சனி, மே 05, 2012

தொடர்ந்து சரியும் காங்கிரஸ் செல்வாக்கு


மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை கட்டியம் கூறுகின்றன, பல்வேறு மாநிலங்களில் தத்தளிக்கும் காங்கிரஸ் மாநில அரசுகள். 'விநாச காலே விபரீத புத்தி' என்று சொல்வது போல, மத்திய கூட்டணி அரசின் பிரதானக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்குள் நடந்துவரும் களேபரங்கள் அதன் உறுதிப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளன.

அண்மையில் நடந்த டில்லி மாநகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் பூசல்கள் வெளிவரத் துவங்கி உள்ளன. டில்லி மாநகராட்சியை பாஜக தான் முன்னரும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதை உடைக்க, டில்லி மாநகராட்சியை மூன்றாகப் பிரித்து லாபம் காண முயன்ற காங்கிரசின் சதி வெற்றி பெறவில்லை. முன்னர் ஒரே மேயருடன் இருந்த பாஜக இன்று கிழக்கு டில்லி, தெற்கு டில்லி, வடக்கு டில்லி என மூன்று மாநகராட்சிகளின் மேயர்களைப் பெற்றுள்ளது. மூன்று மாநகராட்சிகளிலும் சேர்த்து மொத்தமுள்ள 276 உறுப்பினர்களில் சரிபாதியை 138 பெற்றுள்ளது பாஜக. காங்கிரஸ் கட்சிக்கு 78 உறுப்பினர்களே கிடைத்துள்ளனர்.

இந்தத் தோல்வியால், டில்லியில் அசைக்க முடியாத முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தின் பதவி ஆட்டம் கண்டுள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக முதல்வராக உள்ள ஷீலாவுக்கு அடுத்த ஆண்டு நிகழ உள்ள தேர்தல் கண்டிப்பாக இனிப்பாக இராது. அதற்கேற்ப, ஷீலாவை மாற்றக் கோரி கட்சிக்குள் கோஷ்டிக் குரல்கள் எழத் துவங்கி உள்ளன.

டில்லிக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் கவலை அளிக்கும் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் மாறி உள்ளது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இம்மாநிலத்தில் உள்ள 43 எம்பி தொகுதிகளில் 33 ஐக் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, அடுத்த தேர்தலில் 3 தொகுதிகளில் வென்றாலே அதிசயம் என்ற நிலை நேரிட்டிருக்கிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் நடத்தும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும், தெலுங்கானா பகுதியில் வீச்சுடன் செயல்படும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியும் காரணமாகின்றன.

ஒருகாலத்தில் காங்கிரஸ் கட்சியின் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய ராஜசேகர ரெட்டி இன்று ‘கிறிஸ்தவர்’ என்று காங்கிரஸ் கட்சியாலே தூற்றப்படும் நிலைக்கு ஆளானதற்கு, திருப்பதி ஏழுமலையான் தான் காரணம் என்று சொல்ல வேண்டும். அவர் முதல்வராக இருந்தபோது, திருப்பதி மலையையே வளைக்க முயன்றதும், அதற்கு காங்கிரஸ் லாவணி பாடியதும் யாராலும் மறக்க முடியாது. ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த ராஜசேகர ரெட்டிக்கு பதிலாக தன்னை முதல்வர் ஆக்குவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்த அவரது மகன், இன்று காங்கிரஸ் கட்சியின் கண்ணில் துரும்பாக மாறி இருக்கிறார். ஜெகன்மோகன் பின்னால் அணிதிரண்ட எம்எல்ஏக்களை பலவாறு மிரட்டி வழிக்குக் கொண்டுவந்த காங்கிரஸ் தலைமையால், அவர்களது அதிருப்தியை முழுமையாக சரிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், தெலுங்கானா தனி மாநிலத்துக்காகப் போராடும் சந்திரசேகர ராவின் செல்வாக்கு அந்தப் பகுதியில் காங்கிரசுக்கு முற்றிலும் புதைகுழியைத் தோண்டிவிட்டது. அடுத்த தேர்தலில் தெலுங்கானா பகுதியில் டிஆர்எஸ்- பாஜக கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. தெலுங்கானா விஷயத்தில் காங்கிரஸ் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது என்ற கருத்து பரவலாக பதிந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியால் முதல்வராகத் திணிக்கப்பட்ட கிரண்குமார் ரெட்டிக்கு ஜெகன்மோகனுடனும், சந்திரசேகர ராவுடனும் மோதவே நேரம் போதவில்லை. மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி ஆகிவிட்டது. கட்சிக்குள்ளும் கட்டுப்பாடு இல்லை. ஆளும் திறனற்ற கிரண்குமாருக்கு எதிராக கட்சித்தலைமைக்கு புகார் கூறவே கட்சினருக்கு நேரம் போதவில்லை. சரியும் செல்வாக்கை நிலைநிறுத்த கட்சிக்குள் கொண்டுவரப்பட்ட பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவரும் நடிகருமான சிரஞ்சீவியால் மேலும் சிக்கல் தான் காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. அநேகமாக ஓரிரு மாதங்களில் முதல்வர் மாற்றப்படலாம். என்டிஆர் மகள் புரந்தரேஸ்வரி, சிரஞ்சீவி ஆகியோரில் ஒருவர் முதல்வராகக் கூடும். ஆனாலும் பயன் விலையைப் போவதில்லை என்பதே இன்றைய நிலவரம்.

அடுத்த கவலைக்குரிய பிரதேசம் மகாராஷ்டிரா. அங்கு காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆள்கிறது. ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய அசோக் சவாண் பதவி விலகினார்; அதனால் பிரித்விராஜ் சவாண் முதல்வரானார். இவருக்கும் ஆதர்ஷ் ஊழலில் தொடர்புள்ளது குறித்த கேள்விக்கு 'சிங்க்வித்தனமாக' பதில் அளிக்கிறது காங்கிரஸ். (சிங்க்வித்தனம் என்றால் என்ன தெரியுமா? அதிகப் பிரசங்கித் தனமும், அப்பாவித்தனமும் கலந்த காக்டெயில் மிக்சர் அது).

இம்மாநிலத்தில் உள்ள எம்பிக்களின் எண்ணிக்கை 48. இதில் 25 இடங்களை சென்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வென்றது. இப்போது நிலைமை திருப்தி இல்லை. சிவசேனா- பாஜக கூட்டணிக்கு செல்வாக்கு பெருகி வருவதை மும்பை மாநகராட்சித் தேர்தலும் கட்டியம் கூறிவிட்டது. போதாக்குறைக்கு ராமதாஸ் அதவாலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியும் பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டது. இதுவெல்லாம் போதாதென்று, காங்கிரஸ் கட்சிக்குள்ளும் முதல்வரை மாற்றக் கோரி யுத்தம் துவங்கிவிட்டது.

காங்கிரசின் நம்பிக்கை நட்சத்திரமான அசோக் கெலாட்டுக்கும் ராஜஸ்தானில் சிக்கல். அவருக்கு எதிராக 22 எம்எல்ஏக்கள் மத்திய அமைச்சர் சி.பி.ஜோஷி தலைமையில் அணிவகுத்திருக்கிறார்கள். கெலாட் தன்னிச்சையாக செயல்படுவதாக அதிருப்தியாளர்கள் குமுறுகிறார்கள். இப்போதைக்கு கட்சித் தலைமை அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால், குஜ்ஜார் விவகாரம், ஊழல் பிரச்னைகள் என பலமுனைகளில் அதிருப்தியைச் சந்தித்துள்ள கெலாட், அடுத்த தேர்தல் வரை முதல்வராக நீடிப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. 25 எம்பிக்களைக் கொண்ட இம்மாநிலத்தில் 18 இடங்களை வென்ற காங்கிரஸ் அடுத்த தேர்தலில் இதில் சரிபாதியை வெல்லவே கடுமையாகப் போராட வேண்டி இருக்கும்.

அண்மையில் நடந்த உத்தர்காண்ட் சட்டசபைத் தேர்தலில் 70 க்கு 32 இடங்களில் வென்று பாஜகவை ஒரே எண்ணில் முந்திய காங்கிரஸ், இப்போது ஏன்தான் ஆட்சி அமைத்தோமோ என்று நொந்துகொள்ளும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. சுயேச்சைகள் மூவர், உத்தர்காண்ட் கிராந்தி தளத்தின் ஒரு எம்எல்ஏ ஆதரவுடன் அவசர அவசரமாக ஆட்சி அமைத்தது காங்கிரஸ். ஆனால், தலைமையால் திணிக்கப்பட்ட முதல்வர் விஜய் பகுகுனாவால், இன்னும் அதிருப்தியாளர் ஹரிஷ் ராவல் ஆதரவாளர்களை சமாளிக்க முடியவில்லை. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, உத்தர்காண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி எப்போது வேண்டுமாயினும் கவிழக் கூடிய நிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் புதிய அரசு பூசலை அதிகரித்திருக்கிறது. இம்மாநிலத்தின் எம்பிக்கள் எண்ணிக்கை 5. சென்ற தேர்தலில் இந்த ஐந்தையும் வென்ற காங்கிரஸ் வரும் தேர்தலில் அப்படியே விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும்.

முஸ்லிம் லீக் கட்சிக்கு அதிக பிரதிநிதித்துவம் அளித்துள்ள முதல்வர் ஓமன் சாண்டிக்கு கேரளாவில் எதிர்ப்பு வலுத்துள்ளது. கிறிஸ்தவர்- முஸ்லிம்களின் ஆட்சியாகவே சாண்டியின் ஆட்சி மீது அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. நூலிழை பெரும்பான்மையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி மீது மாநிலத்தில் நல்ல கருத்து இல்லை. சென்ற தேர்தலில் 20 எம்பி இடங்களில் 16 ல் வென்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, அடுத்த தேர்தலில் இடது முன்னணியிடம் பலத்த அடி வாங்கும் என்பது திண்ணமாகவே தெரிகிறது.

பஞ்சாபில் அகாலிதள ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டதாகவே மார் தட்டிய கேப்டன் அமரீந்தர் சிங்கின் அடாவடி அரசியலுக்கு அம்மாநில மக்கள் சரியான சம்மட்டி அடி கொடுத்து, பிரகாஷ் சிங் பாதலையே முதல்வர் ஆக்கியதை, காங்கிரஸ்காரர்களால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. அதன் பலனாக, அமரீந்தர் சிங்குக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்கள் மாநிலத் தலைவர்கள். ஏற்கனவே கலைந்த தேன்கூடாகக் காட்சி அளிக்கும் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியால் சென்ற தேர்தலில் வென்ற 8 எம்பிக்களை மீண்டும் பெற முடியாது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

கோவாவிலும் தேர்தலில் பெற்ற அடியிலிருந்து காங்கிரஸ் இன்னமும் மீளவில்லை. முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் காங்கிரஸ் கட்சித் தலைமையின் எதேச்சதிகாரமே தோல்விக்குக் காரணம் என்று பிரசாரமே செய்து வருகிறார். இங்குள்ள இரு எம்பி தொகுதிகளில் ஒன்றை மட்டும் வென்ற காங்கிரஸ் அடுத்த தேர்தலில் அதையும் இழக்கவே வாய்ப்புள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் ராகுலின் மாயமந்திரங்கள் பலிக்காத விரக்தியில் ஆழ்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைக்கு வேறெந்த வழியும் புலப்படவில்லை. 80 எம்பிக்கள் கொண்ட இம்மாநிலத்தில் சென்ற முறை 'எப்படியோ' 21 இடங்களில் வென்ற காங்கிரஸ் அடுத்த தேர்தலில் இரண்டில் வென்றாலே (அமேதி, ரேபரேலி) போதும் என்ற நிலையில் இருக்கிறது. வரும் தேர்தலில் முலாயம் கட்சியுடன் கை கோர்க்க காங்கிரஸ் துடிக்கிறது. மூழ்கும் கப்பலில் முலாயம் ஏறுவாரா என்பதை இப்போதே சொல்ல முடியாது.

காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியும் (காஷ்மீர்- 6), திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் (மேற்கு வங்கம்- 42) அக்கட்சியைப் படுத்திவரும் பாட்டைப் பார்த்தாலே, இந்த நட்பு நீண்ட காலம் நீடிக்காது என்பது புலப்படுகிறது. குறைந்த எம்பி தொகுதிகளைக் கொண்ட அருணாச்சல் பிரதேசம் (2), ஹரியானா (10), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1) ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தான் ஆள்கிறது. இந்த மாநிலங்கள் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்துபவை அல்ல. பெரிய மாநிலங்களில் அசாம் (14) மாநிலத்தில் மட்டுமே காங்கிரஸ் நிம்மதியாக இருக்கிறது.

இவை தவிர பாஜக ஆளும் குஜராத் (26), மத்தியப்பிரதேசம் (29), சத்தீஸ்கர் (11), ஜார்க்கண்ட் (14), கர்நாடகா (28), இமாச்சல்(4), கோவா (2), பாஜக கூட்டணி ஆளும் பஞ்சாப் (13), பிகார் (40), நாகலாந்து (1) மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரடி முன்னேற்றமும் சாத்தியமில்லை. பிற கட்சிகள் ஆளும் தமிழ்நாடு (39), ஒடிசா (21), திரிபுரா (2), சிக்கிம் (1), உத்தரப்பிரதேசம் (80) ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த நம்பிக்கை நட்சத்திரமும் கண்ணுக்குப் புலப்படும் நிலையில் இல்லை.

இப்படியாகப்பட்ட நிலையில், அண்ணா ஹசாரே ஒருபுறம் முரண்டு பிடிக்கிறார்; ராணுவத் தளபதி வி.கே.சிங் ஒருபுறம் சிண்டு முடிக்கிறார். சுப்பிரமணியம் சாமி நேரம் தெரியாமல் நோண்டி நுங்கு எடுக்கிறார்; உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுப்பேற்றுகிறார்கள்; பாஜக-வோ எதற்கெடுத்தாலும் எகிறிக் குதிக்கிறது; இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நமது 'கலாகார்' வேறு புது ஆலாபனை பாடுகிறார். பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்று சும்மாவா சொல்லி இருக்கிறார்கள் நமது முன்னோர்கள்?


--------------------------------
விஜயபாரதம் (11.05.2012)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக