வியாழன், ஆகஸ்ட் 26, 2010

இனியவை இருபதும் இன்னா இருபதும் : பகுதி - 2

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு அம்சங்களை (இனியவை இருபது) சென்ற பகுதியில் கண்டோம். எந்த ஒரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உள்ளன. அதுபோல, செம்மொழி மாநாட்டின் மறுபுறமான 'இன்னா இருபது' குறித்து இங்கு காண்போம்.

இன்னா இருபது:

1. 'முதல் கோணல் முற்றும் கோணல்' என்ற பழமொழி உண்டு. அது, செம்மொழி மாநாட்டில் உண்மையாயிற்று. இலங்கையில் தமிழர்கள்மீது அந்நாட்டு அரசு கடுமையான போரை நடத்தி விடுதலைப்புலிகளை முற்றிலும் நசுக்கி ஒழித்த சமயம், தமிழகத்தில் உணர்ச்சிகரமான சூழல் இருந்தது. அச்சூழலை மாற்ற, முதல்வர் கருணாநிதி உள்ளத்தில் தோன்றிய சிந்தனைதான் உலகத் தமிழ் மாநாடு. இதுவரை எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் நடந்துள்ள நிலையில், ஒன்பதாவது மாநாடு நடத்துவதாக தன்னிச்சையாக அறிவித்தார் கருணாநிதி.
ஆனால் இம்மாநாட்டைத் தமிழக அரசு நேரடியாக நடத்த முடியாது என்பதை, உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தற்போதைய தலைவரான ஜப்பானைச் சேர்ந்த நொகுருபு கரசிமாவின் எதிர்ப்பு உணர்த்தியது. உலகத் தமிழ் மாநாடு நடத்தும் சூழல் (ஈழத்தில் லட்சக் கணக்கான தமிழர்கள் பலியான நிலையில்) தற்போது இல்லை என்று அவர் கூறிவிட்டார்.
உலகத் தமிழ் ஆராய்சிக் கழகம் நடத்த வேண்டிய மாநாட்டை தமிழக அரசு நடத்துவதாக அறிவித்ததே முதல்வரின் அறியாமையை வெளிப்படுத்திவிட்டது. நொகுருபு கரசிமாவின் நெஞ்சுரம் மிக்க எதிர்ப்பால் தத்தளித்த முதல்வர் கருணாநிதி, வேறு வழியின்றி அறிவித்ததே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.
உலகத் தமிழ் ஆராய்சிக் கழகத்தின் கட்டுப்பாடின்றி, முதல்வரின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டதால், மாநாடு முழுமையும் கருணாநிதியின் மற்றொரு கழக மாநாடாக மாற்றப்பட்டது.

2. உலகம் முழுவதிலும் இருந்து தமிழர்கள் இம்மாநாட்டில் பங்கேற்ற போதும், உலக நாடுகளில் தமிழர்கள் சந்திக்கும் இன்னல்களை வெளிப்படையாக முன்வைக்க மாநாட்டில் எந்த ஏற்பாடும் இல்லை. குறிப்பாக இலங்கை, மலேசியா வாழ் தமிழர்கள், பல நிபந்தனைகளுக்கு உட்பட்டே மாநாட்டில் அனுமதிக்கப்பட்டார்கள். எனவே, அம்மக்களின் துயரங்கள் மாநாட்டில் பதிவாகவில்லை.

3. செம்மொழி மாநாட்டில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்ற போதும், முன்னாள் ஜனாதிபதியும் மக்கள் தலைவருமான அப்துல் கலாம் மாநாட்டிற்கு அழைக்கப்படாதது நெருடலை ஏற்படுத்துகிறது. தமிழகத்தின் மரியாதைக்குரிய தலைமகனை செம்மொழி மாநாடு புறக்கணித்திருக்கக் கூடாது.

4. சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று கூறும் பின்லாந்து அறிஞர் அஸ்கோ பர்போலோவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. செல்லாக்காசு என மாறிவிட்ட ஆரிய திμõவிட கொள்கைகளை மீட்டுருவாக்க, முயற்சி நடந்தது. பர்போலோவுக்கு வழங்கப்பட்ட விருதின் பெயர் 'கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது'! கருணாநிதியின் சுயபுராண ஆர்வத்துக்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது. இவ்விருதுக்கு வேறு பெயரே கிடைக்கவில்லையா?

5. திராவிட மாயையில் கருணாநிதி உழன்ற போதும், தென்மாநில ஆட்சியாளர்களில் வேறு எவரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. கருணாநிதி கூறும் திராவிடத்திலுள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில ஆட்சிப் பொறுப்பிலுள்ள யாரும் இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைக்கப்படவில்லை (கூட்டணி அμசியல்?). முந்தைய உலகத் தமிழ் மாநாடுகளில் பிற மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டில் முதல்வர் கருணாநிதியே அனைவருமாகத் திகழ்ந்தார்.

6. இந்தியா ஜனநாயக நாடு. பேச்சுரிமை, எழுத்துரிமை, பிரசார உரிமைகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்கிறது நமது அμசியல் சாசனம். ஆனால், 'செம்மொழி மாநாடு தேவையா?' என்று துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்த ஆறுபேர் கோவையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாநாட்டைக் குலைக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டது. அரசு இயந்திரம் மூலமாக ஜனநாயக உரிமைகளை நசுக்கி, மாநாட்டில் குதூகலிக்க வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுகிறது.

7. செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் வளர்ச்சிப் பணிகள் அதிவேகமாகச் செய்யப்பட்டன. இதற்காக கணக்கின்றி செலவிடப்பட்டது. மாநாட்டுக்கு ரூ. 68 கோடி செலவானதாக, முதல்வர் கூறியுள்ளார். உண்மையில் இதைவிட பல மடங்கு நிதி செலவிடப்பட்டுள்ளது. மாநாட்டுப் பந்தலின் தோரண வாயிலே (இது கின்னஸ் சாதனைக்கு அனுப்பப்படுகிறது) பல கோடி செலவில் அமைக்கப்பட்டது.
தவிர, நெடுஞ்சாலைத்துறை (ரூ. 300 கோடி), கோவை மாநகராட்சி (ரூ. 150 கோடி) ஆகியவையும் செலவிட்டுள்ளன. மிகப் பொருட்செலவில், மாநாடு நடத்திவிட்டு, செலவினத்தைக் குறைத்துக் காட்டுவது, தமிழக அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

8. மாநாட்டை முன்னிட்டுச் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளில் பல, அவசரக் கோலத்தில் தரமின்றி நிறைவேற்றப்பட்டன. சாலைகள் தவிர, பிற பணிகள் எதிலும் நிறைவில்லை. தேவையற்ற இடங்களிலும் நடைபாதை மேடை அமைத்து அரசு நிதி வீணடிக்கப்பட்டது. பூங்கா அமைப்பதாகக் கூறி பல இடங்களில் செயற்கைப் புல்தரைகளும், வேரோடு பிடுங்கி நடப்பட்ட மரங்களும் காட்சி அளிக்கின்றன. இவை 6 மாத காலம் பிழைத்திருந்தாலே அதிசயம் தான். 'வளர்ச்சி'ப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் நன்கு வளர்ந்திருப்பார்கள் என்று நம்பலாம்.

9. செம்மொழி மாநாட்டுக்காக முதல்வர் கருணாநிதி எழுதியதாகக் கூறி பிரபலப்படுத்தப்பட்ட பாடல் ஒரு பிதற்றல். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிட்ட சில வரிகளை இச்சைப்படித் தொகுத்து, 'மாநாட்டின் மையநோக்குப் பாடல்' என்று விளம்பரப்படுத்தியது உச்சகட்ட பகடி. இதற்கு பிரபல இசையமைப்பாளர் ரகுமான் இசையமைத்து, 23 பாடகர்கள் பாடிக் குதறி, இயக்குநர் கௌதம் மேனன் காட்சிப்படுத்தி, அதைக் கண்டு குதூகலித்த மக்களை நினைந்தால், 'நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்' என்று பாடத் தோன்றுகிறது. சாகாக் கவிதைகளைப் படைத்த வள்ளுவன், கம்பன், பாரதி உள்ளிட்ட அனைவரையும் ஒரே 'கவிதை'யில் கேவலப்படுத்த கலைஞரால் முடிந்திருக்கிறது; வேதனை.

10. செம்மொழி மாநாட்டில் மிக முக்கிய அங்கம் வகித்தவை ஆய்வரங்கங்கள். 23 அரங்குகளில், 55 தலைப்புகளில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர். ஆனால், ஆய்வுஅறிஞர்களைத் தவிர, இதைக் கேட்கவும் ஆளில்லை. மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம், ஆய்வரங்குகளோ காற்று வாங்கின.
ஆய்வரங்குகளை மக்களை அனுமதிப்பது அரசுக்கு எதிரான பிரசாரத்திற்கு உதவிடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கையே இதற்கு காரணம். இதன் விளைவாக, ஆய்வரங்குகளை பயன்படுத்தி இருக்கக்கூடிய கல்லூரி மாணவர்களும் வாய்ப்புகளை இழந்தனர்; 'கற்றலின் கேட்டலே நன்று' என்பது பொய்த்துப் போனது.

11. மாநாட்டின் பார்வையாளர்களுக்கான முதல் வரிசையில் முதல்வர் குடும்பத்தினரே ஆதிக்கம் செலுத்தினர். மனைவி, துணைவி, மக்கள் மருமக்கள், பேரன் -பேத்திகள் ராஜபோகமாக அமர்ந்திருந்த காட்சியே கண்கொள்ளாக் காட்சி. ராஜராஜ சோழனும், மதுரை மீட்ட சுந்தர பாண்டியனும் கூட தர்பாரில் இவ்வாறு குடும்பத்தை அமரச் செய்து அழகு பார்த்திருக்க மாட்டார்கள். வாழ்க, மக்களாட்சி!

12. செம்மொழி மாநாட்டின் இரு பெரும் 'சிறப்புக்கள்' என்று, முதல்வரின் பேத்தி எழிலரசி ஜோதிமணியின் வீணை இசை, மற்றொரு பேத்தியாம் கவிதாயினி கயல்விழியின் கவிதை ஆகியவற்றைச் சொல்லலாம். முதல்வரின் வாரிசுகள் என்பதாலேயே, மாநாட்டில் வாய்ப்பு பெற்ற இவர்கள் பூர்வ புண்ணியம் செய்தவர்கள். வாழ்க அனைவருக்குமான மக்கள் நல அரசு!
தவிர, முதல்வரின் மகள் கனிமொழி, அவருடன் மத்திய அமைச்சர் ராசா, மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோர் எல்லா இடங்களிலும் நீக்கமறத் தென்பட்டார்கள். உடன்பிறப்புகள் கைதட்டி மகிழ்ந்தார்கள்.

13. மாநாட்டில் இடம் பெற்ற கவியரங்கங்கள் 'காக்காய்' அரங்கங்களாகவே காட்சி அளித்தன. வைரமுத்து தலைமையிலான 'கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்' கவியரங்கம், முதல்வரை மன்னவன், தென்னவன் எனப் புகழ்ந்தது. வாலி தலைமையிலான 'தமிழுக்கும் அமுதென்று பேர்' கவியரங்கமோ, ஜெயலலிதாவை வசைபாடி கருணாநிதியின் கருணைமழையில் நனைந்தது.
வாலி தலைமையில் நடந்த கவியரங்கில் பாடிய தணிகைச்செல்வன் என்பவர், அயோத்தி ராமனை கேவலப்படுத்தினார் (அயோத்தி ராமன் அயோக்கிய ராமனாம்; அது சீதைக்கும் பெரியாருக்கும் தான் தெரியுமாம்!) வழக்கம் போல கைதட்டியது பகுத்தறிவற்ற கழக ஜால்ரா கூட்டம். வேடிக்கை பார்த்தார், பிற மதங்களை மதிக்கும் முதல்வர் கருணாநிதி.
.
14. தமிழ் செம்மொழி என்ற தகுதியை அடைய பக்தி இலக்கியங்களும் ஒரு காரணமாக இருந்துள்ளன. தொடர் இலக்கிய நீரோட்டத்தை உறுதி செய்ததில், பன்னிரு சைவத் திருமுறைகளுக்கும், வைணவர்களின் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கும், கம்பராமாயணம், பெரிய புராணம், திருவருட்பா போன்ற அருளாளர்களின் நூல்களுக்கும் பெரும் பங்குண்டு. எனவே, செம்மொழி மாநாட்டில் ஆன்மிக இலக்கியங்களுக்கு இடமளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன் உள்ளிட்டவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. மாநாட்டில் 2ம் நாள் நிகழ்ந்த கருத்தரங்கிலும் (சமயம் வளர்த்த தமிழ்) மதச்சார்பின்மை பேணுவதே குறிக்கோளாகக் காணப்பட்டது. பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் தலைமை வகித்தும், சிறுபான்மை மதத்தினரே முன்னிலைப்படுத்தப் பட்டனர். இதே போக்கு ஆய்வரங்குகளிலும் காணப்பட்டது. இந்து சமயம் சார்ந்த இலக்கியங்களை முன்னிறுத்தி சிலர் ஆய்வுகளை சமர்ப்பித்தபோதும், அவை தனிப்பட்ட முயற்சிகளே. அரசின் பாராமுகத்தால், அரிய தமிழ் இலக்கியங்கள்- சமயம் சார்ந்தவை என்பதால்- இம்மாநாட்டில் உரிய கௌரவத்தைப் பெறவில்லை.
தமிழ் இலக்கியங்களின் செழுமையான பகுதி, சைவ வைணவ (இந்து என்று மாநாட்டில் குறிப்பிடப்படவில்லை) தாக்கம் பெற்றுள்ள நிலையில், சீறாப்புராணத்தையும் தேம்பாவணியையும் இரட்சணிய யாத்ரீகத்தையும், அவற்றுடன் இணையெனக் கொள்வது அறியாமையல்ல; அரசியல்.
.
15. செம்மொழி மாநாட்டுக்காக தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது தேவையற்றது. அது போலவே அரசு ஊழியர்களுக்கு 3 நாட்கள் தற்செயல் விடுப்புஅளித்தது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சநிலை. ஜூன் 23 முதல் ஜூன் 27 வரை, தமிழகம் முழுவதும் எந்த அரசு அலுவலகமும் இயங்கவில்லை. இந்த நடைமுறை நல்லதல்ல.

16. செம்மொழி மாநாட்டையொட்டி பெரும்பாலான அரசுத் துறை செயலர்கள், அமைச்சர்கள் கோவையிலேயே ஒருமாத காலத்துக்கு முகாமிட்டனர். இதன் காரணமாக அரசு அலுவல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அரசுக் கோப்புகள் தேங்கின. ஐந்து நாட்கள் நடைபெறும் ஒரு மாநாட்டுக்காக அரசு இயந்திரம் நிலை குலைந்திருக்கிறது. இது நல்ல முன்னுதாரணம் அல்ல.
செம்மொழி மாநாட்டுடன் நேரடித் தொடர்பு இல்லாவிடிலும், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்ததும், அரசு இயந்திரமே கோவைக்கு மடை மாறியதும் மிக அதீதம்.

17. செம்மொழி மாநாடு நடைபெறும் நாட்களில் மட்டும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையும் அரசால் கண்டு கொள்ளப்படவில்லை. மாறாக, மாநாட்டில் குவியும் கூட்டத்தை உத்தேசித்து 'டாஸ்மாக்' கடைகளில் சரக்கு இருப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. இதன் விளைவாக, செம்மொழி மாநாட்டின் மாலை வேளைகளில் 'தமிழ்' இளைஞர்கள் உற்சாக பான உலா வந்ததைக் காண முடிந்தது. 'டாஸ்மாக்' கடைகளில் சரக்கு கூடுதல் விலைக்கு விற்றுத் தீர்ந்தது.

18. மாநாட்டில் கூட்டம் அதிகமாகக் காட்டுவதற்காக தி.மு.க.வினர் மாநிலம் முழுவதிலும் இருந்து இலவசமாக அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் தங்குவதற்கு திருமண மண்டபங்கள் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டன. கோவையின் அனைத்து தாங்கும் விடுதிகளும் பிரமுகர்களுக்காக அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தச் செலவினங்கள் யார் கணக்கு என்பது முதல்வருக்கே வெளிச்சம்.

19. தமிழின் தற்காலத்து முன்னணி எழுத்தாளர்கள் எவரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை; அவர்கள் அரசால் புறக்கணிக்கப்பட்டனர்; அதே சமயம் மாநாட்டை அவர்களும் புறக்கணித்தனர். நவீனத் தமிழ் இலக்கிய ஆளுமைகளான அசோகமித்திரன், ஞானி, ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்றவர்களைத் தவிர்த்துவிட்டு, தற்கால இலக்கிய நடையை எவ்வாறு அனுமானிப்பது? செம்மொழி மாநாடு ஜால்ராக்கள் மற்றும் தாசர்களின் ஆய்வுகளையும் அபத்தங்களையும் மட்டுமே பிரகடனப்படுத்தியுள்ளது என்பதற்கு இத்தகு புறக்கணிப்பு சரியான உதாரணம்.
.
20. தி.மு.க. மாநாடாகத் தோற்றம் அளித்துவிடக் கூடாது என்று தொண்டர்களுக்கு ஆணையிட்ட முதல்வர் கருணாநிதி, அந்தக் கட்டுப்பாட்டை தனக்கும் விதித்துக் கொள்ள மறந்துவிட்டார். இதன் விளைவாக, மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலோரின் புகழ்மாலைகளில் அவர் மகிழ்வுடன் மிதந்தார். தி.மு.க. என்பது, திருக்குவளை முத்துவேல் ருணாநிதி என்றாகிவிட்ட பிறகு தி.மு.க.வை முன்னிலைப்படுத்துவது வேறு, முதல்வர் கருணாநிதியைப் போற்றுவது வேறல்ல; இது சிறு குழந்தைக்கும் தெரியும்.
போதைகளில் மிக மோசமானது புகழ் போதை. இந்த போதைக் கடலில் முதல்வர் மிதந்தார். அவர் அழைத்து மேடையில் ஏற்றிய எடுபிடிகளும் தங்கள் கடமையைச் செவ்வனே செய்தனர். மாபெரும் இலக்கியங்களைப் படைத்த தமிழ்ப் புலவர்களும் கூடத் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டதில்லை. அதையும் செய்ய கருணாநிதி தயங்கவில்லை.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை என்பது உள்ளிட்ட ஆர்ப்பாட்டமான தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ளன. தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு அரசு உதவி என்பது போலவே இந்தத் தீர்மானமும் காணப்படுகிறது. மொத்தத்தில் செம்மொழி மாநாடு கருணாநிதியின் புகழ்பாடும் மாநாடாக, அவரது அரசியலுக்கு வலுக்கூட்டும் மாநாடாகவே காட்சி அளித்தது.
---------------------------------------
நன்றி: விஜயபாரதம் (23.07.2010).
--------------------------------------------------------------------------------------------
பெட்டிச் செய்தி

பட்டிமன்றம் முடியும் நேரம்...

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இனியவை இருபதும் உண்டு; இன்னா இருபதும் உண்டு. எனில் இந்த மாநாட்டின் விளைவுகள் தமிழ்கூறு நல்லுலகம் மீது செலுத்தப்போகும் தாக்கம் என்ன? இக் கேள்வி தவிர்க்க இயலாதது.

நாணயத்தின் இரு பக்கங்களாக மாநாட்டின் சாதக - பாதகங்கள் இருப்பினும், நாணயத்தின் நிகழ்தகவில், ஏதாவது ஒருபுறமே சாத்தியம். 'நாணயமான' தீர்வுகள் ஒருபாற் கோடலில் சாத்தியப்படாது.

இங்கு சமண் செய்து சீர்தூக்கும் துலாக்கோலின் இருபுறமும் அமுதமாகிய 'இனியவை'யும், விஷமாகிய 'இன்னா'வும் இருக்கின்றன. இரண்டும் இணைந்த மாநாட்டில் எது முதன்மை பெற இயலும்?

அமுதமும் விஷமும் கலந்த கலவையை எங்ஙனம் பிரிப்பது? அமுதம் நல்லதே; எனினும் அதில் ஒரு துளி விஷம் சேரிடினும் அனைத்தும் விஷமே. இங்கோ சரிபாதி விஷம். பிறகு, மாநாட்டின் அமுதம் எவ்வாறு நன்மை தரும்?

இதுவே, தமிழக முதல்வர் கருணாநிதி கோவையில் நிகழ்த்திய உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த இறுதி முடிவாக அமையும். இதனை காலம் நிரூபிக்கும்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக