திங்கள், ஜனவரி 10, 2011

புளித்துப்போன பழைய கதையும்... ஆசை அடங்காத கிழட்டு நரியும்...

ஒரே ஒரு ஊரில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அந்த தோட்டத்திற்குள் ஒரு புத்திசாலி நரி நுழைந்தது. நரிக்கு திராட்சைப் பழங்கள் மீது கொள்ளை ஆசை. குதித்துக் குதித்து பழங்களைப் பறிக்க முயன்றது; கடைசிவரை எட்டவில்லை.
வேறு வழியின்றி நரி சொன்னது: ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’.

இந்தக்கதை பாலர்வகுப்பில் படித்தது. இதே கதையின் மற்றொரு ‘பின் நவீனத்துவ வடிவம்’ உள்ளது. ஏமாந்த புத்திசாலி நரி ஓநாயாக வேடம் போட்டு அதே திராட்சைத் தோட்டத்தில் நடத்திய நாடகம் பலரும் அறியாதது.
.
திராட்சையை ருசிக்க வேண்டுமானால் ஓநாயாக ஓலமிடத் தெரிய வேண்டும் என்பதை தாமதமாக உணர்ந்தாலும், கனகச்சித்தமாக மாற முடிந்தது கிழட்டு நரிக்கு. ஏனெனில் இது அரசியல் நரி. திராட்சைக் கனி கைக்கு எட்டும் தூரத்தில் தெரியும்போது, நரிக்கு உரித்தான புத்திசாலித்தனத்தை விட ஓநாய்க்கே உரிய ஆவேசம் தான் முக்கியம்.

திராட்சைத் தோட்டத்தில் நுழைந்த கிழட்டு நரியாக நமது மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சிறிது கற்பனை செய்து பாருங்கள். இந்தக் கதை எதற்கு என்பது புரியும்.

தற்போதைய காங்கிரஸ் கட்சி பழுத்துக் குலுங்கும் அதிகார திராட்சைத் தோட்டமாகவே காட்சி தருகிறது. இந்தக் கனிகள் மக்கள் ருசிக்க அல்ல; தோட்டத்தைக் காவல் காக்கும் நரிகள், ஓநாய்களுக்கானவை. கனிகளை ருசிக்க ஒரே தகுதி தோட்டக்காரியின் ஜென்மவைரியை முடிந்தவரை கடுமையாக தூஷித்து ஓலமிடுவதுதான். அதிகமாகத் தூஷிக்கும் ஓநாய்களுக்கு திராட்சைக்கனிகள் தாமாகவே கிடைக்கும். அதை சாப்பிடும்போதுதான் இது புளித்த திராட்சை அல்ல; மதுபோதை வீசும் அரிய கனி என்பது தெரியும்....

- நவீன பஞ்சதந்திரக் கதைகள் - வானவில் ஊழல் தொகுதி

*****

தற்போதைய மத்திய அரசில் சர்வரோக நிவாரணியாக இருப்பவர் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. கட்சி எல்லை கடந்த அரசியல் நாகரிகம் தெரிந்தவர், மிகவும் திறமையான அரசியல் சாணக்கியர், அடக்கத்தின் திருவுருவம், இனிய சொல்லர், பிரச்னைகளைத் தீர்ப்பதில் கில்லாடி, நாட்டின்மீது உண்மையாகவே அக்கறை கொண்ட தலைவர், அனுபவம் வாய்ந்த நாடாளுமன்ற நாவலர், நிதித்துறையில் வல்லுநர், மக்கள் பிரச்னைகளை நன்கு அறிந்து செயல்படுபவர்... என்றெல்லாம் நம்பப்படுபவர் முகர்ஜி.

தற்போது 75 வயதைக் கடக்கும் பிரணாப் முகர்ஜி சாதாரண ஆளில்லை. இவரது தந்தை வங்கத்தின் சிறந்த விடுதலைப் போராட்ட வீரரான கமதா கிங்கர் முகர்ஜி, நாட்டிற்காக பத்தாண்டுகள் சிறைப்பட்டவர். தேர்ந்த அரசியல் குடும்பத்திருந்து வந்த பிரணாப் முகர்ஜி, இந்திரா காந்தியின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தர். 1969 ல் மாநிலங்களவை உறுப்பினரான முகர்ஜியின் அரசியல் பயணம், 1984 வரை ஏறுமுகமாக இருந்தது. தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், இந்திரா அமைச்சரவையில் வருவாய் மற்றும் வங்கித் துறையின் இணை அமைச்சராக இருந்தார்.

நெருக்கடிநிலைக் காலத்தில் இந்திரா காந்தியின் நிழலாகக் கருதப்பட்ட சஞ்சய் காந்தியின் அதிகார அத்துமீறல்களுக்கு உதாரணமான மாருதி கார் நிறுவனத்திற்கு அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியத்தின் எதிர்ப்பை மீறி பொதுத்துறை வங்கியின் நிதியை (ரூ. 75 லட்சம்) மடைமாற்றியவர் முகர்ஜி. இதற்காக ஜனதா ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஷா கமிஷனால் விசாரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் முகர்ஜி.
.
அதிர்ஷ்டவசமாக, இந்திரா மீண்டும் பிரதமரானதால் ஷா கமிஷன் அறிக்கை குப்பைக்கூடையில் எறியப்பட்டது. அவரது பணிக்கு பரிசாக நிதியமைச்சர் பதவி இந்திராவால் வழங்கப்பட்டது (1982 -84 ) இது பலர் அறியாத முகர்ஜியின் மற்றொரு முகம்.

1984 ல் இந்திரா மறைவுக்குப் பின், ராஜீவ் காந்தியால் புறக்கணிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி, அதிருப்தி காரணமாக ராஷ்ட்ரீய சமாஜ்வாதி காங்கிரஸ் கட்சியை மேற்கு வங்கத்தில் துவங்கி, அம்மாநிலத்தில் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணமானார். பிறகு ராஜீவுடன் சமரசமாகி, 1989 ல் காங்கிரசில் இணைந்தார்.

ராஜீவ் மறைவுக்குப் பின், நரசிம்ம ராவ் ஆட்சியில் பிரணாபின் முக்கியத்துவம் பெருகியது. 1991 ல் மத்திய திட்ட கமிஷனின் துணைத் தலைவரான அவர், 1995- 96 ல் வெளிவிவகாரத் துறை அமைச்சரானார். அதன் பிறகு மீண்டும் ஏறுமுகம். அடுத்த காங்கிரஸ் அமைச்சரவைகளில் பாதுகாப்பு, நிதி, கப்பல் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்து, தகவல் தொடர்பு, பொருளாதார விவகாரம், வர்த்தகம், தொழில்துறைகளில் அமைச்சர் பொறுப்பு வகித்த முகர்ஜி, இயல்பாகவே அதிகாரபீடத்தின் இரண்டாம் நிலைக்கு உயர்ந்தார். 2004 முதல் மக்களவை உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல், கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதல், பெருமுதலாளிகளின் தலையீடுகள் நேரும்போதெல்லாம் சமய சஞ்சீவியாக கைக்குக் கை கொடுப்பவர் பிரணாப் முகர்ஜி தான். இந்திரா காலத்திலிருந்து இயங்கிவரும் அரசியல்வாதிகளில் இன்றும் துடிப்புடன் செயல்படுபவர் இவர் மட்டுமே. ஆயினும், பிரதமர் பதவி இவரை மீறி கட்சியில் எந்த அடித்தளமும் இல்லாத மன்மோகன் சிங்கிற்கு சென்றது முகர்ஜிக்கு ஏமாற்றமே.

சஞ்சய் காந்தியின் விசுவாசியாக முற்காலத்தில் இருந்த பாவத்தால் (அன்னை சோனியா அறியாத ரகசியமா?), பிரதமர் பதவி என்ற உச்சபட்சப் பதவி அவருக்கு இன்னும் கனவாகவே உள்ளது. ஆனால், மனம் தளாராமல், 'கடமை'யாற்றி வருகிறார் - முகர்ஜி, என்றாவது ஒருநாள் பிரதமர் ஆவோம் என்ற கனவில்.

*****

சமீப காலமாக முகர்ஜியின் பேச்சுக்கள் அனைத்தும் சர்ச்சையை ஏற்படுத்துபவையாக மாறி வருகின்றன. அரசியல் நாகரீகம் மறந்து பிரதான எதிர்க்கட்சியை வசை பாடுவதில் மற்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் போட்டியிடுகிறார் முகர்ஜி. அண்மையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், காவித் தீவிரவாதம் குறித்து முகர்ஜி தீர்மானம் கொண்டுவந்தபோது, அவர் ஏதோ தீர்மானித்துவிட்டது தெரிந்தது. அலட்டல் பேர்வழியான திக்விஜய் சிங்கையும், அதிபுத்திசாலி ப.சி.யையும் இந்த தீர்மானம் மூலமாக முந்தினார் முகர்ஜி.

அடுத்து, வானவில் ஊழலில் தடுமாறும் கட்சியைக் கரைசேர்க்க, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடுவதாக அங்கலாய்த்து, கட்சியினருக்கு புது விளக்கம் கொடுத்தார். வாஜ்பாய் ஆட்சியிலேயே அலைக்கற்றை மோசடி துவங்கிவிட்டதாகக் கூறி அதனால் ஒரு லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவித்தார் முகர்ஜி. இது வாயாடும் அமைச்சர் கபில் சிபலை வெல்லவே என்பதை சொல்லத் தேவையில்லை.

இத்தனைநாள் இந்த ரகசியத்தை ஏன் முகர்ஜி சொல்லவில்லை என்று எந்த ஊடக மேதாவியும் கேட்கவில்லை; முகர்ஜியும் சொல்லவில்லை. ஆயினும் முகர்ஜி சொன்னால் மறுப்பேது? இனி ஸ்பெக்ட்ரம் ராசாவை விட்டுவிட்டு மறைந்த பிரமோத் மகாஜன் மீது வழக்கு போட வேண்டியதுதானே மத்திய புலனாய்வு அமைப்பின் கடமை? சொன்னது சொன்னபடி செய்தி வெளியிட்டு ‘காங்கிரஸ் சேவகம்’ செய்வதுதானே ஊடகங்களின் கடமை?

அடுத்து, ‘நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் ஆஜராக தயார்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் உணர்ச்சிவசப்பட்டு (?) காங்கிரஸ் மாநாட்டில் அறிவித்ததைக் கண்டித்திருக்கிறார் முகர்ஜி. வானவில் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைக் கோரும் எதிர்க்கட்சிகளை முடக்க மன்மோகன் விடுத்த விண்ணப்பத்தையும் கூட, அவரைவிட அதிகாரம் படைத்தவர் போல விமர்சித்திருக்கிறார் முகர்ஜி.

இது தொடர்பாக பிரதமர் தன்னிடம் கலந்தாலோசித்திருந்தால் வேண்டாம் என்று கூறி இருப்பாராம். ஏனெனில் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு மட்டுமே பதில் கூற கடமைப்பட்டவராம். பொது கணக்குக் குழுவுக்கும் கூட்டுக் குழுவுக்கும் நாடாளுமன்றத்துடன் தொடர்பில்லை என்பதுபோல புது விளக்கம் அளித்திருக்கிறார் பிரணாப். வாய் பேசாத பிரதமர் மன்மோகன், வழக்கம்போல வாய்பேசவில்லை.

''நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்ன வானத்தில் இருந்தா குதித்தது?'' என்றும் அற்புதமான கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்- குதர்க்க செய்தி தொடர்பாளர் சதுர்வேதிக்கு போட்டியாக- முகர்ஜி. ''நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் காங்கிரஸ் தான் பொறுப்பு வகிக்கும். அதில் என்ன உண்மையை எதிர்க்கட்சிகள் கண்டுபிடிக்கும்?'' என்றும் வினா எழுப்பினார் முகர்ஜி. சிக்கலான நேரத்திலும் உண்மையை மனம்திறந்து சொல்ல மனத்துணிவு வேண்டும். அது தன்னிடம் இருப்பதை முகர்ஜி நிரூபித்திருக்கிறார்.

இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்குள் முட்டாள்தனமாக பேசுவதில் வல்லவர் யார் என்ற போட்டி நிலவுகிறது. இதில் முதலிடம் பெறுபவருக்கே அன்னை சோனியாவின் அருள் கிடைக்கும். விரைவில் மன்மோகன் சிங் பதவி விலகலாம் (அவர் மானஸ்தராம்!) என்ற யூகங்கள் கிளம்பியுள்ள நிலையில், இந்தப் போட்டியில் முன்னணி வகிக்கிறார் முகர்ஜி. பொதுத்துறை வங்கி நிதியை அதிகாரபீடத்தின் விருப்பத்திற்காக மடை மாற்றியதில் அனுபவம் வாய்ந்த முகர்ஜிக்கு விரைவில் உச்சபட்ச பதவி கிடைக்கக் கூடும். அதற்காகத் தானே இந்த நாடகம் எல்லாம் நடத்துவது?

இதனிடையே, மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்- திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி வென்றால் பிரணாப் முகர்ஜி தான் முதல்வர் என்று செய்திகள் கசியவிடப்படுகின்றன. இது முதல்வர் கனவில் இருக்கும் மம்தாவை முடக்கவா? பிரதமர் கனவில் இருக்கும் முகர்ஜியை முடக்கவா? அன்னை சோனியாவுக்கே வெளிச்சம்.

------------------------------
நன்றி: விஜயபாரதம் (21.01.2011)

1 கருத்து: