திங்கள், அக்டோபர் 25, 2010

பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் பூதங்கள்..

தமிழகம் முழுவதும் புறநகர்த் தனியார் பேருந்துகளில் சத்தமில்லாமல் பயணச்சீட்டிற்கு குறைந்தபட்சம் ஒரு ரூபாய் வீதம் விலை அதிகரித்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இம்மாதிரி கட்டணம் உயர்த்தப்பட்டதே தெரியாதது போல தமிழக அரசு மாய்மாலம் செய்கிறது.

டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி, மொத்தக் கட்டணத்தில் ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை தனியார் பேருந்துகள் தாங்களாகவே கட்டணத்தை உயர்த்திக் கொண்டுள்ளன. இதனை தமிழக முதல்வர் கருணாநிதி கண்டித்தார். அரசு அனுமதியின்றி தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்து ஒரு மாதமாகிவிட்டது. இதுவரை எந்த ஒரு தனியார் பேருந்து மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

பேருந்துக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமானால் அதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். தமிழகத்தில் பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதில் கைவைத்தால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதால்தான், அரசு போக்குவரத்து நிறுவனங்கள் நஷ்டம் அடைந்தாலும் கண்டுகொள்ளாது இருக்கிறது அரசு.

உண்மையில், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில் டீசல் விலை அதிகரிப்பு 30 சதவீதமாக உள்ளது. தவிர ஊழியர் சம்பளம், உதிரிபாகங்களின் விலை உயர்வு போன்றவையும் போக்குவரத்துக் கழகங்களின் கழுத்தை நெரிக்கின்றன. எனவே தான், நகரப் பேருந்துகளில் 'சொகுசுப் பேருந்து', 'தாழ்தளப் பேருந்து' என்ற பெயரில் பேருந்துகளைப் பிரித்து அவற்றிற்கு மட்டும் கட்டணங்களை நாசூக்காக உயர்த்தியது தமிழக அரசு. சிறிது சிறிதாக பழைய பேருந்துகளை மாற்றும்போது அவற்றை 'சொகுசுப் பேருந்து'களாக மாற்றுவதில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. இவை பார்ப்பதற்கு மட்டுமே அழகாகவும் லட்சணமாகவும் காட்சி அளிக்கின்றன. இதில் பயணம் செய்தால் முதுகுவலி வருகிறது என்கின்றனர் பயணிகள். ஆனால், போக்குவரத்துக் கழகங்களின் முதுகுவலியைப் போக்குவனவாக இவைதான் தற்போது விளங்குகின்றன.

அரசு போக்குவரத்து நிறுவனங்களே மறைமுகமாக கட்டணத்தை உயர்த்தியதைக் கண்ணுற்ற தனியார் பேருந்து உரிமையாளர்கள், தாங்களும் கூடி ஆலோசித்து, கட்டணச்சீட்டு ஒன்றிற்கு ஒரு ரூபாயாவது அதிகரிக்கத் திட்டமிட்டு அதிரடியாக விலையை (ஜூலை மாதம் துவங்கி) ஏற்றினர். இது குறித்து அரசிடம் முறையீடு செய்யவோ, வேண்டுகோள் விடுக்கவோ அவர்கள் தயாரில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சரை நேரில் பார்த்து 'கவனித்து விட்டதாக' தகவல். அதனால் தான், தனியார் பேருந்து உரிமையாளர்களின் அத்துமீறலை அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என்கிறார்கள், தனியார் பேருந்து நடத்துனர்கள்.

ஒரு சிறு கணக்கு போட்டுப் பாருங்கள். தனியார் பேருந்துகள் இந்த ஒரு ரூபாய் அதிகரித்த கட்டணத்தால் பெறும் லாபம் புரியும்.

தனியார் புறநகர்ப் பேருந்துகள் சிறு நகரங்களை இணைப்பவை. உதாரணமாக கோவை- திருப்பூர், கோவை- பொள்ளாச்சி, ஈரோடு- கோவை, ஈரோடு- சேலம் என்று நகர்களை இணைப்பவையாகவே அவை இயங்குகின்றன. நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ஆறு முறை (ட்ரிப்) இரு நகரங்களிடையே அவை சென்று வருகின்றன. ஒரு முறைக்கு குறைந்தபட்சம் 48 பேர் பயணிக்க முடியும். தவிர செல்லும் வழியில் இடை நிறுத்தங்களில் பயணிகளை அனுமதிக்கின்றன. அந்த வகையில் குறைந்தபட்சம் 40 பயணிகள் பயணிக்கின்றனர். அதாவது மொத்தத்தில் ஒரு முறைக்கு குறைந்தது 80 பயணிகள் தனியார் பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதுவே 120 வரை அதிகரிப்பதும் உண்டு.

ஆக ஒரு நாளுக்கு, குறைந்தபட்சம் (6 X 2 X 80) ரூ. 960 கூடுதலாக (பயணச் சீட்டிற்கு ஒரு ரூபாய் என்ற கணக்கீட்டில்) வசூலாகிறது. இதுவே, பயணச் சீட்டிற்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 வரை கூடுதலாக வசூலிப்பதைக் கணக்கிட்டால் இந்த லாபம் இன்னும் அதிகமாக இருக்கலாம். தவிர ஐம்பது பைசா சில்லறை கொடுக்காமல் இருப்பதன் வாயிலாகவும் தனியார் பேருந்துகளுக்கு குறைந்தபட்சம் ஐம்பது ரூபாயாவது தேறும்.

இதன்மூலம் கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ஒவ்வொரு தனியார் பேருந்தும் குறைந்தபட்சம் (4 X 30 X ரூ 960.00 ) ரூ. ஒரு லட்சம் வரை கூடுதலாக சம்பாதித்துள்ளன. இதில் பிச்சைக்காசுதான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கையூட்டாகத் தரப்பட்டுள்ளது.

கைநீட்டி வாங்கியதன் நன்றிக்கடனாகவே அரசு தனியார் பேருந்துகளின் அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதற்கு, முறையாக பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டுப் போக வேண்டியது தானே? ''தமிழகத்தில் மட்டுமே பேருந்துக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை; நாட்டிலேயே இங்குதான் பேருந்துக் கட்டணங்கள் குறைவாக உள்ளன'' என்று தம்பட்டம் அடிக்காமல் இருக்கலாமே!

தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டிற்கு பல உதாரணங்கள் கூற முடியும். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையிலும் இவ்வாறுதான் நீதிபதி கோவிந்தராஜன் குழு பரிந்துரைப்படி தலையிட்டது அரசு. ஆனால் ஒரு பிரயோசனமும் மக்களுக்கு இல்லை. தனியார் பள்ளி நிர்வாகங்கள் தனியே அமைச்சரைச் சந்தித்து 'கவனித்து விட்டதாக' தகவல். தற்போது நீதிபதி கோவிந்தராஜர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது பரிந்துரைக்கு அவர் பொறுப்பில் இருந்தபோதே மரியாதை இல்லை. தனியார் பள்ளிகள் இஷ்டம் போல ரசீதின்றி கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தன. இனி எந்தக் கட்டுப்ப்பாடும் இல்லாமல் வசொல் வேட்டை தொடரும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இக்குழு சமர்ப்பிப்பதாக இருந்த மறுபரிசீலனை அறிக்கை இனி எப்படி வருமோ, அந்த கோபாலபுரத்தில் எழுந்தருளியுள்ள மாயக் கண்ணனுக்கே வெளிச்சம்!

திரையரங்க கட்டணங்களும் (புதுப்படங்களுக்கு மட்டும் பிரத்தியேக கட்டண உயர்வு) இதேபோலத் தான் அரசின் சால்ஜாப்பு மிரட்டல்களால் கட்டுப்படாமல் இருக்கிறது. ஆசிரியர் பனி நியமனத்தில் நடந்த களேபரங்கள் அனைவரும் அறிந்தவை. உணவகங்களுக்கு விடுக்கப்பட்ட ''குறைந்தவிலை சாப்பாடு போடாவிட்டால் நடவடிக்கை'' என்ற மிரட்டலுக்கு நேர்ந்த கதியும் அனைவரும் அறிந்தது தான்.
இவ்வாறாக, தமிழக அரசு நடத்தும் நாடகங்களில் பலனுறுவது அமைச்சர்களும், முறைகேட்டில் ஈடுபடுபவர்களும் மட்டுமே என்ற நிலை நிலவுகிறது. பேய் ஆட்சி செய்யும் நாட்டில் பூதங்கள் பிணம் தின்னுவது (சாத்திரங்களே சாப்பிடும்போது) அதிசயமாக இல்லை.
.
ஆனால், தமிழகத்தில் மட்டுமே கருத்துரிமை மதிக்கப்படுகிறது என்றும் மார் தட்டிக் கொள்கிறார்கள். யார் சொல்வதையும் கேட்டால் தானே, அதனால் கோபமோ, அச்சமோ வரும். இந்த அரசு தான் எதையும் காதில் வாங்கும் அரசு இல்லையே. கைகளில் வாங்குபவர்களுக்கு காதுகள் கேட்பது நல்லதல்ல என்பது - உண்மைதான் உடன்பிறப்புக்களே...
.

செவ்வாய், அக்டோபர் 19, 2010

முரண்பாடுகள் யாரிடம்? - 2


தமிழ் ஹிந்து இணையதளத்தில், 'அயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும்' என்ற எனது கட்டுரைக்கு பின்னூட்டங்களிட்ட திருவாளர் ஆர்.வி.க்கு எனது பதில்கள்...

----------------------------------------


சேக்கிழான்,
// ஒரு தகராறு, இரண்டு தரப்பு. அவர்களுக்குள் தீர்த்துக்கொள்ள முடியவில்லை, கோர்ட்டுக்கு போகிறார்கள். தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஏற்றுக் கொள்வேன், இல்லை என்றால் மறுப்பேன் என்று ஒரு தரப்பு சொல்லுமானால் கோர்ட்டுக்கும் கேசுக்கும் arbitration-க்கும் பொருளே இல்லையே? எனக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் நான் ஏற்கமாட்டேன், ஆனால் உனக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் நீ ஏற்க வேண்டும் என்று சொல்லப்படும் அறிவுரையில் உள்ள அடிப்படை முரண்பாடு உங்களுக்கு புரியவில்லையா? எப்படி என் தரப்பு சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அதே போல தன் தரப்பு சரி என்று வக்ஃப் போர்டும் நினைக்கலாம் இல்லையா? இதே லாஜிக்கை மறு தரப்பும் பயன்படுத்தி எனக்கு சாதகமாக தீர்ப்பு இல்லை, நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொன்னால்? மன்னிக்கவும், எனக்கு வேண்டியதை நான் செய்வேன், process எனக்கு முக்கியமில்லை, நான் ஏற்றுக்கொண்டிருக்கும் மார்க்கம்தான் சரி, நான் சொல்வதுதான் சட்டம், நீதி, நியாயம், அதன்படிதான் அடுத்த தரப்பு செய்ய வேண்டும் என்பதுதான் இந்த “கட்டடத்தை” இடித்த பாபரின் “விழுமியம்”. அதை நான் நிராகரிக்கிறேன். பாபரின் செயலை வன்மையாக எதிர்க்கும் நீங்கள் அப்படி எதிர்ப்பதற்காக அவரது வால்யூ சிஸ்டத்தையே பயன்படுத்தினால் எப்படி? தவறான வால்யூ சிஸ்டத்தால் தவறான செயல்கள் நடந்தன. அந்த தவறை சரி செய்கிறேன், ஆனால் அந்த வால்யூ சிஸ்டம்தான் எனக்கு வேண்டும் என்றால்!//
-R.V (16.10.2010)

மீண்டும் எனது பதில்:
அன்புள்ள ஆர்.வி.

தவறான நபர்களை ஒப்பிடக் கூடாது. ஆக்கிரமிப்பாளன் பாபருடன் அவதார புருஷன் ராமனை ஒப்பிடவே கூடாது. நாடு விடுதலை பெற்றவுடன் யூனியன் ஜாக் கொடி அகற்றப்பட்டு நமது தேசியக் கொடி ஏற்றப்பட்டது போல, சுதந்திரம் பெற்றவுடன் சோமநாதர் ஆலயம் பட்டேலால் புனரமைக்கப்பட்டதுபோல, அயோத்தி ராமர் கோயிலும் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உங்களைப் போலவே நமது புதிய இந்திய ஆட்சியாளர்களும் இருந்த காரணத்தால் தான், ராமர் கோயில் விவகாரமானது.

திரேதா யுகத்து ராமனுக்கு தற்போதைய நீதிபதிகளால் கண்டிப்பாக பிறப்புச் சான்றிதழ் வழங்க முடியாது. இதில் எந்த சட்டத்திற்கும் வேலை இல்லை. இதைச் சொல்வது நீதிமன்றத்தை அவமதிப்பதாகாது. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் சட்டத்தை மீறிய சலுகைகளைச் சுட்டிக் காட்டுவது (ஷாபானு வழக்கு) அதே போன்ற சட்டமீறல்களை ஹிந்துக்களுக்கும் வழங்குமாறு கோருவதல்ல; நமது மக்களுக்கு நாம் எப்படி பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்பதை சுட்டிக் காட்டவே.

வழக்கிற்கு சம்பந்தமில்லாத வக்பு வாரியத்தையும் ராமர் பக்தர்களையும் நீங்கள் ஒப்பிட்டதில் இருந்தே நீங்கள் ‘தெளிவான குழப்ப’த்துடன் இருப்பது தெரிகிறது. குழப்பத்தைத் தெளிவிக்க முடியும். ‘தெளிவான குழப்பத்தை’த் தெளிவிப்பது சற்று சிரமம் தான்.

இஸ்லாமியர்களின் நம்பிக்கைக்காக ஷாபானு வழக்கிற்கு விரோதமாக புதிய சட்டம் நிறைவேற்றிய புத்திசாலிகள், உச்சநீதிமன்றத்திலும் ராமர் கோயிலுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தால் என்ன செய்வார்கள்? அப்போதும் 'வால்யூ சிஸ்டம்' பேசிக்கொண்டு நாம் இருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பாக இருக்கலாம். மன்னிக்கவும், நான் அப்படி நினைக்கவில்லை. ஹிந்துக்களுக்கு நீதியையும், நடுநிலையையும் போதிக்க வேண்டாம் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

நாட்டுப் பிரிவினை வழங்கிய ஆழமான காயங்களை மீறியும், உங்களைப் போன்றவர்களால் எப்படி இவ்வாறு விதண்டாவாதம் செய்ய முடிகிறது என்று புரியவில்லை. பரவாயில்லை, நீங்கள் மதச்சர்பற்றவராகவே, நீதிமானாகவே இருங்கள். கண்ணன் காட்டிய வழியில் ஹிந்துக்கள் ராமர் கோயிலைக் கட்டிக் காட்டுவார்கள்.

காண்க: தமிழ் ஹிந்து
----------------------------------------

//ஆளைக் கொல்பவர்கள் போக வேண்டிய இடம் தூக்கு மேடை - அங்கே என்ன ஹிந்து முஸ்லிம்? நீங்கள் இதை புலம்புவதில் பொருளில்லை என்று ஒதுக்கக் கூடாது//
-R.V (16.10.2010)

நமது நாடாளுமன்றத்தைத் தாக்கியதற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு தூக்குமேடைக்கு சென்றுவிட்டாரா? மும்பை தாக்குதலில் தொடர்புடைய கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதா? அங்கே ஏன் பாகுபாடு? எதற்கு பயம்? திரு. ஆர்.வி தனது தளத்தில் இதுபற்றி துணிவுடன் முதலில் எழுதட்டும்!
.
முஸ்லிம்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்பதால் தான் ஊடகங்கள் முதல் அரசியல்வாதிகள் (காவல்துறையினர் உள்பட) வரை அனைவரும் அஞ்சி நடுங்குகிறார்கள். அவர்களது வழிமுறையை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால், அவர்களது தவறுகளைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பவர்கள் தான், அமைதியாக ஷாகா நடத்தும் ஆர்.எஸ்.எஸ்.சை வசை பாடுகிறார்கள். அதைச் சுட்டிக் காட்டவே ''முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்று புலம்புவதில் பொருளில்லை. அவர்கள் ஆளைக் கொல்கிறார்கள் என்றால், ஹிந்துக்களால் எதிர்ப்புக்குரல் கொடுத்து ஆர்ப்பாட்டம் கூடவா நடத்த முடியாது?'' என்று நான் கேட்டிருந்தேன். அதை நீங்கள் எப்படிப் புரிந்து கொண்டீர்கள் என்பது எனக்கும் புரியவில்லை.

// அப்படி ஹிந்து துறவிகள் எல்லாரும் உண்மையான துறவிகளாக இல்லையே? மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பற்றி எந்தப் பத்திரிகை தவறாக எழுதி இருக்கிறது? அப்படி எழுதினால் பொங்கி இருப்பார்கள். நித்யானந்தாவையும் பிரேமானந்தாவையும் பற்றி உண்மையாக செய்தி தருவது ஊடகங்களின் கடமையே//

நண்பர் ஆர்.வி,

காஞ்சி பரமாச்சாரியார் பற்றி பகுத்தறிவுத் திலகங்கள் அள்ளித் தெளித்த அவதூறுகள் உங்களுக்கு தெரியவில்லையா? இன்றும் கூட அவரை பெரிய சங்கராச்சாரி என்று தானே திருவாளர் வீரமணி வெளியிடும் விடுதலை குறிப்பிடுகிறது? அருளாளர் கிருபானந்தவாரியாரை கழகத்தினர் துரத்தித் துரத்தி அடித்த சம்பவங்கள் உங்களுக்குத் தெரியாதா?

தவறு செய்யும் யாரையும் கண்டிக்க உரிமை உள்ளதாகக் கூறிக் கொள்ளும் ஊடகங்கள் ஏன் திருச்சி ஜோசப் கல்லூரி அவலம் குறித்து (கன்யாஸ்திரி கற்பழிப்பு) அடக்கி வாசிக்கிறது? கொலைக் குற்றம் சாட்டப்பட்ட டில்லி இமாம் மீது இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காதது ஒருபுறம் இருக்கட்டும், அவரது முகத்திரையை மட்டும் ஏன் கிழிக்க ஊடகம் மறுக்கிறது? ஊடகங்கள் செய்ய மறுத்த அந்த கைங்கரியத்தை ஏன் ஆர்.வி. தனது தளத்தில் செய்து பாராட்டுச் சான்றிதழ் பெறக் கூடாது?
.

.