வியாழன், பிப்ரவரி 17, 2011

புதிய அளவைகள்... பழைய நினைவுகள்...



100 கோடி - ஒரு எட்டி
100 எட்டி - ஒரு ரெட்டி
100 ரெட்டி - ஒரு கல்மாடி
100 கல்மாடி - ஒரு ராடியா
100 ராடியா - ஒரு ராஜா
100 ராஜா - ஒரு சோனியா

அண்மையில் எனக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்திருந்தது. அதில் தான் மேற்கண்ட புதிய அளவை முறை குறிப்பிடப்பட்டிருந்தது. மேலோட்டமாகப் படித்தபோது நகைச்சுவையாகத் தோன்றினாலும், அதன் ஆழத்தில் புதைந்திருந்த அவலமும் உள்ளக்கொதிப்பும் அளவிட முடியாதவை.

'ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணிவிடாதே, பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே' என்ற பாடலும் நினைவில் வந்தது. ஊழல் மலிந்த இந்த பாரத தேசத்தில் தான், காமராஜரும், கக்கனும், லால் பகதூர் சாஸ்திரியும், அரசுகளில் பொறுப்பேற்று வாழ்ந்து காட்டி மறைந்திருக்கின்றனர் என்பது இதிகாசக் கதை போல நெஞ்சில் இடறுகிறது.

காமராஜருக்கு சுவிஸ் வங்கியில் ரகசியக் கணக்கு இருப்பதாக பிரசாரம் செய்து தமிழகத்தில் காலூன்றிய விஷவித்துக்கள் இன்று, ஹாங்காங்கிலும் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் சிங்கப்பூரிலும் குவித்துள்ள கணக்கற்ற சொத்துக்கள் தமிழக நிதிநிலை அறிக்கையில் விழும் துண்டு போல பல மடங்கானவை. அதே கழகத்துடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சி துடிக்கிறது - வானவில் ஊழலால் பெயர் நாறிய பிறகும்.

லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்வில் ஒரு சம்பவம். காங்கிரஸ் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றிய சாஸ்திரிக்கு கட்சி ரூ. 40 மாத சம்பளம் வழங்கிவந்தது. ஒருமுறை சாஸ்திரியின் நண்பர் ஒருவர் கடன் கேட்டு அவர் வீட்டிற்கு வந்தார். தன்னிடம் பணமில்லை என்று சொன்ன சாஸ்திரியிடம், தான் சேமித்துவைத்திருந்த பணத்தை சாஸ்திரியின் மனைவி கொடுத்தாராம். விசாரித்தபோது மாதந்தோறும் ரூ. 5 மிச்சப்படுத்தி தனது மனைவி சேமித்துவைத்தது சாஸ்திரிக்கு தெரியவந்தது. மறுநாள் கட்சி அலுவலகம் சென்ற சாஸ்திரி 'இனிமேல் எனக்கு நீங்கள் ரூ. 35 மட்டும் மாத சம்பளம் கொடுத்தால் போதும். அதுவே எனது குடும்பத்திற்குப் போதுமானது'' என்றாராம்.

ஜனதா கட்சி தலைவராகவும் பிரதமராகவும் இருந்தவர் மொரார்ஜி தேசாய். இவரது மகள் மருத்துவக் கல்லூரியில் சேர்க்குமாறு வேண்டியபோது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அதனால் மனம் வெறுத்த மகள் தற்கொலை செய்து கொண்டார். இது நம் நாட்டில் நடந்த சம்பவம் தான்.

அப்படிப்பட்டவர்கள் பிரதமராக இருந்த பாரதம், இன்று மன்மோகன் சிங் போன்ற கழிசடைகள் கைகளில் சிக்கி சின்னாபின்னப் படுகிறது. இவரைத்தான், 'திருவாளர் பரிசுத்தம்' என்று பத்திரிகைகளும் தொலைகாட்சி ஊடகங்களும் வர்ணிக்கின்றன. என்ன பரிசுத்தமோ தெரியவில்லை.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய ராசாவையும் காமன்வெல்த் ஊழலில் தொடர்புடைய கல்மாடியையும் காப்பாற்றியது தான் பரிசுத்தத்தின் இலக்கணமோ? நீரா ராடியா என்ற அதிகாரத் தரகர் ஆட்டுவித்தபடி ஆடியது தான் இவரது தனிச்சிறப்போ? குவாத்ரோச்சியைத் தப்புவிக்கச் செய்து திரைமறைவில் ஆட்சி செய்யும் சோனியாவுக்கு குற்றேவல் செய்யும் பிரதமர்! அவருக்கு சாமரம் வீசும் ஊடகங்கள்!

1990 களில் ஹவாலா மோசடியில் பா.ஜ.க.தலைவர் அத்வானிக்கும் தொடர்பிருப்பதாக நரசிம்ம ராவ் அரசு இருந்தபோது புரளி கிளப்பப்பட்டது. அவர் மீது மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. உடனடியாக அவர் அறிவித்த அரசியல் துறவறம் யாருமே எதிர்பார்க்காதது. தன்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்படும்வரை, தான் எம்.பி. பதவி வகிக்கப் போவதில்லை என்று அறிவித்த அத்வானி தனது பதவியையும் ராஜினாமா செய்தார். தவிர, வழக்கிலிருந்து விடுவிக்கப்படும்வரை தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று சபதமும் செய்தார் அத்வானி. இறுதியில் நியாயம் வென்றது. அவர் மீது குற்றம் சாட்டிய சிபிஐ, குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறியது. வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்அத்வானி; பொய்க்குற்றச்சாட்டு சுமத்திய மத்திய அரசு தலைகுனிந்தது.

அதே பா.ஜ.க.வின் கர்நாடக மாநில முதல்வர் எட்டியூரப்பா, தற்போது பலகோடி ஊழல் புகார்களில் சிக்கியபோதும் பதவி விலக மறுக்கிறார். அவர் பதவி விலகத் தேவையில்லை என்கிறது கட்சித் தலைமை. என்னே ஒரு தார்மிக வீழ்ச்சி! அரசுக்கு சொந்தமான நிலத்தை குறைந்த விலைக்கு தனது மகன்களுக்கு கிரயம் செய்து கொடுத்த எட்டியூரப்பா, விவகாரம் வெளியானவுடன், அதைத் திருப்பித் தந்துவிட்டதாக அறிவிக்கிறார். அத்வானி இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருக்கிறார்.

ஊழல் ஒரு பொருட்டில்லை என்று ஆன பின்பு, தார்மிக நெறிமுறைகள் செல்லாக்காசுகள் ஆகிவிடுகின்றன. அதனால் தான், மத்திய காங்கிரஸ் அரசின் பல லட்சம் கோடி ஊழல்கள் குறித்து கடுமையான கண்டனங்களை பிரதான எதிர்க்கட்சியால் முன்வைக்க முடியவில்லை. ஷியாம் பிரசாத் முகர்ஜியும் தீனதயாள் உபாத்யாயாவும் அடல் பிகாரி வாஜ்பாயும் லால் கிருஷ்ண அத்வானியும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து வளர்த்த பாரதிய ஜனதா, அத்வானி கண் முன்னாலேயே சிதிலம் ஆகிறது - மகாத்மா காந்தி கண் முன்னால் காங்கிரஸ் அரிக்கப்பட்டதுபோல!

எஸ்எம்எஸ்சில் வந்த புதிய ஊழல் அளவை முறையில் உச்சபட்சம் சோனியா என்றால், குறைந்த பட்ச அளவு எட்டி என்பது உறுத்தலான ஒன்றே. காங்கிரஸ் நாசமாகிவிட்டது; நாட்டையும் நாசம் செய்கிறது. அதன் தகுதி அது மட்டுமே. அதற்கு மாற்றான பா.ஜ.க.வும் அதேபோல இருக்கலாமா?

எட்டியூரப்பாவை கட்சியிலிருந்தே நீக்க வேண்டிய தருணம் இது. மாட்சி போன பின் ஆட்சி இருந்தால் என்ன போனால் என்ன? பாஜக சிந்திக்க வேண்டும்.

.

1 கருத்து: