வியாழன், ஜூன் 05, 2014

மோடியின் வெற்றிக்குப் பின்புலம்- பஞ்சதந்திரம்!


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உடன்
பிரதமர் நரேந்திர மோடி
சாதாரண தேநீர்க்கடைக்காரரின் மகன், மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமர் ஆவதென்பது, சரித்திர நிகழ்வு.

வாரிசு அடிப்படையில் நாட்டை ஆளும் உரிமை இருப்பதாக நினைத்துக்கொண்டு, மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் நடத்திவந்த காங்கிரஸையும், ஆளும்கட்சியாக இருந்துகொண்டு பல அராஜகங்களை நிகழ்த்திய அதன் கூட்டணியையும் ஒருசேர முறியடித்திருக்கிறார் மோடி.

இது கண்டிப்பாக மோடியின் வெற்றியே. அதேசமயம் மோடியின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல, இந்த மகத்தான சாதனை.

16வது மக்களவைத் தேர்தலில் வாகை சூடிய மோடி, ஈட்டியின் கூர்முனை என்றால், அதன் பிடியாகவும், கம்பாகவும் இருந்தவர்கள் பலர். ஈட்டி முனை மழுங்கி இருந்தாலும் பயனில்லை;  ஈட்டியின் பின்னுள்ள கம்பு இல்லாமல் இருந்தாலும் பயனில்லை. அந்த ஈட்டியை எறியும் உத்வேகமும் இருந்தாக வேண்டும். அப்போதுதான் அந்த ஈட்டி சரியான இலக்கைத் தாக்கி வெல்ல முடியும்.

அந்த வகையில், மோடி என்ற அற்புதமான, தன்னிகரற்ற தலைவரை கூர்முனையாக முன்னிறுத்தி, அவருக்குப் பின் படையெனத் திரணடு பணியாற்றிய பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி, சங்க பரிவார் இயக்கங்கள் அனைவருக்கும், இந்த வெற்றியில் பங்குண்டு.

இதனை மோடியே தேர்தல் பிரசாரத்தில் ஒருசமயம் குறிப்பிட்டார். தேசத்தில் வீசுவது மோடி அலையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த மோடி, “இந்த அலை பாஜக அலை. காங்கிரஸின் நிர்வாகத் திறமையின்மைக்கும், ஊழலுக்கும், விலைவாசி உயர்வுக்கும் எதிரான அலை” என்று மிகுந்த தன்னடக்கத்துடன் கூறினார் நரேந்திர மோடி.

தேர்தல் முடிவுகள் வந்தநிலையில் ஊடகங்களுக்கு தனது சேதியாக மோடி கூறியது இதுதான்:  “பிரித்தாளும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. இனி மக்கள் நலனுக்கான அரசியல் தொடரும்.”

இந்த முற்றுப்புள்ளியிலிருந்து தான் தேசத்தின் வளர்ச்சிக்கான தொடர்புள்ளிகள் துவங்குகின்றன.

இந்த வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியின் செயலற்ற தன்மை மீதான மக்களின் கோபமே காரணம் என்றாலும், அதை வாக்குகளாக மாறியது தான் மோடியின் அசுர சாதனை. கண்டிப்பாக மோடியின் இடத்தில் அத்வானி உள்ளிட்ட வேறு எவர் இருந்திருந்தாலும், இத்தகைய இமாலய சாதனையை நிகழத்தியிருக்க முடியாது. மோடியை ஆர்எஸ்எஸ் தலைமை போர்ப்படைத் தளபதியாக முன்னிறுத்தியது ஏன் என்பது இப்போது பலருக்கும் புரிந்திருக்கும்.

தவிர, மோடியை மகுடம் சூடவைப்பதற்காகச் செயல்படுத்தப்பட்ட பஞ்சதந்திர அணுகுமுறைகளுக்கும் இவ்வெற்றியில் பெரும் பங்குண்டு. மோடியின் தன்னிகரற்ற தலைமையை முன்னிலைப்படுத்தியது, பாஜகவின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை தீவிரப்படுத்தியது, தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தியது, ஊடகங்களை வழிக்குக் கொண்டுவந்தது, சங்கபரிவார் இயக்கங்களின் அர்ப்பணிப்பான கடும் உழைப்பு ஆகியவை, பாஜகவின், மோடியின் மகத்தான வெற்றிக்கு வித்திட்ட பஞ்சதந்திரங்கள்...

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

-----------
விஜயபாரதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக