சனி, மே 12, 2012

கேரளாவில் முஸ்லிம்லீக் ஆதிக்கம்- ஒரு விளக்கம்


அன்புள்ள
ஆர்வி மற்றும் அவருக்கு பதில் அளித்த நண்பர்களுக்கு,

வணக்கம்.

கேரளாவில் மாறிவரும் மக்கள்தொகை மாற்றத்தின் (Demography)அபாய அறிகுறியாகவே அந்த மாநில அமைச்சரவையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை நான் காண்கிறேன். 1947 க்கு முன்னர் இதே போன்ற நிலைமை காணப்பட்ட லாகூரும் டாக்காவும் இன்று நம்முடன் இல்லை. அதே நிலை கேரளாவிலும் நேரிடக் கூடாது என்பதே எனது கவலை. அந்த அடிப்படையில் தான் தமிழ் ஹிந்து தளமும் இக்கட்டுரையைப் ( கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா? ) பிரசுரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையின மதங்கள் பெரும்பான்மை பெற்றவுடன் அங்கிருந்த ஹிந்து பண்டிட்கள் அக்கிரமமான முறையில் துரத்தப்பட்டார்கள் (1985 -1990). அவ்வாறு துரத்தப்பட்டவர்கள் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் அகதிகளாக வாழ்கிறார்கள். அதே போன்ற நிலை கேரளாவிலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையே எனது கட்டுரை பிரதிபலிக்கிறது. அதைப் புரிந்துகொள்ளாமல், திரு. ஆர்வி, வழக்கம் போல குதர்க்கம் பேசுகிறார். தூங்குபவர்களை எழுப்பலாம்; தூங்குவதுபோல நடிப்பவர்களை எழுப்ப முடியாது.

நமது அரசுகளின் அமைச்சரவைகளில் பெரும்பாலும் ஜாதிவாரி பிரதிநிதித்துவம் உள்ளதை அனைவரும் அறிவர். மண்டல் கமிஷன், இட ஒதுக்கீடு (Reservation) ஆகியவை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பானவை. அது கண்டிப்பாக தேவை உள்ளவரை தொடர வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதே சமயம் திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில், இடஒதுக்கீடு ஐம்பது சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் நான் ஏற்கிறேன்.

இடஒதுக்கீடு என்பது காலம் காலமாக நசுக்கப்பட்ட தலித் சகோதரர்களுக்கு கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். ஆனால், அதன் பயனை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் சிறுபான்மையினரும் தூக்கிச் சென்றுவிடக் கூடாது. மேல்ஜாதி என்று கூறப்படும் பல ஜாதிகளிலும் பலர் ஏழ்மை நிலையில் உள்ளனர். அவர்களை பொருளாதார அடிப்படையில் கைதூக்கிவிடுவதாகவும் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்ற சிந்தனையை பலர் கூறி வருகின்றனர். இதுவும் எனக்கு ஏற்புடையதே.

மற்றபடி இடஒதுக்கீட்டையும் அமைச்சரவையில் செல்வாக்கு செலுத்துவதையும் ஒன்றாகக் குழப்பக் கூடாது. கேரளாவில் சிறுபான்மையினர் திறமை அடிப்படையில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தால் நான் அதை எதிர்த்திருக்க மாட்டேன். ஆனால், அங்கு நடந்தது அரசியல் பேரம்; நாட்டை அழிவுக்குள்ளாக்கும் பேரம். எனவே தான் அதை நான் எதிர்க்கிறேன்.

பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களிலும் சிறுபான்மையினருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அது அனைத்து சமூகத்தினரையும் இணைப்பதற்கான சமரசமான அரசியல் ஏற்பாடு. அதே சமயம், தங்கள் வாக்கு வங்கி பலத்தாலும், கூட்டணியில் செலுத்தும் ஆதிக்கத்தாலும், கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சி நிர்பந்தம் செய்து செல்வாக்கை உயர்த்திக் கொண்டுள்ளது. இது பிற மாநிலங்களிலும் பரவினால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.

-சேக்கிழான்


காண்க: கேரளம் – மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?

.

வெள்ளி, மே 11, 2012

புத்துணர்ச்சி பெறும் பாஜக...


2009 நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற அதிர்ச்சித் தோல்வியிலிருந்து பாஜக முழுமையாக மீண்டுவிட்டது, பல்வேறு மாநிலங்களில் அக்கட்சியின் செயல்பாடுகளில் இருந்து தெரிய வருகிறது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் காங்கிரஸ் போலல்லாமல் அக்கட்சி ஸ்திரமாகவே நிலை கொண்டிருக்கிறது.

இன்றைய நிலவரத்தில் பாஜக தனித்து 6 மாநிலங்களிலும் கூட்டணியாக 3 மாநிலங்களிலும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. குஜராத் (26), .பி. (29), சட்டீஸ்கர் (11), கர்நாடகா (28), இமாச்சல் (4), கோவா (2) ஆகிய மாநிலங்களில் தனித்து ஆட்சி செலுத்தும் பாஜக, ஜார்க்கன்ட் (14) மாநிலத்தில் ஜார்க்கன்ட் முக்தி மோர்சாவுடன் இணைந்து ஆட்சி செய்கிறது. தவிர, பிகாரில் (40) ஐக்கிய ஜனதாதளத்துடனும், பஞ்சாபில் (13) அகாலிதளத்துடனும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கிறது. நாகலாந்தில் (1) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள நாகா மக்கள் முன்னணி ஆட்சியில் உள்ளது. இந்த மாநிலங்கள் அனைத்திலும் சேர்த்து உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை: 168. இவற்றில் சென்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கோட்டணி பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 108 .

மேற்கண்ட மாநிலங்களில் பாஜக, மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் செல்வாக்கு முன்னரை விட கூடியே உள்ளது. குறிப்பாக குஜராத், .பி, பிகார், பஞ்சாப், கோவா, சட்டீஸ்கர், இமாச்சல் மாநிலங்களில் முன்னர் பெற்ற வெற்றிகளை விட அடுத்த தேர்தலில் வெற்றி விகிதம் அதிகமாகவே இருக்கும். இம்மாநிலங்களில் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு சிறிய நம்பிக்கை வெளிச்சமும் தட்டுப்படவில்லை. கர்நாடகா, ஜார்க்கன்ட் மாநிலங்களில் பாஜகவுக்குள் நிலவும் பூசல்கள், ஆட்சிக் குழப்பங்களால் அங்கு காங்கிரஸ் கட்சி சற்று நிம்மதி கொண்டிருக்கிறது. ஆனால், அக்கட்சி தேர்தலில் வெல்ல அது போதுமானதாக இராது.

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் அதிருப்திக் குரல் இப்போதைக்கு அடங்கி இருக்கிறது. தற்போதைய முதல்வர் சதானந்தா கவுடா மீது பெரிய அளவில் அதிருப்தி எழவில்லை. இங்கு தேவே கவுடாவின் மதச் சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ், பாஜக என்ற மும்முனைப் போட்டி வருமானால், பாஜகவுக்கே ஆதாயம். தேர்தலுக்குள் காங்கிரசும் தேவே கவுடா கட்சியும் கட்டி அணைத்துக் கொண்டாலும், பாஜகவுக்கு பிரசாரத்தில் நல்ல விஷயங்கள் பேசக் கிடைக்கும்.

ஜார்க்கண்டில் ஜார்க்கன்ட் முக்தி மோர்ச்சாவை கட்டி ஆள்வது பாஜகவுக்கு சிரமமாகவே இருக்கிறது. அண்மையில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் ஜே.எம்.எம் கட்சியின் அரசியல் விளையாட்டு வெளிப்பட்டது. ஆனால், இப்போதைக்கு வேறு வழியில்லை என்று பாஜக அடக்கி வாசிக்கிறது. மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா மீது எந்த புகாரும் இல்லை. முன்னாள் முதல்வரும் ஜார்க்கன்ட் விகாஸ் மோர்ச்சா தலைவருமான பாபுலால் மராண்டியை பாஜக சரிப்படுத்தினால், அவரை பழையபடி கட்சிக்குள் கொண்டுவந்தால், பாஜகவுக்கு நல்லது. மற்றபடி, இங்கு காங்கிரஸ் கட்சி தமிழக காங்கிரஸ் போல வலுவிழந்து கிடக்கிறது.

அடுத்ததாக, காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்கள் சிலவற்றிலும் பாஜக கூட்டணி முன்னேறி வருவதைக் குறிப்பிட வேண்டும். ராஜஸ்தான் (25), உத்தரகான்ட் (5), டில்லி (7), மகாராஷ்டிரா (48), அசாம் (14), ஹரியானா (10) ஆகிய மாநிலங்களில் ஆளும் காங்கிரஸ் கோட்டைக்கு எதிராக பாஜக கூட்டணி நன்றாக வேர் கொண்டுள்ளது. இம்மாநிலங்களில் உள்ள மொத்த மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை: 109. சென்ற தேர்தலில் இம்மாநிலங்களில் தே..கூட்டணி வென்ற இடங்கள் மிகக் குறைவு (36). இம்மாநிலங்கள் தான் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்க ஏணிப்படியாக அமைந்தன. ஆனால் இன்றைய நிலைமை தலைகீழாக இருக்கிறது. இம்மாநிலங்களில் இரட்டை இலக்கங்களில் காங்கிரஸ் கூட்டணி வெல்வதே அடுத்த தேர்தலில் குதிரைக் கொம்பாக இருக்கும். பாஜக கூட்டணிக்கு இம்மாநிலங்களில் நல்ல மீட்சி புலப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவிலும், ராஜஸ்தான், டில்லி, ஹரியானாவிலும் காங்கிரஸ் மண்ணைக் கௌவப் போவது நிச்சயமாகவே தெரிகிறது.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆளும் இதர மாநிலங்களான ஜம்மு காஷ்மீர் (6), அருணாச்சல் (2), மேற்கு வங்கம் (42), ஆந்திரா (42), கேரளா (20), மேகாலயா (2), மணிப்பூர் (2), மிசோரம் (1) மாநிலங்களில் உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை: 117 . இம்மாநிலங்களில் தான் பாஜக பலவீனமாக உள்ளது. சென்ற தேர்தலில் இம்மாநிலங்களில் பாஜக வென்ற இடம் ஒன்றே ஒன்று! காங்கிரஸ் வலுவாக உள்ள இப்பகுதியிலும் அடுத்த தேர்தலில் மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. குறிப்பாக ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் பாஜக - டி.ஆர்.எஸ். கூட்டனி அமோக வெற்றி பெறுவது உறுதி. ஜம்மு காஷ்மீரிலும் மேற்கு வங்கத்திலும் குறிப்பிடத் தக்க வெற்றிகளை பாஜக பெற வாய்ப்புள்ளது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்பதைப் பொறுத்தே அமாநிலத்தின் நிலவரத்தை தெளிவாக கூற இயலும்.

இவை அல்லாது, அதிமுக ஆளும் தமிழ்நாடு (39), பிஜு ஜனதா தளம் ஆளும் ஒடிசா (21), மார்க்சிஸ்ட் ஆளும் திரிபுரா (2), சமாஜ்வாதி ஆளும் .பி (80) ஆகிய மாநிலங்கள் அடுத்த தேர்தலில் முக்கியத்துவம் பெறுபவையாக உள்ளன. இங்குள்ள மொத்த மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை: 142 . இப்பகுதியில் பாஜக சென்ற தேர்தலில் வென்ற இடங்கள் 10 மட்டுமே. இம்மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி சென்ற தேர்தலில் பெற்ற அறுவடையை இம்முறை பெற வழியே இல்லை. இம்மாநிலங்களில் கூட்டணியை வலுப்படுத்துவதன் மூலமாகவே காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் பலன் பெற முடியும். குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் அமையும் கூட்டணியைப் பொறுத்தே அரசியல் நிலையை அளவிட முடியும். இன்னும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளதால் (இடைக்காலத்தில் தேர்தல் நடக்கும் வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது) அதுவரை வேடிக்கை பார்ப்பதே சிலாக்கியம்.

நிலைமை எப்படி இருப்பினும், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த நிலையை விட பாஜக கூட்டணி இப்போது தெம்பாகவே காட்சி அளிக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு சறுக்கல்கள் துவங்கிவிட்டன. அடுத்த ஆண்டு நடைபெறும் குஜராத், மகாராஷ்டிரா, டில்லி மாநிலத் தேர்தல்களில் பாஜ கூட்டணியின் கரம் ஓங்கும்போது, நாடாளுமன்ற இடைத் தேர்தலை நடத்த வேண்டிய நிலைமை வரக்கூடும். அப்போது காங்கிரசை நம்பி களம் இறங்கு கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையும் குறையவே வாய்ப்புள்ளது. தமிழகத்தில் முந்தைய திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தாலும் உடைந்தாலும் பலன் பெறப்போவது அதிமுக கூட்டணியாகவே இருக்கும். அந்தக் கூட்டணிக்குள் பாஜகவுக்கு இடமும் இருக்கும்.

அரசியல் என்பது ஜோதிடர்களின் கட்டுக்குள் அடங்காதது. மக்கள் மனநிலையை துல்லியமாகக் கூறக் கூடியவர்கள் உலகில் இல்லை. ஆனால், காற்று வீசும் திசையில் ஓடம் செலுத்துபவர் இலக்கை அடைய முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. காற்றுக்கு எதிர்த்திசையில் வீம்புடனும் மமதையுடனும் ஓடம் செலுத்தும் காங்கிரஸ் கட்சியை விட, கரையோரம் தயாராக அமர்ந்திருக்கும் பாஜகவுக்கு வாய்ப்பு கூடுதலாகவே இருக்கிறது. இப்போதைய நிலைமையில் நாடாளுமன்றத்தில் 250 இடங்களை நெருங்கும் தூரத்தில் பாஜக கூட்டணி இருக்கிறது. இதை வெற்றிகரமாக்குவது பாஜகவின் பொறுப்பு.


---------------------------------------------


பெட்டிச்செய்தி - 1

முதல்வர்களில் முந்தும் மோடி

நாடு முழுவதும் உள்ள முதல்வர்களுள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆளுமையிலும் ஆட்சி நிர்வாகத்திலும் முன்னணி வகிக்கிறார். அவரது தனிப்பட்ட சாதனைகள் பாஜகவின் சாதனைகளாக மாறி வருகின்றன. அவரை அடியொற்றி பாஜக ஆளும் பிற மாநிலங்களும் செயல்படத் துவங்கி உள்ளதால் அம்மாநிலங்களிலும் வளர்ச்சியின் வீச்சு அதிரித்திருக்கிறது.

உலக அளவில் மோடி இப்போது கவனம் ஈர்த்து வருகிறார். அநேகமாக அடுத்த இந்தியத் தேர்தலில் பாஜகவின் பிரதம வேட்பாளராக மோடி இருப்பார் என்று வெளிநாட்டுப் பத்திரிகைகள் கட்டியம் கூறுகின்றன. இதைப் பொறுக்காமல், காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் பாஜகவுக்குள் உட்பூசல் என்று கதை அளக்கத் துவங்கி இருக்கின்றன.

நாட்டின் திறமையான முதல்வர்கள் பட்டியலில் மோடி தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார். பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் சட்டீஸ்கர் முதல்வர் ரமண சிங்கும் .பி. முதல்வர் சிவராஜ் சிங் சவ்கானும் கூட இப்பட்டியலில் முன்னணி வைக்கின்றனர். நாடு எத்திசையில் செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர்களாக பாஜக கூட்டணி முதல்வர்கள் இருப்பது நாட்டிற்கு அனுகூலம்.


------------------------------------------------


பெட்டிச்செய்தி - 2

குஜராத்தின் அசுர வளர்ச்சி

20 ஆண்டுகளுக்கு முன்ன்னர் நாட்டின் பிற மாநிலங்கள் போலவே பின்தங்கி இருந்த குஜராத் இப்போது பல துறைகளிலும் முத்திரை பதிக்கிறது. ஒரே காரணம், மாநில முதல்வர் நரேந்திர மோடி. இதோ சில புள்ளிவிபரங்கள்:

1. நாட்டின் தொழில்துறை வளர்ச்சி சுணங்கிக் காணப்படுகையில் குஜராத்தின் தொழில் வளர்ச்சி 13 சதவீதமாக உள்ளது.

2. குஜராத்தின் விவசாயத் துறை வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளில் 12.8 சதவீதம். பிற மாநிலங்களில் விவசாயம் நசிந்துவரும் நிலையையே நாம் காண்கிறோம்.

3. குஜராத் மாநில மக்களின் தனிநபர் வருமானம் 13.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

4. நாட்டின் ஏற்றுமதியில் 22 சதவீதத்தை குஜராத் மட்டும் பூர்த்தி செய்கிறது.

5 . உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் குஜராத் 30௦ சதவீதம் பங்களிக்கிறது.

6 . 24 மணிநேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படும் மாநிலம் குஜராத்.

7 . பிற மாநிலங்களுக்கு மின்சாரம் விற்கும் மாநிலமும் குஜராத் மட்டுமே.

8 . மாநிலத்தில் பாயும் நதிகளை இணைத்துள்ள ஒரே மாநிலமும் குஜராத் தான்.

9 . ஊழல் குறைவாக உள்ள, அரசு கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள மாநிலம் என்று தொழில்துறையால் போற்றப்படும் மாநிலம் குஜராத்.

10 . 'பஞ்சாம்ருத யோஜனா' என்ற ஐந்து அடிப்படைத் திட்டங்கள் (கல்வி, மின்சக்தி, நீர் பயன்பாடு, மக்கள் சக்தி, பாதுகாப்பு) வாயிலாக குஜராத்தை முன்னுதாரண மாநிலம் ஆக்கி இருக்கிறார் மோடி.


------------------------------------

விஜயபாரதம் (18.05.2012)

.