ஞாயிறு, ஜூன் 30, 2013

உத்தர்கண்ட் பேரழிவின் பாடங்கள்...


இயற்கைச் சீற்றங்கள் மனித பிரயத்தனங்களுக்கு சவால் விடுபவை. ஒருவகையில் இயற்கையின் சமன்வயத்தை சீர்குலைக்கும் மனிதனுக்கு எச்சரிக்கையாகவே இயற்கைச் சீற்றங்கள் பேரழிவுகளை உருவாக்குகின்றன. அண்மையில் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவையும், அதைச் சமாளிக்கத் தெரியாமல் நமது அரசுகள் திணறியதையும் கண்டபோது, அனுபவங்களிலிருந்து நாம் எப்போதும் பாடம் கற்பதில்லை என்பது தெளிவானது.

நடந்தது என்ன?

கடந்த ஜூன் 17-ம் தேதி, இடைவிடாத தொடர்மழையால், இமாச்சல், உத்தர்கண்ட் மாநிலங்களில் பெருத்த வெள்ளச்சேதம் ஏற்பட்டது. இம்மாநிலங்கள் இமயமலைச் சாரலில் உள்ளவை. பலத்த மழையால் மந்தாகினி, அலக்நந்தா, யமுனை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுவரை காணாத வகையில் வெள்ளத்தின் சீற்றம் இருந்தது. தொடர்மழையும், ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளமும் மலை மாநிலங்களில் பேரழிவை உருவாக்கின. குறிப்பாக உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாகை, கேதார்நாத், பத்ரிநாத் போன்ற புனிதத் தலங்கள் வெள்ளத்தின் பாதையில் இருப்பதால் மிகுந்த அழிவுக்கு உள்ளாயின.

ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட பல அணைகளும் மிகக் குறுகிய காலத்தில் நிரம்பியதால், உடனடியாக அணைகள் திறந்துவிடப்பட்டன. இது வெள்ளத்தின் சீற்றத்தை அதிகரித்தது. இதுவரை காணாத மழையும் இதற்குக் காரணமானது. விளைவாக, ஆற்றின் கரையோர நகரங்களும் கிராமங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டன. சுமார் 60 கிராமங்கள் வெள்ளத்தால் முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

புனிதத்தல சுற்றுலாவை நம்பியுள்ள உத்தர்கண்டில் ஹிந்துக்களின் மிக முக்கியமான புண்ணியத்தலங்கள் உள்ளன.  உத்தர்கண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய 4 தலங்களுக்கு புனித யாத்திரை செல்வது விசேஷமானது. இதற்கு “சார் தாம் யாத்ரா” என்று பெயர். நாடு முழுவதிலுமிருந்து செல்லும் பக்தர்கள் இந்த யாத்திரையை இதயப்பூர்வமாக நடத்துகின்றனர். ஜூன் 17 ம் தேதி, வெள்ள பாதிப்புக்கு உள்ளானபோது இப்பகுதிகளில் லட்சக் கணக்கான பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.

நிலைகுலைந்த அரசுகள்:

ஆரம்பத்தில் இயற்கைச் சீற்றத்தின் அளவும் பாதிப்பும் மத்திய, மாநில அரசுகளால் உணரப்படவில்லை. கேதார்நாத்தில் இருந்த பெரும்பாலான கட்டடங்களும், கோயிலின் சுற்றுப்புறக் கட்டுமானங்களும் வெள்ளத்தில் அடித்துச்  செல்லப்பட்டதை இரண்டு நாட்கள் கழிந்த பிறகே மாநில அரசு உணர்ந்தது. இந்த வெள்ளத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கலாம். ஆனால் மாநில அரசோ, நூறு பேர், இருநூறு பேர் என்று மனம் போன போக்கில் பலியானோரின் எண்ணிக்கையை குறைத்துக் கூறிக் கொண்டிருந்தது. வெள்ளச்சேதத்தின் விபரீத வடிவத்தை 10 நாட்களுக்குப் பின்னரே மாநில முதல்வர் விஜய் பகுகுணா ஒப்புக்கொண்டார். இதில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரமாக இருக்கலாம் என்றார் அவர்.

வெள்ளம் பாதித்த உடன் நமது அரசுகள் செய்வதறியாமல் திக்பிரமையில் ஆழ்ந்தன. மலைப்பாதைகள் அனைத்தும் வெள்ளத்தில் நிலைகுலைந்தன. பலத்த மழையால் நேரிட்ட நிலச்சரிவுகளும் மக்களை பந்தாடின. போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப்பட்டன. தொலைதொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டன. அதிகாரவர்க்கம் என்ன நடந்து என்றே தெரியாமல் தத்தளித்தது. வெள்ளத்தால் 1,100 சாலைகளும், 94 பாலங்களும் சிதைந்துவிட்டன. கேதார்நாத்தில் மட்டும் ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் கபளீகரமாகிவிட்டன.

உடனே சுதாரித்துக் கொண்டது தேசிய பேரிடர் மீட்புப் படையும், நமது ராணுவமும் தான். இவர்களுடன் எல்லைப் பாதுகாப்புப் படை, திபெத் இந்தோ- திபெத் படை, உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து மக்களை மீட்கப் போராடினார்கள்.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் போக மீதமுள்ள பக்தர்களைக் காக்க வீர்ர்கல் தங்கள் இன்னுயிரைப் பணயம் வைத்து, நேரம் காலம் பாராம்ல் உழைத்தார்கள். இவர்களின் கடும் உழைப்பாலும், சேவையாலும் சுமார் 80 ஆயிரம் பேர் முதல் ஒருவார காலத்தில் மீட்கப்பட்டார்கள். இந்த மீட்புப் பணிகள் சாகச வரலாறாகப் பதிய வேண்டியவை. இப்பணியில் பல காவலர்களும் ராணுவ வீரர்களும் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். பக்தர்களை மீட்கச்சென்று விபத்தில் சிக்கிய (ஜூன் 26) ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானப்படை வீரர்கள் 20 பேரின் உயிர்த்தியாகம் சாதாரணமானதல்ல.

உடனடி மீட்புப் பணியில் மட்டுமல்ல, நிவாரண நடவடிக்கைகளிலும் ராணுவமே முன்னிலை வகித்தது. வெள்ளத்தில் சிக்கிய பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு உணவுப்பொருள்களை விமானத்தில் சென்று போட்டது, எளிதில் சென்றடைய இயலாத பகுதிகளிலும் காடுகளிலும் முடங்கிய மக்களை பாராசூட் வீரர்கள் களமிறங்கி மீட்டது, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் தற்காலிக பாதை அமைத்தது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள் இருந்த பகுதிகளில் தற்காலிகப் பாலங்கள் அமைத்தது ஆகிய பணிகள் தான் மீட்புப்பணிகளின் அடிப்படை.

இவை தவிர, ஆங்காங்கு ஆறுகளில்  மிதக்கும் சடலங்களையும், மண்ணில் புதைந்த சடலங்களையும் மீட்டு, அவற்றை அடையாளம் கண்டு ஒப்படைப்பது, மிகவும் சிதைந்த சடலங்களை தகனம் செய்வது போன்ற பணிகளிலும் வீர்ர்கள் ஈடுபட்டனர். கிடைத்துள்ள தகவல்களின் படி (ஜூன் 28 நிலவரம்) இதுவரை சுமார் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பேரழிவின் கொடுமையை இந்த ஒரு புள்ளிவிவரமே காட்டுகிறது.

இதில் குறிப்பிட வேம்டிய விஷயம், ராணுவத்துக்கு உதவியாக ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் செய்துவரும் சேவைப்பணி தான். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட ஜூன் 17-ம் தேதி முதலாகவே, ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் களத்தில் உள்ளனர். செல்லப்போனால், ராணுவத்துக்கு முன்னதாகவே பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைந்தவர்கள் அவர்கள் தான். ராணுவ ஹெலிகாப்டர்கள் இறங்க தளம் அமைத்துக் கொடுத்தவர்களும் அவர்கள் தான். இந்த விவரங்கள் எந்த ஊடகத்திலும் இதுவரை வெளிவரவில்லை.

மீட்புப் பணியில் அரசியல்:

எங்கும் பேரழிவு காணக் கிடைக்கையில், மத்திய, மாநில அரசுகள் பரஸ்பரம் புகார் கூறிக் கொண்டிருந்தது வேதனையான வேடிக்கை. உத்தர்கண்ட் மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ் கட்சி தான். மத்தியில் கூட்டணி ஆட்சி செய்வதும் காங்கிரஸ் தான். ஆனால் இவ்விரு அரசுகளிடமும் சரியான ஒருங்கிணைப்பில்லை. மத்திய உள்துறை அமைச்சர் மாநில அரசை குற்றம் சாட்ட, மாநில அரசோ, இயற்கைச் சீற்றம் குறித்து தெளிவான முன்னறிவிப்புகளை மத்திய அரசு வழங்கவில்லை என்றது. இரண்டு நாட்களுக்குப் பிறகே இரு அரசுகளும் சூழலின் அபாயத்தை உணர்ந்து செயல்படத் துவங்கின. இப்போது புனித யாத்திரைகளைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசிப்பதாகத் தகவல். தனது தோல்விகளை மறைக்க மத்திய அரசு ஆடும் நாடகம் இது.

இதனிடையே, உத்தர்கண்ட் மாநிலத்தில் சிக்கிக்கொண்ட தங்கள் மாநில பக்தர்களை மீட்க ஒவ்வொரு மாநில அரசும் பிரத்யேக முயற்சிகளைத் துவங்கின. இதில் முதல் அடி எடுத்துவைத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா; இதில் முத்திரை பதித்தவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

மத்திய, மாநில அரசுகள் நிலைகுலைந்திருந்த நிலையில் அதிகார வர்க்கம் எப்படிச்  செயல்பட வேண்டும் என்று பாடம் நடத்தும் வகையிலேயே மோடியின் மீட்புப்பணிகள் அமைந்தன. ’15 ஆயிரம் பேரை மோடி மீட்டார்’ என்ற செய்தி மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தபோதும், அவரது மீட்புப்பணியின் நோக்கம் மர்றும் முறைகள் பாராட்டிற்குரியவையே. முதல்வரே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் படையுடன் உத்தரகண்ட் வந்து, டேராடூனில் முகாம் அலுவலகம் அமைத்து, நவீன சாதனங்களைப் பயன்படுத்தி, 200 இன்னோவா கார்கள், 25 பேருந்துகள், 5 விமானங்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து ஆயிரக் கணக்கானோரை சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைத்தது அரிய பணியே. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து உடனே அப்புறப்படுத்துவதே இந்த செயல்பாட்டின் முக்கிய நோக்கம். குஜராத்தில் நிகழ்ந்த நிலநடுக்க மீட்புப் பணிகளின் அனுபவமே அம்மாநில முதல்வருக்கும் அதிகாரிகளுக்கும் உதவி உள்ளது எனில் மிகையில்லை.

ஆனால், இதை காங்கிரஸ் கட்சி ’மோடியின் சுயநலம்’ என்று விமர்சித்தது. மோடி அங்கு செல்வதற்கே முட்டுக்கட்டை போட முயன்றவர் தானே சுஷீல் குமார் ஷிண்டே! ’முக்கிய பிரமுகர்கள் உத்தர்கண்ட் வருவது மீட்புப் பணியை பாதிக்கும்’ என்று கூறி மோடி வருவதை அவர் தடுக்க முயன்றார். அதை மீறிச் சென்றே மோடி மீட்புப் பணியில் ஈடுபட்டார். இதே ஷிண்டே காங்கிரஸ் இளவரசர் ராகுல் காந்தி வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட வந்ததும் தனது அறிவுரையை மாற்றிக்கொண்டார்! எல்லாம் அரசியல் படுத்தும் பாடு!

மோடி அரசியலுக்காக மீட்புப் பணியில் ஈடுபடுவதாக்க் கூறும் காங்கிரஸ், அங்கு முதல் நாளிலிருந்தே ஆர்ப்பாட்டமின்றி சேவைப்பணிகளில் ஈடுபடும் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து ஏன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை.
இமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங்கே ’கின்னார்’ என்ற இடத்தில் 60 மணிநேரம் பலத்த மழையில் (ஜூன் 17) சிக்கி மீட்கப்பட்ட கதை காங்கிரஸ் கட்சியினரே அறிந்தது தான். அவரை மீட்க ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் எவ்வளவு துடிப்புடன் இறங்கின! அதே வேகத்துடன் உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏன் மீட்புப் பணிகள் நடக்கவில்லை? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

செய்ய வேண்டியது என்ன?

இதுபோன்ற இயற்கைச் சீற்றங்களின்போது செய்ய வேண்டிய பணிகள் எவை? முதலில் அரசுகளும் அதிகாரவர்க்கமும் மந்தகதியில் இருந்து துயிலெழுவது அவசியம். அதிர்ச்சியிலிருந்து மீண்டு உடனே மீட்புப்பணியில் ஈடுபடுவது அதைவிட முக்கியம்.

இரண்டாவதாக, இயற்கைச் சீற்றங்களின் காரணங்களைக் கண்டறிந்து பாடம் கற்பது மிக முக்கியமானது. மலைப்பகுதிகளில் மரங்களை வெட்டியதும், காடுகளின் சமநிலையைச் சீர்குலைத்ததும், நதிகளின் போக்கில் மாற்றங்களை (அணைகள் அமைத்தல்) ஏற்படுத்தியதும் தான் பேரழிவுக்கு வித்திட்டுள்ளன. இவை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.

மூன்றாவதாக, இயற்கைப் பேரழிவில் வீடுகள், உடமைகளை இழந்துள்ள லட்சக் கணக்கானோருக்கு உடனடி நிவாரணம் மட்டுமின்றி, வாழ்க்கை மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது அத்தியாவசியமானது. வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் நிலைகுலைந்த மக்களை பழைய நிலைக்கு மாற்ற பல கோடி செலவு செய்தாக வேண்டும். நிவாரண முகாம்களை ஓராண்டுக்கேனும் நடத்த வேண்டிய நிலை அங்கு நிலவுகிறது.

வெள்ளத்தில் சிதைந்த சாலைகள், பாலங்கள், வீடுகள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை மறுசீரமைப்பது பெரும் சவாலான பணி. இதற்கு குஜராத் மாநில அரசின் கட்ச் அனுபவங்கள் உதவக்கூடும்.

இந்தப் பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க ஒட்டுமொத்த தேசத்தின் அரவணைப்பையும் பெறுவது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு சுனாமி மீட்பு அனுபவங்கள் நமக்கு வழிகாட்டுபவையாக உள்ளன. சேவைப்பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுபடும் ஆர்எஸ்எஸ் ஸ்வயம்சேவகர்கள் உள்ளிட்டோரை மாநில அரசு தக்க வகையில்- அரசியல் பாராமல்- பயன்படுத்திக் கொள்வது தேவையானதாகும்.

---------------------
விஜயபாரதம் (12.07.2013)

வெள்ளி, ஜூன் 21, 2013

ராசதந்திரமா? பணபலமா? ராஜ்யசபா தேர்தலில் தெரியும்!


தமிழகத்தில் ராஜ்யசபா (மாநிலங்களவை)  தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இம்மாதம் 27-ம் தேதி தேர்தல். கடந்த 14.06.2013 'விஜயபாரதம்' இதழிலேயே இதுகுறித்த விரிவான செய்தியை வாசகர்கள் படித்திருக்கலாம். இப்போது நிலைமை ஓரளவுக்கு தெளிவாகி இருக்கிறது.

இதில் ஆச்சரியப்பட வைத்திருப்பவர் அதிமுக தலைவி ஜெயலலிதா தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் வேட்பாளருக்கு அதிமுக எப்படியும் ஆதரவு தெரிவித்துவிடும் என்று நம்பி இருந்தது. அதிமுக ஆதரவு இருந்தால் ஜெயித்து விடலாம் என்பதால் அந்த ஒரு வேட்பாளர் யார் என்பதில் கட்சிக்குள் பலத்த போட்டியும் இருந்தது. கட்சியின் அகில இந்திய  செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் தா.பாண்டியன் கட்சியின் இப்போதைய மாநிலங்களவை உறுப்பினர் து. ராஜா ஆகியோருக்கு இடையே தான் போட்டி. கடைசியில் அவர்களது திட்டம் பகல் கனவாகி விட்டது.

அதிமுக தலைவி, தங்கள் கட்சி சார்பிலேயே 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டார். அதிமுகவின் சட்டசபை பலத்தில் (150)  அக்கட்சி  4 எம்பிக்களை பெறுவது திண்ணம். ஐந்தாவது எம்பியை பெற வேண்டுமானால் அக்கட்சிக்கு இன்னமும் 14 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். இதை அறிந்தும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியை உருவாக்கி இருக்கிறார் ஜெயலலிதா.

இதன்மூலமாக இரு செய்திகளை ஜெயலலிதா மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அக்கட்சி யாரையும் சார்ந்து இல்லை என்பது அதில் முதன்மையானது. இரண்டாவது, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக எதிர்க்கட்சி வரிசையில் பிளவுகள் உருவாக்கப்படலாம் என்பது.

ஏற்கனவே, தேமுதிக கட்சியின் 7 உறுப்பினர்கள் (கடைசியாக வந்து சேர்ந்த விருதுநகர் எம்எல்ஏ மாபா பாண்டியராஜனையும் சேர்த்து) அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும் சிலர் தேர்தலில் நிறம் மாறக்கூடும். இப்போதைக்கு பதைபதைப்பில் இருப்பவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான். அநேகமாக அக்கட்சி மாநிலங்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கக் கூடும். அவ்வாறு தேமுதிக அறிவித்தால் வெற்றிக்குத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை 34-லிருந்து 33-ஆகக் குறையலாம்.

அப்போதும் அக்கட்சியின் அதிருப்தியாளர்கள் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதால், அதிமுகவும் ஐந்தாவது வேட்பாளர் வெற்றிபெற மேலும் 7 பேரின் ஆதரவு மட்டுமே தேவையாக இருக்கும். இதற்கு சட்டசபை தேர்தலில் தங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி (2), புதிய தமிழகம் (2), பார்வர்டு பிளாக் (1) கட்சிகளின் ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஐந்தாவது அதிமுக வேட்பாளரின் வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் தான் உள்ளது. தேமுதிகவில் மேலும் உடைசல்கள் ஏற்படுவது திண்ணமாகத் தெரிகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா புத்திசாலித்தனமாக மற்றோர்  அறிவிப்பை வெளிட்டிருக்கிறார். அடுத்த மக்களவைத் தேர்தலின் போது அதிமுக எக்கட்சியுடனும் கூட்டணி வைக்காது என்ற அறிவிப்பு மிகவும் முக்கியமானது. தனித்தே 40 எம்பி இடங்களையும் வெல்வோம் என்றும் அவர் கூறி இருக்கிறார். அது நிறைவேறுவது கடினம் எனினும், அதிகப்படியான எம்பிக்களை அதிமுக வெல்லும் பட்சத்தில் அக்கட்சியின் பேரம் பேசும் சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேர்தலுக்குப் பிறகு அமையும் ஆட்சி எந்தக் கூட்டணியின் ஆட்சியாயினும் அதில் அதிமுக பிரதான இடம் வகிக்க வேண்டும் எனபதே ஜெயலலிதாவின் திட்டம். அதற்காகவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவளிக்காமல் ஐந்தாவது வேட்பாளரை அவர் அறிவித்தார்.

அதிமுக ஆதரவு கிடைக்காதபோதும் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவது உறுதியாகி இருக்கிறது. அக்கட்சிக்கு உள்ள 8 எம்எல்ஏக்களின் எண்ணிக்கையோடு மார்க்சிஸ்ட் கட்சியின் 10 எம்எல்ஏக்களின்  ஆதரவு உள்ளது. வெற்றி பெற மேலும் 16 பேரின் ஆதரவு தேவை. இப்போது அக்கட்சி தேமுதிகவுக்கு தூது அனுப்பி இருக்கிறது. முடிவு விஜயகாந்த் கையில்.

விஜயகாந்துக்கு தனது மைத்துனர் சுதீஷை மாநிலங்களவைக்கு அனுப்பும் ஆசை இருந்தது. கட்சியில் தொடர்ந்து வெளியேறி 'முதல்வரைச் சந்திக்கும்' தங்கள் கட்சி எம்எல்ஏக்களின்  புரட்சியால் அவரது கனவு சிதைந்துவிட்டது. சென்ற பஞ்சாயத்து தேர்தலில் தங்களைக் கைவிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை எப்படி ஆதரிப்பது என்று கேப்டன் தயங்குவதாகத் தகவல். பண்ருட்டியார் அவரிடம் அரசியல் பாடம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல்.

தேமுதிக மாநிலங்களைத் தேர்தலைப் புறக்கணிக்காமல் கம்யூனிஸ்ட் வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்தால், எப்படியும் அக்கட்சியின் 20 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், வெற்றி பெற முடியும். மாறாக திமுகவை ஆதரிப்பதாக கேப்டன் அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு நடந்தால் தேமுதிக பிளவுபடுவது உறுதியாகும்.

தேமுதிகவை நாடுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜெயலலதாவே அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல். ஆறாவது எம்பியாக கம்யூனிஸ்ட் ஜெயித்தாலும் பரவாயில்லை, திமுக இம்முறை மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினரைக்கூட அனுப்பக் கூடாது என்று விரும்புகிறாராம் ஜெயலலிதா. ராசதந்திரத்தில் அம்மையார் செம்மொழி கொண்டானையே விழுங்கி விடுவார் போலிருக்கிறது. தேமுதிக கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டால் அக்கட்சி சிறிய சேதாரத்துடன் தப்பிவிடும் என்பது அக்கட்சிக்கு புரிய வைக்கப்பட்டுகள்ளது

தவிர, ஊழல் குற்றச்சாட்டுகளால் கலகலத்துள்ள திமுகவை ஆதரித்து தனது அரசியல் எதிர்காலத்தை நிலைகுலையச் செய்ய வேண்டுமா என்ற கோணத்திலும் விஜயகாந்த் ஆராய்வதாக கூறப்படுகிறது.  எது எப்படி இருப்பினும்தேமுதிகவின் நிலைப்பாடு தான் இப்போது மிக முக்கியமான ஒன்றாக மாறி உள்ளது.

திமுகவிலோ, வெற்றிபெறத் தேவையான 34 என்ற எண்ணிக்கையை நெருங்க இன்னமும் அக்கட்சிக்கு தேவை 11 பேரின் ஆதரவு. தனது கூட்டணியில் இருந்தகாங்கிரஸ் (5), பாமக (3) ஆகியோரின் ஆதரவைப் பெற்றாலும் வெல்வது கடினம். எனவே சிறு கட்சிகளுக்கு அக்கட்சி வலை வீசுகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கிடைத்த பணத்துக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே?

எனவே சில்லறைக் கட்சிகளின் நிலைபாடுகளும் முக்கியமானவையாக மாறி உள்ளன. அக்கட்சிகள் கடைசி நேரத்தில் பெட்டிகளுக்கு தகுந்தவாறு கொள்கை விளக்கம் அளிக்கவும் வாய்ப்புள்ளது. பணம் தான் பிரதானம் என்ற அரசியல் உலகில் கொள்கைகள் காற்றில் பறக்கவிடப்படும் பட்டங்கள் தானே? அநேகமாக கூட்டணி மாறல்கள் அப்போது தான் தெளிவாகும்.

அடுத்த தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டி என்று அறிவித்திருப்பதும், கூட்டணிக் கட்சிகளுக்காக திமுக பரிதவிப்பதும் தான் இப்போதைய (21.06.2013) நிலை. காங்கிரஸ் கட்சியும் தேமுதிகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மதில் மேல் பூனைகளாக உள்ளன. எனவே இந்த மாநிலங்களவை  உறுப்பினர் தேர்தல் அரசியல் சதுரங்கத்திலும் ஒரு தெளிவு உண்டாக வழியை உருவாக்கும். அதற்கான பாதையை உருவாக்குவதில் பணபலம் பெரும் பங்கு வகிக்கும்.

கடைசியில், வெற்றி பெற்ற 6 உறுப்பினர்களும் ஜனநாயகத்தைக் காக்க டில்லி செல்வார்கள். அப்புறம் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதை நாமும் பார்க்கப்போவதில்லை; செல்பவர்களும் கவனிக்கப்போவதில்லை. நல்ல ஜனநாயகம். வளர்க இதன் புகழ்!

----------------
விஜயபாரதம் (28.06.2013)