சனி, பிப்ரவரி 19, 2011

நமது கடமை

பிரதமர் மன்மோகன் சிங் ஊடக அறிஞர்களுடன் நடத்திய நேர்காணல் (16.02.2011) நாடகம் எனக்குள் ஏற்படுத்திய அதே தார்மிக கோபத்தை எனது 'தமிழ் ஹிந்து' நண்பர் விஸ்வாமித்திராவுக்கும் ஏற்படுத்தியிருப்பது கண்டு உவகை கொள்கிறேன்.

அவரது கோபாவேசமான 'மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப் படாத கேள்விகள்' கட்டுரை, தமிழ் ஹிந்து இணையதளத்தில் பிப். 17 ல் வெளியாகி இருக்கிறது. அக்கட்டுரைக்கும் அதன் ஆசிரியருக்கும் எனது பாராட்டுக்கள்.

இக்கட்டுரை தொடர்பான எனது கருத்துக்கள் கீழே...

----------------------------------------------

நண்பர் விஸ்வாமித்திராவுக்கு,
அற்புதமான கட்டுரை.
நன்றி.

உங்கள் ஒவ்வொரு வரியும் சாட்டையடி. ஆனால், அடிபட்டவர்கள் அனைவரும் தோல் மரத்துப்போன எருமைத் தோலர்கள். அவர்களுக்கு உறைக்கும் என்று தோன்றவில்லை; ஆனால், தூங்கிக் கொண்டிருக்கும் நம் மக்களுக்கு சிறிதாவது உறைக்கும்.

இந்தக் கட்டுரையை சிறு வெளியீடாக நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும். இக்கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை அனைத்து ஊடக அறிஞர்களுக்கும் (குறிப்பாக ஆங்கில செய்தி அலைவரிசை ஆசிரியப் பெருமக்கள்) அனுப்பிவைக்க வேண்டும்.

உங்களுக்கு ஏற்பட்ட இதே மனக் கொந்தளிப்பு, மன்மோகன் நேர்காணலைக் கண்டபோது எனக்கும் ஏற்பட்டது. நம்மை எந்த அளவுக்கு இளிச்சவாயர்களாக இந்த கேடுகெட்ட நரிகள் நினைத்திருக்கின்றன என்று எண்ணினாலே உடல் கூசுகிறது.

இது குறித்த நான் எழுதிய பிரத்யேகக் கட்டுரை (அதி மேதாவிகள் சபையில் அற்புதப் புனிதர்) எனது ‘எழுதுகோல் தெய்வம்’ வலைப்பூவில் உள்ளது. அதன் பிறகே உங்கள் கட்டுரையைப் படித்தேன். இருவர் உள்ளமும் ஒன்று போல சிந்தித்திருப்பது கண்டு வியந்தேன்.

தற்போதைய நாட்டின் இழிநிலைக்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்து வாக்குகளை மட்டுமே நம்பி சில மாநிலங்களில் மட்டும் குறுக்கப்பட்டதாக மாறிவிட்ட பா.ஜ.க.வே மன்மோகன், சோனியா, கருணாநிதி உள்ளிட்ட கொள்ளைக் கும்பல்கள் துணிவுடன் நாடகமாட காரணம்.

மதவாதப் பூச்சாண்டி காட்டியே எத்தனை ஊழல்கள் வேண்டுமானாலும் செய்யலாம் என்று கொள்ளைக்காரர்கள் நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கைக்கும் ஆதாரம் உள்ளது. கிட்டத்தட்ட நூறு தொகுதிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் மாறியுள்ள நிலையில், அவர்களுக்கு வேப்பங்காயாக பா.ஜ.க. காட்சி தரும் வரையில், சோனியா மட்டுமல்ல, குவாத்ரோச்சியே மீண்டும் இந்தியா வந்து மற்றொரு கொள்ளை அடித்தாலும் வேடிக்கை பார்த்துத் தான் ஆக வேண்டும். இந்நிலையை மாற்ற வேண்டியது பா.ஜ.க.வின் பொறுப்பு. அதற்கு உதவ வேண்டியது, நம்மைப் போன்றோரின் கடமை.
-சேக்கிழான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக