வியாழன், நவம்பர் 03, 2011

பா.ராகவனின் RSS – அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே (பகுதி 2)


நூல் விமர்சனம்:
ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம், மற்றும் மதம் - பா.ராகவன்,
கிழக்குப் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ. 75.00



---------------------------------
முதல் பகுதி


பொதுவாக ஆர்.எஸ்.எஸ். குறித்து உருவாக்கப்பட்டுள்ள எதிரிடையான பிம்பத்துக்கும், அதன் தொண்டர்கள் மற்றும் தலைவர்களை நெருங்கும்போது ஏற்படும் அனுபவங்களுக்கும் பெருத்த வேறுபாடு காணப்படும். இந்த வேறுபாட்டுக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ். அல்ல; அதன் எதிர்ப்பாளர்கள்தான். எந்த ஒரு பிரதிபலனும் பாராமல், தூஷிப்பவர்கள் பற்றிய கவலையின்றி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஆற்றும் அரும்பணிகளால்தான் அதன் வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது. அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ்.சின் நற்பணிகள் பலவற்றை மழுப்பலின்றி இந்நூலில் காட்டி இருக்கிறார் பா.ராகவன். அதற்கு ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். எனினும் இதிலுள்ள சிறு தகவல் பிழைகளை சுட்டிக் காட்டுவது அடுத்த பதிப்பில் சரிசெய்ய உதவக்கூடும்.

அரிய செயலில் எளிய தொண்டர்கள்

இந்தப் புத்தகத்தில், கோவா விடுதலைப் போராட்டம், போர்களின்போது அரசுக்கு உதவி, நெருக்கடி நிலையின்போது ஜனநாயகத்தை மீட்க நடந்த யுத்தம், ஆர்.எஸ்.எஸ்.சின் ஷாகா நடைமுறை, வனவாசி மக்களிடையே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் சேவைகள், விவேகானந்த கேந்திரா உருவாக்கம் – போன்ற அம்சங்கள் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளன. குறிப்பாக ‘தேசம் எங்கள் உயிர்மூச்சு‘ என்ற 7வது அத்தியாயம் அற்புதம்.

இதனை ஏற்கெனவே பல ஆர்.எஸ்.எஸ். வெளியீடுகளில் படித்திருந்தாலும்கூட, இந்த நூலின் நடையழகு அருமை. வேகமான பதிவுகள், எளிய வார்த்தைப் பிரயோகங்கள், விறுவிறுப்பான நடை, ஆங்காங்கே பொருத்தமான ஒப்பீடுகள். (உதாரணம்- பி.ஆர்.தீரஜ்-பக்:64.) ஆகியவை, புத்தகத்தை எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க விடுவதில்லை.

ஆர்.எஸ்.எஸ். ஷாகா குறித்த அறிமுகம் (பக்: 62, 63), இயக்கத் தொடர்பில்லாதவர்களும் புரிந்துகொள்ளும்படி இருப்பது சிறப்பு. ஆயினும் நெருக்கடி நிலையை எதிர்த்து தலைமறைவுப் போராட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ். குறித்த விரிவான தகவல்கள் இல்லாதது பெரும் குறை. ஏனெனில் அந்தப் போராட்டம் காரணமாகவே ஜெ.பி. ஆர்.எஸ்.எஸ்.சுடன் நெருங்கிவந்தார். நாடு முழுவதும் அறப்போராட்டங்களை ஒருங்கிணைத்த ஆர்.எஸ்.எஸ்ஸால்தான் பின்னாளில் ஜனதா கட்சி உருவாக வியூகம் வகுக்க முடிந்தது. அதனை ஜெ.பி., தலைமையில் நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ்.தான்.

அந்நாளில் போராளிகளாக இருந்த இரா.செழியன், தமிழருவி மணியன் போன்ற பலர் இதைப் பதிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக ‘நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்‘ என்ற நூலை அன்றைய ஆர்.எஸ்.எஸ். மாநில அமைப்பாளரும் தற்போதைய இந்து முன்னணி நிறுவன அமைப்பாளருமான ராம.கோபாலன் (*1) எழுதி இருக்கிறார். அதில் தமிழகத்தில் கைதான சத்யாகிரகிகள் பட்டியலும் இருக்கிறது. ‘ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள்’ நூலில் இதற்கென தனியொரு அத்தியாயமே இருக்கிறது. (*2)

1975ல் எதிர்பாராத கணத்தில் நாட்டின் மீது திணிக்கப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டமின்றி அரசியல் கட்சிகளைத் தொடர்புகொண்டு ஜனநாயக மாற்றத்துக்கு வித்திட்டவர்கள் ஸ்வயம்சேவகர்கள். இதற்கென உருவான மக்கள் போராட்டக் குழுவின் (லோக் சங்கர்ஷ சமிதி) நிர்வாகியாக இருந்தவர் நானாஜி தேஷ்முக். (*3) இவர் ஓர் அற்புதமான ஆர்.எஸ்.எஸ். தலைவர். இவரைப் பற்றி இந்நூலிலேயே (பக்: 45) சரஸ்வதி சிசு மந்திர் அமைத்தவர் என்று தகவல் வருகிறது. அது மட்டுமல்ல, இவரே சித்திரகூடத்தில் தீனதயாள் ஆராய்சிக் கழகத்தை நிறுவியவர். கோண்டா என்ற மாவட்டத்தை முன்மாதிரி மாவட்டமாக (*4) வளர்த்தெடுத்தவர்.

”அறுபது வயதுக்கு மேல் அரசு வேலையில் இருப்பவர் ஓய்வு பெற வேண்டும் என்றால், அரசியலிலும் அதுதானே சரியாக இருக்கும்?” என்று கூறி, அரசியலில் முத்திரை பதித்துவந்த காலத்திலேயே (1978) ஓய்வை அறிவித்தவர் இவர். நானாஜியின் தலைமைப் பண்பே ஜனதா உருவாகவும் இந்திரா ஆட்சி வாழவும் காரணமாயின. பாஜக தலைவர் அத்வானியின் ‘எனது தேசம்; எனது வாழ்க்கை‘ நூலிலும் இதற்கான தகவல்கள் (*5) உள்ளன.

விவேகானந்த கேந்திரா உருவாக்கத்தில் ஏகநாத் ரானடேவின் பங்களிப்பு குறித்து இந்தப் புத்தகத்தில் வெளியான செய்திகள் பலர் அறியாதவை. அந்த அமைப்பு செய்யும் சேவைகளையும் (*6) குறிப்பிட்டிருக்கலாம். அதேசமயம் அங்கும் ஒரு கரசேவை நடந்தது பா.ராகவன் அறியாதது. குமரி முனையில் சுவாமி விவேகானந்தர் தவம் செய்த பாறையை ஆக்கிரமிக்க அங்கு கிறிஸ்தவ அமைப்பினர் நாட்டிய சிலுவையை இரவோடு இரவாக அப்புறப்படுத்திய பாலன் உள்ளிட்ட ஐந்து ஸ்வயம்சேவகர்களால்தான் அந்த இடம் மீட்கப்பட்டது என்பது முக்கியமான தகவல். உண்மையில், 1992 அயோத்தி கரசேவைக்கு முன்னதாகவே குமரியில் (1964) கரசேவை நடந்துவிட்டது.

சங்க குடும்பம் என்பது என்ன?

‘சங் பரிவார்’ என்பது ஏதோ புதுமையான வார்த்தை என்பது போன்ற தோற்றத்தை சில ஊடகங்கள் உருவாக்கிவரும் நிலையில், சங்க பரிவாரம் என்பதை அழகாக விளக்கி உள்ளார் பா.ராகவன். அதாவது சங்க குடும்பம். ஆர்.எஸ்.எஸ்.சால் உந்துசக்தி பெற்ற ஸ்வயம்சேவகர்கள் ஆங்காங்கே துவங்கிய புதிய இயக்கங்களின் கதை சுருக்கமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ‘வாசுதேவ குடும்பகம்’ என்ற சொல்லாட்சி தவறுதலாக (பக்: 42) வந்துள்ளது. அது ‘வசுதைவ குடும்பகம்’ என்பது ஹிதோபதேச வாக்கு. (*7) உலகமே ஒரு குடும்பம் என்பதே அதன் பொருள். அதாவது தமிழில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்கிறோமே, அதுதான் அதன் பொருள். இதை சங்கக் குடும்பத்துக்கு தொடர்புபடுத்தி இருப்பது பொருத்தமே.

சங்கக் குடும்பத்து உறுப்பினர்களின் எண்ணிக்கை இந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது போல இருபத்துக்கு மேற்பட்டவை அல்ல; நூற்றுக்கு மேற்பட்டவை. இவற்றில் தேசிய அளவில் செயல்படும் இயக்கங்களின் எண்ணிக்கையே நாற்பதுக்கு மேல் இருக்கும். அவற்றில் சில இதோ..

1.ராஷ்ட்ர சேவிகா சமிதி- பெண்களுக்கான அமைப்பு



2.ராஷ்ட்ரீய சிக் சங்கடன்- சீக்கியர்களுக்கான அமைப்பு

3.முஸ்லிம் ராஷ்ட்ரீய மன்ச் – இஸ்லாமியர்களுக்கான அமைப்பு

4.ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் – வெளிநாடு வாழ் இந்தியர்க்கான அமைப்பு

5.விஸ்வ விபாக் – உலக அளவிலான ஹிந்து அமைப்புகளை ஒருங்கிணைப்பது

6.அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் – மாணவர் அமைப்பு.

7.பாரதீய மஸ்தூர் சங்கம்- தொழிலாளர் அமைப்பு.

8.பாரதீய கிசான் சங்கம் – விவசாயிகளுக்கான அமைப்பு.

9.பாரதீய ஜனதா – அரசியலுக்கான அமைப்பு

10.வனவாசி கல்யாண் ஆசிரமம்- மலைவாழ் மக்களுக்கான சேவை அமைப்பு

11.பாரதீய இதிகாச சங்கலன யோஜனா- வரலாறு தொகுக்கும் அமைப்பு

12.ஸ்வதேசி ஜாக்ரண் மன்ச்- சுதேசி விழிப்புணர்வு இயக்கம்

13.வித்யாபாரதி- பள்ளிகளின் கூட்டமைப்பு

14.சம்ஸ்கார் பாரதி- கலை, பண்பாட்டுக்கான அமைப்பு

15.சம்ஸ்கிருத பாரதி- சம்ஸ்கிருத வளர்ச்சிக்காக பாடுபடும் அமைப்பு.

16.ஆரோக்கியபாரதி – மருத்துவர்களுக்கான அமைப்பு

17.சஹகார் பாரதி – கூட்டுறவு அமைப்பு

18.சிக்ஷா பாரதி – வேலைவாய்ப்புக்கான அமைப்பு

19.பிரக்ஞா பாரதி – சிந்தனையாளர்களுக்கான அமைப்பு

20.சேவாபாரதி- சேவைகளுக்கேன்றே பிரத்யேகமான அமைப்பு

21.சேவா இன்டர்நேஷனல் – உலக அளவிலான சேவை அமைப்பு

22.விஸ்வ ஹிந்து பரிஷத் – உலக அளவிலான சமயம் சார்பான அமைப்பு

23.பஜ்ரங் தளம்- இளைஞருக்கான அமைப்பு- அனுமன் சேனை

24.துர்கா வாகினி- பெண்களுக்கான அமைப்பு

25.அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத் – நுகர்வோர் அமைப்பு

26.அகில பாரதீய ஆதிவக்த பரிஷத் – வழக்கறிஞர்களுக்கான அமைப்பு

27.கிராம விகாஸ் பரிஷத் – கிராம முன்னேற்றத்துக்கான அமைப்பு.

28.பாரத் விகாஸ் பரிஷத் – சமுதாயப் பெரியவர்களுக்கான (Elites) அமைப்பு

29.பூர்வ சைனிக் சேவா பரிஷத் – முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அமைப்பு

30.விவேகானந்த கேந்திரா- சமூக சேவைக்கான அமைப்பு

31.பாரதீய விசார் கேந்திரா – தேசிய சிந்தனைகளை பரப்பும் அமைப்பு.

32.விஸ்வ சம்வாத் கேந்திரா- ஊடகத் துறைக்கான அமைப்பு

33.ஏகல் வித்யா கேந்திரா – ஓராசிரியர் பள்ளிகள் நடத்தும் அமைப்பு

34.அகில பாரதீய சிக்ஷண மண்டல் – ஆசிரியர்களுக்கான அமைப்பு

35.அகில பாரத திருஸ்டிஹீன கல்யாண் சங்கம்- பார்வையற்றவர்களுக்கான அமைப்பு

36.தீன தயாள் சோத் சன்ஸ்தான் (ஆராய்ச்சி கழகம்)- ஊரக மேம்பாட்டுக்கான அமைப்பு

37.சரஸ்வதி சிசு மந்திர் – கல்வி வளர்ச்சிக்கான அமைப்பு

38.தர்ம ரக்ஷண சமிதி – சமயம் சார்ந்த அமைப்பு

39.ஐ.டி.மிலன் – தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோருக்கான அமைப்பு

40.ஹிந்து ஐக்கிய வேதிகா – கேரளாவில் உள்ள இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு

41.பால கோகுலம் – குழந்தைகளுக்கான அமைப்பு

42.இந்து முன்னணி- தமிழகத்திலுள்ள சமய எழுச்சி அமைப்பு

43.விஜில்- பொது விழிப்புணர்வுக்கான பொதுமேடை

44.தேசிய சிந்தனைக் கழகம்- தமிழில் தேசிய சிந்தனை வளர்க்கும் அமைப்பு

- இவை தவிர, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றாற்போல, தேவைக்கேற்ற இயக்கங்களும் அமைப்புகளும் சங்க ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்படுகின்றன. மீனவர் கூட்டுறவு அமைப்புகள், மருத்துவ சேவை அமைப்புகள், ரத்த தான அமைப்புகள், தாழ்த்தப்பட்டோருக்கான சேவை அமைப்புகள், ஆராய்ச்சி அமைப்புகள் பல உள்ளன. மேலும், மாநிலந்தோறும், ராஷ்டிர தர்ம பிரகாஷன் போன்ற புத்தக, பத்திரிகை வெளியீட்டு நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தும் இயங்குவது ஒத்தகருத்துணர்வால்தான்.

மேற்குறிப்பிட்ட பட்டியலை இங்குக் குறிப்பிடக் காரணம், ஆர்.எஸ்.எஸ்.சின் மாபெரும் வடிவத்தை சூட்சுமமாக உணர்த்தவே. முதல் இரண்டு முறை (1948,1975) ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது போல மூன்றாவது தடை (1992) விதிக்கப்பட்ட தடை சங்கத்தைப் பாதிக்காமல் போனதற்கு இந்த சங்க குடும்பமே காரணம்.

இந்த மூன்றாவது தடை குறித்து இந்த புத்தகத்தில் ஒரு வரியாவது எழுதி இருந்திருக்கலாம். சுதந்திரம் பெறுவதற்குமுன் லாகூர் மாகாணத்தில் விதிக்கப்பட்ட தடை குறித்து விவரமாகப் பதிவு செய்த (பக்: 15) பா.ராகவன், அண்மைக்காலத்தில் நிகழ்ந்த அயோத்தி சம்பவத்தை அடுத்த தடையை விட்டிருக்கக் கூடாது.

பாரதீய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ்.சும்:

மேற்படி இயக்கங்கள் எதற்கும் ஆர்.எஸ்.எஸ். எந்தக் கட்டளையும் இடுவதில்லை. அந்தந்தத் துறையில் தங்களுக்கென தனித்த லட்சியங்களுடன் தனிப்பாதையில் இவை இயங்குகின்றன. ஆனால். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் நடத்தப்படுவதால், மேற்படி இயக்கங்கள் குடும்பத் தலைவனுக்குக் கட்டுப்பட்ட அங்கத்தினர்களாக இயங்குகின்றன. இவை ஒவ்வொன்றும் அந்தத் துறைகளில் முன்னணி வகிப்பவை என்பதைக் கவனிக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே பாரதிய ஜனதா கட்சியையும் காண வேண்டும்.

பாரதிய ஜனசங்கம் துவங்கியது பற்றிய குறிப்பு இந்நூலில் வருகிறது. ஆனால். மிக முக்கியமான ஒரு விஷயம் அதில் விடுபட்டுள்ளது. ஷ்யாம பிரசாத் முகர்ஜி தலைமையில் புதிய அரசியல் கட்சியை காங்கிரசுக்கு மாற்றாக துவங்குவது என்ற திட்டம் தீட்டப்பட்டவுடன், அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வல்கர், சங்கத்தில் இருந்த பயிற்சி பெற்ற தொண்டர்கள் பலரை முழுநேர ஊழியர்களாக அனுப்பி வைத்தார். அவர்களே, தீன தயாள் உபாத்யாய, நானாஜி தேஷ்முக், அடல் பிகாரி வாஜ்பாய், ஜகன்நாதராவ் ஜோஷி, லால் கிருஷ்ண அத்வானி, சுந்தர் சிங் பண்டாரி போன்றவர்கள். இவர்களது கடும் உழைப்பால் தான் ஜனசங்கம் மாற்றுக் கட்சியாக உருவெடுத்தது.

செல்லப்பிள்ளைகள் ஒருபோதும் எதிர்த்துப் பேசுவதில்லை என்ற (பக்:132) ஆசிரியரின் கருத்தை இந்தக் கோணத்தில் அணுகினால் சில விஷயங்கள் தெளிவாகும். அரசியலில் ஒரு மாற்று உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை ஆர்.எஸ்.எஸ்.சால் வெற்றிகரமாக சாதிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். என்றும் தலையிடுவதில்லை. நாகபுரிக்குத்தான் பிரதமர் வாஜ்பாயும் உள்துறை அமைச்சர் அத்வானியும் சென்றார்களே தவிர, நார்த் பிளாக்கிற்கோ, நாடாளுமன்றத்துக்கோ, பிரதமரின் அலுவலகத்துக்கோ என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சென்றதில்லை. அது அவர்களது வேலையுமில்லை. கிட்டத்தட்ட சத்ரபதி சிவாஜியின் சாம்ராஜ்யத்தில் சமர்த்த ராமதாசரின் செல்வாக்குடன் இதை ஒப்பிடலாம்.

ஆர்.எஸ்.எஸ். ஆண்டுதோறும் நடத்தும் ‘சமன்வய பைடக்’ எனப்படும் துணை அமைப்புகளின் கூட்டத்தில் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைக்க வாய்ப்பு உண்டு. அதில் பலத்த வாத பிரதிவாதங்கள் ஏற்படுவதுண்டு. குஜராத் குறித்து இந்த சமன்வய பைடக்கில் கடும் விவாதம் எழுந்தது, வெளியில் உள்ளோருக்குத் தெரியாது. நூலாசிரியர் ‘செல்லப்பிள்ளைகள்’ கருத்தை குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக ஸ்வயம்சேவகன் கவலைப்படமாட்டான். ஏனெனில் உண்மை என்றாவது வெல்லும் என்பது அவனுக்குத் தெரியும்.

சங்கம் ஸ்வயம்சேவகனிடம், குறிப்பாக பொதுநலப் பணியில் ஈடுபடும் தனது தொண்டனிடம் நேர்மையை வெகுவாக எதிர்பார்க்கிறது. சங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானத்துக்கு இதுவும் ஒரு காரணம். எனவேதான், ஊழல், லஞ்சப் புகார்கள் தொடர்பாக, பங்காரு லட்சுமணன், திலீப் சிங் ஜூதேவ், எடியூரப்பா ஆகியோரைப் பதவியிலிருந்து விளக்குமாறு பாஜகவுக்கு சங்கம் அறிவுறுத்தியது.

வேறெந்த அரசியல் கட்சிகளிலும் இத்தகைய வழிகாட்டுதல்கள் அவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. கட்சியினரை கட்டுப்படுத்தவும் வழியில்லை என்பது இந்திய அரசியலை கவனிக்கும் எவருக்கும் தெரியும்.

இன்னும் சில விடுபடல்கள்:

இந்தப் புத்தகம் அவசரமாக எழுதப்பட்டது போன்ற தோற்றம் காணப்படுகிறது. அதன் காரணமாக இந்த விடுபடல்கள் நிகழ்ந்திருக்கலாம்.

உதாரணமாக, பாரதீய ஜனசங்கத்தின் முன்னோடி தீன தயாள் உபாத்யாய, சங்கத்தின் நான்காவது தலைவர் ராஜேந்திர சிங் (இவர் பிராமணர் அல்ல), முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன்சிங் ஷெகாவத், தமிழகத்தின் சிவராம்ஜி ஜோக்லேகர் (இவரது பெயரில் ரத்தவங்கி செயல்படுகிறது), தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பலரது குறிப்புகளை இதில் சேர்த்திருக்க வேண்டும்.

சென்னையிலுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் வெடிகுண்டுகளால் சிதைக்கப்பட்டது (1993), அதில் 11 பேர் பலியானது. (*8) தமிழகத்தில் ஹிந்து உரிமைகளுக்காக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டது (*9), 1984 இந்திராகாந்தி படுகொலையைத் தொடர்ந்து நடந்த சீக்கியர் படுகொலைகளைத் தடுப்பதில் சங்கத்தின் பிரதானப் பாத்திரம், சுதேசி விழிப்புணர்வு இயக்கப் பணிகள், அயோத்தி இயக்கத்தின் நிகழ்வுகள் (சிலான்யாஸ், ராம்ஜோதி யாத்திரை, நீதிமன்ற நிகழ்வுகள்) போன்றவற்றை இன்னும் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கலாம். ஏனெனில் இவை அனைத்தும் நமது சமகாலத்துடன் தொடர்புடையவை.

மேற்படி நிகழ்வுகள் குறித்த நடுநிலையான பார்வையை பா.ராகவன் அடுத்த பதிப்பிலோ, புத்தகத்தின் அடுத்த பாகத்திலோ பதிவு செய்ய வேண்டும்.

அதேபோல, புத்தகத்தின் பெயர்ச்சொற்களில் பிழைகள் மலிந்து காணப்படுகின்றன. உதாரணங்கள்: அனுசிலான் சமிதி (அனுசீலன் சமிதி), ஜுகாந்தர் (யுகாந்தர்- விவேகானந்தரின் தம்பி பூபேந்திரர் நடத்தியது), திகம்பர் பாட்ஜே (திகம்பர் பாட்கே), யஸ்வந்த்ரோ கேல்கர் (யஷ்வந்த் ராவ் கேல்கர்), கோல்வால்கர் (கோல்வல்கர்), டி,பி. தெங்காடி (டி,பி.தெங்கடி), பிரிவுத் (ப்ரௌட- முதியோர்), மோப்லாஸ்தான் (மாப்ளாஸ்தான்- மாப்பிள்ளைமார் முஸ்லிம்கள் தொடர்பான பதம்)- போன்ற வார்த்தைகளை சொல்லலாம். பெயர்ச்சொற்களை எழுதும்போது, ஏற்கனவே புழக்கத்தில் உள்ளவற்றையே பயன்படுத்துவது பொதுவான மரபு.

இப்போது யாரும் ஜவாஹர்லால் நேரு என்று எழுதுவதில்லை. ‘ஜவஹர்லால்’ என்றே குறிப்பிடுகிறோம். rao – ராவ் ஆகுமே தவிர ‘ரோ’ ஆகாது (நினைவுக்கு: நரசிம்ம ராவ்).

sangh – என்பது ஹிந்தியில் சங்கத்தைக் குறிப்பது. அதை தாரளமாக ‘சங்கம்’ என்று எழுதலாம். ஆனால், இந்தப் புத்தகத்தில் RSS ‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்’ என்று பெயர் (பக்: 22) சிதைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் BMS , BKS ஆகியவை முறையே பாரதீய மஸ்தூர் சங்கம், பாரதீய கிசான் சங்கம் என்று சரியாகவே (பக்: 52) எழுதப்பட்டிருக்கின்றன. ஏன் இந்தக் குழப்பம்?

கிழக்கு பதிப்பகம் போன்ற பெரிய நூல் வெளியீட்டாளர்கள் பெயர்ச்சொற்களை குறிப்பிடுவதில் ஒரு தர நிர்ணயம் செய்துகொள்வது அவசியம். இதற்காகவே COPY EDITOR போன்றவர்கள் உள்ளனர். ஏனெனில், கிழக்குப் பதிப்பக புத்தகங்கள் வெறுமனே நேரம் போக்க (TIME PASSING) பயன்படுபவையாக அல்லாமல், எதிர்காலத் தலைமுறைக்கான ஆவணங்களாகத் திகழவும் வாய்ப்புள்ளவை. எனவே தான் கிழக்குப் பதிப்பகத்தின் பொறுப்பு கூடுதலாகிறது.

மொத்தத்தில், பா.ராகவன் தனது எழுத்துப் பணியில் ஓர் அரிய பணியாகக் கருதக்கூடியதாக இந்த புத்தகம் அமைந்துள்ளது. இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் கொடுத்து மேலும் பல தகவல்களைத் திரட்டினால் இந்த நூல் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். தற்போதைக்கு இந்நூலை ‘ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஓர் அறிமுக நூல்’ என்று சொல்லலாம்.

இக்கட்டுரையின் தலைப்பில் ‘அச்சத்துக்கும் ஆர்வத்துக்கும் இடையே’ பா.ராகவன் திணறி இருப்பதாக குறைகூறி இருந்தேன். ஏனெனில் சாதகமான பல தகவல்களுடன் பாதகமான தகவல்களைக் கொடுப்பதுதான் நடுநிலை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்ட விரும்பினேன்.

எந்த ஒரு மனிதருக்கும் இரு முகங்கள் இருப்பது போல எந்த ஓர் அமைப்புக்கும் இரு முகங்கள் இருக்கவே செய்யும். அவற்றை பதிவு செய்யும்போது பிறரது கருத்துகளுக்காக எழுத்தாளர் கவலைப்படக் கூடாது. ஆர்.எஸ்.எஸ்.சை பகடி செய்வதைவிட ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதுதான், அந்த அமைப்பு தன்னைத் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.

பொதுவில் பரப்பப்படும் அதே குற்றச்சாட்டுகளை ‘நடுநிலை’ என்ற பெயரில் மேலும் பதிவு செய்வது தேவையில்லை என்பதே எனது கருத்து. மற்றபடி பா.ராகவன் தனது ஒவ்வொரு கருத்தையும் வெளியிட உரிமை உள்ளவரே. அவருக்கு குறைந்தபட்சம் சிவராம்ஜியின் நல்லோர் வட்டம் (*10) குறித்த அறிமுகம் இருந்திருக்குமானால், அவரது நடுநிலை ‘நடுநிலை’யாகவே இருந்திருக்கும்.

மற்ற பதிப்பகங்கள் பதிப்பித்த ஆர்.எஸ்.எஸ். குறித்த புத்தகம் உள்ளது. அதை யாரும் தேடிச் சென்று வாங்குவதில்லை. ஏனெனில் அதை வெளியிட்டவர்களின் உள்நோக்கங்கள் அனைவரும் அறிந்தவை. கிழக்கு பதிப்பகம் அப்படியல்ல. அனைவருக்கும் பொதுவான ஒரு பதிப்பகம், நடுநிலையானது என்று கருதக் கூடிய பதிப்பகம் கிழக்குப் பதிப்பகம்.

எனவே அதனிடம் மேலும் நடுநிலையுடன், கூடுதலான தகல்களுடன், உறுதியான ஆதாரங்களுடன் ஆர்.எஸ்.எஸ். குறித்த இதைவிட சிறப்பான புத்தகத்தை எதிர்பார்க்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது.

- சேக்கிழான்


--------------------------------------
அடிக்குறிப்புகள்:

1 . நெருக்கடி நிலையை எதிர்த்து போராட்டம்- ராம.கோபாலன், ஜனசேவா பதிப்பகம், சென்னை, 1980

2 . ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள் – ஹொ.வெ.சேஷாத்ரி, கேசவர் பதிப்பகம், சென்னை, 1989 , பக்: 405

3 . நானாஜி தேஷ்முக்: http://en.wikipedia.org/wiki/Nanaji_Deshmukh

4 . ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள், பக்: 257 – 260

5 . எனது தேசம், எனது வாழ்க்கை- லால் கிருஷ்ண அத்வானி- அல்லையன்ஸ் பிரசுரம், சென்னை, 2010

6 . ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள், பக்: 260 – 262

7. http://en.wikipedia.org/wiki/Vasudhaiva_Kutumbakam

8 . http://en.wikipedia.org/wiki/1993_Chennai_bombing

9 . தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் – ஏ.பி.வி.பி. ஆய்வறிக்கை- 1999

10 . http://www.samanvaya.com/main/contentframes/work/fl-4th-2006.html



-----------------------------------
நன்றி: தமிழ் பேப்பர்




.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக