சனி, மே 05, 2012

தொடர்ந்து சரியும் காங்கிரஸ் செல்வாக்கு


மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை கட்டியம் கூறுகின்றன, பல்வேறு மாநிலங்களில் தத்தளிக்கும் காங்கிரஸ் மாநில அரசுகள். 'விநாச காலே விபரீத புத்தி' என்று சொல்வது போல, மத்திய கூட்டணி அரசின் பிரதானக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள் நடந்துவரும் களேபரங்கள் அதன் உறுதிப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளன.

அண்மையில் நடந்த டில்லி மாநகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் பூசல்கள் வெளிவரத் துவங்கி உள்ளன. டில்லி மாநகராட்சியை பாஜக தான் முன்னரும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதை உடைக்க, டில்லி மாநகராட்சியை மூன்றாகப் பிரித்து லாபம் காண முயன்ற காங்கிரசின் சதி வெற்றி பெறவில்லை. முன்னர் ஒரே மேயருடன் இருந்த பாஜக இன்று கிழக்கு டில்லி, தெற்கு டில்லி, வடக்கு டில்லி என மூன்று மாநகராட்சிகளின் மேயர்களைப் பெற்றுள்ளது. மூன்று மாநகராட்சிகளிலும் சேர்த்து மொத்தமுள்ள 276 உறுப்பினர்களில் சரிபாதியை 138 பெற்றுள்ளது பாஜக. காங்கிரஸ் கட்சிக்கு 78 உறுப்பினர்களே கிடைத்துள்ளனர்.

இந்தத் தோல்வியால், டில்லியில் அசைக்க முடியாத முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தின் பதவி ஆட்டம் கண்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக முதல்வராக உள்ள ஷீலாவுக்கு அடுத்த ஆண்டு நிகழ உள்ள தேர்தல் கண்டிப்பாக இனிப்பாக இராது. அதற்கேற்ப, ஷீலாவை மாற்றக் கோரி கட்சிக்குள் கோஷ்டிக் குரல்கள் எழத் துவங்கி உள்ளன.

டில்லிக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் கவலை அளிக்கும் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் மாறி உள்ளது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இம்மாநிலத்தில் உள்ள 43 எம்பி தொகுதிகளில் 33 ஐக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, அடுத்த தேர்தலில் 3 தொகுதிகளில் வென்றாலே அதிசயம் என்ற நிலை நேரிட்டிருக்கிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் நடத்தும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், தெலுங்கானா பகுதியில் வீச்சுடன் செயல்படும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியும் காரணமாகின்றன.

ஒருகாலத்தில் காங்கிரஸ் கட்சியின் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய ராஜசேகர ரெட்டி இன்று ‘கிறிஸ்தவர்’ என்று காங்கிரஸ் கட்சியாலே தூற்றப்படும் நிலைக்கு ஆளானதற்கு, திருப்பதி ஏழுமலையான் தான் காரணம் என்று சொல்ல வேண்டும். அவர் முதல்வராக இருந்தபோது, திருப்பதி மலையையே வளைக்க முயன்றதும், அதற்கு காங்கிரஸ் லாவணி பாடியதும் யாராலும் மறக்க முடியாது. ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த ராஜசேகர ரெட்டிக்கு பதிலாக தன்னை முதல்வர் ஆக்குவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்த அவரது மகன், இன்று காங்கிரஸ் கட்சியின் கண்ணில் துரும்பாக மாறி இருக்கிறார். ஜெகன்மோகன் பின்னால் அணிதிரண்ட எம்எல்ஏக்களை பலவாறு மிரட்டி வழிக்குக் கொண்டுவந்த காங்கிரஸ் தலைமையால், அவர்களது அதிருப்தியை முழுமையாக சரிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், தெலுங்கானா தனி மாநிலத்துக்காகப் போராடும் சந்திரசேகர ராவின் செல்வாக்கு அந்தப் பகுதியில் காங்கிரசுக்கு முற்றிலும் புதைகுழியைத் தோண்டிவிட்டது. அடுத்த தேர்தலில் தெலுங்கானா பகுதியில் டிஆர்எஸ்- பாஜக கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தெலுங்கானா விஷயத்தில் காங்கிரஸ் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது என்ற கருத்து பரவலாக பதிந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியால் முதல்வராகத் திணிக்கப்பட்ட கிரண்குமார் ரெட்டிக்கு ஜெகன்மோகனுடனும், சந்திரசேகர ராவுடனும் மோதவே நேரம் போதவில்லை. மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி ஆகிவிட்டது. கட்சிக்குள்ளும் கட்டுப்பாடு இல்லை. ஆளும் திறனற்ற கிரண்குமாருக்கு எதிராக கட்சித்தலைமைக்கு புகார் கூறவே கட்சினருக்கு நேரம் போதவில்லை. சரியும் செல்வாக்கை நிலைநிறுத்த கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவரும் நடிகருமான சிரஞ்சீவியால் மேலும் சிக்கல் தான் காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. அநேகமாக ஓரிரு மாதங்களில் முதல்வர் மாற்றப்படலாம். என்டிஆர் மகள் புரந்தரேஸ்வரி, சிரஞ்சீவி ஆகியோரில் ஒருவர் முதல்வராகக் கூடும். ஆனாலும் பயன் விலையைப் போவதில்லை என்பதே இன்றைய நிலவரம்.

அடுத்த கவலைக்குரிய பிரதேசம் மகாராஷ்டிரா. அங்கு காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆள்கிறது. ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய அசோக் சவாண் பதவி விலகினார்; அதனால் பிரித்விராஜ் சவாண் முதல்வரானார். இவருக்கும் ஆதர்ஷ் ஊழலில் தொடர்புள்ளது குறித்த கேள்விக்கு 'சிங்க்வித்தனமாக' பதில் அளிக்கிறது காங்கிரஸ். (சிங்க்வித்தனம் என்றால் என்ன தெரியுமா? அதிகப் பிரசங்கித் தனமும், அப்பாவித்தனமும் கலந்த காக்டெயில் மிக்சர் அது).

இம்மாநிலத்தில் உள்ள எம்பிக்களின் எண்ணிக்கை 48. இதில் 25 இடங்களை சென்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வென்றது. இப்போது நிலைமை திருப்தி இல்லை. சிவசேனா- பாஜக கூட்டணிக்கு செல்வாக்கு பெருகி வருவதை மும்பை மாநகராட்சித் தேர்தலும் கட்டியம் கூறிவிட்டது. போதாக்குறைக்கு ராமதாஸ் அதவாலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியும் பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டது. இதுவெல்லாம் போதாதென்று, காங்கிரஸ் கட்சிக்குள்ளும் முதல்வரை மாற்றக் கோரி யுத்தம் துவங்கிவிட்டது.

காங்கிரசின் நம்பிக்கை நட்சத்திரமான அசோக் கெலாட்டுக்கும் ராஜஸ்தானில் சிக்கல். அவருக்கு எதிராக 22 எம்எல்ஏக்கள் மத்திய அமைச்சர் சி.பி.ஜோஷி தலைமையில் அணிவகுத்திருக்கிறார்கள். கெலாட் தன்னிச்சையாக செயல்படுவதாக அதிருப்தியாளர்கள் குமுறுகிறார்கள். இப்போதைக்கு கட்சித் தலைமை அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், குஜ்ஜார் விவகாரம், ஊழல் பிரச்னைகள் என பலமுனைகளில் அதிருப்தியைச் சந்தித்துள்ள கெலாட், அடுத்த தேர்தல் வரை முதல்வராக நீடிப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. 25 எம்பிக்களைக் கொண்ட இம்மாநிலத்தில் 18 இடங்களை வென்ற காங்கிரஸ் அடுத்த தேர்தலில் இதில் சரிபாதியை வெல்லவே கடுமையாகப் போராட வேண்டி இருக்கும்.

அண்மையில் நடந்த உத்தர்காண்ட் சட்டசபைத் தேர்தலில் 70 க்கு 32 இடங்களில் வென்று பாஜகவை ஒரே எண்ணில் முந்திய காங்கிரஸ், இப்போது ஏன்தான் ஆட்சி அமைத்தோமோ என்று நொந்துகொள்ளும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. சுயேச்சைகள் மூவர், உத்தர்காண்ட் கிராந்தி தளத்தின் ஒரு எம்எல்ஏ ஆதரவுடன் அவசர அவசரமாக ஆட்சி அமைத்தது காங்கிரஸ். ஆனால், தலைமையால் திணிக்கப்பட்ட முதல்வர் விஜய் பகுகுனாவால், இன்னும் அதிருப்தியாளர் ஹரிஷ் ராவல் ஆதரவாளர்களை சமாளிக்க முடியவில்லை. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, உத்தர்காண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி எப்போது வேண்டுமாயினும் கவிழக் கூடிய நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் புதிய அரசு பூசலை அதிகரித்திருக்கிறது. இம்மாநிலத்தின் எம்பிக்கள் எண்ணிக்கை 5. சென்ற தேர்தலில் இந்த ஐந்தையும் வென்ற காங்கிரஸ் வரும் தேர்தலில் அப்படியே விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும்.

முஸ்லிம் லீக் கட்சிக்கு அதிக பிரதிநிதித்துவம் அளித்துள்ள முதல்வர் ஓமன் சாண்டிக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. கிறிஸ்தவர்- முஸ்லிம்களின் ஆட்சியாகவே சாண்டியின் ஆட்சி மீது அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. நூலிழை பெரும்பான்மையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி மீது மாநிலத்தில் நல்ல கருத்து இல்லை. சென்ற தேர்தலில் 20 எம்பி இடங்களில் 16 ல் வென்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, அடுத்த தேர்தலில் இடது முன்னணியிடம் பலத்த அடி வாங்கும் என்பது திண்ணமாகவே தெரிகிறது.

பஞ்சாபில் அகாலிதள ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டதாகவே மார் தட்டிய கேப்டன் அமரீந்தர் சிங்கின் அடாவடி அரசியலுக்கு அம்மாநில மக்கள் சரியான சம்மட்டி அடி கொடுத்து, பிரகாஷ் சிங் பாதலையே முதல்வர் ஆக்கியதை, காங்கிரஸ்காரர்களால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. அதன் பலனாக, அமரீந்தர் சிங்குக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்கள் மாநிலத் தலைவர்கள். ஏற்கனவே கலைந்த தேன்கூடாகக் காட்சி அளிக்கும் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியால் சென்ற தேர்தலில் வென்ற 8 எம்பிக்களை மீண்டும் பெற முடியாது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கோவாவிலும் தேர்தலில் பெற்ற அடியிலிருந்து காங்கிரஸ் இன்னமும் மீளவில்லை. முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் காங்கிரஸ் கட்சித் தலைமையின் எதேச்சதிகாரமே தோல்விக்குக் காரணம் என்று பிரசாரமே செய்து வருகிறார். இங்குள்ள இரு எம்பி தொகுதிகளில் ஒன்றை மட்டும் வென்ற காங்கிரஸ் அடுத்த தேர்தலில் அதையும் இழக்கவே வாய்ப்புள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ராகுலின் மாயமந்திரங்கள் பலிக்காத விரக்தியில் ஆழ்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்கு வேறெந்த வழியும் புலப்படவில்லை. 80 எம்பிக்கள் கொண்ட இம்மாநிலத்தில் சென்ற முறை 'எப்படியோ' 21 இடங்களில் வென்ற காங்கிரஸ் அடுத்த தேர்தலில் இரண்டில் வென்றாலே (அமேதி, ரேபரேலி) போதும் என்ற நிலையில் இருக்கிறது. வரும் தேர்தலில் முலாயம் கட்சியுடன் கை கோர்க்க காங்கிரஸ் துடிக்கிறது. மூழ்கும் கப்பலில் முலாயம் ஏறுவாரா என்பதை இப்போதே சொல்ல முடியாது.

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியும் (காஷ்மீர்- 6), திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் (மேற்கு வங்கம்- 42) அக்கட்சியைப் படுத்திவரும் பாட்டைப் பார்த்தாலே, இந்த நட்பு நீண்ட காலம் நீடிக்காது என்பது புலப்படுகிறது. குறைந்த எம்பி தொகுதிகளைக் கொண்ட அருணாச்சல் பிரதேசம் (2), ஹரியானா (10), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1) ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தான் ஆள்கிறது. இந்த மாநிலங்கள் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவை அல்ல. பெரிய மாநிலங்களில் அசாம் (14) மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் நிம்மதியாக இருக்கிறது.

இவை தவிர பாஜக ஆளும் குஜராத் (26), மத்தியப்பிரதேசம் (29), சத்தீஸ்கர் (11), ஜார்க்கண்ட் (14), கர்நாடகா (28), இமாச்சல்(4), கோவா (2), பாஜக கூட்டணி ஆளும் பஞ்சாப் (13), பிகார் (40), நாகலாந்து (1) மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரடி முன்னேற்றமும் சாத்தியமில்லை. பிற கட்சிகள் ஆளும் தமிழ்நாடு (39), ஒடிசா (21), திரிபுரா (2), சிக்கிம் (1), உத்தரப்பிரதேசம் (80) ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த நம்பிக்கை நட்சத்திரமும் கண்ணுக்குப் புலப்படும் நிலையில் இல்லை.

இப்படியாகப்பட்ட நிலையில், அண்ணா ஹசாரே ஒருபுறம் முரண்டு பிடிக்கிறார்; ராணுவத் தளபதி வி.கே.சிங் ஒருபுறம் சிண்டு முடிக்கிறார். சுப்பிரமணியம் சாமி நேரம் தெரியாமல் நோண்டி நுங்கு எடுக்கிறார்; உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுப்பேற்றுகிறார்கள்; பாஜக-வோ எதற்கெடுத்தாலும் எகிறிக் குதிக்கிறது; இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நமது 'கலாகார்' வேறு புது ஆலாபனை பாடுகிறார். பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்று சும்மாவா சொல்லி இருக்கிறார்கள் நமது முன்னோர்கள்?


--------------------------------
விஜயபாரதம் (11.05.2012)
.

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா?



பெரும்பான்மையினரின் கருத்து ஏற்கப்படுவதே ஜனநாயகம் என்று கூறப்படுவதுண்டு. 49 பேர் ஆதரித்தாலும், அதை 51 பேர் எதிர்த்தால் எதிர்ப்பாளருக்கே வெற்றி கிடைக்கும் என்பது தான் வாக்களிக்கும் ஜனநாயகத்தின் அடிப்படை. இதெல்லாம், சிறுபான்மை மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பொருட்டே இல்லை என்பதைத் தான் மத்திய அரசில் அவ்வப்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் தெரியப்படுத்தி வந்திருக்கிறது சோனியா தலைமையிலான காங்கிரஸ். அவரது சிஷ்யரான ஓமன் சாண்டி ஒருபடி மேலே சென்றுவிட்டார். தனது தலைமையிலான 22 பேர் கொண்ட கேரள அமைச்சரவையில் சிறுபான்மையினரின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தி, தங்கள் கட்சி யாருக்கு சாதகமானது என்பதை முரசறைந்து அறிவித்திருக்கிறார் அவர்.

கேரளாவில் மொத்தமுள்ள 140 சட்டசபை உறுப்பினர்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 72 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்த்தரப்பில் இடது ஜனநாயக முன்னணிக்கு 67 உறுப்பினர்கள் உள்ளனர் (மா.கம்யூ எம்.எல்.ஏ ஒருவர் பதவி விலகியதால் ஒரு இடம் காலியாக உள்ளது). ஐ.ஜ.முன்னணியில் காங்கிரஸ் கட்சியின் பலம் 38; முஸ்லிம் லீக் கட்சியின் பலம் 20. கூட்டணியில் உள்ள கிறிஸ்தவர்களின் கட்சிகளாக அறியப்படும் கேரள காங்கிரஸ் கட்சிகளின் இரு பிரிவுகளுக்கும் எம்.எல்.ஏக்கள் உண்டு.

அண்மையில் நடந்த பிரவம் இடைத்தேர்தலில் கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) சார்பில் வென்ற அனுப் ஜேக்கப் அமைச்சரானபோது, சாண்டியின் அமைச்சரவையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை (அவரையும் சேர்த்து) 6 ஆக உயர்ந்தது. அவருடன் மஞ்சாலம் குழி அலி பதவி ஏற்றபோது, அமைச்சரவையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மொத்தத்தில் 22 பேர் கொண்ட சாண்டி அமைச்சரவையில் இப்போது சிறுபான்மையினரின் எண்ணிக்கை 12!

கேரளாவின் மக்கள்தொகை விகிதாசார அடிப்படையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 56.2 சதவீதம்; இஸ்லாமியர்கள்- 24.7 சதவீதம்; கிறிஸ்தவர்கள்- 19 சதவீதம். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் தவிர்த்த நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால், கேரளாவில் தான் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகம். கேரள அரசியலில் மிகவும் செல்வாக்கு செலுத்துபவர்களாக சிறுபான்மையினர் மாறி உள்ளனர். அவர்களது ஒட்டுமொத்த அளவான 44 சதவீதம் வாக்குகளைப் பெறவே காங்கிரஸ் கூட்டணியும் கம்யூனிஸ்ட் கூட்டணியும் போட்டியிடுகின்றன. கேரளாவில் பாஜகவுக்கு கணிசமான செல்வாக்கு இருந்தும் தேர்தலில் வெற்றி பெற இயலாமல் போவதற்கு இந்த மக்கள்தொகை மாறுபாடே காரணம்.

இந்நிலையில் தான், ஏற்கனவே 4 அமைச்சர்களைக் கொண்டிருந்த முஸ்லிம் லீக், அமைச்சரவையில் தனக்கு கூடுதலாக ஓரிடத்தை அளிக்குமாறு நிர்பந்தம் செய்தது; அல்லது ராஜ்யசபைக்கு தங்கள் கட்சியைச் சேர்ந்தவரை அனுப்ப வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியது. இது தொடர்பாக கேரளா மாநில காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த விவாதம் நடந்து வந்தது. நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அரசைக் காக்க முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. பெரும்பாலோர் லீகின் நிர்பந்தத்தை ஏற்கக் கூடாது என்றே கூறினர். ஆயினும், கட்சியினரின் கருத்துக்களை மீறி, இப்போது லீகின் சார்பில் ஐந்தாவதாக ஒருவர் அமைச்சர் ஆகி இருக்கிறார். இது கேரளாவில் பலத்த அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் உருவாக்கி இருக்கிறது.

கேரளாவில் சிறுபான்மையினரின் வாக்குகளை நம்பியே காங்கிரஸ் கட்சி இயங்கி வந்துள்ளது. கருணாகரன் இருந்தவரை, அவரால் கட்சிக்குள் சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க முடிந்தது. சோனியா வரவுக்குப் பின் அவரது நிலைமையே மோசமாகிவிட்டது. இப்போது அவரும் இல்லை. இன்றைய காங்கிரஸ் கட்சி முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோணி (தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர்), முதல்வர் ஓமன் சாண்டி ஆகிய தலைவர்களின் பின்புலத்தில் தான் தாக்குப் பிடிக்கிறது.

அதனால் தான், அரசின் தலைமைக் கொறடாவாக, கூட்டணிக் கட்சியான கேரள காங்கிரஸ் (மானி) பிரிவைச் சேர்ந்த பி.சி.ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு அமைச்சருக்கு இணையான அந்தஸ்து உண்டு. இக்கட்சி கிறிஸ்தவர்களின் கட்சி என்றே தன்னை அறிவித்துக் கொள்ளும் கட்சி. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.ஜார்ஜ், ''கேரளாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையினர் என்பது வெறும் மாயை'' என்று கூறி இருக்கிறார். உறைக்க வேண்டியவர்களுக்கு உறைத்தால் சரி.

சாண்டி அமைச்சரவையில் இதே கட்சியின் கே.கே.மானி, பி.ஜே.ஜோசப் ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் அல்லாது ஆர்.எஸ்.பி (பி) பிரிவின் ஷிபு பேபி ஜான், காங்கிரஸ் கட்சியின் கே.ஜோசப், கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) பிரிவின் அனுப் ஜேக்கப் ஆகிய கிறிஸ்தவர்கள் அமைச்சர்களாக உள்ளனர். முதலமைச்சர் சாண்டியுடன் சேர்த்தால் அமைச்சரவையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 6!

வெறும் 19 சதவீதம் உள்ள கிறிஸ்தவர்களுக்கே 6 அமைச்சர்கள் என்றால், 24.7 சதவீதம் உள்ள இஸ்லாமியர்களுக்கு 5 அமைச்சர்கள் தானா? என்று முஸ்லிம் லீக் கேட்டது. அதிலுள்ள நியாயத்தைப் ‘புரிந்துகொண்டு’ தலைவணங்கி இருக்கிறது காங்கிரஸ். இப்போது முஸ்லிம் லீக் சார்பில், பி.கே.குன்னாலி குட்டி, பி.கே.அப்து ரப், வி.கே.இப்ராஹீம் குஞ்சு, எம்.கே. முனீர், மஞ்சாலம் குழி அலி ஆகியோர் (மொத்தம் 5) அமைச்சர்கள் ஆகி உள்ளனர். காங்கிரஸ் சார்பில் அமைச்சராக உள்ள இஸ்லாமியரான ஆர்யாதன் முகமதுவுடன் சேர்த்தால் சாண்டி அமைச்சரவையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 6 ஆகிறது!

இதைவிட முக்கியமான விஷயம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், கல்வி, பொதுப்பணி, உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட முக்கியமான துறைகள் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் மீதமுள்ள 10 பேரும் ஹிந்துக்கள். மொத்தத்தில், 56.2 சதவீதம் உள்ள ஹிந்துக்கள் தானே கிள்ளுக்கீரை? இந்த பாரபட்சத்தை எதிர்த்து பாஜக திருவனந்தபுரத்தில் அழைப்பு விடுத்த கடையடைப்புக்கு பெருவாரியான ஆதரவு இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் இந்த மண்டியிடுதல் கண்டு முன்னாள் முதல்வர் அச்சுவும் கூட வருத்தம் தெரிவித்திருக்கிறார். ''காங்கிரஸ் கட்சி தனது வலிமையை கேரளத்தில் இழந்து வருவதையே இது காட்டுகிறது'' என்று அவர் விமர்சித்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இந்த மண்டியிடுதல் உட்பூசலைக் கிளப்பி இருக்கிறது. முஸ்லிம் லீகுக்கு ஐந்தாவது அமைச்சர் பதவி அளிக்க எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் இஸ்லாமிய அமைச்சர் ஆர்யாதான் முகமது பதவி ஏற்பு விழாவைப் புறக்கணித்தார். ''காங்கிரஸ் முஸ்லிம் லீகிடம் மண்டியிட்டுவிட்டது தவறு'' என்கிறார் இவர். கேரள மாநில முன்னால காங்கிரஸ் தலைவர் முரளிதரனும் தலைமையை கண்டித்திருக்கிறார். ஆனால், சாண்டியோ, எல்லாம் தில்லி தலைமையிடம் கேட்டுத் தான் செய்தேன் என்கிறார்.

முந்தைய அச்சுதானந்தன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசில் இத்தகைய மோசமான போக்கு இல்லை. அப்போது 3 முஸ்லிம் அமைச்சர்களும், 2 கிறிஸ்தவ அமைச்சர்களும், 15 ஹிந்து அமைச்சர்களும் இருந்தனர். மத நம்பிக்கை அற்ற கட்சி என்று கூறிக் கொண்டபோதும், சிறுபான்மையினர் அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்த மார்க்சிஸ்ட்கள் விடவில்லை. அத்தகைய நிலைமை அவர்களுக்கு தேர்தல் முடிவுகளிலும் ஏற்படவில்லை.

ஆனால், இன்றைய நிலைமை மிகவும் மோசம். தேர்தல் களத்தில் வெல்பவர்களே மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள். மொத்தமுள்ள 56.2 சதவீத ஹிந்துக்களில் பலரும் ஜாதி, கட்சி பார்த்து வாக்குகளை சிதறடித்துவிடும் நிலையில், பலர் (குறிப்பாக மேட்டுக்குடியினர்) வாக்குச்சாவடிப் பக்கமே வராத நிலையில், சிறுபான்மையினர் திரண்டுவந்து வாக்களித்து தங்கள் சக்தியை நிரூபித்து விடுகிறார்கள். பிறகு புலம்புவதில் என்ன பயன் இருக்கிறது?

இப்போதுதான் காங்கிரஸ் கட்சியின் லட்சணம் நாயர் சேவை சங்கத்துக்கு (என்.எஸ்.எஸ்) தெரிந்திருக்கிறது. ''பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டைவிட்டு போய்விட வேண்டுமா?'' என்று, அமைச்சரவை மாற்றத்தால் கொந்தளித்த என்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர் கேட்டிருக்கிறார். காலம் கடந்த பின்னர் ஞானோதயம். கேரளாவில் தற்போது நிலவும் அரசியல் நிலைமை நீடித்தால், கேரளாவில் இருந்து ஹிந்துக்கள் அகதிகளாக பிற மாநிலங்களுக்கு (காஷ்மீர் ஹிந்துக்கள் போல) படையெடுக்க வேண்டிய நிலைமை வரலாம்.

கேரள அரசியலில் அடுத்த முக்கியமான சக்தியான ஈழவர்கள் சார்ந்த ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் (எஸ்.என்.டி.பி) அமைப்பும் சாண்டியின் விபரீத முடிவை எதிர்த்திருக்கிறது. அதன் பொதுச்செயலாளர் வெள்ளப்பள்ளி நடேசன், ''ஜனநாயகம் என்ற பெயரில் கேரளாவில் ஓமன் சாண்டி தலைமையில் மதவாதிகளின் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் குறித்து வெட்கப்படுவதை தவிர வேறு வழியில்லை'' என்று மனம் புழுங்கி இருக்கிறார்.

இவ்விரு அமைப்புகளும் தான் காலம் காலமாக காங்கிரஸ் கட்சியை கேரளாவில் நிலைநிறுத்தி வந்துள்ளன. சமீபத்திய மாற்றங்களால் இந்த அமைப்புகள் அதிருப்தி அடைந்திருக்கின்றன. இந்த அதிருப்தி, நெய்யாட்டிங்கரா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

அதைவிட முக்கியமானது, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு, மதவாதிகளுக்கு மண்டியிடும் காங்கிரஸ் கட்சியின் போக்கை வெளிப்படுத்த இந்நிகழ்வு உதவி இருப்பதுதான். சுதந்திரத்துக்கு முன் முஸ்லிம் லீகிடம் மண்டியிட்ட காங்கிரஸ் கட்சியால் தான் தேசப்பிரிவினை நிகழ்ந்தது. மீண்டும் சரித்திரம் திரும்புகிறதா? நாட்டு மக்கள் முன்னுள்ள கேள்வி இது.

-----------------------------------------------------------

பெட்டிச்செய்தி:

கேரள அமைச்சரவையில் சிறுபான்மையினர் ஆதிக்கம்


கிறிஸ்தவர்கள்: 6 பேர்
1. முதலமைச்சர் ஓமன் சாண்டி
2. கே.ஜோசப் (இருவரும் காங்கிரஸ்)
3. கே.கே.மானி
4. பி.ஜே.ஜோசப் (இருவரும் கேரள காங்கிரஸ் - மானி பிரிவு)
5. அனுப் ஜேக்கப் (கேரள காங்கிரஸ் -ஜேக்கப் பிரிவு)
6 . ஷிபு பேபி ஜான் (ஆர்.எஸ்.பி -பி பிரிவு)

இஸ்லாமியர்கள்: 6 பேர்
1 . ஆர்யாதான் முகமது (காங்கிரஸ்)
2 . பி.கே. குன்னாலி குட்டி
3 . பி.கே.அப்து ரப்
4 . வி.கே.இப்ராஹீம் குஞ்சு
5 . எம்.கே.முனீர்
6 . மஞ்சாலம் குழி அலி (ஐவரும் முஸ்லிம் லீக்)

மக்கள் தொகையுடன் ஒப்பீடு:

மொத்த அமைச்சர்கள்: 22 பேர்.
சிறுபான்மையினர்: 12 பேர்.
பெரும்பான்மையினர்: 10 பேர்.
மக்கள்தொகையில் சிறுபான்மையினர் விகிதம்: 44
அமைச்சரவையில் சிறுபான்மையினர் விகிதம்: 54
மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் விகிதம்: 56
அமைச்சரவையில் பெரும்பான்மையினர் விகிதம்: 46

-------------------------------------------------------------
விஜயபாரதம் (04.05.2012)

காண்க: தமிழ் ஹிந்து

.