வெள்ளி, ஜூன் 01, 2012

பற்றி எரியும் பெட்ரோல் விலை உயர்வு


'எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல' என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். அதற்கு மிகச் சரியான உதாரணமாக, ஏற்கனவே துவண்டு கிடக்கும் நாட்டு மக்களை பெட்ரோல் விலை உயர்வால் பந்தாடி இருக்கிறது மத்திய அரசு. இதுவரை காணாத வகையில், ஒரே நாளில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 7.50 உயர்த்தி நாட்டு மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறது மன்மோகன் அரசு. இதைக் கண்டித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, ''மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்'' என்று சரியாகவே சொல்லி இருக்கிறார்.

பெட்ரோல் இல்லாத உலகை இப்போது கற்பனை செய்யவும் இயலாது. போக்குவரத்துக்கு ஆணிவேராக உள்ள பெட்ரோல் தான் உலகப் பொருளாதாரத்தையே கட்டுப்படுத்தும் காரணியாக உள்ளது. இதை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதில் போட்டியே நிலவுகிறது. குறிப்பாக, உலக வல்லரசான அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது பெட்ரோல் வளம் தான்.

பூமிக்கடியில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும் இந்த திரவத் தங்கத்தின் இருப்பு ஆண்டுதோறும் குறைந்துகொண்டு வருகிறது. எதிர்காலத்தில் பெட்ரோலிய இருப்பு முற்றிலும் குறைய வாய்ப்புள்ளது என்ற விஞ்ஞானிகளின் எச்சரிக்கை காரணமாக, மாற்று எரிபொருள் குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தாவர எண்ணெய்களில் பெட்ரோலுக்கு மாற்று கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிரமாகப் பாடுபட்டு வருகின்றனர்.

உலகளாவிய பெட்ரோலிய கச்சா எண்ணெயின் மதிப்பில் ஏற்படும் உயர்வும் சரிவும் நாடுகள் தோறும் எதிரொலிக்கின்றன. பெட்ரோலிய வள நாடுகள் கூட்டமைப்பு (OPEC) அவ்வப்போது கூடி பெட்ரோலிய சந்தையில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டும் விதமான முடிவுகளை எடுக்கிறது. இதுவும் பெட்ரோல் விலையில் எதிரொலிக்கிறது. தவிர, அவ்வப்போது ஏற்படும் ரூபாய் நாணய மதிப்பு வீழ்ச்சியும் பெட்ரோல் விலை உயரக் காரணமாகிறது.

இப்போதைய பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுவது ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி தான். அதாவது, முன்னர் ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ. 48 கொடுத்தால் போதும் என்றிருந்த நிலைமை மாறி தற்போது ரூ. 55.50 கொடுக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க 91.50 டாலர்கள் தர வேண்டும். இது உண்மையில் சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை விட 8 டாலர்கள் குறைவு. அதாவது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், நாணய மதிப்பு வீழ்ச்சியால் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோலிய இறக்குமதி மற்றும் சுத்திகரிப்பு பணிகள் பொதுத்துறை நிறுவனங்கள் வசமே இருந்தன. இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், கெயில், ஓ.என்.ஜி.சி போன்றவை அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள். இவை அல்லாது இப்போது தனியாரும் அனுமதிக்கப்பட்டதன் விளைவாக ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற நிறுவனங்களும் இத்துறையில் ஈடுபடுகின்றன.

மற்ற பொதுத்துறை நிறுவனங்கள் போலவே அரசு சார்ந்த எண்ணெய் நிறுவனங்களும் மட்டற்ற ஊழல், சரியான திட்டமின்மை, அரசின் குறுக்கீடுகள் போன்றவற்றால் தத்தளிக்கின்றன. நாட்டு மக்களின் அடிப்படைத் தேவையான பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை போதிய அளவில் இருப்பு வைத்து தட்டுப்பாடின்றிக் கிடைக்கச் செய்வதும், அவற்றின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதும் எண்ணெய் நிறுவனங்களின் பணி. இதற்காக, ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கி வருகிறது.

குறிப்பாக, உற்பத்தி விலை அதிகமாக இருந்தபோதும், மண்ணெண்ணெய் குறைந்த விலையில் நியாய விலைக்கடைகளில் கிடைப்பதற்காக அரசு மானியத்துடன் அதனை குறைந்த விலையில் தருகின்றன பொதுத்துறை நிறுவனங்கள். அதே போல, சமையல் எரிவாயுவும் உற்பத்தி வியைவிட சரிபாதி விலையில் விநியோகிக்கப்படுகிறது. 2012 -13 நிதியாண்டில் இதுபோன்ற தேவைகளுக்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள மானிய அளவு ரூ. 43,850 கோடி.

எனினும், மானிய அளவை விட அதிகமாக செலவாவதாக பொதுத்துறை நிறுவனங்கள் நீண்ட நாட்களாக புலம்பி வருகின்றன - தாங்கள் பொது நலனுக்கானவை என்பதை மறந்து. இந்நிலையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டதும், சர்வதேச அளவில் கொள்முதல் செய்வதற்கான நிதி பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளதாக அரசை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்ததன் விளைவாக, இப்போது பெட்ரோல் விலை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்து டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலைகளும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

உண்மையில், நமது எண்ணெய் நிறுவனங்கள் நல்ல லாபத்தில் இயங்கி வருகின்றன. 2009 -10 ல் இந்தியன் ஆயில் அடைந்த நிகர லாபம் ரூ. 10,200 கோடி; ஓ.என்.ஜி.சி.- 16,700 கோடி; கெயில் 3,140 கோடி; ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் - ரூ. 1,300 கோடி; பாரத் பெட்ரோலியம் – 1,500 கோடி லாபம் ஈட்டி உள்ளன. சென்ற ஆண்டு புள்ளிவிபரங்களைப் பார்த்தால் இதைவிட அதிகமாகவே உள்ளது. ஆனால், தற்போதைய நிலைமை நீடித்தால் நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்ற எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில், லாபத்தில் ஏற்படும் நஷ்டத்தைப் பொறுக்காமல் எண்ணெய் நிறுவனங்கள் அளித்த நிர்பந்த்தத்திற்கு அரசு தற்போது அடிபணிந்திருக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலையை அரசே கட்டுப்பாட்டில் வைப்பது பத்தாண்டுகளுக்கு முன்னர் வரை நடைமுறையில் இருந்தது, ஆனால், அதில் உள்ள சாதக, பாதகங்களை ஆராய்ந்த பிறகு பொதுத் துறை நிறுவனங்களே அரசு அனுமதியோடு விலையை நிர்ணயிக்கும் உரிமை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வழங்கப்பட்டது. ஆயினும், எண்ணெய் நிறுவனங்கள் எடுக்கும் முடிவுக்கு கடிவாளமிடும் வகையில் அரசு செயல்பட்டுவந்தது. அதில் தான் தற்போதைய காங்கிரஸ் அரசு சறுக்கி உள்ளது. இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் ரூ. 7.50 உயர்த்துவது என்பதை அரசு எப்படி அனுமதித்தது?

பொதுத்துறை நிறுவனங்கள் திவாலாகிவிடக் கூடாது என்பதற்காக செய்யப்பட ஏற்பாட்டை, மக்களை திவாலாக்குவதற்கு அல்லவா ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கையாள்கிறது? கடந்த 2011 நவம்பரில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. அதன்பிறகு பல மாநிலத் தேர்தல்கள் வந்ததால் அடக்கி வாசித்த அரசு, இப்போது சமீபத்தில் தேர்தல் இல்லை என்பதால் துணிவுடன் இந்த விலை உயர்வுக்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. இது அரசின் நிலையை சமாளிக்க ஊடகங்கள் எடுத்துக் கொடுக்கும் வாதம் மட்டுமே.

உண்மையில், தனியார் எண்ணெய் நிறுவனங்கள் வழங்கும் பல்லாயிரம் கோடி கையூட்டுக்காகவே இந்த விலை உயர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அடுத்த தேர்தலில் தாங்கள் வெல்வது சாத்தியமில்லை என்பதை இப்போதைய ஆளும்கட்சியினர் தெளிவாகவே உணர்ந்திருக்கின்றனர். அதனால் தான், ஆட்சியில் இருக்கப்போகும் இரு ஆண்டுகளுக்குள் எவ்வளவு வசூல் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு வசூலிக்க அவர்கள் துடிக்கின்றனர்.

அதற்கு அரசு பூசும் முலாம் தான் ‘பொதுத்துறை நிறுவனங்களுக்கு நஷ்டம்’ என்ற பஞ்சப்பாட்டு. அது உண்மையானால், கடந்த ஆறு மாதங்களாக பல நிர்பந்தங்கள் நேரிட்டபோதும் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லையே, ஏன்? இப்போதும் கூட, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும் வரை காத்திருந்து அதன் பின்னரே பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது.

நாம் வாங்கும் பெட்ரோலின் விலையில் பெரும்பகுதி வரியினங்களுக்கே செல்வது குறித்தும் அரசின் பார்வை தெளிவானதாக இல்லை. மத்திய அரசு வசூலிக்கும் எக்சைஸ் வரி, கஸ்டம்ஸ் வரி, மதிப்புக் கூட்டு வரி, மாநில அரசுகள் வசூலிக்கும் நுழைவு வரி, கல்வி வரி, சாலை வரி போன்ற இனங்களை தவிர்த்தால், ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 35 க்கே விற்க முடியும். ஆனால், இந்த வரியினங்களை நம்பியே மத்திய, மாநில அரசுகள் இயங்குகின்றன. இந்நிலையில், பெட்ரோல் விலை உயர்வை அனுமதித்து விட்டு, மாநில அரசுகள் பெட்ரோல் விலையைக் கட்டுப்படுத்த தங்கள் தரப்பில் வசூலிக்கும் வரியினங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்திருக்கிறது மத்திய அரசு. இதை தானே முதலில் துவங்கி வைத்து புண்ணியம் கட்டிக் கொள்ளலாமே?

இந்த பெட்ரோல் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்திருக்கிறார்கள். ஏனெனில் அவர்களது அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தையும் இழப்பையும் இது ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அரசு போலல்லாது உணர்ந்திருக்கிறார்கள். பல இடங்களில் யாரும் அழைப்பு விடுக்காமலே ஆயிரக் கணக்கான மக்கள் தெருக்களில் கூடி ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். பாஜக, இடதுசாரி கட்சிகள், அதிமுக, சமாஜ்வாதி, பிஜு ஜனதாதளம் போன்ற மாநிலக் கட்சிகளும் பெட்ரோல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

மத்திய அரசின் கூட்டாளிகளான திரிணாமூல் காங்கிரஸ், திமுக போன்றவையும் அரசின் முடிவை எதிர்த்துள்ளன. பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக கூட்டணி கட்சிகள் மே 31 ல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதே நாளில் நாடு முழவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தப்போவதாக இடதுசாரிகள் அறிவித்துள்ளனர். தேசிய அரசியலில் புதிய மாற்றத்துக்கு பெட்ரோல் விலை உயர்வு களம் அமைத்துக் கொடுத்துள்ளது என்றும் கூறலாம்.

ஆயினும் விலை உயர்வில் மாற்றமில்லை என்று கூறி வருகிறது மத்திய அரசு. எனினும் மக்களின் கோபாவேசத்திற்கு அரசு பணிந்தே தீரும் என்பதற்கு சான்றுகள் உள்ளன. மக்களுக்காகத் தான் அரசே ஒழிய, அரசுக்காக மக்கள் அல்ல. இதை மன்மோகன் சிங்கும் அவரது அடிப்பொடிகளும் உணர்வது நல்லது.

-------------------------------------------------------------------

பெட்டிச் செய்தி - 1

ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்

உலகச் சந்தையில் மற்ற நாடுகளெல்லாம் எவ்வளவு ரூபாய்க்கு பெட்ரோலை விற்கிறார்கள் தெரியுமா?

டோகாவில் ரூ. 8.25, சௌதி அரேபியாவில் ரூ 8.53, ஐக்கிய அரபு எமிரேட்டில் ரூ. 18.14 என்று சொன்னால் இவையெல்லாம் பெட்ரோல் உற்பத்தி செய்கின்ற நாடுகள் என்று சொல்லிவிடுவார்கள். இவர்கள் எதற்கெடுத்தாலும் அண்ணாந்து பார்க்கிற
அமெரிக்காவில் கூட 1 லிட்டர் பெட்ரோல் ரூ. 37.31, பக்கத்தில் இருக்கிற பாகிஸ்தானில் ரூ. 35.75, இலங்கையில் ரூ. 47.04 தான்.

உலகச் சந்தையைக் கைகாட்டும் மத்திய நிதியமைச்சர். பிரணாப் முகர்ஜி இவ்வளவு நாடுகளில் பெட்ரோல் விலைகள் குறைவாக இருப்பது ஏன் என விளக்குவாரா? பெட்ரோல் என்பது மக்களின் அன்றாட வாழ்வோடு தொடர்புடையது. இதன் விலை உயர்ந்தால் காய்கறி, பலசரக்கு, பொருட்கள் எல்லாவற்றின் விலைகளும் உயர்ந்துவிடும் என்று அந்த நாட்டு அரசுகள் புரிந்திருக்கின்றன. எனவே தான் பலநாடுகள் பெட்ரோலுக்கு மானியங்கள் தருகின்றன. அதன் மீது வரிகளைக் குறைக்கின்றன.

உதாரணமாக அமெரிக்காவில் 1916 லிருந்து 94 ஆண்டுகளாக பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு பேரலுக்கு 100 டாலர்களுக்கு மேல் விலை போய்விடக் கூடாதென்பதற்காக இம்மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே பெட்ரோலிய விலை உயர்வை உலகளாவிய போக்கு என சித்தரிப்பது வடிகட்டிய பொய்.

-------------------------------------------------------------------

பெட்டிச் செய்தி - 2

அரசின் பித்தலாட்டம்


பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கு அரசு கூறும் முக்கியமான காரணம், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவதாகக் கூறப்படும் இழப்பு. கடந்த நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ரூ. 78 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், நடப்பு நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 208 கோடி நஷ்டம் ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அரசு கூறுகிறது. இதன் அடிப்படையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வு நியாயப்படுத்தப்படுகிறது.

இந்த வாதம் மோசடியானது. ஏனெனில், பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஏற்படுவது நஷ்டமே அல்ல. அது அரசின் விலைக்கும், இறக்குமதி விலைக்கும் இடையிலான வேறுபாடு மட்டுமே. (லாபத்தில் ஏற்படும் குறைவு) இதை ரங்கராஜன் கமிட்டி தெளிவாக்கியிருக்கிறது. உண்மையில் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தில் இயங்குகின்றன என்பதை அந்தந்த நிறுவனங் களின் ஆண்டு அறிக்கையைப் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். கடந்த 2006 முதல் 2010 வரையிலான நான்கு நிதியாண்டுகளில் இந்த நிறுவனங்கள் ரூ.1,26,288 கோடி லாபம் ஈட்டியிருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

---------------------------
விஜயபாரதம் (08.06.2012)

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக