வெள்ளி, அக்டோபர் 15, 2010

விநாச காலே விபரீத புத்தி


''ஜம்மு காஷ்மீர் மாநிலம் எந்தக் காலத்திலும் முழுமையாக இந்தியாவுடன் இணையவில்லை; ஒரு தற்காலிக ஏற்பாடாகவே, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இணைப்பு ஒப்பந்தம் மட்டுமே செய்துள்ளது...ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜூனோகாட், ஹைதராபாத் சமாதானங்கள் போன்றதல்ல....

ஜம்மு காஷ்மீர் விவகாரம் வெறும் உள்நாட்டுப் பிரச்னையல்ல. இது இந்தியா- பாகிஸ்தான் தொடர்புடைய சர்வதேச விவகாரம்... வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நல்லாட்சி ஆகியவை மூலமாக காஷ்மீர் பிரச்னையைத் தீர்த்துவிட முடியாது. ஏனெனில் காஷ்மீரில் நிலவுவது அரசியல் பிரச்னை. இதை மண்ணின் மக்களுடனான பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்க்க முடியும்.. ''

- மேற்கண்ட முத்துக்களை அள்ளித் தெளித்திருப்பவர் யார் என்று நினைக்கிறீர்கள்?

பாக். பிரதமர் யூசுப் ரஸா கிலானியோ, ஹரியத் மாநாடு தலைவர் சையத் அலி ஷா கிலானியோ அல்ல. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பும் அல்ல; சாட்சாத் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தான் இந்த அற்புத மொழிகளை உதிர்த்திருப்பவர். சரியாகத் தான் சொல்லி இருக்கிறார்கள்: சிறியார் வீட்டு வெள்ளாமை வீடு வந்து சேராது என்று!

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அக். 6-ம் தேதி பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, தன் மீது வீசப்பட்ட அனைத்து அஸ்திரங்களையும் முனை மழுங்கச் செய்ய, அவற்றைவிட மிகவும் ஆபத்தான, பிரிவினைவாதிகளே திகைக்கும் அபாய அஸ்திரத்தை வீசினார். மாநிலத்தை ஆளும் திறன் அற்றவர்; மக்கள் துயரம் அறியாதவர்; தீராத விளையாட்டுப்பிள்ளை என்று விமர்ச்சித்துவந்த மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சிகளை, தனது புலிவால் பிடிக்கும் சிறுமதியால் திகைக்க வைத்திருக்கிறார் உமர்.

கடந்த ஆறு மாதமாகவே ஜம்மு காஷ்மீர் மாநிலம் எரிமலையாகப் புகைந்து கொண்டிருக்கிறது. பிரிவினை வாதிகளின் திட்டமிட்ட தந்திரங்களால், கல்வீச்சு போர் உத்தியால் பாதுகாப்புப் படையினர் தத்தளித்த நிலையில், அவர்களது கைகளைக் கட்டிபோட்டு காயப்படுத்தியது உமர் அரசு. பாதுகாப்புப் படையினர் தற்காப்புக்காக நடத்தும் துப்பாகிச்சூடுகளில் உயிரிழப்பு ஏற்படுவதும், அதையே காரணம் காட்டி மேலும் வன்முறையை வளர்ப்பதுமே பிரிவினைவாதிகளின் தந்திரமாக இருந்து வருகிறது. பாதுகாப்புப் படையினருக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையை ஏற்படுத்திய மாநில அரசின் செயலால், காவல்துறை தலைமை அலுவலகத்தையே சமூக விரோதிகள் (செப்.11) எரித்தபோதும், வீரர்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.

இத்தனைக்கும் காரணம், மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்ட உமர் அப்துல்லா அரசும், உமர் அரசின் முன்யோசனையற்ற நடவடிக்கைகளுமே என்றால் மிகையில்லை. இதை மறைக்க, தனது தாத்தா கடைபிடித்த அதே உத்தியை உமரும் கடைபிடித்திருக்கிறார். காஷ்மீர் மக்களின் உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்வதன் மூலமாக 'தியாகி' பட்டம் பெறுவதோடு, பதவியிலிருந்து கீழிறக்க முடியாத சூழலை ஏற்படுத்த முனைகிறார் உமர். பரூக் அப்துல்லா ஆலோசனையில்லாமல் அவரது மகன் இவ்வாறு செயல்பட்டிருக்க மாட்டார். ‘வீட்டைக் காப்பாற்றுவான் என்று சாவியைக் கொடுத்தால் கொள்ளையர்க்கு காட்டிக் கொடுத்தானாம் கோணல் மகன்’ என்று சொல்வார்கள். அது உண்மைதான் என்று நிரூபித்திருக்கிறார், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் ஷேக் அப்துல்லாவின் பேரன் உமர்.

எதிர்பார்த்தது போலவே காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்கள் அனைத்தும் உமர் பேச்சை வரவேற்றிருக்கின்றன. ஹரியத் மாநாடு தலைவர் சையத் அலி ஷா கிலானி, ''நீண்ட காலமாக நாங்கள் சொல்லி வருவதையே முதல்வர் எதிரொலித்திருக்கிறார். இது எங்கள் நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி'' என்று கூறியிருக்கிறார். மற்றொரு பிரிவினைவாதத் தலைவரான மீர்வாயிஸ் உமர் பாரூக்கும் ''உமரின் பேச்சு நிதர்சனத்தை வெளிப்படுத்தி இருக்கிறது'' என்று புகழ்ந்திருக்கிறார். கடந்த ஒருவாரத்திற்கு முன்வரை உமரை கடுமையாகத் தாக்கிவந்த இவர்கள் இருவரும் திடீரென புகழ்வது கண்டு பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியின் முப்தி முகமது சையது கலங்கிப் போயிருக்கிறார். தான் எட்டடி பாய்ந்தால் உமர் பதினாறு அடி பாய்கிறாரே என்ற ஆதங்கம் அவருக்கு.

உமர் பேச்சுக்கு அம்மாநில சிறுத்தைகள் கட்சியும் பா.ஜ.க.வும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அக். 7-ம் தேதி நடந்த அம்மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தில், உமர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களும், சிறுத்தைகள் கட்சியின் 3 எம்.எல்.ஏ.க்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சபையின் மையப் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் பாதுகாவலர்களால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். நடப்பு கூட்டத்தொடரை, அக். 9-ம் தேதி வரை புறக்கணிக்கப் போவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது.

மாநில மக்கள் ஆதரவை இழந்துவிட்ட உமர் அப்துல்லா, மக்களை திசை திருப்பவே இவ்வாறு நெருப்போடு விளையாடுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில பா.ஜ.க. தலைவர் சமன்லால் குப்தா கண்டித்திருக்கிறார். உமர் பேச்சால் மத்திய உள்துறை அமைச்சகம் பெரும் கவலை அடைந்துள்ளது; இது குறித்த எச்சரிக்கைக் குறிப்பை பிரதமருக்கும் அனுப்பியுள்ளது. ஆனால், உமரைக் கண்டிக்கும் துணிவோ நேர்மையோ கிஞ்சித்தும் இல்லாமல் வேடிக்கை பார்க்கிறது நாட்டை ஆளும் காங்கிரஸ்.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ''உமர் அப்துல்லா மாநில முதல்வர். அவர் பொறுப்பில்லாமல் பேச மாட்டார்'' என்று சப்பைக்கட்டு கட்டினார். அவர் தன்னை மத்திய அரசின் கையிலுள்ள பொம்மலாட்ட பொம்மை என்று கூறவில்லை என்று திசை திருப்பவும் முயன்றார். அப்படி வேறு சொல்லி இருக்கிறாரா, உமர்? நல்ல கட்சி; நல்ல கூட்டணி! காங்கிரஸ் இளவரசர் ராகுலால் பாராட்டப்பட்ட உமரை விமர்சிக்க திக்விஜய் சிங்கிற்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

சர்ச்சைக்குரிய கருத்துக்களை நமது பங்காளி நாடான பாகிஸ்தான் 1947 முதற்கொண்டு பரப்பி வருகிறது. அப்போதெல்லாம், உலக அளவில் அந்த விஷம பிரசாரத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. தற்போது காஷ்மீரில் நிலவும் பிரிவினைவாதத்திற்கு ஊக்கமும் ஆக்கமும் அளிப்பதும் பாகிஸ்தான் என்பது உலகம் அறிந்த உண்மை. இதனை கடந்த அக். 7-ம் தேதி ஐ.நா.சபையில் நடந்த பொதுசபைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதியாகச் சென்ற பா.ஜ.க. முன்னாள் தலைவர் ராஜ்நாத் சிங் தோலுரித்திருக்கிறார். ‘உலகில் பயங்கரவாத விஷத்தைப் பரப்பும் பாகிஸ்தான் நாட்டை வஞ்சக நாடாக அறிவிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் வாயிலிருந்தும் அதே வஞ்சக பிரசார வார்த்தைகள் வந்திருப்பது கவலை அளிக்கிறது. இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நவம்பர் முதல்வாரத்தில் வரவுள்ளதால், காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று உபதேசம் செய்ய ஆரம்பித்துள்ளது. இத்தகைய தருணத்தில் உமர் உதிர்த்துள்ள முத்துக்களின் பின்புலத்தை சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமல்ல என்று கூறும் அதே ஜம்மு காஷ்மீரின் மக்கள் பிரதிநிதியாக இதே உமர் அப்துல்லா நாடாளுமன்றத்தில் அமைச்சராக, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்திருக்கிறார். அவரது தந்தை பரூக் அப்துல்லா, தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருக்கிறார். இந்தியா அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பதாக இதே உமர் பிரமாணம் செய்து முதல்வராக பதவி வகிக்கிறார். எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இப்போது புலிவாலைப் பிடித்திருக்கிறார், உமர்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி (பா.ஜ.க.) கூறியது போல, ''ஆட்சியில் இனியும் நீடிக்க உமருக்கு சிறிதும் அருகதை கிடையாது''. உமரைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் மன்மோகன் சிங்கிற்கும் ஆட்சியில் நீடிக்கும் உரிமை கிடையாது.
-------------------------------
நன்றி: விஜயபாரதம் (22.10.2010)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக